Monday, February 11, 2013

தி கோல்ட் ரஷ் (The Gold Rush - Charlie Chaplin)


தங்கத்தைத் தேடி, கடுங் குளிர் என்று பாராமல், பனிப்புயல் அடிக்கும் அந்த மலை மீது மக்கள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். தப்பி பிழைத்து கொஞ்சம் தங்கத்தோடு வந்தால் ராஜ வாழ்வுதான். புயலில் மாட்டி அங்கேயே இறந்து போய்விடக் கூடிய சூழலும் உண்டு. அந்தக் கூட்டத்தில் ஒருவராக நம் சாப்ளின்.



பனி மலை மீது ஒரு கூடாரத்தில் சாப்ளின், பசியைப் பொறுக்காத பயில்வான் மாதிரி இருக்கும் ஜிம் என்பவனுடன் தங்கி இருக்கிறார்.

உண்பதற்கு உணவில்லாமல் காலில் அணிந்திருக்கும் ஷூவை வேகவைத்து அதன் தோலை சாப்பிடும் காட்சியை வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும். ஒரு பெரிய விருந்தைச் சமைப்பது போல அந்த ஷூவைக் கையாள்வதும், அது வெந்த பின்னர் அதை எடுத்து போட இருக்கும் தட்டில் உள்ள சிறு தூசுகளை நன்றாகத் துடைப்பது ஆகட்டும், அதன் பின்னர் அதைச் சாப்பிடும் முறை ஆகட்டும்.. சாப்ளின் என்னும் மகா கலைஞனின் நடிப்பு நிற்கிறது. அதிலும், ஷூவில் இருக்கும் ஆணிகளை, ஏதோ எலும்பில் ஒட்டி இருக்கும் இறைச்சித் துணுக்குகளை சாப்பிடுவது போல, ஆணியில் ஒட்டி இருப்பவற்றை சாப்ளின் உண்ணும் பொழுது, அங்கே சாப்ளினை விட பசித்த ஒருவனே நம் முன்னால் தோன்றுவான். அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் ஜிம்மும், ஷூவை சாப்பிடத் தொடங்குகிறார்.



கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் பசி வாட்டுகிறது. இன்னொரு ஷூவை வேக வைத்து தரட்டுமா எனக் கேட்கிறார். ஜிம் மறுத்து விடுகிறார். பசி மயக்கத்தில் ஜிம்முக்கு, சாப்ளின் ஒரு கோழி போல் தோற்றம் அளிக்கிறார். சாப்ளின் நடந்தால், ஒரு கோழி நடப்பது போலவே இருக்கிறது ஜிம்முக்கு. சாப்ளினை கொல்ல முயல்கிறார் ஜிம். நல்ல வேளையாக, ஒரு கரடி அங்கே வந்து அவர்களுக்கு உணவாகிறது.


ஜிம் மற்றும் சாப்ளின் இருவரும் தங்கத்தைத் தேடி தனித் தனியே பிரிந்து நடக்கிறார்கள். ஜிம்மை இன்னொருவர் அடித்து விடுவதால் , ஞாபக மறதி ஏற்பட்டு, தங்கச் சுரங்கத்திற்கு செல்லும் சரியான பாதை மறந்து விடுகிறது. எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறார் ஜிம்.

ஒரு நகரத்துக்கு வரும் சாப்ளின், அங்கு ஒருவரின் கூடாரத்தில் தங்குகிறார். பிறகு அங்கே ஒரு பெண்ணை எதேச்சையாகச் சந்திப்பவர் அவளைக் காதலிக்கத் தொடங்குகிறார்.  முதலில் அவரை வேடிக்கையாக, விளையாட்டாக நடத்தும் காதலி பின்னர் அவரின் அன்பை புரிந்து கொள்கிறாள்.



அதே நேரத்தில், அந்நகரத்துக்கு வந்து சேரும் ஜிம், சாப்ளினை பார்த்து விடுகிறார். சாப்ளினை இழுத்துக்கொண்டு திரும்பவும் தங்கத்தைத் தேடி பனி மலைக்குள் பயணிக்கிறார்கள். அதே கூடாரத்தில் இருவரும் தங்குகிறார்கள். ஒரு நாள் புயலில் மாட்டிய அவர்களின் கூடாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்கும் அவர்கள் தங்கத்தையும் கண்டடைகிறார்கள்.



இப்பொழுது இருவரும் பெரிய பணக்காரர்கள். கப்பலில் ஊருக்குத் திரும்புகிறார்கள். கப்பலில் அவர்களுக்கு ராஜ மரியாதை. அதே கப்பலில் பயணிக்கும் காதலியை, சாப்ளின் சந்திக்க நேர்கிறது. இன்னொரு அறையை ஒதுக்கச் சொல்லி காதலியையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்கிறார் சாப்ளின்.

ஒரு ஷூவை சாப்பிட்ட பின்னர், அந்தக் காலில் துணிகளைச் சேர்த்துக் கட்டி நடந்து கொண்டிருப்பார் சாப்ளின். இறுதிக் காட்சி வரைக்கும் ஒரு காலில் மட்டும் ஷூவுடன் நடித்திருப்பார். 







*********************

சாப்ளின் படங்களை பற்றி நான் எழுதிய பதிவுகள்:

சிட்டி லைட்ஸ்
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)


Thursday, February 7, 2013

இயற்கையோடு கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்...


திரும்பிய பக்கமெல்லாம் கான்கிரீட் சுவர்களாய் இருக்கும் இந்த மாநகரங்களில் இயற்கையோடு வாழ முடியாதுதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் முடிந்த அளவு நம்மால் இயற்கையோடு ஒன்ற முடியும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் தவிர்த்து அனைவரும் செடி கொடிகள் வளர்க்கலாம். இடம் இல்லை என்பவர்கள் தொட்டியில் வளர்க்கலாம், மொட்டை மாடிகளில் வளர்க்கலாம். தேவை கொஞ்சம் அக்கறையும், ஈடுபாடும்.

சிறிய கிண்ணங்களில் தினமும் தண்ணீர் ஊற்றி வையுங்கள். மொட்டை மாடி கைப்பிடிச் சுவர்களில் வைப்பது நலம். நீங்கள் வைத்த முதல் நாளே பறவைகள் வந்து விடாது. கொஞ்ச நாட்கள் பழகிய பின்னரே, அவைகள் தொடர்ந்து வரும். எங்கள் வீட்டில் ஒன்பது மணி சுமாருக்கு காக்கைகளும், மற்ற பறவைகளும் குளியல் போட்டு சிறகுகளை உதறிக் கொண்டு இருக்கும். ஆனால், தொடர்ந்து நீர் மாற்றி விட வேண்டும், தினமும் கூட மாற்றினால் நல்லது. கொஞ்சம் பெரிய பாத்திரம் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தாங்கும். கலங்கிய நீரை அடிக்கடி மாற்றி விட வேண்டும்.

பறவைகளும், பட்டாம் பூச்சிகளும் உங்கள் வீட்டை வட்டமிட வேண்டுமெனில், செடிகளை நட்டு வையுங்கள். தோட்டம் முழுவதும் குரோட்டேன்ஸ் போன்ற வெளிநாட்டுத் தாவரங்கள் மட்டும் இல்லாமல், கொய்யா, பப்பாளி, சீத்தா என நட்டு வைத்தால் பறவைகள் தேடி வரும்.

இடம் இல்லையெனில், தொட்டிகளில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கீரை வகைகள் என வளர்க்கலாம். இப்போதெல்லாம் கடைகளில், பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை) மொட்டை மாடிகளில் வளர்க்கக் கூடிய வகையில் பைகள் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

வெந்தய விதைகளை தொட்டியில் தூவி விட்டால், இரண்டே வாரத்தில் அருமையான கீரை தயார். அதன் சுவையை அறிந்த பின்னர், நீங்கள் வெந்தயக் கீரையை வெளியே வாங்கவே மாட்டீர்கள்.

எக்காரணம் கொண்டும் பூச்சி மருந்துகளை அடிக்கக் கூடாது. எறும்பு மருந்து கூட போடாமல் இருப்பதே நல்லது. வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

அவரைக்காய், பீர்க்கை, சுண்டை, தண்டுக் கீரை, வாழை..... என வளர்த்து வருகிறோம். இந்த வருட பொங்கலுக்கு எங்கள் வீட்டில் வளர்ந்த மஞ்சள் கிழங்கு தான். மீண்டும் அதே மஞ்சளையே விதைத்தும் விட்டோம். பொங்கலுக்கு கடையில் வாங்கிய கரும்பில் கொஞ்சம் நட்டு வைக்க, அதுவும் குருத்து விட்டு வளர்ந்து வருகிறது. அடுத்த வருடம் கடையில் கரும்பு வாங்கப் போவதில்லை :)

முயன்றால் நம்மாலும் சிறிய அளவில் இயற்கையோடு வாழ முடியும்.

எங்கள் வீட்டில் வளர்ந்தவை:



(சேனைக் கிழங்கு)



(பாகற்காய் )


(புடலை கொடியில் வண்ணத்துப் பூச்சி) 


(நண்பர் யோகன் பாரிஸ் சேனைக் கிழங்கு செடியின் போட்டோவை போடச் சொல்லியிருந்தார். சின்ன கிழங்குகளை இப்பொழுதுதான் விதைத்து உள்ளோம். இன்னும் முளைத்து வரவில்லை. அதனால், இந்தப் படம் மட்டும் இணையத்தில்(tekfor.blogspot.com) இருந்து.

நன்றி நண்பரே. முன்னரே இந்தச் செடியை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்)