Monday, August 12, 2024

தாரா - ம.நவீன்

புத்த மதத்தில் இரக்கமும், கருணையும் கொண்ட பெண் தெய்வம் தாரா. முக்கியமாக நேபாளில் தாரா தெய்வம் ஓவியங்கள் மற்றும் சிலைகளில் வடிக்கப்படுகிறது. பல நிறங்களில் தாரா தெய்வம் வரையப்பட்டாலும், பச்சை நிறமும் கையில் நீலத் தாமரையும் கொண்ட தாராவே முதன்மையானவள். 

ஷரியா நிருத்ய என்னும் நடனம் பரதம் போன்ற ஒன்று. நேபாளில் இக்கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது.  இக்கலையில் பிரகாசிக்க தாராவின் அருள் வேண்டும் என்று நம்பப்படுகிறது. 

தாராவைப் பற்றியும்,  ஷரியா நிருத்ய நடனம் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள வல்லினம் தளத்தில் கோகிலவாணி எழுதிய பச்சை நாயகி , கடவுளும் கலையும் கட்டுரைகளைப் படிக்கலாம்.  


 
தமிழ், நேபாளி என இரண்டு சமூகங்களுக்கு இடையே நடக்கும் பூசல் எவ்வாறு மற்றவர்களைப் பாதிக்கிறது எனச் சொல்லும் கதை தாரா. மலேசியாவில் இரண்டு சமூகமும் தன் வாழ்க்கையை அந்நிலத்தில் வாழ, படும் அவலங்களை பேசுகிறது இந்நாவல். முதலாளிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குபவர்கள். உள்ளூர் தொழிலாளிகள் சம்பளம் கூட கேட்டு பிரச்சினை செய்தால், வெளியூரில் இருந்து குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை இறக்குகிறார்கள். குறைந்த கூலிக்கு தன்னுடைய வேலைக்கு  புதிதாக வந்த நேபாளிகள் மீது தமிழ் மக்களுக்கு கோபம் வருகிறது. அவர்களைச் சீண்டுகிறார்கள். அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் நேபாள் மக்களின் தலைவராக சனில் இருக்கிறான். 

அரசியல்வாதி மருது இப்பிரச்சினைகளை பற்றி பேசும்போது "பட்டா இல்லாத பூமியில் நாம் இருக்கிறோம். அரசாங்கத்துடன் நமக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. நாம முந்தா நாள் வந்தோம். அவன் (நேபாள மக்கள்) நேத்து வந்தான். அவன் வேலையை அவன் செய்யட்டும். உங்க வேலையை நீங்க பாருங்க." என்று கூறுகிறான். அவரைப் பொறுத்தவரை, அடுத்த தேர்தலில் நேபாள மக்களுக்கு தேர்தல் வாக்குரிமை தந்தால் அதைப் பெற்றாக வேண்டிய கணக்கு அவருக்கு.

ஆனால் அவரின் பேச்சு எடுபடாமல் அந்தக் கம்பத்தைச் சேர்ந்த குகனோடு சேர்ந்து பிரச்சினை வருகிறது. அங்கே இருக்கும் இளைஞர்களுக்கு அவன் தலைவன் போல, எதற்கும் பயப்படாதவனாக இருக்கிறான். சிறைக்கும் சென்று வருகிறான். அவன் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த சனிலை பழிவாங்க  வேண்டும் என அவனின் நண்பர்கள் நினைக்கிறார்கள். 

குல தெய்வம் இல்லாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு கோயில் ஒன்று கட்டப்படுகிறது. சில பிரச்சினைகள் ஏற்படுவதால் கோவில் பூட்டியே வைக்கப்படுகிறதது. அதற்கு காரணம் அம்மன் கோபமாக இருக்கிறாள் என்று சொல்லுகிறார்கள். முன்னொரு காலத்தில் பழங்குடியினரோடு மோதிய சண்டையில் பெண்கள் கற்பழிக்கப்பட்டதால் அம்மன் கோபத்தோடு இருக்கிறாள் என ஒரு கதையும் சொல்லப்படுகிறது. அக்குடியின் தலைவன், தமிழ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்  "ஒரு தலைவனிடம் அறம் இல்லாமல் இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், அக்குடியின் பெண்கள் அறம் பற்றி நினைக்காமல் கொண்டாடுவதைக் கண்டு கவலைப்படுகிறேன்" எனச் சொல்கிறான். அன்று அறம் பிறழ்ந்த தன் மக்களை இன்றும் கோபத்துடன் நோக்குகிறாள் கந்தாரம்மன். எனவேதான் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன எனப் பேசுகிறார்கள் ஊர் மக்கள். 



அந்தக் கோவிலை கட்ட நிலம் கொடுத்த அஞ்சலை, கோவிலை சுத்தம் செய்தல், மாலை கட்டுதல் போன்ற சிறுசிறு வேலைகள் செய்கிறாள். கோவில் சார்பாக அவளுக்கு சொற்ப வருவாய் கிடைக்கிறது. அஞ்சலை வேறு சாதி என்பதால் அவளிடம் தள்ளியே பழகுகிறார்கள் கம்பத்து மக்கள். தன் கணவன் சங்கரனை மதித்த ஊர் சனம் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அவளுக்கு கோபம் இல்லை. கணவன் இறந்த பின்னர் ஒரே மகளான அமிர்தவள்ளி காதல் திருமணம் செய்து ஊரை விட்டுப் போகிறாள். அவளுக்கு பிறந்த மகளான கிச்சி என்கிற மீனாட்சி நகரத்தில் படிக்கிறாள். தன் பாட்டி அஞ்சலையின் வீட்டுக்கு வரும் கிச்சிக்கு பார்க்கும் இடமெல்லாம் பசுமை நிறைந்து இருக்கும் கம்பம் பிடித்துப் போகிறது. ஒவ்வொரு விடுமுறைக்கும் தன் அம்மாவை நச்சி நச்சி பாட்டியிடம் கொண்டு வந்து விடச் சொல்கிறாள். அவளுக்கு அங்கே தோழர்களாக லிங்கமும், கோகியும் அமைகிறார்கள். 

நேபாள் மக்களின் தலைவன் சனிலின் ஒரே மகளான அந்தராவுக்கு ஷரியா நிருத்ய நடனம் மேல் ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் அந்த நடனம் ஒரு சாதியைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அந்தராவின் சாதி அந்நடனம் ஆட தடையாக இருக்கிறது. அந்தரா குளத்தில் இறங்கி தாமரைப் பூக்களை எளிதாகப் பறிப்பாள். ஷரியா நடனத்துக்கு தாமரைப் பூக்கள் வேண்டும் என்பதால் அதைக் கொண்டு போய்க் கொடுக்கும் அவள் அப்படியே ஓரமாக நின்று கற்றுக்கொள்கிறாள். ஒருநாள் தனியாக அவள் ஆடிக்கொண்டிருக்கும் பொழுது மேல்சாதி பெண் பார்த்து விட பிரச்சினையாகி அவளை அடித்து விடுகிறார்கள். இந்தப் பிரச்சினையின் காரணமாகவே அந்தராவின் குடும்பம் மலேசியாவுக்கு குடி பெயர்கிறது. அவளைப் பொறுத்தவரை, நடனம் ஆட குரு தேவை. அப்படி குரு அமையவில்லை எனில், நீலத் தாமரையையே குருவாக பாவித்து ஆட தொடங்கலாம். ஆனால் நீலத் தாமரை எல்லா நாட்களிலும், எல்லா குளத்திலும் கிடைக்காது. அதுவும் வருடத்தின் ஒரு முறை மட்டுமே மலரும் நீல மலரை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் அந்தரா. 

கிச்சிக்கும் அந்தராவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. கிச்சிக்கு ஆங்கிலம் தெரியுமென்பதால் அவளுடன் உரையாட முடிகிறது. நீலத் தாமரையை நான் போன வருடம் பார்த்தேன், இந்த வருடம் கண்டிப்பாக  பறித்தே விடுவேன் என்கிறாள் அந்தரா. கிச்சி, எங்கள் கோவிலில் உள்ள அம்மனிடமும் நீலத் தாமரை உண்டு என்கிறாள். அதைக் கேட்டு ஆச்சரியப்படும் அந்தரா, உங்கள் தெய்வத்துக்கு சூட்ட நான் நீலத் தாமரையை கொண்டுவருகிறேன் என்கிறாள். 

குழந்தைகள் நீல மலருக்கு காத்துக் கொண்டிருக்க, பெரிய மனிதர்களான இளைஞர்கள் திட்டம் போடுகிறார்கள். குகனை ஒருமுறை எட்டி உதைத்திருக்கிறாள் அந்தராவின் அம்மா திமிலா. ஒரு நேபாள் பையன் தமிழ் பெண்ணை காதலித்து ஊரை விட்டு போவதால், அதை சாக்காக வைத்து பிரச்சினை பெரிதாகிறது. திமிலா பழைய பகையில் கொல்லப்படுகிறாள். சனில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்று விடலாம் என்றால், நீலத் தாமரையை பறித்து விட்டே நான் இந்த ஊரை விட்டு வருவேன் என்கிறாள் அந்தரா. 

பகை முற்றிக் கொண்டே போய், அந்தராவை சீரழிப்பதிலும், சனிலைக் கொல்வதிலும் முடிகிறது. ஆனால் அந்தரா அவ்விரவில் நீல மலரைக் கொண்டு வருகிறாள் கிச்சிக்கு. எல்லோரும் கோவிலில் கூடியிருக்க, தெய்வமேயான அவள் சொல்கிறாள் 'நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்' என்கிறாள். இரக்கமும் கருணையும் நிரம்பிய தாரா தெய்வம் அவளில் இறங்கியிருக்கிறது. அவள் மலரைக் கொடுத்துவிட்டு ஒரு மின்னல் போல காணாமல் போகிறாள். 

அவளின் நிலையைப் பார்த்த தமிழ் பெண்கள் அதற்கு காரணமான தன் பிள்ளைகளான இளைஞர்களை வெட்டுகிறார்கள். அந்த ரத்தம் அம்மனின் காலடியில் விழ, கிச்சி நீல மலரை சூட, முன்னொரு காலத்தில் அறம் பிறழ்ந்த அம்மக்களின் மீது கோபம் கொண்ட அவளின் கோபம் தணிகிறது. 


Friday, August 2, 2024

காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி

நாடு, ஊர் என்ற பிரிவினை இல்லா காலத்தில் ஒரு பழங்குடி பரந்து விரிந்த காட்டில் ஒரு முளைக் குச்சியை அடித்து, தனது எல்லையை நிறுவி அங்கே தனது குடும்பத்தை நடத்துகிறான். பின்னர் அவன் குலம் பெருக அவ்விடம் ஊராக, கிராமமாக பிரபலம் அடைகிறது. அதன் பின்னர் அரசாங்கமும், பணக்கார மனிதர்களும், வட்டிக்கு விடுபவர்களும் அவர்களின் நிலத்தை அபகரிக்கிறார்கள். தன் நிலமும், அதில் செய்த விவசாயம் மட்டுமே அறிந்த அந்தப் பழங்குடிகள் பின்னர்  என்ன செய்வார்கள்?. 



தங்கள் சுயத்தை மீட்க அதிகாரத்தின் மேல் போருக்குச் சென்ற பழங்குடிகள் பற்றிய உண்மைக் கதை காட்டில் உரிமை. நம் நாட்டை பிரிட்டிஷ் மன்னர்கள் ஆண்ட 18ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்தது. 

முண்டா பழங்குடிகளிடம் இருந்து நிலத்தை அபகரித்துக் கொள்கிறார்கள் ஜமீன்தார்கள், வட்டிக்கு பணம் குடுக்கும் லேவாதேவி ஆட்கள், மற்றும் ஆங்கிலேயர். ஆங்கிலம் தெரியாத முண்டாக்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தாலும் வெல்ல முடிவதில்லை. மேலும் வழக்கு தொடுத்த காரணத்துக்காக மேலும் மேலும்  இன்னல்களையே சந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு, முன்பு தன் நிலமாக இருந்து இப்போது  ஜமீன்தாரின் உடமையாக இருக்கும் நிலத்தில் காலம் முழுதும் கூலி இல்லாமல் வேலை செய்யவேண்டும். வழக்காட மொழியும் தெரியாமல், நீதியும் கிடைக்காமல் வறுமையிலேயே இருக்க வேண்டிய சூழல். தெரியாமல் அவசரத்துக்கு வட்டிக்கு பணம் வாங்கி விட்டால், இருக்கும் சுதந்திரமும் போய் விடுகிறது. 

ஒரு காலத்தில் மூன்று வேலையும் அரிசி சோறு உண்ட முண்டா பழங்குடிகளுக்கு, இப்பொழுது காட்டோ எனப்படும் கஞ்சிதான் உணவு. அரிசி சோறு கிடைப்பதே இல்லை. இந்தச் சூழலில் தான் பீர்ஸா முண்டா பிறக்கிறான். அவன் பிறக்கும்போதே நல்ல சகுனங்கள் தோன்றியது என மக்கள் பேசுகிறார்கள். கிறித்துவ மிஷனில் கல்வி கற்கும் பீர்ஸா முழுதும் முடிக்காமல் அங்கே இருந்து வெளியேறுகிறான். முண்டா குடிகளைப் பற்றி அங்கே இருக்கும் பாதிரியார் தரக்குறைவான வார்த்தைகளை விட வெகுண்டு வெளியேறுகிறான். நன்றாக படிக்கும் மாணவனான பீர்ஸா பின்னர் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. 





"சுதந்திரம் இல்லாமல் இருக்கும் நமக்கு மத கொண்டாட்டமோ, விழாக்களோ எதுவுமே தேவை இல்லை. யாருக்கும் அடிமையாக இல்லாத முண்டாவே நமது கனவு." எனக் கூறும் பீர்ஸா தன்னுடைய புதிய வழிக்கு பீர்ஸாயித் எனப் பெயரிடுகிறான். அவன் இப்பொழுது பகவான் என்று அழைக்கப்படுகிறான். அவனின் ஒரு சொல்லுக்கு அந்த சமூகம் காத்திருக்கிறது. அவனின் தந்தையான சுகானாவுக்கு தன் மகன் பகவான் ஆனதில் சந்தோசம். பகவானின் தந்தையான அவனுக்கு ஊரில் இப்பொழுது பெரிய மரியாதை. ஆனால் தாய் கருமிக்கோ தன் மகன் தன்னை விட்டுப் போய்விடுவான் என அழுகிறாள். சேர்த்து வைத்த செல்வம் போல் இருந்த மகன் கைவிட்டுப் போய் விடுவானோ எனப் புலம்புகிறாள் முண்டாவின் தாய். 

ஒரு டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் முண்டாக்கள் பீர்ஸாவின் தலைமையில் காவல் துறையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கிறார்கள். துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வாகனங்கள் கொண்ட காவல் துறையின் மீது முண்டாக்கள் சிறு அம்புகள் கொண்ட வில்லுடன் போரிடுகிறார்கள். அரசு இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்குகிறது. பீர்ஸா சிலருடன் காட்டுக்குள் சென்று ஒளிகிறான். ஒவ்வொரு கிராமங்கள் தோறும் அவனை சல்லடை போட்டுத் தேடுகிறார்கள். முண்டாக்களின் வீட்டில் உள்ள தானியங்கள், அரிசி, நிலத்தின் பட்டா என எல்லாவற்றையும் அபகரிக்கிறார்கள். 

பீர்ஸா பொறி வைத்து பிடிக்கப்படுகிறான். சிறையில் யாருடனும் பேச முடியாமல் தனிமைச் சிறையில் வைக்கப்படுகிறான். கை கால்களில் கட்டி இருக்கும் இரும்புச் சங்கிலிகளை அந்த சின்ன இடத்தில் அவன் இழுத்து நடக்கும் ஓசையே அவனின் பேச்சு. ஒருநாள் அச்சத்தம் நின்று போய்விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் சிறையில் தண்டிக்கப்பட்டு காலரா பாதித்து இறந்ததாகச் சொல்லி பீர்ஸாவின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்து விடுகிறது ஆங்கிலேய காவல்துறை. விசாரணை கைதியாகவே முண்டாக்களின் பகவான் இறந்து போகிறான். 

பீர்ஸாவுக்கு முன்பே தன்னை இவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தது. தன்னைச் சேர்ந்தவர்களிடம் எதற்கும் பயப்பட வேண்டாம், முண்டா ஒருநாளும் பயப்பட மாட்டான், நான் இல்லையென்றாலும் நமது போராட்டமான உல்குலான் நடக்கும் எனச் சொல்கிறான். 

வரலாற்றில் முண்டா கலகம் எனக் குறிக்கப்படும் இந்நிகழ்ச்சி சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது. இக்கலகத்தை ஆட்சியாளர்கள் அப்பொழுதே அடக்கி விட்டாலும், நாம் ஏன் இப்படி இருக்கிறோம், நமது உரிமைகள் என்ன, சுதந்திரத்தின் அருமை என்ன மக்கள் உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. 

காட்டில் உரிமை கதை, தன் மக்கள் படும் துயரம் தாளாமல் அரசாங்கத்தை நோக்கி போர் தொடுத்த ஒரு மாவீரனின் வரலாறு. 


காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி
சாகித்திய அகாதெமி 
தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி