Friday, March 15, 2013

பிளாஸ்டிக் பூதம்

இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக, அனைத்துக் டீக்கடைகளிலும்  பாலிதீன் பைகளில் டீயை ஊற்றித் தருகிறார்கள். மக்களும் அதைக் குடித்து மகிழுகிறார்கள். பாத்திரம் வேண்டியதில்லை, அதைக் கழுவ வேண்டியதில்லை. ஒரு பார்சல் வாங்கி வந்து(கூடவே இரண்டு பிளாஸ்டிக் தம்ளர்களையும், கடைக்காரரே கொடுப்பார்).. அப்படியே ஊற்றிக் குடித்து விட்டு, வீசி விடலாம். அது மக்கினால் என்ன, மக்காவிட்டால் தான் என்ன?.

சரி, சுற்றுப்புறம் பற்றிதான் கவலையில்லை. பாலிதீன் பைகளில் ஊற்றப்பட்ட டீயைக் குடிப்பதால், அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளைப் பற்றியும் கவலை இல்லை. கொதிக்க கொதிக்க சாம்பாரையும், டீயையும் பாலிதீன் பைகளிலும், பிளாஸ்டிக் பொருட்களிலும் அடைக்கும் பொழுது கண்டிப்பாக அது இளகும். இளகிய கொஞ்சம் பகுதிகள், நாம் உட்கொள்ளும் அந்த உணவுப் பொருட்களில் கலந்து நம் உடலுக்குள் செல்லும். அதைப் பற்றியும் நமக்கு விழிப்புணர்வு இல்லை.

டாக்டர் விகடன்(16-03-13) இதழில், 'உணவே விஷம் ஆகலாமா?' என்ற கட்டுரையில்;

'தற்போது கடினமான பிளாஸ்டிக் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பாலிதீன், பாலிப்ரொபைலீன் போன்றவை கொண்டு பிளாஸ்டிக் உருவாகிறது. இவை புற்று நோயை உண்டாக்கக் கூடிய ஆற்றல் பெற்றவை என ஆய்வு குறிப்பிடுகிறது.

பிளாஸ்டிக்கில் 'பிஸ்பெனால் -ஏ'(BISPHENOL-A) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. ரெடிமேட் உணவுகளைச் சுற்றும் தாள்களில் இந்த நச்சு ஊடுருவி இருக்கும். இந்த நச்சுப் பொருட்கள் நமது உடலின் செல் அமைப்பையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை. ஹார்மோன்களின் சம நிலையையும் இவை  பாதிக்கக் கூடும்.

இதேபோல உணவகங்களில் இருந்து காபி, சாம்பார், ரசம் போன்றவற்றையும் பிளாஸ்டிக் உரைகளில் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். உள்ளே இருக்கும் பண்டங்களின் சூட்டினால் பாலிதீன் உரைகளில் இருக்கும் வேதிப் பொருட்கள் கரைந்து, அவற்றைச் சாப்பிடும்போது நமது உடலுக்குள் நேரடியாகக் கலக்கின்றன.

இந்த கெமிகல் கலந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளும் போது நம் உடலில் இருக்கும் செல்கள், ஹார்மோன்கள் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களது மூளையின் செயல்பாடு மந்தமாகும். பெண்களுக்கு மலட்டுத் தன்மை, பிறக்கும் குழந்தைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கும். மேலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு
.'  என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

நீக்கமற நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பது நம் கையில் தான் இருக்கிறது. முடிந்த வரை, பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்போம். நம் உடல் நலனைக் காப்போம்.

பிளாஸ்டிக் எனும் பூதத்தின் வாயில் அகப்பட்டு விட்ட நாம், கொஞ்சம் முயன்றால் வெளியே வந்து விடலாம். இல்லையெனில் அது நம்மை விழுங்கும் நாள் தூரத்தில் இல்லை.

எனது பழைய பதிவுகள்;
பாலிதீன் பைகளில் டீ !
பாலிதீன் என்னும் பிசாசு..

நன்றி: டாக்டர் விகடன்

3 comments:

  1. அனைவரும் இதனின் தீவிரத்தை உணரனும்...

    ReplyDelete
  2. //
    திண்டுக்கல் தனபாலன் said...

    அனைவரும் இதனின் தீவிரத்தை உணரனும்...
    //
    நன்றிங்க..

    ReplyDelete
  3. பத்திரிகை தாளில் உணவுகட்டுவதை தடுத்தது போல பிளாஸ்டிக்கையும் நிறுத்துவது அவசியம்.

    அவசியமான பகிர்வு.

    ReplyDelete