Tuesday, February 8, 2011

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில்.

வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான்.

பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.

நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?.

நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது;

நகுகம் வாராய் பாண ! பகுவாய்
அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்று தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யான்தான்
முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஓரிஇ
யாரையோவென் றிகந்து நின் றதுவே !

பாடியவர்: மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
திணை : மருதம்
துறை : புதல்வனோடு புக்க தலைமகன் பாணர்க்கு உரைத்தது

வேறொரு பெண்ணிடம் மையல் கொண்டிருந்த தலைவன், தன் வீடு வழியாக செல்லும்பொழுது தன் மகனைப் பார்த்து விட்டு, மனைவியிடம் பேசியதை பாணனிடம் கூறியது இப்பாடல்.

பாடலின் பொருள்:
பாணனே, சிறுவாய் பிளந்த, மணிகளோடு கூடிய கிண்கிணி ஒலிக்க என் புதல்வன் தெருவில் தேர்நடை நடந்து கொண்டிருந்தான்.

மணம் கூடிய ஆம்பல் மலரை போன்ற வாய் கொண்டவனும், குழைத்து பூசிய சந்தனம் கொண்டவனுமான என் மகனை அள்ளி எடுத்துக் கொண்டு என் மனைவியை நெருங்க வீட்டினுள் சென்றேன்.

அழகிய நெற்றியும், கூந்தலையும் உடைய அவள், அஞ்சி விலகும் மான் பிணையை போல என்னைப் பார்த்து 'இங்கே வரும் தாங்கள் யாரோ?' எனக் கேட்டாள். இதை நினைத்து நாம் எண்ணி நகையாடலாம் வா !

காலங்கள் பல நூறு கடந்தும் காதலும், கூடலும் அப்படியேதான் இருக்கிறது.


இது ஒரு மீள்பதிவு !



Wednesday, February 2, 2011

கதையெனும் நதியில்..

ஒட்டகம்:



காலையில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றால், நேரம் கிடைக்கும்பொழுது மதிய சாப்பாடு, இரவு தாமதமானால் டேபிளுக்கு வரும் ரெண்டு தோசை, ஒரு ஆம்லெட்டை தின்று கொண்டு ஒட்டகம் போல வேலை பார்க்கும் இடம் தான் சாப்ட்வேர் துறை. மேலோட்டமாக பார்த்தால், ஏ.சி, கூட்டி போக வண்டி, கை நிறைய சம்பளம் எனத் தோன்றினாலும், அந்த வேலையால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்களே அறிவர்.

இந்த வாரம் ஆனந்த விகடனில், இரா.முருகன் அவர்களின் ஒட்டகம் என்னும் கதை, இந்த துறையைப் பற்றிய கதைதான்.

அறம்:

ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள கதை அறம். ஒருவன் அறம் தப்பி விட்டால், அதுவே அவனைக் கொன்று விடும் எனும் இளங்கோவின் (நான் இல்லீங்க.. சிலப்பதிகார இளங்கோவடிகள்) வார்த்தைகளைச் சொல்லி கதை நிறைவு பெறுகிறது.

அந்தக் காலத்தில் பாடலைக் கேட்டு கோவில் தாழ் தானாகத் திறந்தது, பாம்பு மீண்டும் வந்து விஷத்தை திரும்ப உறிஞ்சியது போல, ஒரு கவிதையின் மூலம் அறம் திரும்ப பெறப்படுகிறது போலான கதை.

பிறந்த நாள்:

ஒரு வயதுக்கு மேல் நமது பிறந்த நாள் விழாக்கள் நமது மனதில் நிற்கின்றன. நினைவுகள் அறியா சிறு வயதில் கொண்டாடப்படும் பிறந்த நாளை அந்தக் குழந்தைகள் மறந்து விடும். அவர்களுக்கு அது கூட்டம் கூடும் இன்னும் ஒரு நாளே. அதைப் பற்றிய சுகா அவர்களின் நினைவுகள் தான், சொல்வனத்தில் வெளியாகியுள்ள பிறந்த நாள்.

பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாத இன்னொரு குழந்தையின் மேல் நினைவுகளை அடுக்கி விட்டு நிறைவடைகிறது.

மூங்கில் மூச்சு:

இதுவும் ஆனந்த விகடனில் வெளிவரும், சுகா அவர்களின் தொடர். இந்த வாரம் சென்னை மாநகரில் வீடு தேடுவதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னையில் வீடுகள் தேடி நானும், எனது நண்பர்களும் அலைந்துள்ளோம். வீட்டுக் காரர்கள் கேட்கும் கேள்விகளை எழுதினால் ஒரு நீண்ட பதிவாக வந்து விடும். சினிமாக்காரர்கள் என்றால் வீடு தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்களைப் பற்றி சொல்லிச் செல்கிறார் சுகா.

முதலில் அட்வர்டைசிங் கம்பனியில் வேலை செய்வதாக கூறி வாடகைக்கு சென்றுள்ளார். ஒரு நாள் நடிகர் ஆர்யா வீட்டுக்கு வந்ததை வீட்டுக்காரரின் பெண் பார்த்து விடுகிறாள். அப்பாவிடம் அந்தப் பெண் சொல்லி விட, வீட்டுக்காரர் இவரை வரச் சொல்கிறார். இவர் வீட்டுக்காரரிடம் என்ன சமாதானம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டு போகிறார். 'சினிமாவில் வேலை செய்வதை மறைத்து ஏன் பொய் சொன்னீர்கள்' என்று ஒரு தலைமை ஆசிரியர் போலக் கேட்டுவிட்டு, இன்னும் ஒரு கேள்வி கேட்கிறார்..."நீங்கள் சினேகாவைப் பார்த்து இருக்கீர்களா".

படம்: இணையத்தில் இருந்து.
நன்றி: சொல்வனம் மற்றும் ஆனந்த விகடன்.