
இரவு எட்டு மணிக்கு
மாநகரப் பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்த
எனை நோக்கி வந்த
ஒரு வயதான பாட்டியுடன்
கூடவே ஒரு சிறுவன்
'தம்பி' என்றார் பாட்டி
'ம்ம்' என்றேன் நான்
'தம்பி, வேல கெடைக்குமுன்னு
ஊர்ல இருந்து கெளம்பி வந்தோம்
ஒரு வாரமா வேல இல்ல
இது எம் புள்ளையோட பையன்
புள்ளைக்கு ஒடம்பு சரியில்ல
கொஞ்சம் காசு குடு சாமி'
அந்தப் பையனிடம்
'என்ன படிக்கிறே, எந்த ஊரு'
எனக் கேட்க, எல்லாவற்றுக்கும்
தலையை ஆட்டிக் கொண்டே இருந்தான்.
இருவரையும் பக்கத்தில் இருந்த
கடைக்கு கூட்டிப் போய்
என்ன வேணும் எனக் கேட்க
'ஊட்டுக்கு கட்டிட்டுப் போயிடுறோம் ' என்ற பாட்டி
சரியென்று ஆன தொகையை
கொடுத்துவிட்டு நகரும்போது
'ரொம்ப நன்றியப்பா' எனச் சொன்னார்
இரண்டு மூன்று நாள் கழித்து
இரண்டு பேருந்து நிறுத்தங்கள் தாண்டி
அதே பையனும் பாட்டியும்
இன்னொருவரிடம் கை நீட்டி
கேட்டுக் கொண்டிருந்தனர்..
இந்த பெரும் பசியை
பிச்சை எடுத்தேனும்
அடக்க வேண்டியிருக்கிறது.
படம்: இணையத்தில் இருந்து, நன்றி.