Thursday, July 25, 2019

அவன் காட்டை வென்றான் - கேசவ ரெட்டி

'அவன் காட்டை வென்றான்' நாவல் ஒரு கிழவரையும், அவர் வளர்க்கும் பன்றிகளையும், காட்டையும் பற்றிய கதை. அவருக்கு பெயர் எல்லாம் நாவலில் இல்லை. அவருடன் வசிப்பது அவரின் பேரன் மட்டுமே. வேறு யாருமில்லை. காடு எப்பொழுதுமே ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிரம்பியது. காடுகளை ஒட்டியே வாழ்ந்த நம் முன்னோர்கள் பார்த்த காடுகள் இப்பொழுது இல்லை. காடுகளை நாம் இப்பொழுது மாற்றிவிட்டோம். 

அன்று காலை அவருக்கு முடியாததால், பன்றிகளை மேய்க்க பையனை அனுப்புகிறார். பொழுது சாய்ந்த பின்னரும் பையன் பன்றிகளைத் திருப்பி ஓட்டி வராததால் கிழவர் பயந்து போகிறார். பன்றிகளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ இல்லை பையன் எங்காவது போயிருப்பானோ என்றெல்லாம் நினைக்கிறார். திடீரென அவருக்கு, ஒரு சினைப்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பியது நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அந்தப் பன்றிதான் எங்காவது தொலைந்து போய், பையன் தேடிக் கொண்டிருக்கிறானோ என நினைக்கிறார். 

கொஞ்ச நேரம் கழித்து பையன் பன்றிகளோடு திரும்புகிறான். சினைப்பன்றி தொலைந்து போனதால், அதைத் தேடினேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அழுகிறான் பேரன். சரி, நான் போய்த் தேடிப் பார்க்கிறேன் என்று கையில் ஈட்டியுடன் கிளம்புகிறார் பெரியவர். 

அவரிடம் இருந்த இரண்டு சினைப்பன்றிகளில் ஒன்று குட்டிகளை ஈன்று குடிசையிலேயே தங்கிவிட்டது. இரண்டு பன்றிகளுமே சிலநாட்கள் முன்பின் தாய்மை அடைந்தவை. அப்படி என்றால் தொலைந்து போன அந்த பன்றி, குட்டிகளை ஈனுவதற்கு இடம் தேடித்தான் போயிருக்கும் என்று நினைக்கிறார். ஈனுவதற்கு தயாராய் இருந்த பெண்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பிய தன் முட்டாள்தனத்தை எண்ணி தலையில் அடித்துக்கொள்கிறார். 



குட்டிகளை ஈன்ற பெண்பன்றி மிகுந்த கோபமுடன் இருக்கும். யாரையும் பக்கத்தில் நெருங்க விடாது, அப்பன்றியை வளர்த்தவனாகவே இருந்தாலும் கிழித்து சாய்த்து விடும். எப்படியும் கண்டுபிடித்து பன்றி மற்றும் குட்டிகளுடன் திரும்பி வந்து விடுவேன் என்று கிளம்புகிறார் கிழவர். 

பன்றிகள் மேய்ந்த இடத்திலிருந்து, சிறுவன் கூறிய திசையை வைத்து அது காட்டுக்குள் தான் போயிருக்க வேண்டும் என நினைத்து காட்டை நோக்கிச் செல்கிறார். ஒரு ஓடையை கடந்து, எந்தப்பக்கம் செல்வது என்று குழப்பம் ஏற்பட்டபோது, தூரத்தில் ஒரு குருவி விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. எனவே பன்றி அங்கேதான் இருக்க வேண்டும் என எண்ணியவாறு குரல் வந்த திசை நோக்கிச் செல்கிறார். 

