Monday, September 23, 2024

கார்மலின் - தாமோதர் மௌசோ - தமிழில்: கவிஞர் புவியரசு

கொங்கணி நாவலான கார்மலின் கவிஞர் புவியரசு அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது. பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த கார்மலின் என்ற பெண் தன்னையும், தான் பெற்ற மகளையும் இந்த நிலத்தில் காலூன்ற செய்ய சந்திக்கும் இடர்கள் பற்றிய கதை. 

கோவா கடற்கரை பகுதியில் பிறந்த கார்மலின், தனது சிறு வயதிலேயே பெற்றோர் மற்றும் உடன்பிறந்த சகோதரனை இழக்கிறாள். பின்னர் தனது அத்தை வீட்டில் வளர்கிறாள். அவளின் அத்தைக்கு கார்மலினை வளர்ப்பது பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய கணவர் இது நம்முடைய கடமை எனச் சொல்லி அவள் மேல் பாசம் காட்டுகிறார். மாமா அவள் மேல் பாசத்துடனும், அவளை பள்ளிக்கும் அனுப்புகிறார். அத்தை மாமாவின் மகன் அழகியான  கார்மலின் மேல் காதல் வயப்படுகிறான். கார்மலினுக்கும் அவன் மேல் ஆசையாக இருக்கிறாள். மாமாவுக்கு கார்மலினை தனது மருமகளாக பார்க்க வேண்டும் என ஆசை இருந்தாலும், அத்தை பணக்கார மருமகள் வேண்டும் என்கிறாள். சொன்னதுபோலவே அவனுக்கு ஒரு பணக்கார பெண்ணைப் பார்த்து கட்டி வைத்து விடுகிறார்கள். அவளின் முதல் காதல் உடைந்து போகிறது. 


கால்பந்து அணியில் விளையாடும் ஜோஸ் என்பவனை கார்மலினுக்கு கட்டி வைக்கிறார் அவளின் மாமா. சரியான கோபம் கொண்ட அவன் அந்த அணியில் தொடர்ந்து விளையாட முடிவதில்லை. குடிப் பழக்கம் கொண்ட அவன் சம்பாதிக்கும் காசை எல்லாம் குடித்தே அழிக்கிறான். இருந்த வேலையும் போய்விடுகிறது. குடிகாரர்களுக்கே உண்டான கோபம், நிதானம் இன்மை எல்லாம் அவனை ஆட்கொள்ள தன்னிலை மறந்து திரிகிறான் ஜோஸ். ஒரு பெண் குழந்தையும் பிறக்க, அதற்கு பெலின்டா என பெயர் வைக்கிறாள் கார்மலின். 

தனது மகளை நன்றாக வளர்க்க வேண்டும் என விரும்பும் கார்மலினுக்கு, குழந்தைக்கு உணவூட்ட முடியாமல் வறுமை தள்ளுகிறது. ஜோஸின் அண்ணண் மனைவி இசபெல் அவளுக்கு உதவுகிறாள். அரிசி, பணம், குழந்தைக்கு உடைகள் என தன்னால் முடிந்த உதவிகளை இசபெல் செய்கிறாள். 

ஒருமுறை ஜோஸ் வேலை பார்க்கும் இடத்துக்கு செல்லும் கார்மலின்   தனது கணவனின் நண்பனிடம் தன்னை இழக்கிறாள். அவளின் கணவன் ஜோஸ் குடிபோதையில் கிடக்கிறான். ஜோஸிடம் எந்த இன்பத்தையும் காணாத அவளுக்கு இது தற்காலிக இன்பமாக அமைகிறது. இரண்டாவது முறையும் தவறிய பின்னர், அவள் இந்த உறவு வேண்டாம் என ஊர் திரும்புகிறாள். ஆனால் அந்த உறவின் விளைவாக பிறந்த ஆண் குழந்தையை அவள் வெறுக்கிறாள். பின்னர் அந்த குழந்தை கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறக்கிறது. அதன் பின்னரே அவள் நிம்மதியடைகிறாள். தான் செய்த பாவம் கழுவப்பட்டு விட்டது என நினைக்கிறாள். 


பக்கத்தில் இருக்கும் நிலத்தை குத்தகைக்கு பிடித்து விவசாயம் செய்கிறார்கள் கார்மலினும், இசபெல்லும். ஜோஸ் எதற்கும் உதவாமல் தனது குடியே முக்கியம் என்று இருக்கிறான். அறுவடைக்கு பின்னர் கொஞ்சம் உணவு பற்றிய கவலை தீர்கிறது. ஆனால் அதற்கடுத்த வருடங்களில், யார் நிலத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டம் வர விவசாயமும் செய்ய முடியாமல் போகிறது. 

வறுமை தொடர்ந்து வர, கடன் தொகையும் அதிகமாகி கொண்டே போகிறது. ஜோஸினால் எந்த பயனும் இல்லை. குவைத்தில் வேலை பார்க்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்பட அங்கே செல்ல முயல்கிறாள் கார்மலின். இசபெல்,   பெலிண்டாவை   நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போய்வா என்கிறாள். அவள் கொடுத்த நம்பிக்கையால் கார்மலின் குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்குப் போகிறாள். 

அவள் குவைத் நாட்டுக்கு செல்லும் முன்பே அந்த நாட்டைப் பற்றியும் அவள் பார்க்கப் போகும் வேலை பற்றியும் சொல்கிறார்கள். நல்ல முதலாளி அமைந்தால் உனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார்கள். சில பெண்கள் பாலியல் ரீதியில் கஷ்டப்படவும் செய்கிறார்கள், சிலர் அதையே ஒரு வாய்ப்பாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள் எனச் சொல்ல கார்மலின் திட மனதுடன் செல்கிறாள். அங்கே போன பின்னர் நல்ல முதலாளியும் குடும்பமும் அமைகிறது. 

அவளின் முதலாளி பெயர் நுஸார். அவர்கள் என்ன செய்தாலும் எதிர்த்துக் கேள்விகள் கேட்க முடியாத சூழலில் கார்மலின் பணியாற்றுகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து தருகிறாள். எல்லோரும் வெளியே சென்றிருக்கும் ஒரு நாள் அவளின் முதலாளி அவளை அடைகிறார். உறவு முடிந்த பின்னர் அவளுக்கு கொஞ்சம் பணம் தருகிறார். நுஸார் நல்லவர் என்றாலும், பணமே கொடுக்கவில்லை என்றாலும் நாம் தப்பிக்க முடியாது எனத் தெரிந்துகொள்கிறாள் கார்மலின். அத்தை மகன், ஜோஸ், அவனின் நண்பன் என அவளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களிடம் காணாத ஒன்றை நுஸாரிடம் கண்டுகொள்கிறாள். அந்த உறவில் அவள் மகிழ்ச்சியும் அடைகிறாள். 

ஒருநாள் செய்த சிறு தவறால் முதலாளியின் மனைவி அவளை சிறைக்கு அனுப்பி விடுகிறாள். பின்னர் அவளை திரும்ப அழைத்து 
வந்து விடுகிறார்கள். ஜோஸ் அதிக குடியினால் கோவாவில் இறக்கிறான். அவன் இறப்புக்கு கூட அவள் வரமுடியாமல் போகிறது. போய்  வந்தால் செலவு அதிகமாகும் என நினைத்து போகாமல் இருக்கிறாள். உடனே கிளம்பினாலும் அவன் அடக்கத்துக்கு போக முடியாது. 

சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு கார்மலின் எல்லாக் கடனையும் அடைக்கிறாள். நகரத்தில் புதிய வீடு கூட அவள் வாங்குகிறாள். அவளைப் பொறுத்த வரை,  தான் பட்ட துயரங்கள் தன்னோடு போகட்டும்,  தன் மகள் பெலிண்டா எந்த கஷ்டமும் படக் கூடாது என நினைக்கிறாள். அவள் படித்து முடித்தால் நல்ல இடத்தில அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்கிறாள். 

பள்ளி இறுதித் தேர்வில் தோற்றுப் போகும் பெலிண்டா, அடுத்த முறையும் முயன்று கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் தன் அம்மாவுடன் அவள் பேசும் பேச்சு கார்மலினை கோபம் கொள்ளச் செய்கிறது. எந்த வாழ்க்கை தன் மகள் வாழக் கூடாது என எண்ணுகிறாளோ அதனை அவள் சொன்னதும் தாயாக அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. 

"கார்மலின்" - நாவல் ஒரு காலகட்டத்தின் கதை, ஒரு பெண் எவ்வளவு அடக்கு முறைகளுக்கு உள்ளாகிறாள், கொஞ்சம் அழகாக இருந்தால் அவளை வளைக்க எத்தனை பேர் முயல்கிறார்கள், பெண்ணின் ஆசைகளை, அவளின் தாபங்களை அறியாத ஆண்கள், அயலகப் பணியில் அவர்கள் படும் துயர் என சொல்லும் கதை. சில உறவுகள் விலகிப் போக, இசபெல், நுஸார் போன்ற சில உறவுகள் அணைக்க வருகிறார்கள். 

 
கார்மலின் - தாமோதர் மௌசோ 
தமிழில்: கவிஞர் புவியரசு
சாகித்திய அகாதெமி 

Monday, September 16, 2024

நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்

மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். 


விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோவை. இரண்டு ஆண் குழந்தைகளோடு அவள் கோவையில் வசிக்கிறாள். பழனி அவ்வப்பொழுது விடுமுறையில் கோவைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவான். அவனுக்கு கோவை பிடிப்பதே இல்லை. கோவையின் பேச்சு வழக்கும், கொடுக்கும் மரியாதையையும் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. ராதாவோடு அடிக்கடி சண்டையும், அவனுடைய குறைவான வருமானமும் பிரச்சினை ஆகிறது. அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பதால் பழனியின் சொந்த ஊருக்கு வர மறுக்கிறாள். அவனுக்கோ தனது பிள்ளைகள் கிராமத்தில் வளராமல் இந்த ஊரில் வளர்கிறார்களே என்ற கவலை.


மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என இருக்கும் பழனியின் குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அவனுடைய ஒரு தம்பி குமரன் இறந்துவிட்டான். அவன் இருக்கும்பொழுது நிலமே கதி என்று கிடந்து நல்ல மகசூல் எடுக்கிறான். குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது அவனால்தான். அவனின் இறப்புக்கு பின்னர் விவசாயம் செழிக்காமல் ஏனோ தானோ என்று நடக்கிறது. அண்ணன் பாஸ்கரன் இப்போது நிலத்தை பார்த்துக்கொள்கிறான். எந்த வருமானமும் அந்த நிலத்தில் கிடைக்காததால் அதை விற்றுவிட்டு கோவையில் வீடு கட்ட மனை வாங்கச் சொல்கிறாள் பழனியின் மனைவி ராதா. 

நகரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை போல ராதாவுக்கும் உண்டு. அவள் வேலைக்கும் போவதால் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து வாங்கலாம் என நினைக்கிறாள். நிலத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்க, பழனியிடம் விவசாய பூமியை விற்றுவிட்டு வா என்கிறாள். விற்க கூட வேண்டாம், தென்னை, கரும்பு போல பணப்பயிர்களை போட்டால் வருமானம் வருமே என்கிறாள். அவள் சொல்வது எதுவுமே நடைமுறை சாத்தியம் இல்லை என்கிறான் பழனி. பிறகு வார்த்தைகள் தடித்து கை வைப்பதில் போய் முடிகிறது. நீயா நானா என தடித்த வார்த்தைகள் என்று  எதற்கெடுத்தாலும்  சண்டைகள் நிம்மதியை குலைக்கின்றன. 

