Wednesday, April 6, 2011

பசி













இரவு எட்டு மணிக்கு
மாநகரப் பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்த
எனை நோக்கி வந்த
ஒரு வயதான பாட்டியுடன்
கூடவே ஒரு சிறுவன்

'தம்பி' என்றார் பாட்டி
'ம்ம்' என்றேன் நான்
'தம்பி, வேல கெடைக்குமுன்னு
ஊர்ல இருந்து கெளம்பி வந்தோம்
ஒரு வாரமா வேல இல்ல
இது எம் புள்ளையோட பையன்
புள்ளைக்கு ஒடம்பு சரியில்ல
கொஞ்சம் காசு குடு சாமி'

அந்தப் பையனிடம்
'என்ன படிக்கிறே, எந்த ஊரு'
எனக் கேட்க, எல்லாவற்றுக்கும்
தலையை ஆட்டிக் கொண்டே இருந்தான்.

இருவரையும் பக்கத்தில் இருந்த
கடைக்கு கூட்டிப் போய்
என்ன வேணும் எனக் கேட்க
'ஊட்டுக்கு கட்டிட்டுப் போயிடுறோம் ' என்ற பாட்டி
சரியென்று ஆன தொகையை
கொடுத்துவிட்டு நகரும்போது
'ரொம்ப நன்றியப்பா' எனச் சொன்னார்

இரண்டு மூன்று நாள் கழித்து
இரண்டு பேருந்து நிறுத்தங்கள் தாண்டி
அதே பையனும் பாட்டியும்
இன்னொருவரிடம் கை நீட்டி
கேட்டுக் கொண்டிருந்தனர்..

இந்த பெரும் பசியை
பிச்சை எடுத்தேனும்
அடக்க வேண்டியிருக்கிறது.

படம்: இணையத்தில் இருந்து, நன்றி.



Friday, April 1, 2011

ஒரு கோப்பை தேநீர்

ஜென்னில் ஒரு கோப்பை தேநீர் அருந்துவது என்பது ஒரு தவம் போல். ஒரு கப் தேநீரை கையில் எடுத்துக் கொள்வது முதல், துளித் துளியாக ரசித்து விழுங்கி, காலி கோப்பையை கீழே வைப்பது வரை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை ஜென் குருக்கள் கவனிப்பார்கள். ஒரு கோப்பை தேநீரை இவ்வளவு ரசித்துக் குடிக்க முடிந்தால், இந்த வாழ்க்கையை அவர்கள் எவ்வளவு ரசிப்பார்கள்.



கிராமங்களில் இன்றும் 'காப்பி தண்ணி குடிச்சிட்டு போறது..' என்று சொல்வார்கள். நண்பன் ஒருவனுக்கு காலை எழுந்தவுடன் தேநீர் கண்டிப்பாக வேண்டும். எங்கேனும் இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் கடைகளில் ஆர்டர் பண்ணுவது தேநீர் தான்.

இப்படி தேநீர் பல இடங்களில் நம் கூடவே இருந்தாலும், ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தக் கவிதை ஒரு கணம் பிரமிக்க வைத்தது.

தேநீர் வேளை

காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.

சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.

பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.

எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!


விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)


நன்றி: ஆனந்த விகடன், மேலே உள்ள படம் இணையத்தில் இருந்து.