Tuesday, March 12, 2013

குடி என்பது..

காலை மணி எட்டு. பெட்ரோல் பங்கில், வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஒரு திருப்பத்தில் திரும்பினேன். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர், லிப்ட் கேட்பதற்காக கை காட்டினார்.

'EB ஆபீஸ் வரைக்கும் போகணும்'  என்றார்.
'சரி, ஏறுங்க..' என்றேன்.
'நீங்க அங்கேயே போறீங்க?' என்றார்
நான் கடுப்பில், 'வர்றீங்களா... இல்லையா.. ' என்றேன்.
'அய்யா சாமி.. வர்ரேனுங்க' என்று பின்னால் ஏறிக் கொண்டார்.
அப்பொழுதுதான் நான் கவனித்தேன், அவர் குடித்திருப்பதை.

EB ஆபீஸ் வரும்வரைக்கும் நான் எதுவும் பேசவில்லை. அவரும் வாயைத் திறக்கவில்லை.

இடம் வந்ததும், 'இங்க எறங்கிக்குரீங்களா' என்றேன். 
இறங்கியவர், கிளம்ப எத்தனித்த என்னிடம், என்ன நினைத்தாரோ 'மன்னிச்சுக்குங்க.. வீட்ல பிரச்சினை.. அதான் இப்படி' என்று கையெடுத்துக் கும்பிட்டார். 'பரவாயில்லை.. விடுங்க' என்று கூறியவாறு வண்டியை முறுக்கினேன் நான்.

வண்டியின் கண்ணாடியில் பார்த்தேன். தூரத்தில் அவர், கும்பிட்ட கையை கீழே போட்டுவிட்டு சாலையை தாண்டிக் கொண்டிருந்தார்.

குடிப்பது என்பது எப்படி எல்லாம் மனிதனை நடக்க வைக்கிறது. காலை எட்டு மணிக்கு ஒரு குடும்ப மனிதன் குடிக்கிறான் என்றால் அதற்கு யார் காரணம்?.

குடியால் நடக்கும் விபத்துகளும், இறப்புகளும் பெருகிக் கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் இப்பொழுது குடிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். வீதிக்கு வீதி கடைகள் இருக்கும்போது, எல்லோரும் வாங்கிக் குடித்து போதை ஏற்றுகின்றனர்.

இதில் விழா சமயங்களில் 'டார்கெட்' வேறு. நாட்டு மக்களை குடிக்க வைத்து, அதற்கு 'டார்கெட்' வைக்கும் நாடு இங்குதான் இருக்கும்.

அரிசி, பருப்பு மளிகைக் கடையில் வாங்குவது போல டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகிறது. ஒரு பொருள் எளிதாகக் கிடைத்தால் அதை எல்லா மக்களும் வாங்கவே செய்வார்கள்.

கொஞ்சம் விழிப்புணர்வு இருப்பவன், அளவாகக் குடிப்பவன், பணம் இருப்பவன் குடித்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நாள் கூலிக்கு சென்று, கஷ்டப்பட்டு அதையும் டாஸ்மாக்கில் தொலைக்கும் சாதாரண மக்களை நாம் என்ன செய்யப் போகிறோம்?.

குடிப்பது, குடிக்காமல் இருப்பது தனி மனித சுதந்திரம் என்றால்.. அவனுக்கு குடும்பம் இல்லை, அவனுக்கு குழந்தைகள் இல்லை, எந்தப் பொறுப்புகளும் இல்லை. அப்படி என்றால் அது அவன் சுதந்திரம். ஆனால், ஒரு தகப்பன், ஒரு கணவன் தன கடமையைச் செய்யாமல் டாஸ்மாக் மதுவுக்கு அடிமை என்றால் அதற்கு பெயர் சுதந்திரம் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, கடை திறக்கும் நேரத்தை குறைக்கலாம். இப்பொழுது இருக்கும் கடைகளில் பாதியைக் குறைக்கலாம். படிப்படியாக குறைக்கலாம். சாலை ஓரங்களில் இருக்கும் கடைகளை மூட வேண்டும். இதை எல்லாம் செய்வார்களா, நம் அரசியல் வியாதிகள்?. அல்லது நம் மக்கள் சாவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா?. 
 

6 comments:

  1. கடமையா...? என்னவேன்றே இந்த கபோதிகளுக்கு தெரியாது... மனிதன் என்றால் திருந்த வேண்டும்... இவர்கள் தெய்வங்கள்... போய் சேரட்டும்...

    ReplyDelete
  2. // என்னைப் பொறுத்தவரை, கடை திறக்கும் நேரத்தை குறைக்கலாம். இப்பொழுது இருக்கும் கடைகளில் பாதியைக் குறைக்கலாம். படிப்படியாக குறைக்கலாம். சாலை ஓரங்களில் இருக்கும் கடைகளை மூட வேண்டும்.//
    நடைமுறை சாத்தியம் உள்ள பார்வை . தேர்தலுக்கு சிலநாட்களோ இல்லை மாதங்களோ இருக்கும் பொது நிச்சயமாக நீங்கள் நினைப்பது நடக்கும் . இங்க எல்லாமே அரசியல் தாங்க ....
    // மனிதன் என்றால் திருந்த வேண்டும்... இவர்கள் தெய்வங்கள்... போய் சேரட்டும்...// சூப்பர் டிடி . நானும் அப்டிதான் நெனைக்குறேன் .

    ReplyDelete
  3. @திண்டுக்கல் தனபாலன்
    அவர்கள் போய்ச் சேருவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை..
    ஆனால், அவர்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகள் என்ன செய்தார்கள்..

    நன்றிங்க..

    ReplyDelete
  4. @ஜீவன்சுப்பு
    ஆம் நண்பரே.. இன்னும் ஒன்று, தேர்தல் சமயங்களில் தான் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. :)

    ReplyDelete