Tuesday, January 28, 2014

யேசு கதைகள் - பால் சக்காரியா (தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ)

பால் சக்கரியா அவர்களின் 'யேசு கதைகள்' படித்தபொழுது அம்மாவைப் பற்றிய நினைவுகளும் வந்து போனது. பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஒவ்வொரு முறை சர்ச்சையும் சிலுவையையும் காணும் போது, அம்மா கையெடுத்து வணங்குவதை மறந்ததில்லை. எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவை, இயேசு எப்படி ஈர்த்தார் எனப் புரியவில்லை.

நான் பிறந்த சமயம், கொஞ்ச நாள் கிறித்துவ மருத்துவமனையில் தங்கியிருந்த போது பழகியிருக்கலாம். வாடிப்போன முகமும், குருதி வடியும் கைகளும், துயரமும் என அவர் சிலுவையில் தொங்கியிருந்த சிற்பங்களைப் பார்த்து, அட நம்மில் ஒருவர் என அம்மாவை நினைக்க வைத்திருக்கலாம். ஒவ்வொரு முறை பேருந்தில் போகும்பொழுதும், சர்ச்சைக் கடக்கும்போது வணங்கத் தவறவில்லை அம்மா.

இந்தக் கதைகளிலும், யேசுவைச் சுற்றி பெண்கள்தான் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுவது போல, யேசு பெண்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். தங்கள் துயரங்கள், சந்தோசங்கள் என அவரிடம் சொல்ல ஆயிரம் இருக்கின்றன பெண்களுக்கு.



*********

யாருக்குத் தெரியும் என்ற கதையில்,ஏரோது மன்னனின் உத்திரவுப்படி, குழந்தை யேசுவைக் கொல்ல அனுப்பப்பட்ட ஒரு படைவீரன், ஒரு வேசியின் இல்லத்தில் தங்குகிறான். அந்தப் பகுதிகளில், இரண்டு வயசுக்கு கீழ் உள்ள அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளைக் கொன்ற குருதி வீச்சத்துடன் அந்தப் பெண்ணின் வீட்டில் தங்கி இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கும், படை வீரனுக்கும் நடக்கும் உரையாடலே கதை.

"குழந்தைகளுடன் உங்களுக்கு யுத்தமில்லை அல்லவா?"
அவன் சொல்கிறான், "படைவீரர்களுக்கு யாருடன்தான் யுத்தம்"

"இத்தனை ஆயிரம் குழந்தைகளின் குருதியினூடாகவா ஒரு ரட்சகன் வருகிறான்?"

"நான் வேசியாக இருப்பதும், இந்த ரட்சகன் குழந்தைகளின் குருதியினூடாக பிறக்க வேண்டும் என்பதும் விதியா?. இந்தக் குழந்தைகளின் குருதிச் சிதறலுக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான்?"

ஆனால், அதே பெண்தான் யேசுவைக் காப்பாற்றி வைத்து அந்த இரவில் இன்னொரு இடத்துக்கு அனுப்புகிறாள். விடைபெறும்போது, தாயிடம் சொல்கிறாள்; "அவன் வளர்ந்து ராஜாவாகும் எங்களைக் காப்பாற்றச் சொல். அப்படியே அந்தப் படைவீரனையும் காப்பாற்றச் சொல்".

*********

அன்னம்மா டீச்சர் பற்றிய நினைவுக் குறிப்புகள் என்ற கதை, மிக முக்கியமான கதை. தன் சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த டீச்சர் இன்னும் முதிர் கன்னியாக இருக்கிறார். திருமணம் செய்தால், அவர் தரும் வருமானம் நின்று விடும் என்று அவரின் பெற்றோர்கள் திருமணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அன்னம்மா டீச்சர் இயேசுவை, தம்பி என்றே அழைக்கிறார். சிலுவையில் மரித்த பொழுது, இயேசுவின் வயதை விட இப்பொழுது தன் வயது அதிகம் என்பதால் அப்படிச் சொல்கிறார். ஓரிடத்தில், "இன்றைய உன் மகிமையை கனவு காணக் கூட உன்னால் முடிந்ததா?" என்று சொல்கிறார். 

ஒருநாள், அதுவும் புனித வெள்ளியன்றே ஒரு புல்வெளி மேல் இறந்து கிடக்கிறார் டீச்சர். இறந்த பின்னர், ஒரு இளைஞனை அன்னம்மா டீச்சர் சந்திக்கிறார். அந்த இளைஞன் இப்படிச் சொல்வதுடன் கதை முடிகிறது. "நன்றாக ஓய்வெடுத்துக்கொள் அக்கா. எனக்கு இன்றும்  சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்பொழுது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்."

*********

போந்தியஸ் பிலாத்து என்பவர் தான், யேசுவுக்கு தண்டனை வழங்கியவர்.  இந்த பிலாத்து தன் நண்பர், அன்தொனியஸ் என்பவருக்கு எழுதும் கடிதங்கள் இந்தப் புத்தகத்தில் குறுநாவலாக  இருக்கிறது. பிலாத்துவின் செயலாளர் யூதப் பெண் ரூத் மற்றும் பிலாத்துவின் மனைவி ஜூலியா இருவரும் இந்த கதைகளில் வருகிறார்கள்.

பிலாத்து தன் கடிதங்களில் இப்படிச் சொல்கிறார்;
"ஒரு கணம் மீட்பனாகவும், மறுகணம் மீட்கப் படுபவனாகவும் அவன் இருக்க முடியாது."

"தன் வலையில் தானே வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நேர்மையானவன் என்று நான் உணர்ந்தேன். ஆனால், நான் முதலில் சொன்னது போல தப்பிக்கச் சம்மதிப்பவர்களைத்தானே, நாம் தப்ப வைக்க முடியும்"

*********

சிலுவை மலை மீது, கண்ணாடி பார்க்கும் வரை மற்றும் ஒரு கிறிஸ்துமஸ் கதை போன்ற கதைகளும் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

மதத்துக்கு அப்பால், யேசுவைப் பற்றி ஒரு சிறு வெளிச்சத்தையாவது இந்த கதைகள் நமக்கு காட்டுகின்றன.


2 comments: