Tuesday, July 10, 2012

குறும்படம்: Two solutions for one problem

Abbas Kiarostami - இயக்கிய இந்தக் குறும்படம் பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது.

Nader மற்றும் Dara இருவரும் நண்பர்கள். நடேரிடமிருந்து, டரா ஒரு புத்தகத்தை வாங்கி இருக்கிறான். அதைத் திரும்பிக் கொடுக்கிறான் அன்று. புத்தகத்தின் அட்டை கிழிந்து இருப்பதைப் பார்த்ததும், நடேர் கோபத்தில் டராவின் புத்தகத்தை கிழிக்கிறான். அவன் திருப்பி, புத்தகப் பையை கிழிக்க, அவன் பேனாவை உடைக்க, இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் இருவருக்கும் தலையில் காயம் மற்றும் கண்ணில் காயம் ஏற்படுகிறது. இது ஒரு தீர்வு.

இன்னொரு தீர்வு. புத்தகம் கிழிந்து இருப்பதைப் பார்த்ததும், நடேர் டராவிடம், புத்தகம் கிழிந்து இருப்பதைச் சொல்கிறான். டரா புத்தகத்தை ஒட்டித் தருகிறான். தொடர்ந்து இருவரும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வருவது இரண்டு சிறுவர்கள் என்றாலும், இது பெரியவர்களான நமக்கும் தான். கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கோபம் இல்லாமல் பேசினால் எல்லோருமே நமக்கு நண்பர்களாகவே நீடிப்பார்கள்.

அது போல, எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு தீர்வு மட்டும் தான் என்பதை இந்தப் படம் பொய்யாக்குகிறது. கொஞ்சம் யோசித்தால், நல்ல தீர்வை நாம் கண்டடையலாம். 

Two solutions for one problem

Thursday, July 5, 2012

கர்ண மோட்சம்

எனது சிறு வயதில், ஊரில் திருவிழா நடக்கும் சமயங்களில் 'நல்லதங்காள்' கதையைப் படிக்க ஒரு பெரியவர் வருவார். மைக் வைத்து, ரேடியோ கட்டி, அவருக்கு பெரிய வீட்டில் இருந்து கொண்டு வந்த சேரைப் போட்டு, பூஜை போட்டு என வாரக் கணக்கில் கதை சொல்வார். உடுக்கை அடித்துக் கொண்டே அவர் பாடும் போதும், உடுக்கையை நிறுத்தி விட்டு கதை சொல்லும்போதும், அனேகமாக பெண்கள், நல்லதங்காளை தங்கள் சகோதரி போல நினைத்துக் கொண்டே அழுவார்கள். கீழே போட்டு உட்கார சாக்குப் பையும், போர்த்திக்கொள்ள போர்வையும் கொண்டு போய் விடிய விடிய கதை கேட்டு, அங்கேயே தூங்கி விடிகாலையில் எழுந்து வருவோம்.

கொஞ்ச வருடம் கழித்து, அந்தப் பெரியவரை அழைக்காமல், வீடியோப் படம் என்று ஒரு திருவிழாவன்று சொல்லி, ஆளுக்கு ஐந்து ரூபாய் வாங்கினார்கள். 'திருவிளையாடல்' படத்தில் தொடங்கி, கரகாட்டக்காரன், முதல் மரியாதை என்று தொடர்ந்து மூன்று படம் காட்டினார்கள். ஊரே கைகொட்டி, விடிய விடிய சொக்கிக் கிடந்தது 'டெக்' படத்தின் முன்னால்.

இப்போதெல்லாம் அதுவும் வெறுத்துப்போய், ஆர்கெஸ்ட்ரா, குத்து நடனம் என ரசனை மாறிக் கிடக்கிறது கிராமங்களில்.

ஆமாம், ஒரு காலத்தில் 'நல்லதங்காள்' கதை சொல்லி பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் என்ன ஆனார். அந்தக் கலை என்ன ஆனது. அவரின் வாரிசுகள் அந்தக் கதையைச் சொல்லி இப்பொழுது சம்பாதிக்க முடியுமா... இது ஒரு உதாரணம் மட்டும் தான், இது போல எத்தனை எத்தனை கலைகள் இங்கே மறைந்து கொண்டிருக்கின்றன...

இந்தக் கர்ண மோட்சம் குறும்படம் கூட ஒரு கலையைப் பற்றிதான் பேசுகிறது. அந்தக் கலைஞர்களை நாம் எவ்வாறு மதிக்கிறோம், அந்தக் கலைக்கு நாம் தந்த மரியாதை என்ன?.

கர்ணன் பற்றி சொல்லும்போது;
"மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் வழங்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்"

"கொடுத்துச் சிவந்தன கர்ணனின் கைகள்" என்று சொல்லுவார்கள்.

ஆனால், கர்ணன் வேஷம் போட்ட இந்தக் கலைஞனுக்கு.. ??