Tuesday, March 27, 2012

வலி

காலை நேரம் பதினொரு மணி இருக்கும். கொஞ்சம் வெளி வேலையாக, வெளியே சென்றுவிட்டு தகிக்கும் வெய்யிலில் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிறுபையன் வழியில் லிப்ட் கேட்டான். அவனுக்கு வயது பதினைந்துக்குள் இருக்கும். சட்டையும், அங்கங்கே கருப்பு மையுடன் கூடிய கால்சட்டையும் அணிந்திருந்தான்.

வண்டியை நிறுத்தி "எது வரைக்கும்?" என்றேன்.
"அம்பேத்கார் நகர் வரைக்கும்ணா" என்றான்.
"சரி ஏறு"
"போலாங் ணா" என்றான்.

"ஸ்கூலுக்குப் போறியா"
"இல்லீன்னா"

"அப்புறம் இப்போ எங்க போயிட்டு இருக்க"
"வீட்டுக்கு ணா... அம்மா எறந்திடுச்சு",  எனக்கு பக்கென்றது.

"எப்படி, ஒடம்பு சரியில்லாம இருந்தாங்களா"
"நல்லாதான்ணா இருந்தாங்க... என்னாச்சுன்னு தெரியல"

"இப்போ எங்க போயிட்டு வர்றே"
"வேலைக்கு ணா"

"என்ன வேலை"
"லேத் ணா"

"நீ ஒரே பையனா"
"இல்லன்னா.. தங்கச்சி ஒண்ணு இருக்குது"

"வீட்ல வேற யாரு இருக்கா..."
"பாட்டி இருக்குது"

"அப்பாவோட அம்மாவா"
"அம்மாவோட அம்மா ணா"

"ம்ம்.. அப்பா"
"அப்பா இல்லண்ணா"

"இங்கதாண்ணா... நிறுத்துங்க.. எறங்கிக்கிறேன்" . வண்டியை விட்டு இறங்கியதும், "தேங்க்ஸ் ணா.." என்றான். "பார்த்துப் போப்பா" என்பதைக் கூட கேட்க நேரமில்லாமல், சாலையைக் கடந்து சிமென்ட் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தான்.

அங்கே இருந்து நானும் நகர்ந்தேன். ஏனோ தகிக்கும் வெயிலை விட.. மனது கனமாக இருந்தது. அவனுக்காக கடவுளிடம் வேண்டுவதை விட, வேறொன்றையும் செல்ல இயலவில்லை.

Thursday, March 22, 2012

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ. முத்துலிங்கம்

வாழ்க்கை எங்கே ஆரம்பித்து எப்படி முடியும் என்பதை யார் அறிவார். ஆனாலும், ஒவ்வொரு கணத்தையும் நேசித்து வாழ துறவிகளால் மட்டுமே முடிகிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கூட அப்படிதான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனிதர் என்னமாய் வாழ்ந்து பார்த்து, அதை நினைவில் வைத்துக்கொண்டு எவ்வளவு அற்புதமாய் எழுதியிருக்கிறார்.


அவர் இந்த நாவலைப் புனைவு என்று சொன்னாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இது புனைவு இல்லை, நடந்தது என்றே நினைக்க வைக்கிறது அவரின் எழுத்து.

எத்தனை நாடுகள், எத்தனை வகைப்பட்ட மனிதர்கள், அவர்களின் பழக்கங்கள் என உலகத்தை சுற்றிக்காட்டுகிறது புத்தகம். அவரே சொல்வது போல, நாவலை எங்கே இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அவர் சென்ற ஊருக்கெல்லாம் நம்மையும் கூடவே கூட்டிக்கொண்டு போகிறார்.

அவரது தளத்தில் இருக்கிற இந்தப் பேட்டி முழுவதும் இந்த நாவலைப் பற்றியே இருக்கிறது.

அ. முத்துலிங்கம் - நேர்காணல்

அந்த நேர்காணலில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "பல சம்பவங்கள் என் மன அடுக்கின் அடியில் போய் கிடக்கும். அந்தச் சம்பவம் நடந்தபோது அது பெரிதாகத் தோன்றியிராது. வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சியின் போது அந்த ஞாபகம் திடீரென ஒரு மின்னல்போல கிளம்பி வெளியே வரும். மணலிலே புதைத்து வைத்த ஆமை முட்டை  சூரியனின் வெப்பம் கிடைக்கும் சரியான ஒரு தருணத்திற்கு காத்திருப்பதுபோல ஏதோ ஒரு கணத்தில் இலக்கிய சிருட்டி நடக்கும். ஒரு சிறு தூண்டலில் இது நிகழும். "

அனைத்துப் பக்கங்களிலுமே முத்திரை வரிகள் போல சில வரிகள் இருக்கின்றன. படித்துப் பாருங்களேன். முக்கியமாக சில இடங்களில், நமக்கு இதே போல நடந்திருக்கிறதே என்று நினைக்க வைக்கிறார்.  விமான நிலையங்களில் சப்பாத்துக்களைத் தூக்கிக் கொண்டு பயணிப்பதைப் பற்றிக் கூறுகிறார், அப்போது தான் எனக்கும் நினைவு வந்தது நாம் கூட, பெல்ட், பேனா, பர்ஸ் என்று அனைத்தையும் தூக்கி கூடையில் வைத்து நானும் நடந்திருக்கிறேன் என்பதை. யாருக்காக, எதற்காக இடுப்பில் ஒரு பெல்ட்டை கூட போட முடியாமல், ஏதோ ஒரு நாட்டில், இப்படி கையை மேலே தூக்கி கொண்டு போக நான் என்ன தப்பு செய்தேன்?.

சில வேளைகளில் இலக்கியம் எனபது, நமது வாழ்க்கையையும் சேர்த்தே விவரித்து விடுகிறது.