இன்றைய கூட்டத்துக்கு வேண்டி
முந்தின நாள்
அழகு நிலையத்தில் போட்ட
ஒப்பனை அப்படியே இருந்தது..
பேச வேண்டியவைகள்
எல்லாவற்றையும் சுருக்கி
எழுதி வைத்தாகி விட்டது..
அனைத்து நிருபர்களுக்கும்
தகவல் சொல்லியாகி விட்டது..
நகரத்தின் முக்கிய
பெண்மணிகளுக்கு அழைப்பு
அனுப்பியாகி விட்டது..
சிற்றுண்டிக்கு கூட
ஏற்பாடுகள் நடந்து விட்டன..
இன்னும் ஒருமுறை
ஒப்பனை சரிபார்த்து விட்டு
மகளிர் தின கூட்டத்துக்கு
புறப்பட்டு விட்டார் அந்தப் பெண்...
சாயம் போன சேலையில்
கொத்து வேலைக்கு
பூ வியாபாரத்துக்கு
வீட்டு வேலைக்கு
எனப் புறப்படும் பெண்களுக்கு
வழக்கம் போல்
இது மற்றுமொரு நாளே...