Thursday, September 16, 2010

கஞ்சி குடிப்பதற்கு இலார் - வீணாகும் உணவு தானியங்கள்

இரவு மீதமான இரண்டு இட்லிகளை, காலையில் வந்து பசிக்கு கேட்கும் பிச்சைக்காரனுக்குப் போடாமல், சாக்கடையிலோ அல்லது குப்பையிலோ கொண்டுபோய்க் கொட்டும் செயலுக்கு நிகரானது வீணாகும் உணவு தானியங்களை வறுமையால் வாடுவோருக்கு அளிக்காமல் வீணாக்குவது.

சரி அந்த தானியங்களை என்ன அவர்கள் காசிலா வாங்கினார்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் அடித்தால் வரி, தலை வலிக்கு மாத்திரை வாங்கினால் வரி, சோப்பு வாங்கினால் வரி என எல்லாவற்றிலும் வரியை வாங்குகிறார்கள். அப்புறம் அதுவும் பத்தவில்லை என்று, எங்கள் மக்களைக் காண்பித்து 'எங்களுக்கு கடன் கொடுங்கள்' என்று உலக வங்கிகளிடமும் வாங்கி விடுகிறார்கள். ஆக இந்த பணத்தை வைத்து அவர்கள் எங்கள் விவாசாயிகளிடம் தானியங்களை பெரிய கொள்முதல் பண்ணி வாங்கி விடுகிறார்கள். (இதில் எத்தனை பேர் ஊழல் செய்கிறார்களோ).



வாங்கிய தானியங்களை வைத்து பாதுகாக்க போதுமான கிடங்குகள் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் ஒரு வாரத்தில் இடம் பிடித்து, பெரும் மேடை அமைத்து, புதிய சாலை போட்டு, தோரணம் கட்டி அவரை வரவேற்க முடிகிற இவர்களால் ஒரு கிடங்கை அமைக்க முடியவில்லை என்பது எப்படி இருக்கிறது?.

சரி அப்படிதான் கிடங்கு கட்ட இடமில்லை !. பணம் இல்லை !. நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அவற்றை வீணாகாமல் ஏழை மக்களுக்கு அளிப்பதில் என்ன கஷ்டம். தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் ஏழை மக்களைக் காப்பாற்றுவேன் என்று தொண்டை வரள நீங்கள் கத்துவது வெறும் வாய்ப் பேச்சு மட்டும்தானே?. அடுத்த தேர்தல் வந்தால் திரும்பவும் பேசுவீர்கள், நாங்களும் எந்தக் கொள்ளியில் எது நல்ல கொள்ளி எனத் தெரியாமல் வாக்களிப்போம்.

சாப்பிடும் போது இரண்டு பருக்கை கீழே சிந்தினால் அடிக்க வரும் எங்கள் தாய், தந்தையர் இத்தனை தானியங்கள் வீணாவது தெரியாமல்தான் இருக்கின்றனர் அமைச்சர்களே. அதுதானே உங்களுக்கும் நல்லது, அடுத்த தேர்தலைச் சந்திக்க.

'கஞ்சி குடிப்பதற்கு இலார்.. அதன் காரணங்கள் என்ன என அறியும் அறிவும் இலார்.. ' என வருந்திப் பாடிவிட்டு போய்விட்டார் எங்களுக்காக வருத்தப்பட்ட கவிகளில் ஒருவர். எங்களுக்கு உங்கள் அறிக்கைகள் புரியாது. விவாதங்கள் புரியாது. ஏனெனில் நாங்கள் படிக்காதவர்கள், இன்னும் ஏழையாகவே கிராமத்திலும், நகரத்திலும் வசித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் தொலை நோக்கு (!!) பார்வைகளுக்கு பசித்திருக்கும் எங்களின் வாடிய வயிறுகள் தெரியப் போவதில்லை.

Tuesday, September 14, 2010

வால்காவிலிருந்து கங்கை வரை


ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் எழுதி, அதைத் தமிழில் கண. முத்தையா அவர்கள் மொழிபெயர்த்த 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தின் நான் படித்த பதிப்பு இருபத்தி எட்டாம் பதிப்பு. மனித வரலாற்றை சிறு சிறு கதைகள் மூலம் அற்புதமாக விவரிக்கும் நூல்.

கி.மு. வில் ஆரம்பித்து இந்திய சுதந்திரப் போராட்ட காலம் வரை நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம்.

அதிலும் எனக்கு ஒரு மிகப் பெரிய ஆச்சரியம், ஆதி காலத்தில் மனிதக் குழுவுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள் என்பது. தாயின் வழிகாட்டலில்தான் ஒரு குழுவே பினனால் நடந்து போயிருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் நிலைமை ஒடுக்கப்பட்டு, கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் பிற்காலப் பழக்கமும் வந்து போகிறது நாவலில்.

கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மறைந்து, இரும்பாலும் செம்பாலும் செய்யப்பட்ட கருவிகள், புதிய வகைத் துணிகள் எனப் பல பொருட்கள் தோன்றிய கால கட்டங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது புத்தகம்.

எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் எல்லாவற்றையும் அலசிப் பார்த்துள்ளார் ராகுல்ஜி. நமது வேதங்கள், உணவுப் பழக்க வழக்கம் (முக்கியமாக மாட்டு இறைச்சி), ஆதி காலத்தில் தலைவியான தாயைப் பற்றிய கருத்துக்கள், காந்தி அம்பேத்கார் ஆகியோரைப் பற்றி என நிறைய.

அப்பாவின் தாத்தாவுடைய தாத்தா யாரென்று யாருக்கேனும் தெரியுமா ?. நம் மூதாதையர்கள் எங்கேயோ பிறந்திருக்கலாம். ஏன் தேசம் விட்டு வந்தவர்களாக கூட இருக்கக் கூடும். யாருக்குத் தெரியும். இடம் மாறி, தொழில் மாறி இன்று ஒரு நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளின் பெயர்கள் நினைவுக்கு வரக் கூடும். நம் தலைமுறைகளின் வரலாறு நம்முடைய ஜீன்களில் இருக்கிறது.

மனிதனின் முழு வரலாறு தெரியாவிட்டாலும் நாம் கொஞ்சம் அறிந்துகொள்ள இந்த புத்தகம் பெரிதும் உதவும்.


வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
வெளியீடு: தமிழ்ப் புத்தகாலயம்
தமிழில் : கண. முத்தையா