Monday, August 27, 2012

புத்தர்



















எங்கேனும் அழுகுரல் கேட்கும்போதோ..
வன்முறை தனது கரங்களை விரிக்கும்போதோ..
போதிக்க நான்
புத்தனைத் தேடுகிறேன்..

அகப்பட்ட புத்தனோ 
'நானே புத்தனில்லை'
எனச் சொல்லிவிட்டு
தனியே நடந்து போகிறார்...

புத்தரே புத்தனில்லை
எனச் சொல்லிய பின்னர்
யார்தான் புத்தன்?

படம்: இணையத்தில் இருந்து - நன்றி

Friday, August 17, 2012

ஏமாற்று வியாபாரிகள்

























காய்கறி அங்காடியில்
பேரம் முடிந்து
விற்றவனும், வாங்கியவனும்
விலை அதிகம் எனவும்
குறைவு எனவும்
சிறு முணுமுணுப்புடன் விலகினர்...

இரண்டு சொத்தைக் காய்களைத்
தள்ளிவிட்டதில் விற்றவனும்
கிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை
மடித்துக் கொடுத்ததில் வாங்கியவனும்
உள்ளூர மகிழ்ந்த
கணத்தில்...

கடவுள்
தன் கையிலிருந்த
தராசையும் எடைக் கற்களையும்
வீசியெறிந்து விட்டு
நித்திரையைத் தொடர்ந்தார்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி
இது ஒரு மீள்பதிவு