பக்கத்தில் போனதும் அங்கே பன்றி இருப்பதற்கான தடயங்களை அறிகிறார். ஆனால் பக்கத்தில் சென்றால் பன்றி குதறியெடுத்து விடும் என்று நினைத்து ஒரு மரத்தின் மேலே ஏறிப்பார்க்கிறார். அங்கே தாய்ப்பன்றியைச் சுற்றி குட்டிகள் கிடக்கின்றன. குட்டிகளை எண்ணிப்பார்த்து மகிழ்கிறார். வீட்டில் இருக்கும் குட்டிகளுடன் இந்தக் குட்டிகளையும் சேர்த்தால், எவ்வளவு குட்டிகள் எனக்கு என்று மகிழ்கிறார். அன்று முழுநிலவு. வானத்துக்கு ஒரே நிலவுதான், ஆனால் இங்கே என் அருமைக்குட்டிகள் எவ்வளவு கிடக்கின்றன இந்தப்பூமியில் என்று பூரிக்கிறார். 

குட்டிகளை அருகில் பார்க்க எண்ணி, மரத்தை விட்டு இறங்கி மெதுவாக பக்கத்தில் செல்கிறார். அதற்குள் பன்றி அவரைப் பார்த்து பாய்ந்து வந்து குதறுகிறது. பன்றியிடமிருந்து தப்பித்த கிழவர், சரசரவென மரத்தில் ஏறுகிறார். சிராய்ப்புகளுடனும், உடம்பில் அங்கங்கே வலியுமாக சிரமப்படுகிறார் கிழவர். பன்றிகளை அவருக்கு காட்டிக்கொடுத்த குருவி இன்னும் கத்திக்கொண்டே இருக்கிறது. தொலைவில் இருந்து பன்றி ஈன்ற வாசத்தை வைத்து பெரிய விலங்குகள் ஏதாவது வந்து விடுமோ என பயப்படுகிறார். அவர் பயந்தது போலவே, ஒரு நரி மெதுவாக புதரை நெருங்கி வருகிறது. 

தாய்ப்பன்றி அந்த நரியை குதறி எடுத்து விடுகிறது. தான் வளர்த்த பன்றி நரியைப் போராடிக் கொன்றதில் அவருக்கு பெருமை ஏற்படுகிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து நான்கு நரிகள் ஒரே நேரத்தில் வர, தாய்ப்பன்றி ஒரு நரியைக் கொல்ல, கிழவர் தன் ஈட்டியின் மூலம் ஒரு நரியைக் கொல்கிறார். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் புதருக்குள் புகுந்த மீதம் இரண்டு நரிகள், ஆளுக்கொன்றாக இரண்டு குட்டிகளை கவ்விக்கொண்டு போகின்றன. பத்துக் குட்டிகளில் இரண்டு போனதை நினைத்து வருந்துகிறார் கிழவர். குருவி இன்னும் ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. 

கொஞ்ச நேரம் போனால் பன்றி என்னை அடையாளம் கண்டுவிடும் என்று நினைக்கிறார். விடிந்ததும் முதல் வேலையாக தாய்ப்பன்றியை மீதமிருக்கும் குட்டிகளுடன்  கூட்டிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார். திரும்ப நிறைய நரிகள் கூட்டமாக வருகின்றன. என்ன செய்யவென அவருக்கு புரியவில்லை. கூட்டமாக இருக்கும் நரிகளை ஒரு பன்றி எவ்வாறு எதிர்கொள்ளும் என நினைத்து, குறைந்தபட்சம் குட்டிகளையாவது காப்பாற்றுவோம் என எண்ணிக்கொண்டு, தன் ஈட்டியை கணநேரத்தில் பன்றியை நோக்கி வீசுகிறார். பன்றி சாய்ந்துவிட்டது. தான் வளர்த்த பன்றியை தானே கொன்றுவிட்டதை எண்ணி கலங்கியவர், கீழிறங்கி கற்களை எடுத்து நரிக்கூட்டத்தை நோக்கி வீசுகிறார். நரிகள் கொஞ்ச தூரம் திரும்புகின்றன. ஒரு கூடையில் அந்தக் குட்டிகளை எடுத்துவைத்து தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். 

வரும் வழியில் அசதியும் களைப்பும் ஏற்பட, குட்டிகளை எப்படியாவது வீட்டுக்கு கொண்டுபோய்ச் சேர்த்து இன்னொரு தாய்ப்பன்றியிடம் முலையருந்த விடவேண்டும் என நினைக்கிறார். பன்றி குதறியதால் தொடையில் ஏற்பட்ட காயங்களும் சேர்ந்துகொள்ள, ஒருமாதிரி இருட்டிவர கூடையை கீழேவைத்து கண் சாய்கிறார். கொஞ்ச நேரம் கழித்து கண் விழித்தால் கூடையைச் சுற்றி கழுகுகள் அமர்ந்திருக்கிறது. அவசரமாக அவற்றை விரட்டி விட்டுப் பார்த்தால்,குட்டிகள் உயிருடன் இல்லை. தாங்கமுடியாத துயரத்துடன் மெதுவாக தன் குடிசையை நோக்கி நடக்கிறார். பொழுது விடியப் போகிறது. தன் குடிசை வாசலுக்கு வந்ததும், பொத்தென்று கீழே படுக்கிறார். பேரன் உள்ளிருந்து அவரைப் பார்த்து ஓடி வருகிறான். 

கிழவர் உண்மையாகவே இந்த நாவலின் தலைப்பு போலவே காட்டை வென்றாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இருந்த அறிவை வைத்து இரவு முழுவதும் அந்தக்காட்டில் வாழ்ந்திருக்கிறார். பன்றியைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். குருவிகளின் குரலை, பன்றியின் கோபத்தை, நரிகளின் வருகையை அறிந்துகொள்கிறார்.  அந்தவகையில் அவர் காட்டை வென்றவர்தான். 

Friday, June 14, 2019

புனலும் மணலும் - ஆ.மாதவன்

ஆற்றுக்கடவில் மணலை வாரித் தொழில் செய்யும் சிலரைப் பற்றியது இந்நாவல். சுழிகள் நிறைந்த ஆறு போலவே, வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள். நீர் காணாத ஆறு போல வறுமை தாண்டவமாடும் வாழக்கை. வாரிக்கொடுத்த ஆறு இன்று சாக்கடை செல்லும் கால்வாயாய் பரிதாப தோற்றத்தில். 

அங்குசாமிக்கு சாலைத் தெருவில் மூட்டை சுமக்கும் வேலை. சின்ன வயதிலேயே சாலைத் தெருவில் வேலைக்கு வந்துவிட்டவர். தான் பிறந்த தமிழகத்தை விட்டு, மலையாளக் கரையிலேயே தங்கிவிட்டவர். ஒரு காவலர் வளாகத்தில் குடியிருக்கச் செல்கிறார் அங்குசாமி. அங்கே இருக்கும் தங்கம்மை என்ற பெண்ணுடன் பழக்கமாகி அவளையே கல்யாணம் செய்து கொள்கிறார். 



தங்கம்மைக்கு ஒரு போலீஸ்காரன் ஒருவனுடன் முன்னரே கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்த அந்த போலீஸ்காரன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு குழந்தையும் உண்டாகிவிட்டது. பெண் குழந்தை. பெயர் பங்கி. பற்கள் விகாரமாய், கொஞ்சம் குண்டுக்கட்டான ஒரு மாதிரியான உடம்புடனும், கருமை நிறத்திலும் இருப்பாள் பங்கி. தங்கம்மைக்கு இப்படி ஒரு மகளா என முதல்முறை பார்க்கும்பொழுதே வியக்கிறார் அங்குசாமி. ஏனென்றால் தங்கம்மை அவ்வளவு அழகு. கணவன் இறந்த பின்னர் வந்த நாட்களில், நிறையப்பேர் அவளைப் பெண்கேட்டுச் செல்கிறார்கள். அவர்களை மறுத்துவிட்ட அவள், அங்குசாமிக்கு சரி என்கிறாள். அவளின் தகப்பன் சமையல்காரர் குட்டன் , 'இனிமேல் நீங்கள் இந்த மூட்டை சுமக்கும் வேலைக்குச் செல்லக்கூடாது' என்று சொல்லி, ஆற்றுக்கடவில் மணல் வாரும் தொழில் செய்யும் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்துவிடுகிறார். மணல் வண்டிகளை கணக்கெடுத்து, மணல் வாரி நிறைப்பதை மேற்பார்வை செய்வது அங்குசாமியின் வேலை. 

தங்கம்மையுடன் பழகிய நாட்களிலேயே, அங்குசாமிக்கு பங்கியைப் பிடிப்பதில்லை. முதல்முறை அவர்கள் தனிமையில் இருக்கும்போது, பங்கி அழுதவுடன் தங்கம்மை எழுந்து போய்விடுகிறாள். அங்குசாமிக்கு எரிச்சல் இருந்தாலும் தங்கம்மைக்காக பொறுத்துப் போகிறார். 

தாமோதரன் என்னும் இளவயதுப் பையனைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் அங்குசாமி. அவனும் அவரைப்போலவே சிறுவயதில் ஊரைவிட்டு வந்தவன். தனது குடிசையை அடுத்து அவனுக்கும் ஒரு குடிசை அமைத்து தங்கவைக்கிறார். சிறுமியாய் இருக்கும் பங்கியுடன் தாமோதரன் விளையாடுகிறான். தன்னுடைய சகோதரி என்றே அவளை எண்ணுகிறான். பங்கி வளர்ந்த பின்னரும் கூட அங்குசாமிக்கு அவள் மேல் கோபம் தீர்வதில்லை. பார்த்தாலே எரிந்து விழுகிறார். ஊரில் உள்ள மற்றவரிடம் பேசுவதிலும், தாமோதரனிடம் பழகுவதில் எந்த பாரபட்சமும் பார்க்காத அங்குசாமிக்கு பங்கி என்றால் மட்டும் ஆகாது. 

பங்கியும் இப்பொழுது ஆற்று வேலைக்கு வருகிறாள். முதலில் அவள் வேலைக்கு வருவதை மறுத்த அங்குசாமியை, தாமோதரன் சமாதானம் செய்து, தான் பார்த்துக்கொள்வதாக வேலைக்கு அழைத்து வருகிறான். சில நாட்களில், தங்கம்மைக்கு வந்த காய்ச்சலால் அவள் இறந்துபோகிறாள். அங்குசாமிக்கு தங்கம்மை போனது பெரும்துயராய் இருக்கிறது. இந்தப் பெண் பங்கி இல்லாவிட்டால், நானும் நீயும் எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று தாமோதரனிடம் சொல்கிறார். முன்பு ஆற்றுக்கடவில் வேலை அவ்வளவாய் இருப்பதில்லை. கூலி வாங்குவதும் தினப்படி செலவுக்கும் சரியாய் இருக்கிறது. 

பங்கியை கல்யாணம் செய்து தரலாம் என்றால், யாரும் அமையவில்லை. ஒருவன் வந்து பங்கியைப் பார்த்துவிட்டு, இப்படி இருப்பவளை நான் கட்ட மாட்டேன்.. வேணும்னா நீ கட்டிக்கோ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். தாமோதரன் 'இங்க பாரு, தங்கம்மை அக்கன் கிட்டே உனக்கு கல்யாணம் செய்து வைப்பது என்னோட கடமைன்னு சொல்லி இருக்கறேன். நீ எனக்கு தங்கச்சி மாதிரி. அப்படி யாராவது வரவில்லை என்றால். நானே உன்னை கட்டுவேன்' என்று பங்கியிடம் சொல்கிறான். பங்கிக்கும் அவன் மேல் பாசம் உண்டென்றாலும், இப்படிப்பட்ட ஒரு நல்லவனுக்கு தான் மனைவியாய் இருக்கக்கூடாது என்றெண்ணுகிறாள். 




அங்குசாமிக்கும், பங்கிக்கும் சில நேரங்களில் வாதம் ஏற்படும்பொழுது 'உன்னைக் கொண்டு போய் ஆற்றில் தள்ளினால்தான் எனக்கும், இதோ அடுத்தாப்பிலே இருக்கற தாமோதரனுக்கும் விமோசனம்.' என்று அங்குசாமி கத்துவார். அந்த நேரங்களில் தாமோதரன் வந்து சமாதானம் செய்வான். ஒரு நாள் அங்குசாமி ஆற்றங்கரையில் கீழே விழுந்து கையை முறித்துக்கொள்கிறார். வைத்தியர் எண்ணெய் போட்டு கட்டுப்போட்டு வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. தாமோதரனும், பங்கியும் அவருக்குப் பணிவிடை செய்கிறார்கள். பங்கி கொண்டு வரும் காசில் தான் பசியாற வேண்டியிருக்கிறதே என்று இன்னும் கோபம் அதிகமாகிறது அங்குசாமிக்கு. 

கை கொஞ்சம் சரியாகி கட்டுப் பிரித்தாகிவிட்டது. ஆனால் முன்பு போல வேலை செய்ய முடிவதில்லை. ஆற்றில் மணல் அள்ளும் வேலையும் குறைந்துவிட்டது. சில நாட்களாக தாமோதரனும், பங்கியும் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்கிறார்கள். கொஞ்ச நாட்களில், மழைபெய்ய ஆரம்பிக்கிறது. இடைவிடாத மழை.மூன்று நான்கு நாட்களுக்கு மேல் பெய்கிறது. அவர்கள் குடியிருந்த குடிசையும் ஒழுக ஆரம்பிக்கிறது. இருந்த காசு எல்லாம் கரைந்து விட்டது. காசிருந்தாலும், வெளியே கடைகள் எதுவுமில்லை. ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம். மழை நின்றாலும், நீர் வடியாமல் ஆற்று வேலைக்குப் போக முடியாது. மழை நின்ற ஒருநாள் தாமோதரன் அக்கரையில் உள்ள சூளையில் வேலை இருப்பதாக அறிந்து அங்கே போகலாம் என்கிறான். ஆட்களைக் கூட்டிக்கொண்டு, அங்குசாமி தாமோதரன் பங்கி என எல்லாரும் ஆற்றங்கரைக்குச் செல்கிறார்கள்.

நீர் ஓடும் வேகத்தைப் பார்த்ததும் தாமோதரன் வள்ளத்தில் அக்கரைக்குப் போகத் தயங்குகிறான். அங்குசாமியோ, இது நம்ம ஆறு, நாம தொழில் செய்யற இடம், அதெல்லாம் ஒண்ணும் ஆகாது எல்லாரும் வள்ளத்தில் ஏறுங்க என்று அதட்டுகிறார். எல்லோரும் வள்ளத்தில் ஏறிக்கொள்கிறார்கள். தாமோதரன் வள்ளம் வலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் கொஞ்ச தூரம் போனதும் ஒரு சுழிப்பில் மாட்டி வள்ளம் கவிழ்ந்துபோகிறது. கரையில் இருந்த ஆட்கள் வள்ளம் முங்குவதைப் பார்த்துக் கத்துகிறார்கள். ஆற்றில் கவிழ்ந்த ஒவ்வொருவராக நீந்திக் கரையேறுகிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறது. இரண்டு பெண்களில் ஒருத்தி இருக்கிறாள். அப்படியென்றால் இன்னொரு பெண்ணான பங்கி ஆற்றோடு போய்விட்டாள். 

'ஆ பங்கியா' என்று கரையேறிய அங்குசாமி நினைத்துப்பார்க்கிறார். ஆற்றில் அவர் நீந்தும்பொழுது ஒரு கை அவர் காலைக் கெட்டியாகப் பிடிக்கிறது. அவர் அந்தக்கையை ஒரு உந்து உந்தி உதறிவிட்டு மேலே நீந்தி வருகிறார். அப்பொழுது அவர் கால்களில் ஒரு பெண்ணின் தலைமுடி படுகிறது. அப்படியென்றால் அது பங்கி தான் என்று எண்ணுகிறார் அங்குசாமி. 

இது அங்குசாமியின் பிழையா என்றால், ஆமென்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்.