Tuesday, June 1, 2010

வாழ்க்கைப் பயணம்

ஒரு சனிக்கிழமை காலையில், தாம்பரம் செல்வதற்காக குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். சனிக்கிழமை என்பதாலும், அலுவலக நேரத்தை தாண்டி விட்டதால் கூட்டம் அதிகமில்லை. மின்தொடர் வண்டி வந்து சேர்ந்ததும் பெட்டியில் ஏறினேன். பெட்டிக்குள் நான்கைந்து பேர்களே இருந்தார்கள். காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.

அப்பொழுதுதான் கவனித்தேன், எனக்கு எதிராக இரண்டு இருக்கைகள் தள்ளி, ஐம்பது வயது உள்ள ஓர் அம்மா அமர்ந்திருந்தார். அவருக்கு பக்கத்தில் நல்ல உடம்புடன் ஒரு இருபத்தி ஐந்து வயசுள்ள பையன் உட்கார்ந்திருந்தான். ஒண்ட வெட்டிய தலையுடன், சிரித்து கொண்டே வந்தான். சட்டையும், டவுசரும் மட்டுமே அணிந்திருந்தான். பார்த்த கொஞ்ச நேரத்திலயே மன நிலை குறைபாடுள்ளவன் என்று தெரிந்தது. அந்த அம்மா சோகமே உருவாக அமர்ந்திருந்தார். வாழ்வில் எண்ணற்ற துயரங்களையும் பார்த்த சுருக்கம் முகத்தில் படர்ந்திருந்தது. அவன் அவ்வபொழுது முகத்தை திருப்பி சிரிப்பதும், மெதுவாக கையால் அம்மாவை செல்லமாக அடிப்பது போல் செய்து கொண்டே வந்தான். அந்த அம்மாவும் அவன் கையை பிடித்தும் விடுவதும் போலிருந்தார். ஆனால் முகத்தில் ஒரு சிறு புன்னகை கூட இல்லை. காலையில் சாப்பிட போன கடையில் சாம்பாரில் உப்பு அதிகமாக இருந்தால் கவலைப் படுபவர்களுக்கு மத்தியில் இத்தகைய துன்பங்கள் எப்படி இருக்குமென்று சொல்ல தேவையில்லை.

தொடர் வண்டி சானிடோரியம் தாண்டி சிக்னலுக்காக நின்றது. அந்த அம்மா எழுந்து படிக்கட்டு ஓரமாக நின்று கொண்டார். அவன் என்ன நினைத்தானோ, அவனும் எழுந்து பின்னாலயே வந்து நின்று கொண்டான். அந்த அம்மா, அவனது கையைப் பற்றிக்கொண்டார். இன்னொரு கையில் துணிப்பை வைத்திருந்தார்.

சிக்னல் தாண்டி தாம்பரம் வந்ததும் இருவரும் இறங்கி கூட்டத்தோடு கலந்து போனார்கள். வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைந்து விடுவதில்லை. போராட்டமாய் ஒரு சிலருக்கு அமைந்து விடுகின்றது.

அந்த அம்மாவை பற்றி நினைத்துக் கொண்டே ரயில் நிலைய படிகளில் நடக்க தொடங்கினேன். மேலே நடைபாதையில் நடக்கும்பொழுது, இன்னொரு படிப்பினை எனக்கு காத்திருந்தது. ஒரு சின்ன பெண், ஏழு அல்லது எட்டு வயதுக்குள் இருக்கும். அவள் கையில் ஒரு குச்சி. அந்த குச்சியின் மறுமுனையில் கண் குறைபாடுள்ள ஒருவரின் கையில். அவரின் தோள்களை பற்றிக் கொண்டு இன்னொரு பெண். இவர்களுக்கு முன்னால் நம்முடைய வாழ்கையில் சாதித்தவைகள் எல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது.

மெல்ல மெல்ல அச்சிறு பெண்ணை பின் தொடர்ந்து ஓரமாக போய்க் கொண்டிருந்தார்கள். இது எதையும் கவனிக்காமல் ஒரு கூட்டம் அவசரமாக ஓடி கொண்டிருந்தது.

வாழ்கையில் ஏற்படுகின்ற எல்லா முடிச்சுகளையும் நம்மால் அவிழ்த்து விடவோ, தீர்வு காணவோ முடியாது. அதனாலதான், கணியனார் கூட "நீர்படு புணை போல் ஆருயிர்" என்றார். அதாவது நீரின் போக்கிலேயே செல்லும் படகை போன்றதே வாழ்க்கை என எடுத்துக் கொள்ளலாம். எப்படி வாழவேண்டும், அப்படி இருக்க வேண்டும் எனக் கனவுகள் இவர்களுக்கும் இருக்கும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று கொண்டவர்கள்.

அந்த பையனுக்கு அந்த அம்மாவும், இந்த பெற்றோர்களுக்கு அச் சிறுமியும் தெய்வங்கள் போல. நாம் செல்லும் பாதைகளில் அந்த தெய்வங்களும் கடக்க கூடும், முடிந்த உதவிகளையும்.. உதவி இல்லையெனில் அவர்களுக்கு வழி விடுங்கள்.. பேருந்தில் இருக்கையை கொடுங்கள்... நீங்களும் கடவுளுக்கு அருகில் இருக்கலாம்.

1 comment:

  1. நம் வாழ்க்கையில் நாம் தினசரி கடந்து போகும் இது போன்ற விஷயங்களைப் பற்றி நானும் சிந்தித்ததுண்டு.... சில சமயம் பைத்தியம் பிடித்துவிடும் போலக் கூட இருக்கும்.. நண்பர்களிடம் சொல்லும்போது கூட சிரிப்பர்... ஆனால் நீங்கள் அதை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்... நல்ல சிந்தனை.. வாழ்க.. வளர்க.. நன்றி..

    ReplyDelete