Tuesday, April 14, 2026

தேவதாஸ் - ஒரு மனிதனின் வாழ்க்கை

ஆண்கள் தங்கள் முகத்தில் கொஞ்சம் தாடியோடு இருந்தால் 'என்ன தேவதாஸ் மாதிரி தாடியோடு இருக்க?'  என்றே நம் மக்கள் விசாரிப்பார்கள். அதனோடு கொஞ்சம் புகைப்பழக்கமும், குடியும் சேர்ந்துவிட்டால் அதுதான் தேவதாஸ். கூடவே காதல் தோல்வியும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம் மக்களிடம் பேசப்பட்ட காதல் ஜோடிகள் தேவதாஸ் - பார்வதி. அவர்கள் இருவரின் கைகூடாத காதலைச் சொல்லும் இந்த நாவல் வங்காளத்தில் 1917ல் வெளியாகி, பல மொழிகளில் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. இந்நாவல் பெற்ற செல்வாக்கையும், புகழையும் கண்டு  அதனை எழுதிய சரத் சந்திரரே திகைக்கிறார். 


தமிழில் வெளியான இந்நாவலுக்கு அசோகமித்திரன் முன்னுரை எழுதியுள்ளார். 'தேவதாஸ் - ஒரு சிறிய நாவல். ஆனால் அதில் வாழ்க்கையின் எந்த அம்சம் இல்லை?. நான்கைந்து பாத்திரங்களை மட்டும் உலவவிட்டுப் படைப்பாளி படைத்தது ஒரு விசாலமான, ஒரு நுணுக்கமான புனைகதை. அதே நேரத்தில் அது ஒரு சமூக வரலாறுமாகும். இவ்வளவு எளிதாகவும், அதே நேரத்தில் கூர்மையாகவும் சமூகத்தையும் அதன் அங்கங்களாகச் செயல்படும் மனிதர்களையும் கண்முன் நிறுத்த முடியுமா?. எவ்வளவு விசாலமும் அன்பும் பரிவும் அறிவும் கொண்ட மனது? ' என்கிறார் அசோகமித்திரன். 

தேவதாசும் பார்வதியும் சிறுவயதில் இருந்தே பழகி வருகின்றனர். இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் விளையாட்டு, மீன் பிடித்தல் என இருவரின் பொழுதுபோக்கும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாத வண்ணம் இருக்கிறது. தேவதாஸ் அடித்தாலும் பின்னர் இருவரும் சமரசமாகி விளையாட்டைத் தொடர்கின்றனர். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பார்வதி படிப்பைத் தொடராமல் நின்று விடுகிறாள். தேவதாஸை சுற்றியே அவளின் உலகம் சுழல்கிறது. ஒருமுறை தேவதாஸ் பார்வதியிடம் காசை வைத்துக்கொள், பின்னர் வாங்கி கொள்கிறேன் என்று சொல்ல அவளோ தெருவில் பாடிவரும் பாடகர்களுக்கு அந்தப் பணத்தை அளித்து விடுகிறாள். பின்னர் விசயம் தெரிந்து அவன் கேட்கும் கேள்வியும், அதற்கு அவள் அளிக்கும் விளக்கமும்  நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.

மேற்படிப்பு படிப்பதற்காக கல்கத்தா சென்று தங்கி படிக்கிறான் தேவதாஸ். அவனுடைய கிராமத்தில் இருக்கும்போதே அவ்வப்பொழுது அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அங்கே அவனுடன் தங்கியிருக்கும் நண்பனுடன் விலைமகளான சந்திரமுகியைச் சந்திக்கிறான். அவளின் உடலைத் தொடாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு  வந்துவிடும் தேவதாஸைக் கண்டு அவளுக்கு தேவதாஸ் மேல் ஒரு நட்பு தோன்றுகிறது. 



இங்கே கிராமத்தில் பார்வதியின் அம்மா தேவதாஸின் அம்மாவிடம் தன் மகளும், தேவதாசும் சிறுவயதில் இருந்தே பழகுவதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என பேசுகிறாள். அதற்கு தேவதாசின் தாய் 'நீங்கள் பொருளை வாங்கி கொண்டு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கும் கூட்டம். இது தேவதாஸின் அப்பாவுக்கு பிடிக்காது' எனச் சொல்லிவிட்டு வந்துவிடுகிறாள். தேவதாஸ் குடும்பம் ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம். வசதி குறைவான பார்வதியை எப்படி அவனுக்கு கட்டி வைப்பது என்பது தேவதாசுடைய தாயின் எண்ணம். எனவே பார்வதியின் பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை தேடுகின்றனர். அழகியான பார்வதியை மணக்க 40 வயது கடந்த பணக்கார மாப்பிள்ளை வருகிறார். அவருக்கு ஏற்கனவே மணமாகி இரண்டு பிள்ளைகளும் உண்டு. முதல் மனைவி இறந்துவிட பார்வதியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்கிறார். 

அவருடனான திருமணத்துக்கு முன்பு பார்வதி தைரியமாக தேவதாஸை அவனுடைய வீட்டில் சென்று சந்திக்கிறாள். அவளே தேவதாஸின் மீதுள்ள காதலைச் சொல்கிறாள். ஆனால் அவனோ தன் பெற்றோரை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறான், மேலும் உன்மேல் எனக்கு எந்த பிரியமும் இல்லை என்று சொல்லிவிடுகிறான். அடுத்த நாளே அவன் கல்கத்தா சென்று விடுகிறான். ஆனால் கொஞ்ச நாளிலேயே திரும்ப வந்து அவளிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன், கொஞ்ச நாள் பொறு என்கிறான். அதற்கு அவளோ 'எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள், உன்னை போன்ற பலவீனமான சஞ்சல புத்தியுள்ள மனிதனுக்கு தன் பெண்ணை யார்தான் கட்டி வைப்பார்கள்' என்று சொல்லிவிடுகிறாள். பார்வதியின் திருமணம் நடந்து அவளின் கணவர் வீட்டுக்குச் சென்று விடுகிறாள் பார்வதி. 

பின்னர் தேவதாஸ் குடிக்கு அடிமையாகி அவன் உடல்நலம் கெட்டுப்போகிறது. அவனின் தந்தையும் இறந்துபோகிறார். அவரின் இறப்புக்கு பின்பு கிடைக்கும் பணத்தில் சந்திரமுகிக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறான். அவள் அதனைக் கொண்டு ஒரு கிராமத்துக்குச் சென்று தன்னால் ஆன உதவிகளை அந்த மக்களுக்கு செய்கிறாள்.  வயதான அவனின் தாயும் காசி சென்று வசிக்கிறாள். கூடப் பிறந்த அண்ணனுடன் அவனுக்கு பெரிய ஒட்டுதலும் இல்லை. எனவே மனம் போன போக்கில் இருக்கிறான். மீதி இருக்கும்  பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தே அழிக்கிறான் தேவதாஸ். தேவதாஸின் உடல்நிலை மிகவும் கெட்டுபோனதை அறிந்த சந்திரமுகி கல்கத்தா வந்து அவனை தெருவோரம் இருந்து மீட்டு வருகிறாள். கொஞ்ச நாட்கள் அவளிடம் தங்கியிருக்கும் அவன், நான் சொந்த ஊருக்குப் போகிறேன், நீயும் சென்றுவிடு என அவளை அனுப்பிவிட்டு ஊருக்கு கிளம்புகிறான். நீண்ட நாள் வாழமாட்டோம் என்று அவனுக்கு தனது உடல்நிலை பற்றி நன்றாகத் தெரிகிறது. 

தேவதாஸின் தந்தை இறப்புக்கு வந்த பார்வதி அவனுடைய உடல்நிலை அறிந்து வேதனைப்படுகிறாள். அவளுக்கு கணவர் வீட்டில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு மகாராணி போல இருக்கிறாள். தேவதாஸோ இங்கே துன்பப்படுவதில் அவளுக்கு மிகுந்த துயரம் ஏற்படுகிறது. 'நீ என் வீட்டுக்கு வந்துவிடு, நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன்' என்கிறாள். அவளின் சிறுபிள்ளைத் தனமான பேச்சை கேட்டு சிரிக்கும் அவன் 'உன் வீட்டில் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்களா' எனக் கேட்க, அவளோ 'ஒருவரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் நீ என்னுடன் வந்து விடு. உனக்கு நான் சேவை செய்கிறேன்' என்கிறாள். 'சரி, எனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் கண்டிப்பாக உன்னிடம் வருவேன்' என்கிறான் தேவதாஸ். 

ஊருக்குச் செல்லும் வழியில் பார்வதிக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வருகிறது. கூட வந்த வேலைக்காரனை ஏமாற்றி விட்டு பாதி வழியில் இறங்கி ஒரு மழைக்கால இரவில் பார்வதியின் வீட்டை நோக்கி மாட்டு வண்டியில் செல்கிறான் தேவதாஸ். செல்லும் வழியிலேயே அவனுக்கு நினைவுகள் மாறி மாறி வருகின்றன, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தன்னுடைய பார்வதியை பார்க்க வேண்டும் என நினைக்கிறான். மயக்கம் போட்டு விட்ட அவனை, பெரிய மாளிகை போன்ற பார்வதியின் வீட்டு முன்னால்  இருக்கும் 
மரத்தடி திண்ணையில் இறக்கி படுக்க வைக்கிறான் வண்டியோட்டி. தேவதாஸ் மலங்க மலங்க விழிக்கிறான். வீதியில் உள்ளோர், பார்வதியின் வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் என அனைவருமே, யாரோ ஒரு வழிப்போக்கர் என நினைத்து அவனைப் பார்க்கிறார்கள். ஒரு இரவு முழுவதுமே அவன் உயிர் ஊசலாடுகிறது. பின்னர் பார்வதியைப் பார்க்காமலேயே இறந்து போகிறான் தேவதாஸ். 

காவலர்கள் வந்த பின்னர் அவன் சட்டைப் பையில் இருந்த கடிதங்கள் மூலம் தேவதாஸ் எனத் தெரிய வருகிறது. பார்வதியின் ஊர் என்ற தெரிந்து 'சின்னம்மா வந்து பார்த்தால் யார் என்று சொல்லி விடலாம்' என மகன் சொல்ல கணவனோ அவள் இங்கே எல்லாம் வரமாட்டாள் எனச் சொல்கிறார். தேவதாசின் உடலை சண்டாளன் வந்து கட்டி எடுத்துக் கொண்டுபோய் எரித்துவிடுகிறான். பெரிய பணக்காரன் இங்கே வந்து ஏன் இறந்து போக வேண்டும், மேலும் உங்கள் ஊரைச் சேர்ந்தவர் என வேலைக்காரர்கள் பார்வதியினிடம் சொல்கின்றனர். யார் என்று அறிந்ததும் அவனைப் பார்க்க வீதிக்கு ஓடி வருகிறாள் ஒரு பைத்தியம் போல. ஆனால் மனம் பேதலித்து மயக்கம் போட்டு விழுந்த அவளை உள்ளே தூக்கிச் செல்கின்றனர். 

இறுதியில் 'தேவதாஸைப் போன்ற துரதிருஷ்டம் பிடித்த பாவிகளைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவனுக்கு ஏற்பட்ட மரணத்தைப் போல உலகில் இருக்கும் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள். மரணம் என்பது ஒரு கேடு இல்லை. ஆனால் மரண காலத்தில் ஒரு அன்பு ஸ்பரிசமும், நட்பு பாசம் நிறைந்த முகமும் கண்ணுக்கு முன்னால் தெரிய வேண்டும். அந்த ஸ்பரிசத்தை உணர்ந்தபடி அதில் நிறைந்து கிடக்கும் அன்பை உணர்ந்தபடி நட்பையும், பாசத்தையும் உணர்ந்துகொண்ட நேரத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கை முடிய வேண்டும். தனக்காக யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால், அந்தக் கண்ணீர்த் துளியைப் பார்த்தவாறே அவன் செத்துப்போக வேண்டும் ' என்று சொல்கிறார் சரத் சந்திரர். 

தேவதாஸ்
சரத் சந்திர சட்டோபாத்யாயா 
தமிழில்: புவனா நடராஜன்

Monday, April 6, 2026

நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிச்சாமி

தங்கள் குடும்ப வரலாறு போல எழுதிய இந்த புத்தகம் சென்ற காலத்தை நமக்கு திரும்பவும் நினைவூட்டுகிறது. சென்ற நூற்றாண்டின் இறுதி வருடங்கள் வரைக்கும் கூட வறுமை தாண்டவமாடியது. விறகு வெட்டுதல், தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் செல்லுதல், சினிமா தவிர எந்த பொழுதுபோக்கும் இல்லாதிருத்தல் என்றே இருந்தது. அப்படி என்றால் 1940-1950 காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் இருந்து மலேயா சென்று உழைத்து வாழ்ந்த தமது குடும்பத்தின் வரலாற்றை இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லியுள்ளார் முத்தம்மாள் அவர்கள். 


முத்தம்மாள் அவர்களிடம் 'பால்ய வயதில் நடந்த எதுவுமே எங்களுக்கு நினைவில் இல்லை. நீங்கள் எப்படி சின்ன வயதில் நடந்தது எல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறீர்கள், இல்லை அது அனைத்தும் கதையா? ' என்று கேட்க, 'எங்கள் காலத்தில் இப்பொழுது உள்ளது போல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. டிவி, போன் என உங்களை உள்ளே இழுத்துக்கொள்ள நிறைய விசயங்கள் இப்பொழுது உண்டு. எங்களுடைய சின்ன வயதில் நடந்ததை நாங்கள் எங்களுக்குள் திரும்பி திரும்பி பேசிக் கொள்வோம். பாட்டி தாத்தா போன்றோர் கதை சொல்கிறேன் என்று எங்கள் சின்ன வயதில் நடந்ததை திரும்ப திரும்பச் சொல்வார்கள். ஒருவேளை அதனால்தான் என்னுடைய நினைவில் அந்த பழைய காலம் அப்படியே இருக்கிறது' எனச் சொல்கிறார். 

கொங்குப் பகுதியான வெள்ளகோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற குடும்பம் முத்தம்மாள் அவர்களின் குடும்பம். முத்தம்மாள் அவர்களின் தாய் கொஞ்சம் படித்தவர். பழனியம்மாள் மணமாகி, கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாலியைக் கழற்றி வீசிவிட்டு வந்தவர். என்ன பிரச்சினை என்றாலும் தாலியை கழற்றி வீசலாமா , எல்லாம் படித்தவள் என்கிற திமிர் என்று ஊர் பேசுகிறது. அவருடைய தந்தையும் ஒரு சிறு பிரச்சினையில் கொஞ்ச காலம் சிறை செல்ல நேர்கிறது. இதை எல்லாம் பார்த்த பழனியம்மாளின் தந்தை, இனிமேல் இந்த ஊரில் இருக்க கூடாது என எண்ணி காட்டை விற்றுவிட்டு மலேயாவுக்கு தனது மகள், மனைவியுடன் செல்கிறார். ஏற்கனவே பழனிச்சாமி அவர்களுக்கு பழனியம்மாள் குடும்பத்துடன் பழக்கம் இருந்திருக்கிறது. அங்கே அவர்களை சந்திப்பவர்,  இரண்டாம் தாரமாக பழனியம்மாளை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்  பழனிச்சாமி. அவர்களுக்கு சம்மதம் என்றாலும் பழனியம்மாளின் அம்மா தாலி கட்டக் கூடாது என பழைய  சம்பிரதாயம் பேசுகிறார். இரண்டு மனைவியருடனும் எந்த பிரச்சினையும் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார். குழந்தைகள் பிறந்ததும், அவர்களை எப்பாடு பட்டாவது நல்ல கல்வி கொடுத்து விட வேண்டும் என பழனியாம்மாள் நினைக்கிறார். 

