கவிதை போல் அமைந்த வரிகள் ப. சிங்காரம் அவர்கள் எழுதியுள்ள 'புயலிலே ஒரு தோணி' நாவலில் விரவிக் கிடக்கின்றன. வரிகளை மடக்கி அதைக் கவிதை என வாசிக்கும் சூழலில், கவிதை போன்ற வரிகளை பத்தியாக எழுதியுள்ளார் ப.சிங்காரம்.
இதோ ஒரு சில வரிகள்; (இந்த வரிகள் நாவலில் பத்தியாகவே இருக்கிறது. புத்தகத்தின் முன் அட்டையில் இவ்வாறு அச்சிட்டுள்ளார்கள்.)
காரளகப் பெண் சிகாமணியே!
நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி.
பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும்,
பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி,
இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி,
ஒட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய்
அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்;
அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்.
கன்னற்சுவை மொழி மின்னிடையாய் !
உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து,
உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று,
உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று,
உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன்.
ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும்
சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன் !
கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்!
எனினும், பெண் மயிலே,
நான் தன்னந்தனியன்.
என் காதலீ !
மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ !
அன்னையற்ற எனக்குத் தாயாகி
மடியிற் கிடத்தி தாலாட்டவல்லையோ !
தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக்
கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ !
தங்கையற்ற என்னைத்
தொடர்ந்தோடிப் பற்றி சிணுங்கி நச்சரியாயோ...
============================================
எனது முந்தைய பதிவொன்று நாவலைப் பற்றி :
தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி============================================
நாவல் : புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
பதிப்பு : தமிழினி
விலை : ரூ. 180