குழந்தைகளுக்கு கூட அவனின் சொந்த ஊர் பிடிப்பதில்லை. மாமனார், மாமியார் மேல் வைத்திருக்கும் பாசத்தில் கொஞ்சம் கூட தன் தாயுடன் இல்லையே என வருத்தப்படுகிறான். கால்நடைகளுக்கான வைத்தியம்  பழனிக்கு கொஞ்சம் தெரியும். கோவைக்கு வரும்பொழுது பக்கத்தில் இருக்கும் ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு அவன் ஆலோசனை சொல்லி வைத்தியம் பார்க்கிறான். 

பையன்களை நொய்யல் ஆற்றுக்கு கூட்டிச் சென்று குளிக்க வைக்கிறான்.ஆறு குளம் போன்றவற்றிலும், இயற்கையுடனும் கலந்து பிள்ளைகள் வளர வேண்டும் என்ற ஆசை பழனிக்கு. ஆற்றில் குளித்து சளி பிடித்தால் ராதா அதற்கு அவனைத் திட்டுகிறாள். பையன்களை கெடுக்கிறாய் என்கிறாள். மொத்தத்தில் அவனுக்கு கோவையை விட்டு ஓடி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. 



நொய்யல் ஆற்றின் கரையில் ஒருநாள் அவன் அமர்ந்திருக்கும் பொழுது கொஞ்சம் மனநலம் சரியில்லாத ஒரு சிறுபெண் அவனை அண்ணா என அழைத்து அவனிடம் பேசுகிறாள். இன்னொரு நாள் குட்டிகளை ஈன முடியாமல் தவிக்கும் ஆட்டுக்கு வைத்தியம் பார்க்கிறான். அந்த ஆட்டுக்கு சொந்தக்காரி எங்கேயோ இருந்து வந்து கணவன் குடியினால் இறக்க ஆடு வளர்ப்பு, தோட்ட வேலை என தன் குடும்பத்தை நிலைநிறுத்த பிள்ளைகளோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அவர்களின் வறுமையைப் பார்த்த பழனி காசு வேண்டாம் என்கிறான். ஆட்டை பிழைக்க வைத்த அவனுக்கு ஏதாவது தர வேண்டும் என எண்ணி மறுநாள் காலையில் ஒரு வாழைத் தாரோடு அவன் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பழனிக்கு இங்கேயும் நமக்கு சுற்றமும், சொந்தமும் உண்டு என எண்ணி மகிழ்கிறான். 

நாவலில் ஒரு வரி வருகிறது "எல்லா ஊர்களிலும் அபூர்வமான சிலர் வேருக்கு நீரூற்றி விடுகிறார்கள்" . அவனுக்கு இப்பொழுது இதுவும் சொந்த ஊரே, இங்கேயும் அவனுக்கு சுற்றம் உண்டு.

சொந்த ஊர் என்பது உண்மையில் யாருக்குமே கிடையாது. நாவலில் வரும் பழனிக்கு கூட. அவனுடைய தாத்தா காலத்தில் அந்த கிராமத்தில் வந்து தங்கியவர்கள். நாம் எங்கே பிறக்கிறோமோ, எங்கே பால்ய காலங்களை கழிக்கிறோமோ அதுவே சொந்த ஊர் என நினைக்கிறோம். மற்றபடி சொந்த ஊர் என்பது நிரந்தரம் கிடையாது. அதனை பழனி உணர்ந்து கொள்கிறான்.  இனிமேல் ராதாவோடு அவன் இணங்கியே போவான். 

"நிலம் எனும் நல்லாள்" எங்கேயும் நம்மை ஆதரிக்க, அரவணைக்க  காத்திருக்கிறாள்.