முத்தம்மாள் அவர்கள் தான் சார்ந்த சாதியின் உழைப்பு, அவர்களின் சிக்கனம் என நிறையச் சொன்னாலும், அவர்களின் பங்காளிச் சண்டைகள், பழைய பழக்க வழக்கங்கள் என அவர்களின் தவறுகளையும் சொல்லத் தவறுவதில்லை. எல்லாவற்றையும் ஒரு சிறு நகைச்சுவையுடன் சொல்ல முடிவது அவரின் பலமும் கூட. வயதாகிய பின்னரும், பேரன் பேத்திகள் எடுத்த பிறகு ஒரு சண்டையில் கணவர் படுக்கை அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பேரன்கள் கவலைப்பட இவரோ தன் பாட்டுக்கு தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன பாட்டி இப்படி பயமில்லாமல் இருக்கே, தாத்தா ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் கேட்க 'உள்ளே தூக்கு போட்டுக்கொள்ள எந்த வசதியும் இல்லை அதனால்தான்' என்று நகைச்சுவையாக சொல்கிறார். 


இரண்டாம் உலகப் போர் கட்டத்தில் மலேயாவில் இருந்து இங்கே வந்து, எந்த வேலையும் சரியாக அமையாமல் குன்னூர் சென்று பெட்டிக்கடை வைத்தது, அங்கே இருந்து வெள்ளகோவிலுக்கு தனியாக பேருந்தில் பயணம் செய்தது என அவரின் நினைவுகள் பின்னால் உள்ள காலத்தை நமக்கு சொல்கிறார். தனது தந்தை வழி தாத்தாவுடன் இருந்த சில நினைவுகள் பகிர்கிறார்.  பின்னர் அங்கே இருந்து மலேயாவுக்கு கஷ்டப்பட்டு கப்பலில் வந்து சேர்ந்தால், அவர்கள் விட்டுச் சென்ற தோட்டம் ஜப்பான் படையால் சின்னாபின்னமாகி கிடக்கிறது. அதனைச் சரிசெய்து, படிப்பையும் தொடர்கிறார்கள். முத்தம்மாள் அவர்களின் மாமாவும் போர் காலகட்டத்தில் இறந்துவிட, தனியாக இருக்கும் பாட்டியை இவர்கள் அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். சயாம் ரயில்வே வேலைக்கு சென்ற சில தமிழர்கள் பற்றியும், அங்கே இருந்து திரும்பி ஓடிவந்த ஒரு சிலர் பற்றியும் சொல்கிறார். 

எதற்கும் பயப்படாமல் பெண்களை சுதந்திரமாக வளர்த்த தனது தந்தையின் மேல் அவருக்கு இருந்த பிரியம் சொற்களில் தெரிகிறது. கடலில் நீந்துவது, படகு ஓட்டுவது, மீன் பிடிப்பது என ஒவ்வொன்றையும் தன் பெண்களுக்கு சொல்லித் தருகிறார். தாய் பழனியம்மா அவற்றை எதிர்த்து பேசினாலும் அதனை அவர் கண்டுகொள்வதில்லை. தந்தை இறப்பின் போது நடந்த சடங்குகளில் பிரச்சினை ஏற்படும்போது அமைதியாகவே இருக்கிறார்கள். பின்னர் தமது பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்கிறார் பழனியம்மாள். தனது கணவர் இறந்த பின்னர் பிள்ளைகளை தனியாகவே போராடி கரைசேர்க்கிறார். ஆனால் எப்பொழுதும் கல்வியே பிள்ளைகளுக்குத் துணை என்பதை அவர் மறப்பதில்லை. 

அங்கேயே பிறந்து வளர்ந்த, ஸ்காட்டிஷ் தந்தைக்கு பிறந்தவரான ஸ்பென்ஸ் கிராண்டை திருமணம் செய்து கொள்கிறார் முத்தம்மாள். அவர் அம்மா தமிழ் என்பதால் தமிழ் நன்றாக பேசுகிறார். திருமணத்துக்கு பின்னர் முத்தம்மாள் ஆசிரியராக வேலைக்குச் செல்கிறார். அவருக்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்து சிலர் வெளிநாட்டில் வேலை கிடைத்து தங்குகிறார்கள். அங்கேயே மணம் முடித்து, மணவிலக்கு என பிள்ளைகளின் வாழ்க்கைகள் பற்றியும் முத்தம்மாள் எதையும் மறைக்காமல் எழுதுகிறார். 

'நான் இங்கு என் குடும்ப ரகசியங்களையம் நடந்த உண்மைகளையும் எழுதுவது சில நேரத்தில் மனக்கஷ்டமாகக் கூட இருக்கும். இங்கு நான் யாரையும் புண்படுத்தவோ ஏளனம் செய்யவோ மனதாலும் நினைக்கவில்லை. அப்பாரய்யன் ஒரு கொலையாளி. அம்மாவின் தகப்பனார் சிறைவாசம் அனுபவித்த கைதி. அம்மா, அய்யன் தாலி கட்டாத சட்டபூர்வமற்ற மனைவி. பெரியம்மா தன் கணவனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுத்த ஏமாளி. அய்யன் முன்கோபக்காரர், பழிவாங்கும் உணர்ச்சியுடையவர். இப்படி அவர்களின் குறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எப்படியிருப்பினும் நான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய வாரிசு. அவர்கள் வகுத்த வழிதான் எங்கள் வழி.' - என்று புத்தகத்தின் இறுதியில் சொல்கிறார். 

இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது இது ஒரு குடும்பத்தின் வரலாறும், கதையும் மட்டும் அல்ல என்பது புரியும். சென்ற காலகட்டத்தின் நினைவுகளால் நெய்யப்பட்ட அழகானதொரு பொக்கிஷம். 

நாடு விட்டு நாடு
முத்தம்மாள் பழனிச்சாமி
பதிப்பு: தமிழினி 

Wednesday, March 25, 2026

கடல் - ஜெயமோகன்

அன்பான இயேசுவின் பாதையில் சாத்தான்களின் வருகைகளை நாவல் வடிவில் சொல்லப்பட்டது கடல். இரண்டு விதமான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. தப்பான செயல்கள் பாவம் என்றாலும் அவற்றை நம் சுயநலத்துக்காக செய்து கொண்டு, அதில் கிடைக்கும் புகழ், மகிழ்ச்சி மற்றும்  செல்வச் செழிப்புடன் வாழ்வது. இன்னொரு பாதை முட்களும் துயரங்களும் நிரம்பியது. செல்வத்தையும் புகழையும் ஒதுக்கிவிட்டு அன்புடனும் , எந்நிலையிலும் உண்மையுடன் இருப்பது. இது கடினமான பாதை என்றாலும் நீண்ட காலத்தில் மகிழ்ச்சியும், நாம் பாவங்கள் செய்யவில்லை என்ற நிம்மதியும் கிடைக்கும். இந்நாவல் மூன்று பாத்திரங்களை மையமாகக் கொண்டது. 


சாம்

செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் சாம். தங்கத் தொட்டில் கூட உண்டு. அவர்களின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி ஒருநாள் தன்னுடைய குழந்தையை அந்தத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். அதனைக் கண்ட சாமின் தந்தை அந்த வேலைக்காரியை அடித்தும், அந்தக் குழந்தையை வெய்யிலில் படுக்க வைத்தும் தண்டனை கொடுக்கிறார். பாதிரியார் உட்பட யார் சொல்லியும் அவரின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் அந்தக் குழந்தை இறந்து விடுகிறது. சாமுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வடுபோல தங்கி விட, வளர்ந்த பின்னர் துறவறம் செல்ல முடிவு செய்து வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். தனது தந்தை இறக்கும் தருணத்திலேயே வீட்டுக்கு வந்து போகிறார். "சாம், என்னுடைய மிக உயர்ந்த பொக்கிஷம் நீ. இந்த உலகத்தில் உள்ள எல்லாம் உனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தேன். நீ படுத்த அந்த தொட்டிலில் இன்னொரு குழந்தையை படுக்க வைத்ததால்தான் எனக்கு கோபம் வந்தது." என்று சொல்லி விட்டு இறந்து போகிறார் அவரது தந்தை. 

பெர்க்மான்ஸ்

சாமுக்கு நேர் எதிராக இருப்பவர் பெர்க்ஸ். வறுமையின் காரணமாக பாதிரியார் பணிக்கு வந்தவர். பைபிளை திரும்ப திரும்ப படித்து நினைவில் வைத்திருக்கும் பெர்க்ஸ், கடவுளுக்கு பயப்படாதவராக இருக்கிறார். ஒருவகையில் சாமுக்கு மூத்த சகோதரனும் கூட. சாமின் தந்தையால் அவரது  திருமணத்துக்கு முன்னர்  ஓர் ஏழைப் பெண்ணுக்கு பிறந்து, பின்னர் பணம் கொடுத்து அப்பெண்ணை ஊரை விட்டு குழந்தையுடன் அனுப்பி விடுகின்றனர். அந்தக் குழந்தைதான் பெர்க்ஸ். அந்தப் பெண் இன்னொருவரை மணந்து பின்னர் பிறந்த குழந்தைகள் என குடும்பம் வறுமையில் வாட, பாதிரியார் பணிக்கு வேலைக்கு வருகிறார். அந்த சர்ச்சுக்கு தங்க வரும் சாம், பெர்க்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை தெரியப்படுத்த அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். 

தாமஸ்

இவர்கள் இருவருக்கும் இடையில் அலைபாயும் ஆன்மாவாக இருப்பவன் தாமஸ். சிறு வயதிலேயே தன்னுடைய அம்மாவை இழந்தவன் ஒரு ரௌடி போல வளர்கிறான். கால் நடக்க இயலாத ஒரு பெண்ணுக்கு தகாத உறவின் மூலம் பிறந்தவன் அவன். தனது உடலை விற்றே அவனை வளர்க்க திண்டாடும் அவள் ஒருகட்டத்தில் அவனைக் கைவிட்டு இறந்து போகிறாள். அவனுக்கு தன்னுடைய தந்தை யார் எனத் தெரிந்தாலும்  அந்த மனிதன் இவனை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே ஊரில் சுற்றித் திரிந்து வளர்கிறான். அவனை அந்த ஊருக்கு வரும் சாம் கண்டு அவனை அன்பின், நன்மையின் வழிக்கு இழுத்து வருகிறார். 

---

தனது குடும்பத்துக்கு ஒரே வருமானமாக இருந்த சர்ச் வேலையில் இருந்து தான் துரத்தப்பட காரணமாக இருந்த சாமின் மேல் கோபத்தில் இருக்கும் பெர்க்ஸ், தனது காதலி மூலம் பொய் சாட்சி சொல்ல வைத்து சாமை சிறைக்கு அனுப்பி விடுகிறார். பெர்க்ஸ் இப்பொழுது ஊரில் பெரிய பணக்காரன். கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்கள் மூலம் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான் பெர்க்ஸ்.  சாம் சிறை சென்ற பின்னர் தாமசுக்கு பெர்க்சின் அறிமுகம் கிடைக்கிறது. கடலோடுவதில் பலசாலியான தாமஸ் பெர்க்ஸ் செய்யும் குற்றங்களுக்கு துணையாக நிற்கிறான். இப்போது அவன் தீமையின் பாதையில். 

தாமசுக்கு பியாட்ரிஸ் என்னும் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளை விரும்பவும் செய்கிறான். அவளோ வளர்ந்தவள், அறிவு நிறைந்தவள் ஆனால் சிறு குழந்தை போல இருக்கிறாள். ஒரு தேவதையைப் போல தீமை என்றால் என்னவென்றே அறியாதவளாக இருக்கிறாள். ஒரு காப்பகத்தில் வளரும் அவளுக்கு தந்தை பெர்க்ஸ் எனத் தெரிய வருகிறது. அவன் தனது காதலைச் சொன்னதும் முதலில் மறுக்கும் அவள், அவனை நேசிக்கிறாள். அவளின் தூய அன்பைக் கண்டு மலைத்து நிற்கிறான் தாமஸ். 

நல்லதா, தீயதா என்ற இரு வழிகளில் தாமஸ் மாறி மாறிப் போனாலும் இறுதியில் நல்வழிக்கே திரும்புகிறான். இடையில் சாமும், பெர்க்ஸ்சும் தம்மால் இயன்றவரை அவனை திசை திருப்பி தங்கள் வழியே சிறந்தது என அவனுக்கு போதிக்கிறார்கள். சாத்தானும் இயேசுவும் போல. 

----

கடல் நாவலில் கடவுள், சாத்தான், பைபிள் என நிறைய உரையாடல்கள் உண்டு. சில இடங்களில் ஆத்ம தரிசனம் போல சில வரிகள் உள்ளன. நாளைக்கு என சேர்த்து வைக்கத் தோணாமல் கடலோடி வாழும் மீனவர்களின் குணம், அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் முதலாளிகள், கடத்தல் பிரச்சினைகள் என இந்நாவல் நிறைய தளங்களில் நம்மைக் கொண்டு செல்கிறது.



Monday, March 16, 2026

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

கடற்கரையோர கிராமம் தென்பத்தன். அங்கே உள்ள 'சவ்தா மன்சில்' என்னும் மாளிகையில் முஸ்தபாகண்ணு தன்னுடைய பரம்பரை கவுரவம் கொண்ட சாய்வு நாற்காலியில், அந்த வீட்டு வேலைக்காரியும் சிறு பெண்ணுமான ரைஹானத்தை ரசித்து, அவளை கல்யாணம் செய்து கொள்ள கனவு கண்டு அந்த சுகத்தில் சாய்ந்து  கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரின் மனைவி மரியம் பீவி 'மதரஸா பள்ளி மீது காற்றுக்கு மரம் விழுந்து குழந்தைகள் இறந்து விட்டார்கள்' எனச் சொல்ல, முஸ்தபாவோ  அதனைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் 'எனக்கு சாப்பிட என்ன இருக்கிறது, டீ குடிக்கும் நேரம் வேற ஆச்சு'  என்கிறார். 


சவ்தா மன்சில் இல்லத்தின் காரணவர் முஸ்தபாகண்ணு. அவரின் பாட்டனாரான பவுரீன்பிள்ளை என்பவர் அப்போது மன்னராக மருமக்கள் வழி உரிமையில் இருந்த மார்த்தாண்ட வர்மாவுக்கு அணுக்கமாக இருந்தவர். மார்த்தாண்ட வர்மாவின் சிறு வயதில் மக்கள் வழி மரபு உரிமைக்காக போராடும் எட்டு வீட்டு பிள்ளைகள் என்பவர்களால் அவர் துரத்தப்பட, தென்பத்தன் ஊரில் அடைக்கலமாகும் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைக்கிறார் பவுரீன்பிள்ளை. பின்னர் மார்த்தாண்ட வர்மா முடிசூடிய பின்னர் அவருக்கு வேண்டிய நிலங்களை கொடுக்கிறார். அவரை அம்மாவன்(மாமா) என்றே அழைக்கிறார்.  பின்னர் ஒருநாள் ராமன் தம்பி மற்றும் பப்பு தம்பி ஆகியோர் மன்னரைக் கொல்லப் பார்க்க அவர்களைக் கொன்று மேலும் அணுக்கமானவராகிறார் பவுரீன்பிள்ளை. அதன் நினைவாக அவருக்கு மன்னர் வெள்ளி கைப்பிடியுள்ள வாளையும், தங்கச் சரிகை உள்ள பட்டுத் துணியும் அன்பளிப்பாக கொடுக்கிறார். 

அந்த ஊரில் யார் வீட்டிலும் இல்லாத பொருட்கள் சவ்தா மன்சிலில் உண்டு. சந்தன மரத்தால் செய்யப்பட்ட அலமாரி, அழகான சாய்வு நாற்காலி, மர வேலைப்பாடுகள், செம்பால் செய்யப்பட்ட முகப்புகள் என ஓர் அரச மாளிகைக்கு உண்டான அத்தனை வசதியும் உண்டு. சொன்னதை செய்து முடிக்க வேலையாட்களும் உண்டு. தலைமுறை தலைமுறையாக வந்த அந்த சொத்தை இப்பொழுது நிர்வகிப்பவர் முஸ்தபாகண்ணு. கடந்து வந்த தலைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை விற்று வந்ததில் இப்பொழுது இருப்பது இந்த வீடும் சில பொருட்களும். பழைய மாளிகையாக இருந்த இந்த வீட்டை இடித்து முஸ்தபாகண்ணின் வாப்பா நூர்முகம்மது புதிதாக கட்டி  தனது அம்மாவின் பெயரை இந்த இல்லத்துக்கு வைக்கிறார். அப்பொழுதே சில நிலங்கள் கிரையம் கொடுத்தே இந்த வீடு எழுகிறது. 

பெரிய குடும்பத்தின் வாரிசு என்ற திமிர் முஸ்தபாகண்ணுக்கு எப்போதும் உண்டு. அது தானாக ஏற்பட்டதில்லை. தனது இளமையில் பக்கத்து வீட்டுப் பெண்ணை முஸ்தபாகண்ணு  கெடுத்துவிட, அவரின் தந்தையிடம் வந்து அப்பெண்ணின் தகப்பன் வந்து முறையிட 'வசதி உள்ள மாப்பிள்ளை கிடைத்தான் என்று உன் பெண்தான் என் பையனைக் கெடுத்துவிட்டாள்' என்று சொல்லி, ஊரில் பெரிய நாட்டாமையுமான இவரே அந்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க தீர்ப்பு சொல்கிறார். அப்போதிருந்தே அவருக்கு பயம் விட்டுப் போகிறது. பார்க்கின்ற பெண்களை எல்லாம் அடைய வேண்டும் என நினைக்கிறார். அவர்களின் வறுமையை பயன்படுத்திக் கொண்டு அடையவும் செய்கிறார். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை கொல்லவும் அல்லது அவர்களே தற்கொலை செய்து கொள்ளவும் காரணமாக இருக்கிறார். அவர்களின் இறப்பை மூடி மறைக்க சிலர் முஸ்தபாகண்ணுக்கு  உதவ, அவர்களுக்கு வேண்டுமளவு காசை வாரி இறைக்கிறார். 


சுருக்கமாகச் சொன்னால் இருக்கும் சொத்திலிருந்து வருமானம் பெருக்குவதைக் கவனிக்காமல், அதையே விற்று செலவு செய்கிறார் முஸ்தபாகண்ணு. யாரும் அவரைக் கேள்வி கேட்க முடிவதில்லை. அந்த வீட்டில் அவருடைய தங்கை ஆயிஷாவும் உண்டு. ஆய்ஷாவுக்கு கல்யாணம் செய்து வைத்து, பிள்ளைப்பேற்றுக்கு வந்தவள், எனக்கு தங்கத்தில் ஒட்டியாணம் செய்து போட்டால் மட்டுமே புகுந்த வீட்டுக்கு போவேன், பவரீன்பிள்ளையின் பேத்தியான நான் ஒட்டியாணம் போடாவிட்டால் ஊர் என்ன சொல்லும் என்று கூறி அங்கேயே தங்கி விடுகிறாள். முஸ்தபாகண்ணுவும், இப்போது கையில் காசு இல்லை, ஒட்டியாணம் செய்து போடுவது வரை நீ இங்கேயே இருந்துகொள் எனச் சொல்லிவிட வருடங்கள் ஓடிவிடுகின்றன. ஆயிஷாவின் மகள் நசீமாவை கல்யாணம் செய்து அவள் தனியாக வசிக்கிறாள். 

முஸ்தபாகண்ணுவின் மனைவியான மரியம் கணவனை எதிர்க்க துணியாமல் இருக்கிறாள். அப்படியே இரண்டொரு வார்த்தை கேட்டு விட்டாலும் மேலே சொருகி இருக்கும் அதபு பிரம்பு என அழைக்கப்படும் குச்சியை எடுத்து அவளை அடித்து தள்ளுகிறார். அதற்கு பயந்தே அவள் அடங்கிப் போகிறாள். அந்த பிரம்பும் பவுரீன்பிள்ளை காலத்தில் இருந்தே இருக்கிறது. தன்னுடைய சொல் பேச்சு கேட்காதவர்களை அவரின் வாரிசுகள் இந்த பிரம்பைக் கொண்டே அடித்து துவம்சம் செய்துள்ளனர். அதிலும் அதிகம் அடிவாங்கியது பெண்களே. இந்த பிரம்பின் கடைசிக் காலத்தில் வந்து மாட்டிக்கொண்டவள் மரியம். நல்ல உணவு இல்லாமையாலும் வறுமையும் வீசும் இந்த வயதான காலத்தில் அவளுக்கு காச நோயும், ஓயாத இருமலும் வந்து விடுகிறது. தனது மனைவியால் இனி எதற்கும் உபயோகம் இல்லை,  உன்னுடைய பிறந்த வீட்டுக்கு செல் என்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்கும் தனது கணவன் முஸ்தபாகண்ணுவிடம் அவள் 'அந்த பிரம்பால் என்னை ரெண்டு அடி அடித்து கொன்றுவிடுங்கள்' என்று கதறுகிறாள். மரியம் இறந்துவிட்டால் அடுத்த கல்யாணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறார் முஸ்தபாகண்ணு. 

இவர்களின் ஒரே மகன் ஷாகுல். தந்தையின் செலவுகளையும், அவரின் பெண்கள் சகவாசத்தையும் அறிந்த அவன் 'சவ்தா மன்சில்' மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என்று உணர்கிறான். அம்மா மரியம் மேல் பாசம் இருந்தாலும் திருந்தாத தந்தையை நினைத்து மும்பைக்கு வேலை தேடிச் செல்கிறான். அங்கே இருந்து ஒருமுறை பணமும் அனுப்பி விடுகிறான். அதன் பின்னர் எந்த தொடர்பும் இருப்பதில்லை. கடைசியில் மரியம் இயலாமல் இருக்கும்போதே வந்து போகிறான் ஷாகுல். எந்த வேலையும் செய்யாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேயிருந்தால் வருமானத்துக்கு என்ன வழி என்று ஒருமுறை தனது தந்தையிடம் அவன் கேட்க, அதற்கு முஸ்தபா கண்ணு 'நான் இந்த வீட்டின் காரணவர், பவரீன்பிள்ளையின் பரம்பரை நான் என்ன வேலை செய்யவேணும் என்று நீ சொல்லக்கூடாது' எனச் சொல்ல வெறுத்துப்போகிறான் ஷாகுல். தன்னுடைய அம்மாவையும், தன்னுடைய முன்னோர் அவர்களுடைய வீட்டுப் பெண்களையும்  அடிக்க பயன்படுத்திய அதபு பிரம்பை உடைக்க முயல்கிறான் ஷாகுல், ஆனால் அது இரும்புத் தடி போல அப்படியே இருக்கிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் இருந்த பொருட்கள், பாத்திரங்கள் விற்கப்படுகின்றன. அதனை வெளியே விற்பதற்கு இஸ்ராயீல் என்னும் வேலைக்காரன் அவருக்கு உதவுகிறான்.  வெள்ளி கைப்பிடியுள்ள வாள், பட்டு துணி போன்ற குடும்பத்தின் விலை மதிக்க முடியாத பொருட்கள் எல்லாம் மூன்றாம் பேர் அறியாமல் இரவில் கை மாற்றப்படுகிறது. பகலில் செய்தால் குடும்பக் காரணவனுக்கு இழுக்கு என நினைக்கிறார்  முஸ்தபாகண்ணு. பெருமை வாய்ந்த சந்தன மர அலமாரி ஒன்றை விற்கும்போது, ஆயிஷா அதனை தன் மகள் நசீமாவுக்கு கொடுக்க கேட்கிறாள். முஸ்தபாகண்ணு அதை நான்தான் முடிவு செய்வேன் என்று விற்றுவிடுகிறார். விட்டால் இந்த இடமும் போய்விடும் என்று நினைத்த நஸீமா கோர்ட்டில் வழக்காடி பாதி சொத்தை பெற்றுவிடுகிறாள். கடைசியில் சாய்வு நாற்காலியும் விற்கப்படுகிறது.

அங்கங்கே உதிர்ந்து கொண்டிருக்கும் தனது இல்லத்தில் இருந்து முஸ்தபாகண்ணு அடுத்த திருமணம் செய்ய தனது பழைய வேட்டி, கோட்டு, தலையில் சுற்றிய துண்டுடன், இப்பொழுது வீட்டில் மீதமிருக்கும் அதபு பிரம்பை துணையாக ஊன்றி ரைஹானத் வீட்டுக்கு செல்கிறார். போகும்பொழுது துணைக்கு இஸ்ராயீல் வந்து சேர்ந்து கொள்கிறான். வழியில் ஒரு வீட்டில் தன்னுடைய சாய்வு நாற்காலியைப் பார்க்கிறார்.  அதனை வாங்கியவர்,  முஸ்தபாகண்ணுவின் வீட்டு தொழுவத்தில் ஒரு காலத்தில் வேலை செய்தவன். அவனுக்கா அதை விற்றாய் என இஸ்ராயீலிடம் முஸ்தபாகண்ணு  கோபமாக கேட்க அவனோ 'யார்கிட்ட காய்(காசு) இருக்கோ அவங்களுக்குத் தானே கொடுக்க முடியும். இப்போ உங்க சட்டைல இருக்கற காசு அவனுடையது' என்கிறான்.   

ரைஹானத்தின் அம்மாவான ராவியத்தும் ஒரு காலத்தில் முஸ்தபாகண்ணுவுக்கு பழக்கமாக இருந்தவள் தான். அவரைப் பார்த்ததும் முதலாளி சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே என்கிறாள். உன் மகளுக்கு மாப்பிளை பார்க்கிறேன் என்று சொன்னாய் அல்லவா அதனால்தான் வந்தேன் என்கிறார். மாப்பிள்ளை யாரு என ராவியத் கேட்க, நான்தான் மாப்பிள்ளை என்கிறார் முஸ்தபாகண்ணு. 'நீங்க போயிடுங்க முதலாளி. கிழவனான உங்களுக்கா என் பொண்ணை கொடுப்பேன்' எனச் சொல்ல,'நான் பவுரீன்பிள்ளையின் பேரன். சவ்தா மன்சிலின் காரணவர் ' என்கிறார் முஸ்தபாகண்ணு.  'ஆ.. வலிய காரணவன் ' என்று எச்சிலைக் கூட்டி முற்றத்தில் காரித்துப்புகிறாள் ராவியத். அதில் ஒரு துளி அவரின் காலில் படுகிறது. 

தன்னுடைய வீட்டில் வேலை செய்தவளும் தனக்கு அடிமை போல இருந்தவளுமான ராவியத் அவரை இப்படிச் சொல்லியதில் அவருக்கு ஒரு நடுக்கம் ஏற்பட்டு கீழே விழப்போகிறார். இஸ்ராயீல் அவரைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு கடற்கரை மணலில் படுக்க வைக்கிறான். ஒரு காலத்தில் அதிகாரமும், காமமும் கொண்டு அரசரைப் போல ஆட்சி செய்த முஸ்தபாகண்ணுவுக்கு  இன்று யாரும் துணையில்லை. சொல்லப்போனால் மனிதரையும், உழைப்பையும், செல்வத்தையும்  மதிக்காத அவருக்கு யாரும் துணை வரப்போவதில்லை. இப்பொழுது அந்த அதபு பிரம்பு கடற்கரை ஓரம் மணலில் கிடக்கிறது. 

====

சாய்வு நாற்காலி

தோப்பில் முஹம்மது மீரான் 

காலச்சுவடு பதிப்பகம் 

சாகித்ய அகாதெமி விருது - 1997


Tuesday, December 23, 2025

மிளகு - நாவல் - இரா.முருகன்

போர்ச்சுகல் அரசால் மிளகு ராணி என்று போற்றப்பட்ட அரசி  சென்னபைராதேவி , 54 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறார். மிளகுக்கும் நறுமணப் பொருட்களுக்கும் பெயர் பெற்ற கொங்கன் பிரதேசமான கெருசோப்பா, ஹொன்னாவர் பகுதியை ஆண்டவர் ராணி சென்னா. கேரளாவின் கோழிக்கோடு தொடங்கி கோகர்ணம் மற்றும் கோவா வரை கடலை ஒட்டிய மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வளமான மண்ணில் மிளகு தாராளமாக விளைச்சல் கொடுத்திருக்கிறது. இப்பொழுது அந்த பகுதிகளுக்கு சென்றாலும் பசுமை நிறைந்த மிளகு தோட்டங்கள் காணக் கிடைக்கின்றன. நவீன காலத்தில் மனிதன் அழித்தது போக மீதி இருப்பதை நாம் பார்க்கும்போது , அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றும். 


தரமும், மணமும் நிறைந்த மிளகு போன்ற பொருட்களுக்கு வேண்டியே அந்தப் பகுதிகள் மீது தொடர்ந்து மற்ற நாடுகளின் தாக்குதல் இருந்திருக்கிறது. அதைத் தடுக்க விஜயநகரப் பேரரசுடன் இணைந்து ஆட்சி செய்கிறார் சென்னபைராதேவி. சமண மதத்தைத் தாய் மதமாக கொண்டவர் சென்னா. திருமணம் செய்துகொள்ளாத ராணி சென்னா, தன்னுடைய சொந்தத்தில் நேமிநாதன் என்பவனை வளர்ப்பு மகனாக வளர்க்கிறார். அவனுக்குத் திருமணமாகி ரஞ்சனா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உண்டு.  இளவரசனாக இருந்தாலும் நீண்ட ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ராணியைத் தாண்டி அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை. ராணியை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர எதிரிகளுடன் சேர்ந்து சில திட்டங்கள் தீட்டுகிறான். 


பக்கத்துக்கு நாடுகளை அரசு ஆண்டு வருபவர்களான உள்ளால் பகுதியின் ராணி அப்பக்கா, கோழிக்கோடு அரசர் சாமுதிரி என எல்லோருமே சென்னபைராதேவி மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். போர்ச்சுகல் நாட்டின் அரசுப் பிரதிநிதி பெத்ரோ என்பவர் அவர்களிடம் மிளகு வர்த்தகம் தனியாக செய்ய  பேசிப்பார்க்கிறார். ஆனால் சென்னாவைக் கேட்காமல் ஒரு மிளகையும் எங்களால் விற்பனைக்கு கொடுக்க முடியாது எனச் சொல்லி விடுகிறார்கள். 

போர்ச்சுகல் நாட்டின் ராணுவத்தில் இருந்த தனது கணவனின் இறப்புக்கு காரணமான ராணி சென்னாவை பழி வாங்க ஹொன்னாவர் பகுதிக்கு வருகிறாள் ரோகிணி. இந்தோ - போர்த்துக்கல் தம்பதிக்கு பிறந்த ரோகிணி, திருமணத்திற்கு பின்னர் போர்ச்சுகல் நாட்டில் வசித்து வந்தாள்.  சமையல் செய்வதிலும், இனிப்புகள் செய்வதிலும் ஆர்வமுடைய ரோகிணி ஹொன்னாவரில் ஒரு இனிப்புக்கடையை ஆரம்பிக்கிறாள். அவளுக்கு கடையை நடத்துவதைக் காட்டிலும், ராணியை பழிவாங்க வேண்டியதே முதன்மை காரணம் என்பதால் ராணியின் வளர்ப்பு மகன் நேமிநாதனை தன் வலையில் விழவைக்கிறாள். நேமிநாதனை விட மூத்தவளாக இருந்தாலும், அவளின் காமத்தில் மூழ்கி அவள் சொல்வதைக் கேட்கிறான் நேமிநாதன்



அரசாங்க மருத்துவரான வைத்தியநாத், அவரின் மனைவி மிங்கு மற்றும் பெத்ரோ மாளிகையில் வேலை செய்யும் கஸாண்ட்ரா என நாவலில் சில பாத்திரங்கள் மறக்க முடியாதவை. நாவலில் 400 வருடங்களுக்கு முற்பட்ட கதையை சொல்லும்போதே கூடவே இப்பொழுது இருக்கும் நான்கைந்து குடும்பங்களைப் பற்றிய கதையும் வருகிறது. அம்பலப்புழையில் உணவகம் நடத்தி வரும் திலீப், அவரின் தந்தையான பரமனுக்கு திதி கொடுக்கிறார். திதி கொடுத்த அன்று 100 வயதுக்கும் மேலான ஒரு பெரியவர் நான்தான் உன் அப்பா என்று திரும்பி வருகிறார். அவர் சொல்லிய நினைவுகள் மூலம் அது தன் அப்பா தான் என்று முடிவு செய்து தன்னுடனே தங்கி கொள்ளச் செய்கிறார். இவருக்கு நினைவுகள் பின் திரும்பி 400 வருடங்களுக்கு முன்பு ரோகிணி கடையில் சமையல் செய்யும் மடையராக சேர்ந்து கொள்கிறார். அவரின் நினைவுகள் பின்னாடி சென்றும் பின்னர் நிகழ்காலத்துக்கு வந்தும் ஊசலாடுகிறது. 

பரமன் பழைய காலத்தில் ரோஹிணியைத் திருமணம் செய்து கொள்கிறார். அவளுக்கு நேமிநாதனுடன் இருந்த பழக்கத்தால் மஞ்சுநாத் என்ற குழந்தை பிறக்கிறான். அந்தக் குழந்தைக்கு அப்பா என்று காட்டவே பரமனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் ரோகிணி. சென்ற காலத்தில் மஞ்சுநாத்துக்கு தந்தையாகவும், நிகழ் காலமான இப்பொழுது திலீப்புக்கு தந்தையாகவும் இருக்கிறார் பரமன். முன்பும் பின்பும் என நினைவுகளில் மூழ்கியபடியே இருக்கிறார் பரமன். 

திலீப்பின் மகளான கல்பனா, அவர்களின் குடும்ப நண்பரான சாரதா தெரிசா என்பவரின் மகன் மருதுவைக் காதலிக்கிறாள். கல்பனா லண்டன் செல்லும்போது அங்கே தங்கி இருக்கும் பிஷாரடி என்னும் பேராசிரியர், மருதுவின் குடும்பம் என சந்திக்கிறாள். மருது ஆன்லைனில் மிளகு வர்த்தகம் செய்கிறான். எல்லோருடைய தொடர்பிலும் மிளகு ஒரு மறைபொருளாக இருக்கிறது. சாரதா தெரிசா அங்கே கல்யாணம் செய்து கொண்ட முசாபர் என்பவரை விவாகரத்து செய்து விடுகிறாள். விவாகரத்து செய்தாலும் அவரிடம் பேச்சுவார்த்தை உண்டு. மருதுவின் உண்மையான தகப்பன் இந்தியாவில் இருக்கிற சங்கரன் என்பவர். அவருக்கு இங்கே ஒரு பெண் குழந்தையும், வசந்தி என்கிற மனைவியும் உண்டு. ஒரு விமானக் கடத்தலில் மாட்டிக் கொண்ட அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சாரதா இந்தியா வருகிறாள். சங்கரனுக்கு அதற்கு பின்னர் உடல் நிலை பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.  கேரளாவில் உள்ள சில கோவில்களுக்கு செல்ல வேண்டும் எனச் சொல்ல எல்லோரும் அம்பலப்புழையில் சந்திக்கிறார்கள். 

ராணி சென்னாவின் இறுதிக் காலங்கள் சிறப்பாக இல்லை. 54 ஆண்டுகள் ஆண்ட அவருக்கு மக்களின் ஆதரவும் குறைகிறது.  போர் நெருங்குவதால் வியாபாரிகளும், செல்வந்தர்களும் தங்கள் செல்வத்தை வீட்டில் புதைத்து விட்டு மேலே பேய் மிளகை விதைத்துக் கொண்டு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். பேய் மிளகு ஒரே நாளில் ஒரு வீட்டை மூழ்கடிக்க கூடிய தாவரம் என நாவலில் சொல்லப்படுகிறது. வளர்ப்பு மகன் நேமிநாதன் கெலடி அரசர் நாயக்கர் தலைமையில் படை திரட்டிக் கொண்டு மிர்ஜான் கோட்டையை முற்றுகையிடுகிறான். ராணி மக்களிடம் வீட்டுக்கு ஒருவர் வாளேந்தி வாருங்கள் எனச் சொல்கிறாள், ஆனால் ராணியின் பேச்சை யாரும் சட்டை செய்வதில்லை. இரு தரப்பிலும் இழப்புகள் இருக்கின்றன.  

கோட்டையை கைப்பற்ற போகும் முந்தைய தின மாலையில், நேமிநாதன் 'போருக்கு வந்து உதவி செய்ததற்கு நன்றி, நீங்கள் செல்லலாம்' என கெலடி அரசரிடம் சொல்ல இதற்காகவா நாங்கள் வந்தோம் எனக் கூறி அவனைக் கொன்று விடுகிறார்கள். நேமிநாதன் இறப்பின் பின்னர், ராணி சென்னபைராதேவி கைது செய்யப்பட்டு கெலடி அரசரின் மாளிகையில் சிறை வைக்கப்படுகிறாள். முதுமையும், நம்பிக்கை மோசடி செய்தவர்களையும் நினைத்து ராணி சில வருடங்களில் இறந்து போகிறார். தன்னுடைய இளவயதில் காதலித்து மதுரைக்கு சென்று வருகிறேன் என்று சொல்லிச் சென்ற வரதன் என்பவனை திருமணம் செய்திருந்தால், காட்சிகளே மாறிப் போயிருக்கும் என நினைக்கிறாள் ராணி. கெருஸொப்பா மற்றும் ஹொன்னாவர் பகுதிகள் ஆட்சி மாற்றத்தால், மக்கள் இடப்பெயர்வும், புதியவர்களின் கொள்ளையடிக்கும் மனமும் சேர்ந்து  வளமிழந்து போகின்றன. 

ஹொன்னாவர், கெருசோப்பா பகுதிகளுக்கு பேராசிரியர் பிஷாரடி, சங்கரனின் குடும்பம், திலீப், அவரின் தந்தை பரமன் எல்லோரும் செல்கிறார்கள். அங்கே மிச்சமுள்ள மிர்ஜான் கோட்டை மற்றும் சமண ஆலயமான சதுர்முக பஸதி போன்றவற்றை பார்க்கிறார்கள். தாத்தா பரமனுக்கு நினைவுகள் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. போன காலத்தில் மகனாக இருந்த மஞ்சுநாத் கூப்பிடுவது போல அவருக்குத் தோன்றுகிறது.

===

எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் "வாசகன் ஓர் உழைப்பை அளித்து வாசிப்பதே நல்ல இலக்கியம். ஆனால் அந்த உழைப்பும் களிப்பூட்டுவதாக இருக்கவேண்டும். மிளகு அப்படிப்பட்ட நாவல்." என்று சொல்கிறார்.  மேலும், "இந்நாவலின் முதன்மை அழகு இதிலுள்ள  பல வகையான மொழிநடை. மொழிநடைகளாலான ஒரு கலைடாஸ்கோப் இந்நாவல். வெவ்வேறு நூற்றாண்டுகளின் பேச்சுமொழிகள், எழுத்துமொழிகள் கலந்து வருகின்றன. "  என்கிறார். 


Friday, December 5, 2025

வாராணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்

எப்பொழுதும் சிதை எரிந்து கொண்டிருக்கும் நகரம் வாராணசி. ஆனால் அதன் முகம் அது மட்டும் அல்ல. அமைதியையும், காமத்தையும் இன்னொரு முகமாக கொண்டிருக்கும் நகரம் வாரணாசி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன் என்பவரின் அழைப்பை ஏற்று வாரணாசி நகருக்கு செல்கிறான் சுதாகரன். சுதாகரன் அங்கே செல்லும் அந்த குறிப்பிட்ட தேதியின் முன்னரே பேராசிரியர் இறந்துவிடுகிறார். அங்கே சில நாட்கள் தங்கி இருக்கும்போது அவனுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான்.


பெண்களுடன் சுதாகரனுக்கு எளிதில் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த உறவுகளைத் தொடர இவன் விரும்புவதில்லை. எதற்கோ பயந்து தப்பித்துப் போகிறான். அதனை ஒருவாறு அந்தப் பெண்களும் அறிந்திருப்பார்கள் போல. இவன் விட்டுவிட்டு போன பின்னர் அவர்கள் அவனைத் தேடுவதில்லை. தங்களது பயணத்தில் ஒரு சிறு இளைப்பாறல் போல அமைகின்றன அவனுடனான உறவுகள். வயதான காலத்தில், முன்னர் சிலநாட்கள் ஈருடல் ஓருடலாக பழகிய சுமிதாவை கங்கை கரையில் சந்திக்கிறான். அவளோ அவனை யாரோ ஒரு வழிப்போக்கன் என நினைத்து போகிறாள். உண்மையாகவே அவளுக்கு அவனை நினைவில் இல்லை. 




உறவுக்கார பெண் சௌதாமிணி, பத்திரிகை அடித்து கல்யாணம் வரை சென்ற காதலி கீதா, தன்னை விட மூத்தவரான திருமதி மூர்த்தி, வெளிநாட்டிலிருந்து ஆய்வுக்கு வந்த சுமிதா என அவன் பழகிவிட்டு தப்பித்து ஓடும் விலங்காகவே இருக்கிறான். எதையும் எதிர்கொள்ள அவனுக்கு தயக்கம். பிரான்ஸ் சென்று அங்கே ஒரு வெளிநாட்டு பெண்ணை மணக்கும் அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது . ஆனால் அவளோ அவனை விட்டுவிட்டு குழந்தையுடன் அமெரிக்கா சென்றுவிடுகிறாள். உண்மையில் இவ்வளவு உறவுகளை அவன் இழந்து விடுவதிலேயே நாட்கள் சென்று விடுகிறது. பாரிஸில் பிறந்த தன் மகன் தன்னுடன் இருப்பான் என நினைத்திருக்க, மனைவியோ அவனை விட்டுப் பிரிந்து போகிறாள். 


இதற்கு நேர் எதிராக மனைவியை இழந்த பின்னர் தனது பெண்ணுக்கு செவிலித் தாயாக வந்த ஒரு பெண்ணை நேசித்து தனது வாழ்வில் முக்கிய இடம் கொடுத்த மனிதராக பேராசிரியர் இருக்கிறார். தன்னுடைய இறப்புக்கு பின்பும் அவள் எந்த இன்னலும் இல்லாமல், தனது பிள்ளைகளால் எந்த கஷ்டமும் அனுபவிக்க விடாமல், உயில் எழுதி வைத்து அவளின் வாழ்க்கையை நடத்த அனைத்தையும் செய்துவிடுகிறார். அந்தப்பெண் அதை எதிர்பார்க்காமல் இருந்தாலும், தன்னால் முடிந்ததை ஒரு பரஸ்பர அன்பு போல செய்கிறார். சுதாகரனுடைய தப்பிப்போதல் இவரிடம் இல்லை. 


பேராசிரியரால் முடிந்ததை சுதாகாரனால் செய்ய முடிவதில்லை அல்லது அதற்கான மனத்திடம் இல்லை. போலவே இவன் குணத்தை அறிந்தே அவன் பழகிய பெண்கள் எல்லோரும் அவனிடமிருந்து தப்பித்து போகிறார்கள் என்பது உண்மையா?.


பேராசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு கங்கை கரையில் சுதாகரன் பிண்டம் அளிக்கிறான். அப்பொழுது புரோகிதர் தனக்கு தானே கூட பிண்டம் வைத்துக் கொள்ளலாம், அது ஆத்ம பிண்டம் எனச் சொல்கிறார். சுதாகரன் அதைச் செய்கிறான். 


வாரணாசி என்பது இறப்பை கொண்டாடும் நகரம். அது அங்கே ஒரு தொழிலும் கூட. சுதாகரனின் நண்பன் ஒருவன் சிதையை நிர்வகிக்கும் தொழிலில் இருக்கிறான். சிதைகளுக்கு விறகுகள் போடும் தொழிலை அவனுடைய குடும்பம் செய்து வருகிறது. இன்னொருவர் தனது இறுதி காலத்தில் அங்கே வந்து தங்கியிருக்கும் வயதானவர்களை பராமரிக்கும் ஆசிரமம் நடத்தி வருகிறார். 


இந்நாவல் மாறிமாறி வரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது. சுதாகரனின் நினைவுச் சிடுக்குகளுக்குள் அலைந்து சென்றாலும், இறுதியில் அது நிலைக்கு வருகிறது. இந்நாவலை தமிழில் வாசிக்க மொழிபெயர்த்த சிற்பி அவர்களுக்கு நன்றிகள். 

வாராணசி 

எம்.டி.வாசுதேவன் நாயர் 

தமிழில்: சிற்பி 

Thursday, December 4, 2025

கொற்கை - ஜோ டி குருஸ்

2013 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்றது கொற்கை நாவல். கடலையும், கடல் சார்ந்து இருப்போரின் வாழ்க்கையையும் பின்னிக்கொண்டு நெய்தது கொற்கை நாவல். 1900 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கும் நாவல் 2010 ஆம் ஆண்டில் முடிகிறது. மற்ற நாவல்கள் போல, கொற்கையில் குறிப்பிட்டுச் சொல்ல முக்கியமான கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் நிறைய மாந்தர்கள் உண்டு. 

"காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திர போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குருஸ்"  என்று புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் அரவிந்தன். 



மேலும் " கிறிஸ்தவ சமயத்தின் வரவு, உள்ளூர்ச் சாதிகள் கிறிஸ்தவத்தை எதிர்கொண்ட விதம், சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், நவீன வாழ்வும் அரசியலும் உள்ளூர்ச் சமூகங்களைப் பாதிக்கும் விதம் என்று நாவலின் எல்லையைக் குறுக்கும் நெடுக்குமாக விஸ்தரித்துக் கொண்டு போகிறார் ஜோ டி குருஸ். பரதவர்கள், நாடார்கள் போன்ற சில பிரிவினரின் வாழ்வு, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, அரசியல், மொழி ஆகியவற்றைப் பதிவு செய்யும் இந்நாவல் சமூக, மொழியியல் ஆய்வுக்கும் பயன்படக்கூடிய ஆவணமாகவும் விளங்குகிறது.  குறிப்பாக பேச்சு மொழியைப் பதிவு செய்திருக்கும் துல்லியமும், பேச்சினூடே வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகளின் அடையாளங்களும் மிக முக்கியமானவை." எனச் சொல்கிறார் அரவிந்தன். 

