Wednesday, April 20, 2011

எனது டைரியிலிருந்து..

ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை டைரியில் எழுதி வைத்திருந்தேன். அதிலும் ஆனந்த விகடனில் வரும் கவிதைகள் தான் அதிகம் இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்;


இருந்தவை.. தொலைந்தவை..
- கல்யாண்ஜி (ஆனந்த விகடன்)

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்துத் திரும்புமுன்
அணைந்து விடுகிறது
முதல் விளக்குகளுள் ஒன்று.
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைந்த பிறகுதான்
அதைச் சற்று
அதிகம் பார்க்கிறோம்.
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தைவிட
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.



********************************

வலி
- ஜி.ஆர்.விஜய் (ஆனந்த விகடன்)

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்.

********************************

வானம் மட்டும் இருக்கிறது
- பா.சத்தியமோகன்
(ஆ.வி. கற்றதும் பெற்றதும் பகுதியில் - சுஜாதா குறிப்பிட்டது)

ஆமாம் ஆமாம்
நீ பேசும் ஒவ்வொன்றும்
வரிக்கு வரி நிஜம்
முற்றுப்புள்ளி உள்ளிட்ட
அனைத்தும் ஏற்கத் தயார்
அனைத்துக்கும் ஆமாம்.
சங்கிலியால் கட்டப்பட்டது
யானையென்றாலே
தப்புதல் கடினமாச்சே
சங்கிலியால் கட்டுண்ட டம்ளர்
தப்புமோ கூறு?















மேலே உள்ள யானைப் படம் மட்டும் இணையத்திலிருந்து.. நன்றி.

Monday, April 18, 2011

டிப்ஸ்















உணவகத்தில்
உண்டு முடித்ததும்
பில்லைக் கொண்டுவந்து வைத்து
பணத்துக்கு காத்திருந்தான் சர்வர்

'பணம் நானே கொடுத்துக்கிறேன்'
என எழுந்து
திரும்பி நடந்த என் முதுகில்
வழிந்து கொண்டிருக்கிறது
முன்பின் தெரியாத
அவனின் வன்மப் பார்வையும், கோபமும்.

படம்: இணையத்திலிருந்து, நன்றி.