Friday, April 5, 2013

மஞ்சள் நீராட்டு

முதன் முதலாக, மாரியம்மன் கோவில் திருவிழாவன்று சந்திரா அத்தையை புதிதாகப் பார்ப்பவர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள். ஐம்பது வயதாகியும், சின்னஞ் சிறுசுகளுடன் சேர்ந்து கொண்டு மஞ்சள் தண்ணி சொம்பை தூக்கி எல்லோர் மேலும் ஊற்றும் அத்தையை அவர்கள் அப்படிப் பார்ப்பதில் தப்பொன்றும் இல்லை. ஊரில் உள்ளவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பழகிப் போனது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் துரத்திக் கொண்டு இருக்க, எந்த பேதமும் இல்லாமல் கிடைத்தவர்கள் எல்லோர் மேலும் தண்ணி ஊத்திக் கொண்டிருக்கும் அத்தை. சாமி நெரமனை எடுத்து வரும்போது முதலில் மஞ்ச தண்ணியை யாரோ ஒருவர் மேல் ஊற்றி ஆரம்பித்து வைப்பதும் சந்திரா அத்தை தான். திருவிழா ஆரம்பித்து, முடியும் அந்த ஒருவார காலத்தில் சந்திரா அத்தை அவ்வளவு அழகாக இருப்பாள். தினமும் தலைக்கு குளித்து, சிறு கதம்பத்தை வைத்துகொண்டு, மங்களகரமாக கோவிலையே சுத்தி வருவாள்.

சந்திரா அத்தை இப்படி இருப்பதை ஊர்க்காரர்கள் பார்த்தால்,  'இப்படியாவது அவ சந்தோச பட்டுக்கட்டும்'  என்று உச் கொட்டுவார்கள்.


த்தை என்றால், சொந்த அத்தையும் இல்லை, ஏதோ ஒருவகையில் அப்பாவுக்கு தூரத்து சொந்தம். அண்ணே, தங்கச்சி என்றுதான் இருவரும் கூப்பிட்டுக் கொள்வார்கள். அத்தை கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் உயிருடன் இல்லை. அத்தையின்  வயதான அம்மா மட்டும் துணை.
மிக இளைய வயதிலேயே கல்யாணம் ஆகி, புருஷன் வீட்டில் வாழ்ந்தது என்னவோ நாலு மாசம்தான். கட்டியவன் எங்கேயோ போய்விட, வாக்கப்பட்ட ஊரில் இருக்க பிடிக்காமல் சொந்த ஊருக்கே திரும்பி வந்துவிட்டது அத்தை.  அவ்வபொழுது யார் மூலமாகவோ புருஷன் உயிரோடு இருக்கிறான் என்கிற செய்தியை மட்டும் தெரிந்து கொள்ளுவாள் அத்தை.


ரண்டு மூன்று வருடங்களாக ஊர்த் திருவிழாவுக்கு செல்லவில்லை. இந்த வருடம் போனபோது, வழக்கம் போல் சாமி மக்களைத் தேடிக் கொண்டு வீதியில் வந்தது. சிறியவர்களும், பெரியவர்களும் மஞ்சள் சொம்பைத் தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். சந்திரா அத்தையை காணவில்லை. அம்மாவிடம் கேட்க 'அவ எதுக்கு வர போறா.. அவ புருஷன் போய்ட்டான்..' என்ற பதில் வந்தது. 'எப்போ?', 'அது ஆச்சு நாலு மாசம்.. அது கெடக்கட்டும், அந்த வாழ எலைய இப்படி போடு..'.


பொழுது சாய, ஊருக்குள் நண்பன் கண்ணனைப் பார்க்க நடந்து கொண்டிருந்தேன். வீதி முழுவதும் மஞ்சள் பொடி காய்ந்து கிடந்தது. சந்திரா அத்தை வீட்டைத் தாண்டிதான் கண்ணன் வீட்டுக்குப் போக வேண்டும். திண்ணையில் உட்கார்ந்திருந்த சந்திரா அத்தை, என்னைப் பார்த்ததும் 'மருமவனே.. எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க..' என்று நலம் விசாரித்தது. நானும் பதில் சொல்லிக் கொண்டே, அத்தையைப் பார்த்தேன். கட்டி இருந்த சாமியார் கலர் புடவையில் தப்பித் தவறி ஒரு பொட்டு மஞ்சள் கூட  இல்லை.


3 comments:

  1. ஃபினிசிங் செம டச் ண்ணா . படிக்கும்போதே பாக்கணும்போல இருக்கு சந்திரா அத்தைய ..!

    // சாமி நெரமனை எடுத்து வரும்போது //
    அப்டின்னா ?

    ReplyDelete
  2. நன்றிங்க.
    சாமி சப்பரத்தில் ஊர்வலம் வருவதை தான் எங்கள் ஊரில் இப்படி சொல்வார்கள்.

    ReplyDelete
  3. சந்திரா அத்தை அவர்களை நினைத்து வருத்தப்பட வைத்தது...

    ReplyDelete