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை கூட்டிச் செல்லும் இந்நாவல், முக்கியமான கதாபாத்திரம் என்று ஒருவரும் இல்லை. தண்டல் பிலிப்பும் அவரின் வாழ்க்கையும் மட்டுமே நாவலில் அங்கங்கே தொடர்ந்து வருகிறது. பல தலைமுறைகளின் வாழ்க்கை சொல்லப்படுவதால் நாவல் தாவித் தாவி செல்வது போல தோற்றம் கொள்கிறது. ஏதோ ஒரு அத்தியாயத்தை தனியாக படித்தாலும் ஒரு சிறுகதை போலவே அது தனியாகவே இருக்கும். அத்தனை வருடங்களையும், மக்களையும், நிகழ்வுகளையும் கோர்த்துக் கொடுத்த ஒரு பெரிய மாலை இது. 

சில இடங்களில் வலுக்கட்டாயமாக அந்த வருடங்களில் நடந்த முக்கிய நிகழ்வை சொல்ல ஒருவர் சொல்வது போலவே அல்லது நினைப்பது போலவோ வந்து போகிறது. சில நிகழ்வுகள் நாவலின் போக்கிலேயே சொல்லப்படுகிறது. இலங்கைக்கு செல்லும் தோணிகள், இங்கே இருந்து அங்கே சென்று தொழில் நடத்தும் மக்கள், தோட்ட வேலைக்கு செல்லும் மக்கள், அங்கே நடக்கும் சண்டைகள் என நிறைய தகவல்கள். 



கடலில் பயணம் செய்யும் தோணி தான் கொற்கை நாவலின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம். புயல் அடிக்கும் சமயம் தண்ணீர் உள்ளே வந்து பண்டல்கள் நனைந்து போவது, பாய்களை மாற்றிக்காட்டுவது, சில விபத்துகளில் உயிரிழப்பு, தொழில் பழக சிறு வயதிலேயே தோணிக்கு வேலைக்கு வரும் சிறுவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் தண்டல்கள் என எதையும் விடாமல் சொல்லிச் செல்கிறார் ஜோ டி குருஸ். போலவே கிறிஸ்தவ மதத்தில் இப்போது இருந்தாலும், சந்தன மாரியம்மனையும், திருச்செந்தூர் முருகனையும் வழிபடும் மக்களையும் குறிப்பிட அவர் தவறுவதில்லை. 

புத்தகத்தின் இறுதியில் நாவலில் சொல்லப்பட்ட மக்களின் தலை முறைகளின் வரைபடம், தோணிகள் பற்றிய வார்த்தைகள் என கொடுக்கப்பட்டுள்ளது. 


Wednesday, August 13, 2025

சார்த்தா - எஸ். எல். பைரப்பா

அந்தக் காலத்தில் வணிகம் செய்வதற்காக நாடு விட்டு நாடு குழுவாக பயணம் செய்துள்ளனர். நீண்ட நாள் பயணம் என்பதால், ஒரு குழுவாகவே அனைவரும் இணைந்து சென்றுள்ளனர். இணைந்து செல்வதால் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் புத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்களே அதிகம் இருந்துள்ளனர். அப்படி ஒரு குழுவாகச் செல்வதை சார்த்தா என அழைத்துள்ளனர்.  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இக்கதை நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சார்த்தா என்ற சொல், தமிழில் நமது இலக்கியத்தில் (சிலப்பதிகாரம்) உள்ளது என்கிறார் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த ஜெயா வெங்கட்ராமன்.

தனது முன்னுரையில் "வணிகர் கூட்டத்தின் தலைவன் சாத்தன், சாத்துவான் என அழைக்கப்பட்டான். வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய அய்யனாருக்கும் சாத்தன் என்ற பெயருண்டு. ஒருவரை ஒருவர் சார்ந்து கூட்டமாகச் செல்வதால் 'சார்தல்' எனும் சொல்லிலிருந்து சாத்து எனும் சொல் வழக்கூன்றியது." என்கிறார் ஜெயா வெங்கட்ராமன்.



நாகபட்டன் என்கிற பிராமண இளைஞன் தனது தாய் மற்றும் மனைவி சாலினியுடன் வசித்து வருகிறான். அரசன் அமருக மகாராஜாவுக்கு இவன் நண்பன். அரசனான அவன் தனது நண்பன் நாகபட்டனை வணிகக் குழுவோடு சேர்ந்து பயணித்து அவர்கள் எவ்வாறு வணிகம் செய்கிறார்கள், சுங்க வரிகள் மற்றும் மற்ற நாடுகளின் வணிக நிலைமை என அறிந்து வருமாறு சொல்கிறான். வணிகம் பற்றி அறிந்து கொள்கிறேன் என்று சார்த்தாவிடம் சொன்னால், அவர்கள் அவனைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்தக் குழுவுடன் கல்வி கற்க செல்பவர்கள், கலை ஆர்வம் கொண்டவர்கள், வேறு ஊர்களுக்கு குடி பெயர்பவர்கள் என பயணிகளாகச் செல்ல முடியும்.  'காசி சென்று வைதீக மேல் படிப்பு படிக்கப் போகிறார், எனவே உங்கள் குழுவுடன் இவரை அழைத்துச் செல்லுங்கள்' என அரசனே ஒரு குழுவிடம் சொல்லிவிடுவதால், மறுக்காமல் அவனை அழைத்துச் செல்கிறார்கள்.  

போகும் வழியில் அவன் எவ்வளவு முயன்றாலும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதில்லை. குழுவில் பொன்னும் பொருட்களும் பாதுகாப்பாக செல்கின்றன. திருடர் பயம் காரணமாக அதற்கு காவலர்களும் உண்டு. இந்த சார்த்தா வேறு மார்க்கமாக பயணிப்பதால், காசி செல்லும் இன்னொரு சார்த்தாவுடன் பயணிக்குமாறு கூறி மதுராவில் இருக்கும் ஒரு புத்த விகாரையில் நாகபட்டனை இருக்கச் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்புகின்றனர்.  வணிகம் பற்றிய சில தகவல்களை அந்த புத்த விகாரையில் இவன் பெறுகிறான். 

புத்த விகாரையில் தங்கி இருக்கும்பொழுது அந்த ஊரில் இருக்கும் ஒரு நாடகக் குழுவுடன் நாகபட்டனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதன் மூலம் அவன் நாடக நடிகனாக நடிக்கிறான். ஒரு நாடகம் மட்டுமே என்று இருந்த அவனிடம், நன்றாக நடிப்பதால் சுற்றி இருக்கும் ஊர்களிலும் அதே நாடகம் போடப்பட்டு நாகபட்டன் புகழ் அடைகிறான். தனது நாட்டில் இருந்து வந்து பல வருடங்கள் ஆனபோதிலும், அவன் திரும்பி போகாமல் நாடகம் நடிப்பிலேயே குறியாக இருக்கிறான். நாடகத்தில் கிருஷ்ணர் வேடம் என்பதால் அவனை எல்லோரும் கிருஷ்ணானந்தர் என்றே அழைக்கிறார்கள். அவனுக்கு ஜோடியாக நடிக்கும் சந்திரிகையின் மேல் காதல் வந்தாலும் அவள் அதனை கண்டுகொள்வதில்லை. அவனின் நட்பு, பேச்சு என அவள் விரும்பினாலும் அவளை அடைய அவள் விடுவதில்லை. ஒரு கட்டத்தில் அவனை விட்டு அவள் விலகிச் சென்றுவிடுகிறாள். 



சந்திரிகை விலகிச் சென்றாலும் நாகபட்டனுக்கு அவள் மேல் இருக்கும் காதல் மறக்க முடிவதில்லை. அவன் ஊரைச் சேர்ந்த ஒருவரை சந்திக்க நேர்கிறது. மேல் படிப்புக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு பல வருடங்கள் திரும்பாமலே இருந்ததால் அவனின் இளவயது மனைவி சாலினி, அரசனுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஒரு குழந்தையும் பிறந்திருப்பதாகச் சொல்கிறான். தனது மருமகளின் நடவடிக்கைகள் கண்டு கவலைப்பட்டு  அவனது அம்மா இறந்துவிட்டதாகவும் கேள்விப்படுகிறான்.  பின்னர் யோகம், தாந்திரீகம் என ஆன்மிகத்தில் நாட்டம் கொள்கிறான். தனது மனைவியையும், அரசனையும் தனது யோக சக்திகள், தாந்திரீக மந்திரங்கள் மூலம் வெல்ல வேண்டும் என நினைக்கிறான். 

நாவலில் சந்திரிகைக்கு ஒரு பழைய கதை சொல்லப்படுகிறது. தனக்கு பாட்டு குருவாக இருந்த இளைஞன் ஒருவனையே அவள் மணந்து இருக்கிறாள். அவளின் கணவனுக்கு கண் பார்வை இல்லை. மிகவும் அழகியான இவளை அவன் புகழ முடிவதில்லை. பிரச்சினை அவள் கணவனின் மருமகன் வடிவில் வருகிறது. பாட்டு கற்றுக்கொள்ள வந்த அவன் சந்திரிகையின் அழகை வர்ணிக்கிறான். இருவரும் எல்லை மீறிப் போக, அதனை அறிந்த கணவன் அவளிடம் விசாரிக்கிறான். பின்னர் மருமகன் சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஊரை விட்டுச் செல்ல, கண் பார்வை இல்லாத அவளின் கணவன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் மனமுடைந்த சந்திரிகை ஒரு யோக குருவின் மூலம் தியானம் கற்றுக்கொண்டு இல்லற வாழ்க்கையில் இருந்து தள்ளியே இருக்கிறாள். அதனால்தான் அவள் நாகபட்டனை விட்டுச் சென்று விட்டாள்.  

நாகபட்டன் தாந்திரீக நாட்டம் கொண்டு அதில் சில முயற்சிகளைச் செய்கிறான். அவனுக்கு சொல்லிக் கொடுத்த குரு, எல்லாம் உனக்கு சொல்லிக் கொடுத்தாகி விட்டது, நீ தனியே செல் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். எனவே அவன் மீண்டும் சந்திரிகையை சந்திக்கச் செல்கிறான். அவளைக் கருவியாகக் கொண்டு தன் சாதனையை நிகழ்த்த வேண்டும் எனச் சொல்ல, முதலில் தயங்கும் அவள் பின்னர் சம்மதிக்கிறாள்.  நாட்கள் செல்லச் செல்ல அவள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் தவறான வழியில் சென்றதாகக் கருதி, சந்திரிகை சொல்வதைக் கேட்கிறேன் என்கிறான். அவளோ இல்லறம் மட்டும் வேண்டாம் என உறுதியாக இருக்கிறாள். 

அதன் பின்னர் புத்த குருவின் மூலம் நாளந்தாவிற்கு படிக்கச் செல்கிறான். புத்த மதக் கருத்துக்களை அறிந்து கொள்ளவே அவன் அங்கே செல்கிறான். அங்கே தனது குரு மண்டன மிஸ்ரருக்கு குருவாக இருந்த குமரிலபட்டரைச் சந்திக்கிறான். கொஞ்ச நாட்களில், வேத குருவாக இருந்துகொண்டு புத்த மதத்தின் கருத்துக்களை அறிந்துகொள்ள புத்த சீடன் போர்வையில் அங்கே வந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார் குமரிலபட்டர். குமரிலபட்டரோ தனது நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனைத் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த புத்த குருவிடம் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும், நான் பொய் சொன்னதால் பிராயச்சித்தமாக தான் வேள்வி மூட்டி இறக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு அவ்வாறே இறந்தும் போகிறார். நாளந்தா பள்ளியில் இருந்து கிளம்பும் நாகபட்டன் அரச முறைப் பயணமாக தனது குரு மண்டன மிஸ்ரரைச் சந்திக்க தனது சொந்த ஊருக்குச் செல்கிறான். 

அங்கே மண்டன மிஸ்ரரைச் சந்திக்க சங்கரர் வருகிறார்.  கல்வியில் சிறந்தவரான மண்டனருடன் விவாதம் செய்து வெற்றி பெற வேண்டும் என்பது யதியின் விருப்பம். அதற்கு நடுவராக மண்டனரின் மனைவியும், குமரிலபட்டரின் சகோதரியுமான பாரத தேவி இருக்கிறார். இருவருக்கும் விவாதம் நடக்கிறது. இறுதியில் மண்டனர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சங்கரருடன் சேர்ந்து துறவறம் மேற்கொள்வதாகச் சொல்கிறார். ஆனால் பாரத தேவி, காமம் பற்றி ஒரு கேள்வி கேட்க அது பற்றி அறியாத சங்கரர் சிறிது நாட்கள் சென்று இதற்கு பதில் அளிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அதன் பின்னர் கூடு விட்டு கூடு பாய்தல் மூலமாக அதற்குரிய பதிலை அறிந்து வந்து அதனை கூறிவிட்டு மண்டன மிஸ்ரரை அழைத்துச் செல்கிறார். பாரத தேவி, நாகபட்டனிடம் 'இல்லற வாழ்க்கையில் உன்னால் அடைய முடியாத ஞானம் வெளியே கிடைக்குமா?' எனக் கேட்கிறார். இவை எல்லாமே நாகபட்டனின் பார்வையில் சொல்லப்படுகிறது. 

பின்னர் அங்கிருந்து கிளம்பும் நாகபட்டன், சந்திரிகையுடன் சேர்ந்து பகைவர்களான மிலேச்சர்கள் படையெடுப்பில் நாடு படும் துயரம் கண்டு நாடகம் மூலமாக எச்சரிக்கை செய்ய நினைக்கிறார்கள். அவ்வாறே நாடகங்களை நடிக்கிறார்கள். பின்னர் அவர்கள் இருவரும் பிணையாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றனர். பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் இறுதியில் அவர்கள் இல்லற வாழ்க்கை நடத்துவதென முடிவு செய்கிறார்கள். முன்பு பாரத தேவி நாகபட்டனிடம் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வருகிறது. 

நாகபட்டனின் பயணம் பற்றி சார்த்தா நாவலில் சொல்லப்பட்டாலும் அவனுடைய உள் நோக்கிய பயணத்தைச் சொல்வதாகவும் இருக்கிறது. வேதம், சாக்தம், புத்தம், யோகம், தியானம் எனப் பல வழிகளில் அவன் முன்னேற முயன்று கொண்டே இருக்கிறான். அவனுடைய உள் நோக்கிய பயணத்தில் இடையூறு ஏற்படும் போதெல்லாம் சிறிது இளைப்பாறவோ, ஆறுதல் பெறவோ, அவனை தக்க வழியில் திரும்பச் செய்யும் ஒரு தோழியாக சந்திரிகை இருக்கிறாள். 

சார்த்தா - எஸ். எல். பைரப்பா
தமிழில்: ஜெயா வெங்கட்ராமன்
விஜயபாரதம் பதிப்பகம் 
 

Wednesday, July 9, 2025

என் சரித்திரம் - உ.வே.சா

அச்சு பதிப்பு புத்தகங்கள் பதிப்பதற்கு முன்பு, நம்முடைய தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், செய்யுள், உரைகள் போன்றவை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளை படியெடுத்தே ஒவ்வொருவரும் படித்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களிடம் இருந்து வாய்மொழிப் பாடமாகவும் ஒவ்வொரு தலைமுறையாக நூல்கள் கற்பிக்கப்பட்டன. ஓலைச் சுவடியில் மெய்யெழுத்து, கால், வல்லினம் போன்றவை இருக்காது. அதனால் இன்னொருவர் படியெடுக்கும் பொழுது இயல்பாகவே பிழைகள் ஏற்பட்டு விடும். அதனால் பல ஆண்டுகள் கழித்து ஒரு செய்யுளானது பல பிழைகளுடன் இருக்கும், அதனை ஒப்பு நோக்க நல்ல மூலம் உள்ள சுவடி வேண்டும். 

தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா கும்பகோணம் அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் தந்தை வேங்கட சுப்பையர் கர்நாடக பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகளைச் சொல்வபராகவும் இருந்துள்ளார். கதை பிரசங்கம் செய்வதே குடும்ப வருமானம். சிறுவயதில் இருந்தே உ.வே.சா, குடும்ப பாரம்பரியம் காரணமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்கிறார். ஆனால், அவருக்கு தமிழ் மீதே ஆர்வம் ஏற்படுகிறது. கணிதமோ, ஆங்கிலமோ அவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தவில்லை. பக்கத்தில் இருக்கும் சில தமிழ் அறிஞர்களிடம் பழம் பாடல்களை பாடம் கேட்கிறார். இவர் கற்றுக்கொள்ளும் வேகத்தை பார்த்து அவர்கள் பெரிய தமிழ் பண்டிதரிடம் சென்று உ.வே.சா கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்கள். 


அந்த காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில்  மகாவித்துவானாக இருந்த  மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மிகச்சிறந்த தமிழ் அறிஞராகவும், பாடல்கள் புனைவதிலும், புராணங்களை இயற்றுவதிலும், இலக்கணம் அறிந்தவராகவும் இருந்திருக்கிறார். முதலில் அவர் மறுத்தாலும் சிறு வயது உ.வே.சாவின் ஆர்வத்தைப் பார்த்து தன்னுடன் இருந்து படித்துக்கொள்ள சம்மதிக்கிறார். மிகச்சிறந்தவரான பிள்ளை அவர்களே உ.வே.சா-விற்கு குருவாக அமைகிறார். ஆதீன மடத்துக்கு சென்றால் அங்கே சாப்பாட்டுக்கு  பிரச்சினை இருக்காது, ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இந்த  ஊரில் நீங்களே ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்ல, அதற்கு சம்மதித்து பாடம் கற்றுக்கொள்கிறார். 

திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு தனது ஆசிரியருடன் செல்லும்பொழுது, அப்பொழுது அங்கே மடாதிபதியாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் உ.வே.சா அவர்களின் தமிழ் அறிவையும், அவர் பாடல்களை இசையோடு பாடுவதிலும் உள்ள தேர்ச்சியை அறிந்து அவரைப் பாராட்டுகிறார். மடத்தில் உள்ளவர்களும் உ.வே.சா அவர்களுடன் நட்புடன் இருக்கிறார்கள். ஆதீனம் உ.வே.சா வின் பெற்றோரை திருவாவடுதுறைக்கே அழைத்து வந்து ஒரு வீடு பார்த்து கொடுத்து என அனைத்து உதவிகளையும் செய்கிறார். குருவுடன் எங்கே சென்றாலும் கூடவே செல்லும் உ.வே.சா வை அனைவரும் விரும்பினாலும், ஒரு சிலர் சிறு வயதில் அவருக்குள்ள தேர்ச்சியையும், குரு அவரிடம் வைத்துள்ள அன்பையும், ஆதீனம் அவர் மேல் வைத்துள்ள மதிப்பையும் அறிந்து சிலரால் சில நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கிறார். 



ஆதரவாக இருந்த குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்த உ.வே.சா கலங்கிப் போகிறார். ஆதீன தலைவர் சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஆறுதல் அளித்து, மடத்திலேயே இருக்க வேண்டும் எனவும், நானே உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன் எனவும் சொல்கிறார். அவர் கற்றுக்கொள்ளவும், கற்றதை மடத்தில் உள்ள சிலருக்கு பாடம் சொல்லவும் என அந்த நாட்களை பயன்படுத்துகிறார் உ.வே.சா. ஆதீனத்துக்கு அடிக்கடி வந்து போகும் தியாகராச செட்டியார் என்பவர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் ஓய்வு பெறுவதையொட்டி அவருடைய இடத்தை உ.வே.சா பெற்று கல்லூரியில் பணிபுரிய வேண்டும் என ஆதீன சந்நிதானத்திடம் சொல்ல, அவரோ நல்ல அறிஞராக உள்ள  உ.வே.சா வை மடத்தில் இருந்து அனுப்ப முடியாது எனச் சொல்கிறார். நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள், உ.வே.சா-வுக்கு இந்த பணி கிடைத்தால் அவருக்கு நல்லது, கல்லூரி விடுமுறை நாட்களில் மடத்துக்கு வந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். 

தியாகராச செட்டியார் சென்ற பின்னர் ஆதீனம், உ.வே.சா-வை கல்லூரியில் பணிக்கு அனுப்ப சம்மதிக்கிறார். நமக்கு பின்னர் இந்த ஆதீன மடத்துக்கு பொறுப்புக்கு வருகிறவர்கள் நம்மை போலவே இந்த பிள்ளையிடம் ஆதரவாக இருப்பார்கள் எனச்  சொல்ல முடியாது, உ.வே.சா கல்லூரி பணியை ஏற்றுக் கொண்டால் அவருக்கு நன்மையே கிடைக்கும் எனச் சொல்லி அனுப்பிவைக்கிறார். கல்லூரிப் பணியில் சேர்வதற்கு முன்னர் அங்குள்ளவர்கள் அவருடைய தகுதியையும், தமிழ் புத்தகங்களில் உள்ள தேர்ச்சியையும், அவர் பாடம் நடத்தும் விதத்தையும் வியந்து பாராட்டுகிறார்கள். கல்லூரிப் பணி அவர் விரும்பும் வண்ணமே இருக்க, விடுமுறை நாட்களில் மடத்துக்கு சென்று ஆதீனத்திடம் பாடம் கேட்டும் வருகிறார். ஒருநாள் ஆதீனம் கும்பகோணத்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை சென்று சந்திக்கச்  சொல்கிறார். 

கும்பகோணம் முன்சீப் அதிகாரியாக இருக்கும்  சேலம் இராமசுவாமி முதலியார் என்பவரே அவர். அவரைச் சந்திக்க உ.வே.சா செல்கிறார். தமிழில் ஆர்வமுள்ள இராமசுவாமி முதலியார், உ.வே.சா விடம் என்ன படித்துள்ளீர்கள் என வினவுகிறார். அவரிடம் தான் கற்ற அந்தாதி, கலம்பகம், புராணம், செய்யுள்கள் என அனைத்தையும் சொல்கிறார். அவரோ இன்னும் என்ன, என்ன எனக் கேட்கிறார். அவரும் தனக்குத் தெரிந்த அனைத்து நூல்களையும் சொல்கிறார். இராமசுவாமி முதலியாருக்கோ அவர் சொல்வதில் ஒரு ஆர்வமும் ஏற்படவில்லை. பின்னர் தனது குருவிடமும், ஆதீனத்திடமும் கற்ற அனைத்து நூல்களையும் பட்டியல் போடுகிறார். அப்பொழுதும் அவர் மசியவில்லை. இவ்வளவு நூல்களைச் சொல்லியும், நீங்கள் ஏன் ஒரு வியப்பும் அடையவில்லை என அவரிடமே கேட்க, ராமசுவாமி அவர்கள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களை நீங்கள் படித்து இருக்கிறீர்களா என்று கேட்க, உவேசா-வோ 'எனது குருவே இந்த நூல்களை எல்லாம் படித்ததில்லை, நான் எப்படி' என மனதுக்குள் நினைத்துக்கொண்டு, அந்த நூல்கள் என்னிடம் இல்லை, கிடைத்தால் படித்துக்கொள்வேன் எனச் சொல்கிறார். 

இராமசுவாமி அவர்கள் கொடுத்த சுவடியில் இருந்து சிந்தாமணியின் சிறப்பையும் நூல் நயத்தையும் அறிந்து கொள்கிறார். ஆனால் பிழைகள் மலிந்து இருக்கின்றன. நல்ல படியை எடுத்து சீவக சிந்தாமணியை பதிப்பிக்க வேண்டும் என நினைத்து அந்தச் செயலில் இறங்குகிறார். ஒரு சிலர் இது ஆகக்கூடிய வேலை இல்லை, பலரும் அதை பதிப்பிக்க நினைத்து முடிக்க முடியாமல் பாதியில் விட்டுவிட்டனர் எனச் சொல்கிறார்கள். தான் நிச்சயம் சிந்தாமணியை பதிப்பிப்பேன் அதுவும் பிழைகள் இல்லாத நல்ல பதிப்பாக இருக்க வேண்டும் என நினைத்து, பல ஊர்களில் தேடுகிறார். சமண மதத்தை சேர்ந்தவர்களிடம் பழகி அவர்களிடம் இருக்கும் சுவடிகளை வாங்கி ஒப்பீடு செய்கிறார்.  பத்துக்கும் மேற்பட்ட சிந்தாமணி நூல்களை வைத்து ஒப்பீடு செய்து மிகச் சிறந்த முறையில் சிந்தாமணியை நூல் வடிவில் கொண்டு வருகிறார். 

அவரின் முயற்சியை அனைவரும் பாராட்ட, ஒரு சிலரோ சைவ சமய ஆதீனத்துடன் தொடர்புடைய உவேசா சிந்தாமணியை பதிப்பாக்கம் செய்ததை விரும்பவில்லை. பொய்களை கலந்து செய்த மணி சீவக சிந்தாமணி எனப் பேசிக்கொண்டு, அதை ஆதீனத்துடனும் சொல்லி விடுகிறார்கள். ஆதீனமோ உவேசா-விடம் அவர்களை நினைத்து பயப்பட வேண்டாம், உங்கள் தமிழ்ப்பணி தொடர வேண்டும் எனச் சொல்கிறார். 'பொய்யே கட்டிய மணியாக' இருந்தாலும் சிந்தாமணியில் நமக்குத் தேவை அதில் உள்ள தமிழ்ச்சுவையும், செய்யுள் அமைப்பும் தான் என இந்த நூலில் எழுதுகிறார் உவேசா. 

பின்னர் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பழைய இலக்கியங்களைத் தேடி அலைகிறார். யாராவது எங்கோ ஓலைச் சுவடிகள் இருக்கின்றன எனச் சொன்னால் அங்கே செல்கிறார். சில பயணங்களில் நல்ல பதிப்புகள் கிடைக்கின்றன. பல நேரங்களில் அவருக்கு தோல்வியே ஏற்படுகிறது. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் தனது தேடுதலைத் தொடர்கிறார்.

என் சரித்திரம் - என்ற இந்த நூலை, ஆனந்த விகடனில் தொடராக எழுதி இருக்கிறார். 1940-ல் ஆரம்பித்த இந்த தொடரை முடிக்கும் முன்பே 1942-ல் இயற்கை எய்திவிட்டார் நம் தமிழ்த் தாத்தா உவேசா. அவர் தொடர்ந்து இத்தொடரை எழுதி நிறைவு பெற்று இருந்தால் இன்னும் நமக்கு நிறையத் தகவல்கள் கிடைத்திருக்கும். தன்னுடைய வயதான காலத்தில் இந்த நூலை எழுதி இருந்தாலும், அபாரமான நினைவாற்றல் கொண்டவரான அவர் ஒவ்வொரு நிகழ்வையும் இப்பொழுது நடந்தது போலவே சொல்லிச் செல்கிறார். சிறு வயது முதல் தனக்கு கல்வி போதிக்க தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் பெயரையும், தனக்கு வாய்ப்பளித்து ஆதரவளித்த அனைவரையும் நினைவு கூர்கிறார். 

எந்த போக்குவரத்து வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் காலால் நடந்தே ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பழம்  இலக்கியங்களைத் தேடி இருக்கிறார். தமிழின் மேல் தணியாத ஆர்வம் கொண்டு தேடியதால் அவர் என்றென்றும் நமக்கு தமிழ்த் தாத்தா. 




Monday, May 5, 2025

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்

'போரும் அமைதியும்' நாவல் மிகப்பெரிய மூன்று பாகங்களைக் கொண்டது. அனைத்து நிகழ்வுகளையும் நாவல் விரிவாகவே கொண்டு செல்கிறது. நெப்போலியன் ரஷ்யா மீது போர் தொடுத்து, நிறைய இழப்புக்கு பின்னர் போரில் பின்வாங்கிய 1800-ன் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுடன் புனைவையும் கலந்து படைக்கப்பட்ட இந்நாவல் வரலாற்று நாவல் அல்ல என்று டால்ஸ்டாய் அவர்களே குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதுவதற்கு உண்டான வரலாற்று  தகவல்களை சேகரிக்க நீண்ட நாட்கள் ஆகியிருக்கிறது அவருக்கு. 


ஒரு வருடம் முன்பாகவே இந்நாவலை படிக்க ஆரம்பித்து 100 பக்கங்கள் மேல் போன பின்னரும் குழப்பங்கள் காரணமாக பிடி கிடைக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். இம்முறை எப்படியேனும் படிக்க எண்ணி வலைத் தளங்களில் தேட, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பதிவில், 'ரஷ்யப் பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஒருவருக்கே மூன்று பெயர்கள் இருக்கும். எனவே பெயர்களை கவனித்து வந்தால் கதாபாத்திரங்கள் புரியும்.' என எழுதி இருந்தார். ஒவ்வொரு முறையும் பெயர்கள் வரும்போது தனியாக குறிப்பெடுக்க ஆரம்பித்தேன். நாவலின் கதைப்போக்கும், கதா பாத்திரங்களும் புரிய ஆரம்பித்த பின்னர் அந்தக் குறிப்பும் தேவையில்லாமல் போனது. உலகின் மிகச் சிறந்த நாவல் எனப் பலரும் போற்றிய இந்த ஆக்கத்தை நானும் படித்து முடித்தேன். இதை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மிக கடினமான இப்பணியை முடித்து நம் கையில் தவழ வைத்துள்ளார். 

எண்ணற்ற கதை மாந்தர்களும், நீண்ட விவரிப்புகளும் கொண்ட இந்நாவல் விளக்கும் போர் பற்றிய சித்தரிப்புகள் நாம் நினைத்து பார்த்திராதவை. போர் வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு கூட தீர்வுகள் கிடைப்பதில்லை. மேலே இருப்பவர்கள் கொடுத்தாலும் கீழே வந்து சேரும்போது அது ஒன்றுமில்லாமல் போகிறது. சில தளபதிகள் தீர்வுகள் ஏற்பட முனைந்தாலும் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். காயம் பட்ட போர் வீரர்களுக்கான மருத்துவமனையில், நிறைய வீரர்கள் கை, கால்களை இழந்து, ரத்தத்துடன் மருத்துவம் பார்க்க காத்திருக்க, காயம்பட்ட ஒரு பிரபு வந்ததும் அவரைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். சிலர் போரை பயன்படுத்தி புது செல்வந்தர் ஆகவும், புதிய பதவிகளைப் பிடித்து மன்னரிடம் செல்வாக்கு பெறவும் முயற்சி செய்கிறார்கள்.



ரஷ்யாவில் உயர் குடி மக்கள் கூடும் விருந்துகளின் வழியாக கதை மாந்தர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். அந்த விருந்துகளே ஒருவரின் செல்வத்தை வெளிப்படுத்துவதாகவும், பெரிய குடும்பங்களின் கதைகளை பேசுவதாகவும், திருமண வயது வந்தோரின் திருமணத்தை முடிவு செய்யும் இடமாகவும் இருக்கிறது. அரசில் அங்கம் வகிப்பவர்கள் கலந்து கொள்வதால் நடப்பு நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. 

இளவரசர் ஆண்ட்ருவின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுத்த பின்னர் இறந்து விடுகிறாள். அவரின் தங்கை மேரி அந்த குழந்தையை பார்த்துக்கொள்கிறாள்.  இருவரின் தந்தையும்  வயதானவருமான பால்கோன்ஸ்கி தற்கால நிகழ்வுகளை விரும்புவதில்லை. அவரின் மனம் போன போக்கில் கோபப்படுகிறார். கொஞ்சம் அழகு குறைந்திருக்கும் தன் மகளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆண்ட்ரு தன்னால் முடிந்த அளவு அப்போதிருந்த அடிமைக் கூலி மக்களை சீர்திருத்த, அவர்களை முன்னேற்ற  சில முயற்சிகளை எடுக்கிறார்.

ஆண்ட்ருவின் நண்பர் பீயர் செல்வம் மிக்கவர். மேம்போக்காக ஆண்ட்ருவைப் போன்றே கூலி மக்களின் முன்னேற்றத்தை அவர் விரும்பி பணம் செலவிடுகிறார். ஆனால் அது ஒரு கனவு போலவும் அமைந்து விடுகிறது. இடையில் இருப்பவர்கள் அவரை ஏமாற்ற பார்க்கிறார்கள். மிக அழகானவளான ஹெலன் குராகின் என்பவள் பீயரின் செல்வத்துக்காக அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். பின்னர் அவரை மதிப்பது கூட இல்லை. காதலும் இல்லை. பீயர் பிரீமேசன் என்னும் அமைப்பில் ஆர்வம் கொள்கிறார். அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார். 

ராஸ்டோவ் குடும்பம் நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேரா, நிக்கோலஸ், நட்டாஷா, பெட்டியா என நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பம்.  செல்வந்தர்களான இக்குடும்பம் மற்றவர்களுக்கும், விருந்துகளுக்கும்  தாரளமாக செலவு செய்கிறது, திருமதி ராஸ்டோவுக்கு செலவு பண்ண மட்டுமே தெரிகிறது, கணக்கு வழக்கு பற்றி ஒன்றுமே தெரியாது. இவர்களின் ஆதரவில் வளர்ந்து பின்னர் பெரிய பதவிக்கு வந்த போரிஸ் என்பவன் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. 

மருமகள் முறை கொண்ட சோனியா என்னும் பெண்ணும் இவர்களுடன் வசித்து வருகிறாள். சோனியா நிக்கோலஸ் மீது காதல் கொள்கிறாள். எந்த நிலையிலும் அவள் நிக்கோலஸ் மீது தன் காதலை திணிப்பதில்லை. முதலில் சோனியா மீது ஈர்ப்பு கொண்ட நிக்கோலஸ், பின்னர் தன் குடும்ப சூழலை நினைத்து பெரிய இடத்துப் பெண்ணை மணந்தால் தமது குடும்பத்தின் நிலை உயரும் என நினைத்து, மேரி பால்கோன்ஸ்கியை மணந்து கொள்கிறான். 




சோனியாவுக்கு நேர் எதிராக நட்டாஷா இருக்கிறாள். அவளின் சிறுவயதும், கள்ளமில்லாத பண்பும் அனைவரையும் ஈர்க்கிறது. சிலரைக் காதலிக்கவும், அதிலிருந்து விலகவும் அவளால் முடிகிறது.  அவளை பொறுத்தவரை அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் தனது இளமை காரணமாக ஒரு வண்ணத்து பூச்சி போல பறக்கிறாள். ஆண்ட்ருவை நிச்சயம் செய்த பின்னர், இன்னொருவனுடன் ஏற்பட்ட தற்காலிக ஈர்ப்பால் அவளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது. திருமணமும் நின்று போகிறது. பின்னர் போரில் காயம்பட்ட ஆண்ட்ருவை அவள் சந்திக்கும்போது பழைய காதல் இருவருக்கும் பூக்கிறது. ஆனால் ஆண்ட்ருவின் உடல் நிலை மோசமாகி கொண்டே வர, அவர் இறக்கும் வரை ஆண்ட்ருவை தன்னுடனே வைத்து பார்த்துக்கொள்கிறாள் நட்டாஷா. 

முதலில் இருந்தே பீயருக்கும், நட்டாஷாவுக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. போர் சமயத்தில் பீயரின் மனைவி ஹெலன் இறந்து போக, போர் முடிந்த பின்னர் பீயர் நட்டாஷாவை மணந்து கொள்கிறார். பிரெஞ்சு படையிடம் பீயர் மாட்டிக்கொண்டு பல நாட்கள் அவர்களுடனேயே பயணிக்கிறார். அப்பொழுது அவர் சந்திக்கும் மக்கள், வீரர்கள் என அவர் மனம் அலைபாய்கிறது. மேலும் போரில் அவர் களம் காணவேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், பயப்படாமல் போர் முனையில் நின்றுகொண்டு போரை கவனிக்கிறார்

மன்னர் நெப்போலியன் ஏன் ரஷ்யா மேல் போர் தொடுத்தார் என்பதை இந்நாவல் விளக்கி கொண்டே போகிறது. பின்னர் அவர் பின் வாங்க வேண்டிய அவசியம் என்ன, பல்லாயிரம் வீரர்களை இழந்து திரும்ப வேண்டிய அவசியம் என்ன என்று விரிவாகவே ஆய்வு செய்கிறது நாவல். மாஸ்கோ நகரத்தை கைப்பற்றிய பிரஞ்சு படைகள் அதன் பின்னர் வலிமை இழந்து போனது எப்படி, ஒரு நாட்டுக்குள் அவ்வளவு தூரம் தனது படையை நடத்திக் கொண்டு வந்த நெப்போலியனை எது அவ்வாறு செய்ய சொன்னது என்றெல்லாம் பல பக்கங்கள். பிரஞ்சு படையிடம் முதலில் பின்வாங்கிய ரஷ்ய படைகள், பின்னர் கொரில்லா முறையில் தாக்கத் தொடங்கியதையும் விவரிக்கிறார் தல்ஸ்தோய்.

ரஷ்ய தளபதி குட்டுசோவ் நாவலில் முக்கிய இடம் பெறுகிறார். வயதானவரான இவர் 'எதற்கும் கலங்காதவர்' எனப் பெயர் பெற்றவர். போர் முனையில் ஒவ்வொருவர் சொல்லுவதையும் காது கொடுத்து கேட்கும் குட்டுசோவ், எதையும் செயல்படுத்துவதில்லை. அது போலவே மேலிடத்திலிருந்து வரும் சில கருத்துக்களையும் அவர் ஏற்பதில்லை. இங்கே நடப்பது வேறு, அதை அவர்கள் அரண்மனையில் அமர்ந்து புரிந்து கொள்ள முடியாது என்கிறார். 



ஐநூறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் நாவலில் வந்து போகின்றனர். சில கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அக்கால கட்டத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள். நாவல் முழுவதுமே மகிழ்ச்சி, ஆசைகள், துரோகங்கள், காதல்கள், பிரிவுகள், வீரம், வீழ்ச்சி என பரந்து கிடக்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகில் அங்கங்கே இயல்பாகவே இருக்கிறது நாவலில். நாம் பார்த்தவை சிலவே, நாம் பார்க்காதவை பல உள்ளன என்பது போல ஒவ்வொருவரின் பக்கத்திலிருந்தும் அவர்களின் நோக்கம் என்னவென்றும் விரிவாகவே பேசுகிறது நாவல். 

காலங்கள் பல கடந்தும் மனித குலம் போரை இன்னும் கைவிடவில்லை. தல்ஸ்தோய் போர் தவறென்றோ, சரியென்றோ விளக்கவில்லை. நடந்தது என்ன என்பதையே சொல்லிச் செல்கிறார். ஏதோ ஒருவகையில் போர் என்பது எல்லாரையும் ஒரு கண்ணியில் இணைக்கிறது, எல்லோரும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சிலர் ஆதாயமும் அடைகிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த நாவலை நாமும் படித்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்கு காரணம் தமிழில் படிக்க முடிந்ததே. முக்கியமான இந்நாவலை, இவ்வளவு பெரிய ஆக்கத்தை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றியும், வணக்கமும். 

போரும் அமைதியும் (War And Peace)  
லியோ டால்ஸ்டாய் 
தமிழில்: டி.எஸ். சொக்கலிங்கம் 
மூன்று பாகங்கள் 
சீதை பதிப்பகம், சென்னை

Tuesday, November 19, 2024

கோரா - இரவீந்திரநாத் தாகூர்

சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை இல்லாத காரணத்தால் அவனை வளர்த்து கோர்மோகன் பாபு என்ற பெயரும் வைக்கிறார்கள். சுருக்கமாக கோரா. பிராமண குடும்பம் என்பதால் முதலில் எந்த ஆச்சாரமும் பார்க்காத கிருஷ்ணதயாள் கோரா வளர வளர எல்லாச் சடங்குகளையும் கடைபிடிக்கிறார். ஆனந்தமாயி அதற்கு எதிராக எல்லாச் சடங்குகளையும் விட்டுவிட்டு, மனிதர்களே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார். 



கோராவுக்கு அவர்கள் தன் பெற்றோர் அல்ல என்பது தெரியாது. கோரா நல்ல உயரமும், ஆங்கிலேய நிறமும் கொண்டு விளங்குகிறான். தன் அம்மாவுக்கு நேர் மாறாக அவன் இந்து சமய சடங்குகளை கடை பிடிக்கிறான். மற்றவர்களையும் அவன் தனது கொள்கைகளை விளக்கி ஒப்பு கொள்ள வைக்கிறான். அதற்காக அவன் மற்ற சாதி மக்களை ஒதுக்கி வைப்பதில்லை. அவர்களின் நிலைமை முன்னறேவும் விரும்புகிறான். தன் நாட்டு மக்களை யாரேனும் இழிவு செய்தால் கோரா கோபம் கொள்கிறான். தன் கருத்துகள் பற்றி இதழ்களில் கட்டுரைகளும் எழுதும் கோராவுக்கு நிறைய நண்பர்களும் அவனைப் பின்பற்றும் சிறு கூட்டமும் உண்டு. 

கோராவின் அம்மாவுக்கு லச்சுமியா என்ற பெண் பணிவிடை செய்து வருகிறாள். அப்பெண் வேறு சாதி என்பதால் கோரா தன் அம்மாவின் அறைக்குச் சென்று உணவு அருந்துவதில்லை. தண்ணீர் கூட குடிக்க மாட்டான். இத்தனைக்கும் அவனை சிறு வயதில் இருந்து வளர்த்தவள்  லச்சுமியா .ஆனந்தமாயிக்கு அதைப் பற்றிய வருத்தம் இருந்தாலும் பின்னர் சரியாகிவிடும் என நினைக்கிறாள். கோராவின் அம்மா ஆனந்தமாயி ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "சாதி முக்கியம் என்று நான் நினைத்திருந்த காலத்தில், அந்த சாதியின் பழக்க வழக்கங்களையும், ஆச்சாரங்களையும் கடை பிடித்தேன். சாதியை விட மனிதர்களே முக்கியம் என பின்னர் நான் உணர்ந்து விட்டேன். அதனால் இப்பொழுது என்னால் யார் கையால் கொடுத்த உணவுகளையும் சாப்பிட முடியும். ஈஸ்வரனின் அன்பையும் கருணையையும் மட்டுமே நான் நம்புகிறேன். சாதியை அல்ல."

கோராவுக்கு பினய் என்றொரு நண்பன் உண்டு. சிறு வயதில் இருந்தே பழக்கம் என்பதால் மற்ற எல்லோரையும் விட ஒருபடி மேலாக இருவருமே நட்பாக இருக்கிறார்கள். பினய்க்கு பெற்றோர் இல்லை. உறவினர்களும் அவனுடன் இல்லை. பெற்றோர் இல்லாத பினய்க்கு கோராவும், ஆனந்தமாயி அம்மாவும் உறவுகளாக இருக்கிறார்கள். கோராவும், பினயும் இந்துக்கள் என்றாலும் இருவருமே இருவேறு பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கோரா பின்பற்றும் ஆசாரங்களை பினய் பின்பற்றுவதில்லை. மேலும் எல்லோருடனும் எளிதில் பழகும் குணம் பினய்க்கு உண்டு. தன்னை பெறாத தாயாகவே ஆனந்தமாயி அம்மாவை அவன் எண்ணுகிறான். தன் மகன் கோரா தன்னுடன் உணவு உண்ணுவதில்லை என்ற குறையை ஆனந்தமாயிக்கு பினய் தீர்த்து வைக்கிறான். அவளின் அறையில் உணவு உண்ணுவதில் அவனுக்கு எந்த சங்கடமும் இல்லை. கோராவின் வீட்டில் பினயும் ஒருவனாகவே இருக்கிறான். 

தனது வாரிசு இல்லை என்ற உண்மையை கோராவிடம் சொல்லிவிடலாம் என்று ஆனந்தமாய் சொல்லும்போது, எனக்கு பிரச்சினைகள் வரலாம் என்று சொல்கிறார் கிருஷ்ணதயாள். அவரின் பென்சன் நிறுத்தப்படக் கூடும், மேலும் இன்னொருவரின் குழந்தையை எடுத்து வளர்த்து அதை அரசிடமோ, காவல் துறையிடமோ சொல்லாததால் இன்னல்கள் நேரும், தாக்குப்பிடிக்க முடியும் வரை பார்ப்போம் முடியவில்லை என்றால் என்றாவது ஒருநாள் கோராவிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்கிறார். 

க்ரிஷ்ணதயாளின் முன்னாள் நண்பரான பொரேஷ் பாபு குடும்பத்துக்கும் பினய்-கோராவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொரேஷ் பாபு குடும்பம் பிரம்ம சமாஜத்தை பின்பற்றுகின்றனர். அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மனைவியின் பெயர் பரதசுந்தரி. மேலும் அவரின் இறந்து போன இந்து நண்பரின் பிள்ளைகள்  சுசாரிதா, சதீஷ் ஆகிய  இருவரை அவர் வளர்த்து வருகிறார். சதீஷ் சிறுவன். எல்லோருக்கும் மூத்தவளான சுசாரிதா அந்த வீட்டில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருக்கிறாள். அவளை பிரம்மோ சமூகத்தைச் சேர்ந்த ஹரன் பாபுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள் பரதசுந்தரி. 




பொரேஷ் பாபு, ஆனந்தமாயி, பினய், சுசாரிதா, லொலிதா போன்றோர் அனைத்து மக்களும் நம் சொந்தங்களே, நமக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை என நினைக்க, பரதசுந்தரி, ஹரன், ஹரிமோகினி  போன்றோர் சாதிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கோரா இதில் கொஞ்சம் வித்தியாசப்படுகிறான்.  தனது சாதியின் ஆசாரங்களை பிறழாமல் கடைபிடிக்கும் அதே வேளையில், அடுத்தவரின் துன்பங்களை புரிந்து கொள்ளவும், நாடு சுதந்திரம் பெற்று எல்லோரும் மேன்மை அடைய வேண்டும் என விரும்புகிறான். கிராமம் கிராமமாகச் சென்று ஏழை மக்களைச் சந்திக்கிறான். ஏழை இளைஞர்களை காவலர் அடிப்பதைப் பார்த்து, சண்டைக்கு போகிறான். பின்னர் அதே பிரச்சினையில் நீதிபதி சிறை தண்டனை விதிக்கவும் தயங்காமல் அதை ஏற்றுக்கொள்கிறான். உண்மையும், நேர்மையுமே தனக்கு அழகு என்று எங்கேயும் தலை நிமிர்ந்து நிற்கிறான் கோரா. 

பினய்-லொலிதா காதலால் பிரச்சினைகள் வருகின்றது. ஆனால் இருவருமே தமது சமூக பழக்க வழக்கங்களை மதித்து மதம் மாற முடியாதென தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பும் வலுக்கிறது. கோரா கூட அந்த திருமணத்தை எதிர்க்கிறான். இதற்கிடையில் ஹரிமோகினி என்னும் பெண் சுசாரிதாவுக்கு பெரியம்மா என கூறிக்கொண்டு வருகிறாள். ஹரிமோகினியால் பொரேஷ் பாபுவின் வீட்டில் இருந்து தனியே வருகிறாள் சுசாரிதா. ஹரிமோகினி இந்து ஆச்சாரங்களை வன்மையாக கடைபிடிக்கிறாள். எங்கே சுசாரிதா கோராவின் மேல் காதல் கொண்டு கல்யாணம் செய்து விடுவாளோ என்று பயந்து தனது கணவனின் வழியில் ஒரு வரனை பார்த்து வைக்கிறாள். அவளின் திட்டங்களுக்கு சுசாரிதா மறுப்பு தெரிவிக்கிறாள். 

கோரா-சுசாரிதா காதல் நேரடியாக இருவருமே தெரிவிக்காவிட்டாலும், சுசாரிதா கோராவை ஒரு குருவாக நினைத்திருக்க, தனது வழியை பின்பற்றும் சிறந்த பெண்ணாக கோரா நினைக்கிறான். 

ஒரு துறவியாக செய்யக்கூடிய சடங்குகளை கோரா ஒரு விழாவின் மூலம் நடத்த நினைக்கிறான். ஆனால் கிருஷ்ணதயாள் அவனை செய்ய வேண்டாம் என்கிறார். அவன் திருப்பி ஏன் என்று கேட்க, சொன்னால் உனக்கு புரியாது அதை விட்டு விடு என்கிறார். சடங்கு செய்ய கொஞ்ச நேரம் இருக்கும்போது  கிருஷ்ணதயாள் மயக்கமாகி உடல்நிலை கெட்டு கோரா பற்றிய உண்மைகளைச் சொல்லிவிடுகிறார். கோரா திகைத்து நிற்கிறான். 

பின்னர் கோரா தன்னை ஒரு சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு பொரேஷ் பாபுவிடம் கேட்கிறான். எல்லோருடைய சமூக வழக்கங்களுக்கும் மரியாதை கொடுக்கும் அவரை விட சிறந்த குரு அமைய மாட்டார் எனச் சொல்கிறான் கோரா. ஆனந்தமாயி அம்மாவின் அறைக்கு வரும் கோரா, 'நான் வெளியில் தேடிய தெய்வம் எனது வீட்டிலேயே இருந்திருக்கிறது. அத்தெய்வம் நீங்கள் தான் அம்மா. லட்சுமியாவை அழைத்து ஒரு குவளை தண்ணீர் எனக்கு கொண்டு வரச் சொல்லுங்கள்' என்கிறான். 

கோரா - இரவீந்திரநாத் தாகூர்

தமிழில்: கா.செல்லப்பன் 


Monday, October 28, 2024

ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ்.எல். பைரப்பா

தொடர்ந்து வரும் இழப்புகளும், உறவுகளின் பிரச்சினைகளும், சகிக்க முடியா வறுமையுமே வாழ்க்கை என்று ஒரு சிலருக்கு அமையுமென்றால் அப்படிப்பட்ட வாழ்க்கையின் பொருள்தான் என்ன, அவர்களுக்கு மகிழ்ச்சி என்பதே இந்த பூமியில் கிடைக்காத ஒன்றா என்ற கேள்வியில் இந்த நாவல் அமைகிறது. அதன் விடை இந்த நாவலிலும் இல்லை, நாமும் தேடினால் கண்டறிய முடியாத ஒன்று அது. 


தாய் கங்கம்மாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். பிராமண குடும்பம். அவளின் கணவர் ராமண்ணா ஊரில் கணக்குப்பிள்ளையாக இருந்து இறந்துவிட்டார். கொஞ்ச நிலமும் உண்டு. இரண்டு பிள்ளைகளும் சிறியவர்கள் என்பதால் தற்காலிகமாக அந்த வேலையை இன்னொருவர் பார்த்து வருகிறார். இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் சென்னிகராயன், இளைய மகன் அப்பண்ணய்யா. இருவருமே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள். அதற்கு காரணம் கூட தாய் கங்கம்மா தான். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும், யாரையும் மதிக்காத குணம் என அவள் ஒரு தனிப்பிறவி. எப்பொழுதும் கெட்ட வார்த்தைகள் மூலமாகவே பேசுகிறாள். புரோகிதர்கள் மற்றும் ஒருசில பெரிய மனிதர்களுக்கு அவள் பயப்படுகிறாள். ஆனால், அறிவு என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அவள், பிள்ளைகளையும் அப்படியே வளர்த்து விட்டாள். 

சின்ன வயதில்  ஒருநாள் இரண்டு பிள்ளைகளும்  தாய் திட்டினாள் என்பதற்காக  கரும்புக் காட்டுக்கு தீ வைத்து விட பக்கத்து காடுகளில் உள்ள பயிர்களும் அழிகின்றன. அதற்கு நஷ்ட ஈடாக சிவேகவுடன் என்பவன் பணத்தைக் கொடுத்து நிலத்தை அடமானம் எடுத்துக் கொள்கிறான். அந்த பணம் கட்ட முடியாமல் வட்டி ஏறிக்கொண்டே வருகிறது. இருந்த நிலமும் போனதால் இருக்கும் பொருளை வைத்து நாட்களை கடத்துகிறார்கள் அம்மாவும் மகன்களும். 

கண்டி ஜோசியர் என்பவர் தனது மகளான நஞ்சம்மாவை சென்னிகராயனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். இன்னொரு மகன் கல்லேசன் போலீசாக இருக்கிறான். கண்டி ஜோசியர் அந்த பகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். யாருக்கும் பயப்படாத அவரைக் கண்டு கங்கம்மா முதலில் பயப்படுகிறாள். ஆனால் வழக்கம் போல மருமகளை கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிக்கிறார். கணவனும் அம்மா போலவே இருக்கிறான், திட்டுவதும் மீதி நேரம் எப்பொழுதும் சோறு பற்றிய நினைப்பு தான். கணக்குப் பிள்ளை வேலையை திரும்பவும் கண்டி ஜோசியர், தன் மகன் கல்லேசனுடன் அவனுக்கு வாங்கித் தருகிறார். கணக்கு பற்றி ஒன்றும் தெரியாத சென்னிகராயன், பக்கத்து ஊரில் இருக்கும் இன்னொருவரிடம் சென்று எழுதி வாங்கி வருகிறான். சம்பளத்தில் பாதிப் பணம் அவருக்கே போகிறது. 

மிகுந்த பொறுமைசாலியான நஞ்சம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் கணக்குகளை அவளே எழுத ஆரம்பிக்கிறாள். முதலில் மறுக்கும் சென்னிகராயன், வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக்கொள்கிறான். கொஞ்சம் முயற்சி செய்து சம்பளப் பணத்தையும் தன் குடும்பத்துக்கே வருமாறு செய்கிறாள். சென்னிகராயனிடம் கிடைத்தால் பக்கத்து நகரத்துக்கு சென்று பணம் தீரும்வரை எல்லா உணவகங்களிலும் சென்று தீர்த்து விட்டே வருகிறான். நிலம், வீடு அடமானத்தில் போகும்போது கூட எவ்வளவோ முயன்றும், அவளால் மீட்க முடியவில்லை. தன் மாமியார் கங்கம்மாவை மீறி அவளால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது. தனது கொழுந்தனார் அப்பண்ணய்யா கூட ஒருநாள் அவளை அடித்து விடுகிறான். சட்டி நிறைய உணவு இருந்தால் நீ உண்டாயா, பிள்ளைகள் உண்டார்களா என்று ஒருநாளும் கேட்காமல் அனைத்தையும் உண்டு விடும் கணவன், அடக்க முடியாத மாமியார் என அவள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு போகிறாள். 

இதற்கு நேர் எதிராக அப்பண்ணய்யாவின் மனைவி சாதம்மா இருக்கிறாள். நஞ்சம்மா கணக்கு எழுதுதல், புரச இலைகளை தைத்து வருமானம் பார்த்தல் என பல வேலைகளை செய்கிறாள். வெறும் ராகியை கொண்டே அவளால் குடும்பத்தை நடத்த முடியும். ஆனால் சாதம்மா அந்த கஷ்ட வாழ்க்கைக்கு பழக்கப்படாதவள். அரிசிச் சோறும், காப்பியும் சாப்பிட்டு பழகியவள். அப்பண்ணய்யா நல்லவன் என்றாலும் கோபம் வந்தால் அடிக்கிறான், வருமானம் இன்மை, மாமியாரின் கெட்ட பேச்சு என சாதம்மா அப்பண்ணய்யாவை பிரிந்து போகிறாள். 

நஞ்சம்மாவும், சாதம்மாவும் ஒரே வீட்டுக்கு மருமகளாக வந்தவர்கள். நஞ்சம்மா எதையும் தாங்கி கொண்டு குடும்பத்துடன் இருக்கிறாள். சாதம்மாவோ தனது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறாள். அண்ணனை திருத்தவே முடியாது, தம்பியை கொஞ்சம் திருத்த முடியும். ஆனால் தம்பி அப்பண்ணய்யாவின் குடும்பம் பிரிந்து போகிறது. 

நாம் கடந்த வருடங்களில் கொரோனா என்ற நோயிடம் அகப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்தோம். இந்த நாவல் நடக்கும் இடமான கர்நாடகத்தில் அந்த காலத்தில் பிளேக் நோய் பரவி இருக்கிறது. மக்கள் கொத்து கொத்தாக மடிந்து இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் நாமாவது வீட்டுக்குள் இருந்தோம். பிளேக் நோய் ஊரில் பரவினால் எல்லோரும் அவரவர் வீட்டை காலி செய்து ஊருக்கு வெளியே தங்குகிறார்கள். நோய் முற்றிலும் ஒழிந்த பிறகே ஊருக்குள் வரமுடியும்.  நாவலில் பலமுறை ஊரை  காலி செய்து செல்லும் காட்சி வருகிறது. யார் வீட்டிலாவது எலி செத்து விழுந்தால் அவர்கள் அடையும் பதட்டம் அளவில்லாதது. கொஞ்ச வருடங்கள் கழித்து தடுப்பூசி போடுவதும் நாவலில் வருகிறது. 

இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் என மூன்று பேர் நஞ்சம்மாவுக்கு.  சில நாட்கள் இடைவெளியில் தனது மகளையும், பெரிய மகனையும் பிளேக் நோயால் இழக்கிறாள். பெண் பிள்ளைக்கு இரண்டு மாதம் முன்புதான் திருமணம் செய்து வைத்தாள்.  தனது இளைய மகன் விசுவனை காப்பாற்ற எண்ணி அவ்வூரில் இருக்கும் நரசி என்பவளிடம் 'இவன் என் மகன் இல்லை, இனிமேல் உன் மகன்' என்று சொல்கிறாள். தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கடவுள் பிடுங்கிக்கொள்ள நினைக்கிறார், அதனால் நீயே அவனைப் பார்த்துக்கொள், அவனாவது பிழைக்கட்டும் என்கிறாள். விசுவன் தப்பித்துக்கொள்கிறான். பின்னர் அந்த வருடம் அவனை தன் அப்பாவின் வீட்டுக்கு அனுப்பி விடுகிறாள். அங்கே சில பிரச்சினைகள் இருந்தாலும் தன் பாட்டி அக்கம்மா இருப்பதால் அவனைப் பார்த்துக்கொள்வாள் என நினைக்கிறாள். 



அடுத்த வருடத்தில் கொஞ்சம் கணக்கு போட்டு பணம் சேர்த்து வீடு கட்டுகிறாள் நஞ்சம்மா. வீட்டு வேலை முடியும் நிலையில் திரும்பவும் ஊருக்குள் பிளேக் வந்து நஞ்சம்மா இறந்து போகிறாள். இறப்பதற்கு முன்னர் அந்த ஊரில் அவளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த சாமியார் மாதவைய்யாவிடம் 'அண்ணன் வீட்டில் என் மகன் விசுவன் இருந்தால் சோறு கிடைக்கும். அறிவு வளராது. நீங்கள்தான் அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் ' என்கிறாள். நஞ்சம்மாவின் இறப்புக்கு வந்த, அவளின் பாட்டி அக்கம்மா ஊரில் இருக்கும் பிளாக் மாரியம்மனின் கோவில் கதவை செருப்பால் அடித்து அம்மனை திட்டுகிறாள். தன் பேத்தி பட்ட கஷ்டங்கள் பத்தாது என்று அவளையும் கொன்று விட்டாயா என்று கேள்வி கேட்கிறாள். ஆனால் பாட்டியும் இரண்டே நாளில் இறந்து போகிறாள். 

அப்பண்ணய்யாவுக்கு அண்ணியும் பிள்ளைகளும் இறந்தது கவலை அளிக்கிறது. அவன் இப்பொழுது அம்மா கங்கம்மாவை விட்டு தனியே வசிக்கிறான். கங்கம்மா இன்னும் அப்படியே தான் இருக்கிறாள். நஞ்சம்மா கட்டிய புது வீட்டுக்கு சென்னிகராயனும், கங்கம்மாவும் குடி போகிறார்கள். நஞ்சம்மாவின் கணவன் சென்னிகராயனோ அடுத்த திருமணம் செய்ய பெண் பார்க்கிறான். தரகருடன் சென்று பெண் பார்த்து திருமணத்துக்கு நாளும் குறித்துவிட்டு வருகிறான். சென்னிகராயனை பற்றி கேள்விப்பட்டு பெண் தரமாட்டோம் என்று சொல்லிவிடுகிறார்கள். 

நஞ்சம்மாவுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த மாதேவய்யா, விசுவனை எப்படியாவது மேலே கொண்டு வந்து விடவேண்டும் என நினைக்கிறார். அவனை நானே வளர்க்கிறேன் என்று, அவன் தந்தையான கண்டி ஜோசியரிடமும், மாமன் கல்லேசனிடமும் கேட்கிறார். முதலில் யோசிக்கும் அவர்கள் பின்னர் ஒத்துக்கொள்கிறார்கள். விசுவனை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார் அய்யா. 

வரும்வழியில் அவர்களின் ஊருக்கு போகிறார்கள். விசுவனுக்கு தன் அம்மாவின் நினைவு வருகிறது. அய்யா தங்கி இருந்த இடத்தில் இருப்பதை எடுத்துக்கொண்டு போகும் வழியில் விசுவனின் அப்பா சென்னிகராயனை சந்திக்கிறார்கள். அய்யாவுக்கோ பயம், என் மகனை கூட்டிக்கொண்டு எங்கே போகிறாய் என தடுப்பானோ என்று. ஆனால் கணக்கு தெரியாமல் வேலையை இழந்த சென்னிகராயன் இப்போது தாய் கங்கம்மாவிடம் இருக்கிறான். வருமானம் கொஞ்சம் கூட இல்லை. யாரோ கொடுத்த புகையிலையை வாயில் போட்டு மென்று கொண்டிருக்கிறான். வாயைத் திறந்து அய்யாவிடம் பேசினால் புகையிலையின் ருசி போய்விடும் என்று வாய் மூடியே இருக்கிறான். 

உணவைப் பொறுத்தவரை சென்னிகராயனுக்கு  தன் மகனே என்றாலும் தள்ளியே நிற்கவேண்டும். முன்பு ஒருமுறை கோவிலுக்கு போன இடத்தில் பாகற்காய் பச்சடி செய்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிறான். கோவிலில் போடும் சாப்பாடு உறைப்பு இல்லாமல் இருக்கிறது. அதற்கு வைத்து கொள்கிறேன் என்கிறான். கோவிலுக்கு வரும் அத்தனை பேரும் சாப்பிடும் உணவை குறை சொல்கிறானே என்று நஞ்சம்மா கவலைப்படுகிறாள். அப்படிப்பட்டவன் இப்பொழுது மகன் போவதையே பார்த்துக்கொண்டிருக்கிறான். 


ஒரு குடும்பம் சிதைகிறது 
எஸ்.எல். பைரப்பா 
தமிழில்: எச்.வி. சுப்ரமணியம்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா