Wednesday, August 14, 2013

வீட்டுத் தோட்டத்தில்: அவரைக்காய்

ஊரில் இருந்து அப்பா தான் இந்த அவரை விதைகளைக் கொண்டு வந்தார். வழக்கமாக கடைகளில் கிடைக்கும் பட்டை அவரை போல பச்சை நிறத்தில் இல்லாமல் கொஞ்சம் வேறு நிறத்தில் இருக்கும். இந்த அவரையை ஊரில் "ஊர் அவரை" என்று சொல்வார்கள். அந்த அவரையைக் காட்டிலும், சுவையிலும் இதன் சுவை நன்றாக இருக்கும்.

சீசன் நேரங்களில் நன்றாக காய்க்கும். நான்கு ஐந்து மாதங்களுக்கு முந்திய செடியில் நிறைய காய்கள் பிடித்தது. மூன்று  வாரத்திற்கு, இரண்டு கிலோ பக்கம் கிடைத்தது.



இப்போது இருக்கும் இந்தச் செடி, பின்னர் விதை போட்டு வளர்த்தோம். பக்கத்தில் இருக்கும் மருதாணிச் செடி மீது படர்ந்து விட்டது. ஒரு கயிற்றில் அவரைக் கொடியை, மொட்டை மாடியில் இழுத்து விட்டார் அப்பா. மாடியில் நன்றாகப் பரவியது. கிடு கிடுவென வளர்ந்து, கடந்த ஒரு மாதமாக காய்கள் பிடிக்கின்றன. வாரத்துக்கு ஒரு கிலோ அவரை கிடைக்கிறது.





எந்த மருந்தும் அடிக்காமல், நன்றாகவே காய்க்கிறது. எல்லா நாளும் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காத காய் கறிகளை உண்ண முடியாமல் போனாலும், நம் வீடுகளில் கிடைக்கும் காய்களின்  மூலம் சில நாட்களாவது சுத்தமான காய்களை நாம் பெறலாம்.





Tuesday, July 30, 2013

சிறுநுரை போல...

காமந் தாங்குமதி யென்பேர் தாமஃ
தறியுநர் கொல்லோ வனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுளி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே.

(குறுந்தொகை, கல்பொரு சிறுநுரையார்)

***************

பிரிவை தாங்கிக்கொள்
என்பவர்கள்
தாங்கள் அதை
அறிந்தவர்கள்தானா ?
அத்தனை வல்லமை
உடையவர்களா ?
நான் என் தலைவனை காணேன்
என்றால்
துயர் நிரம்பிய நெஞ்சத்துடன்
நீர்விரிவிலிருந்து வந்து
கல்லில் மோதி மறையும்
சிறுநுரை போல்
மெல்ல மெல்ல இல்லாமலாவேன்.

- ஜெயமோகன், சங்க சித்திரங்கள்