Friday, September 10, 2010

விழுதுகள் - நனவாகியதொரு கனவு



இரண்டு குழந்தைகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால் வேறு வேறு வீடுகள். வேறு வேறு சூழ்நிலைகள். ஒரு குழந்தைக்கு அரசுப் பள்ளி. இன்னொரு குழந்தைக்கு தனியார் பள்ளி. தனியார் பள்ளிகளில் படிக்கும் எல்லாக் குழந்தைகளும் பிரகாசிப்பதில்லை. ஆனாலும் அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது நிறைய வேறுபாடுகள். கல்வியின் தரம், ஆசிரியர்களின் கடமை என நிறைய.

அதையெல்லாம் தாண்டி அரசுப் பள்ளிகளில் படித்தாலும் ஒரு சில மாணவர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். மாநில அளவில் மதிப்பெண்களை அள்ளுகிறார்கள். ஆனால் பல மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி தான். தொடக்கக் கல்வியிலேயே சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

நான் மற்றும் எனது நண்பர்கள் எல்லாரும் அரசுப் பள்ளியில்தான் படித்தோம். எப்படியோ முட்டி மோதி மேலே வந்து விட்டோம். ஆனால் படிப்பை பாதியிலேயே விட்ட என் சக தோழர்கள் இப்பொழுது அதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். பெயில் ஆனால், பள்ளி பிடிக்கவில்லை, வேலைக்கு போகச் சொல்கிறார்கள் எனப் பலர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.இதற்கு காரணத்தை நாம் உற்று நோக்கினால் அவர்களுக்கு பெரும்பாலும் படிப்பை பிடிப்பதில்லை.

எனது நண்பன் கமலகண்ணன், நான் சென்னையில் தங்கியிருந்தோம். அப்பொழுது கமல் சமூக சேவையில் டிப்ளமோ படித்துக் கொண்டிருந்தான். ரொம்ப நாள் பேசி ஒரு அமைப்பை உருவாக்கினால் என்ன என நினைத்து, இன்னொரு நண்பனான சாரதியைச் சேர்த்து மூவருமாக 'விழுதுகள்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம்.

அப்படித்தான் நண்பர்கள் இணைந்து விழுதுகள்(http://www.vizhudugal.org) என்ற அமைப்பை எங்களின் ஊரான ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைந்து விட்டன. எங்கள் விழுதுகள் அமைப்பின் சார்பாக, கிராம புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தினமும் பாடம் எடுத்து வருகின்றோம். பள்ளி பாடங்கள் தவிர, Value based education எனப்படும் தனி திறமைகளை வளர்த்தல், நல்ல பழக்க வழக்கங்களை சொல்லித் தருதல், சேவை மனப்பான்மையை வளர்த்தல், வாரந்தோறும் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்தல் என பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு கிராமப் பகுதிகளிலும் ஒரு ஆசிரியரை நியமித்து, ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது அரசுப் பள்ளியிலோ இந்த மையங்களை நடத்தி வருகின்றோம். இது தவிரவும் கண் சிகிச்சை முகாம் நடத்துதல், மரக் கன்றுகள் நட்டு வைத்தல், கணிப்பொறி பயிற்சி அளித்தல் என பிற துறைகளிலும் பங்காற்றி வருகின்றோம்.

இப்பொழுது நாங்கள் ஏழு மையங்களில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஏழு மையங்களுக்கும் உண்டான செலவுகளை எங்களின் ஒவ்வொரு நண்பரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் விழுதுகளை வெற்றிகரமாக நடத்த முடியாது. ஒவ்வொருவர் பெயரையும் சொன்னால் நீண்டு விடும். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

பதிவராக எனக்கு அறிமுகமாகி எங்களில் ஒருவராகி விட்ட திரு.பிரகாஷ் (சாமக்கோடங்கி ...) எல்லா விதத்திலும் எங்களுக்கு உதவியாக இருக்கிறார். பல தடவை எங்கள் மையங்களுக்கு வந்து குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுத்திருக்கிறார். அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஏழு மையங்கள்: காந்தி நகர், நேரு நகர், ஜெ.ஜெ. நகர், மாரம்பளையம், மாதம்பாளையம், கள்ளிப்பாளையம், நல்லகாளிபாளையம்.

வரும் ஞாயிறு அன்று எங்கள் நண்பன் கமலுக்கு திருமணம். அடுத்த நாள் திங்கள் அன்று வரவேற்பு அன்னூர், சிவன் கோவிலில் நடக்கிறது. அனைவரையும் வந்திருந்து வாழ்த்துங்கள் என விழுதுகள் சார்பாக வரவேற்கிறோம்.

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக;

(இந்தப் புன்னகைதான் எங்களுக்கு உரம்)


(ஜெ.ஜெ. நகர் தொடக்க விழாவில்)

(ஒரு மையத்தில்..)


(நேரு நகர் மையத்தில்)

(நேரு நகர் மையத்தில்)

(ஜெ.ஜெ. நகர் மையத்தில்)



(ஜெ.ஜெ. நகர் மையத்தில்)


(கடந்த சுதந்திர தின விழாவன்று)

Wednesday, September 8, 2010

தி பைசைக்கிள் தீப் (The Bicycle Thief)


வறுமை கொடிது என்று பாடுகிறார் அவ்வைப் பாட்டி. அதனினும் கொடிது இளமையில் வறுமை என்கிறார் மீண்டும். ஒரு நல்ல அப்பா, அம்மாவாக பல பேர் தன் பிள்ளைகளுக்கு எந்தக் கவலையும் இருக்கக் கூடாது எனத்தான் நினைப்பார்கள். தான் பட்ட துயரங்கள் தன் பிள்ளைகள் படக் கூடாது என எண்ணுவார்கள். சினிமா பாரடைசோ, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களில் வரும் பெற்றோர்கள் எல்லாரும் அதையே படத்தில் பிரதிபலிப்பார்கள். அந்தப் படங்களிலும் சிறு வயது வாழ்க்கையை அழகாக காட்டி இருப்பார்கள்.

'தி பைசைக்கிள் தீப்' படம் அப்படிப்பட்ட ஒரு அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் கொஞ்ச நாள் வாழ்க்கையை நாம் பார்க்க முடியும். வேலை இல்லாத அந்தோனியோ ரிச்சி, வேலை தேடிக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். பல பேர் ஓரிடத்தில் வேலைக்கு காத்திருக்க, ஒரு அதிகாரி அந்தோனியோ பேரைக் கூப்பிட்டு 'போஸ்டர் ஒட்டும் வேலை இருக்கிறது. அதற்கு சைக்கிள் வேண்டும்' என்கிறார். ஆனால் அவனோ 'என்னிடம் சைக்கிள் இல்லை' என்கிறான். 'அப்படியானால் அந்த வேலை உனக்கு கிடைக்காது' என்கிறார் அதிகாரி. சுற்றி இருப்பவர்கள் 'என்னிடம் சைக்கிள் இருக்கிறது. எனக்கு அந்த வேலையைக் கொடுங்கள்' எனக் கேட்க, சுதாரித்த அந்தோனியோ 'இல்லை. என்னிடம் சைக்கிள் இருக்கிறது' என்று பொய் சொல்லி அந்த உத்தரவை வாங்கிக் கொள்கிறான். நாளைக் காலையில் அவன் சைக்கிளோடு அந்த உத்தரவில் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றால் அவனை வேலையில் அமர்த்துவார்கள்.

தன்னிடம் சைக்கிள் இல்லாததையும், இருந்தால் அந்த வேலையில் சேர்ந்து விடலாம் என்று வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் புலம்புகிறான் அந்தோனியோ. மனைவி யோசித்து பழைய போர்வைகளை விற்று விடலாம் எனக் கூற, அவைகளை விற்று புது சைக்கிள் ஒன்றை வாங்குகிறார்கள். சந்தோசமாக வீட்டுக்கு சைக்கிளோடு வருகிறார்கள். அந்தோனியோவின் பையன் ப்ருனோ சைக்கிளை ஆசையாக தொட்டுப் பார்க்கிறான். இன்னொரு குழந்தை கைக்குழந்தை.



காலையில் சைக்கிளோடு தான் வேலையில் சேர வேண்டிய இடத்திற்கு போகிறான். அங்கே அவனை அடுத்த நாள் காலையில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். அடுத்த நாள் ப்ருனோவைக் கொண்டு போய் அவன் வேலை செய்யும் இடத்தில் விட்டு விட்டு அலுவலகம் செல்கிறான். அங்கே தன் சக பணியாளர்களுடன் சுவர் ஏற ஏணி, பசை மற்றும் போஸ்டரோடு கிளம்புகிறான் அந்தோனியோ.

ஒருவன் எப்படி போஸ்டரை ஒட்டுவது எனச் சொல்லிவிட்டுக் கிளம்ப தன் சைக்கிளோடு தனியாக போஸ்டர் ஒட்டக் கிளம்புகிறான். ஒரு இடத்தில், ஏணியில் ஏறி போஸ்டரை ஒட்டிக் கொண்டிருக்கும்போது ஒரு திருடன் அவன் சைக்கிளை திருடிக் கொண்டு போகிறான். அவன் பினனால் ஓடியும் அந்தோனியோவால் அவனைப் பிடிக்க முடியாமல் திரும்பி வருகிறான். போலீசில் தன் புகாரை பதிவு செய்துவிட்டு தன் சைக்கிள் எப்போ கிடைக்கும் எனக் கேட்க 'நாங்கள் தேட முடியாது. எங்காவது உன் சைக்கிளைப் பார்த்தால் போலீசைக் கூப்பிடு. உன் புகாரின் பேரில் அதை நாங்கள் பெற்றுத் தருகிறோம்' எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

வீட்டுக்கு திரும்பும் அவன், ப்ருனோவைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டுக்கு செல்கிறான். போகும் வழியில் ப்ருனோ 'சைக்கிள் எங்கே?' எனக் கேட்கிறான். அவனை வீட்டில் விட்டு விட்டு தன் நண்பனைப் பார்க்கச் செல்கிறான். அவனிடம் கூற காலையில் தேடிப் பார்க்கலாம் எனக் கூறுகிறான் நண்பன். அங்கே வரும் அவன் மனைவியை நண்பன் ஆறுதல் சொல்லி அனுப்புகிறான்.



ப்ருனோ, அந்தோனியோ, அவன் நண்பர்கள் என அனைவரும், அடுத்த நாள் காலையில் எங்கு தேடியும் சைக்கிள் கிடைக்கவில்லை. அவன் நண்பர்கள் கிளம்ப ப்ருனோவும், அந்தோனியோவும் தனியாக சைக்கிளைத் தேடிக் கிளம்புகிறார்கள். அப்பொழுது அந்த சைக்கிள் திருடனை அவன் ஒரு கிழவனுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அந்த திருடன் சைக்கிளில் கிளம்ப பினனால் ஓடியும் அவனை தவற விட்டு விடுகிறான் அந்தோனியோ.

திரும்பி வந்து அந்த கிழவனைத் தேடி வந்தால் அவனும் ஒன்றும் சொல்ல மறுக்க அந்தக் கிழவனைப் பின் தொடர்கிறார்கள் இருவரும். அந்தக் கிழவன் ஒரு சர்ச்சுக்குச் செல்ல இருவரும் அங்கே போகிறார்கள். அங்கே பிரார்த்தனை முடிந்து உணவருந்த உணவுகளும், சூப் வகைகளும் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிழவன் அந்தத் திருடன் இருக்கும் இடத்தைச் சொல்லிவிட்டு தப்பிவிடுகிறான். கிழவனைத் தேடி இருவரும் வெளியே வர, ப்ருனோ 'ஏன் நாம் சூப் சாப்பிடக் கூடாது?' எனக் கேட்க, அந்தோனியோ அவனைக் கோபத்தில் அறைந்து விடுகிறான். ப்ருனோ அழுது கொண்டே 'அம்மாவிடம் சொல்லுறேன்' எனத் தேம்பி அழுகிறான். ப்ருனோவை ஒரு ஆற்றுப் பாலத்தின் அடியில் நிற்கச் சொல்லிவிட்டு அந்தக் கிழவனைத் தேடிப் போகிறான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு சிறுவன் ஆற்றில் விழுந்து விட்டதாக கூக்குரல்கள் கேட்க திரும்பி வரும் அந்தோனியோ அது ப்ருனோ இல்லை என அறிந்து சந்தோசப்படுகிறான்.

ப்ருனோவை அழைத்துக் கொண்டு ஒரு உணவு விடுதிக்குச் சென்று அவன் விரும்பியதை வாங்கித் தருகிறான் அந்தோனியோ. சாப்பிட்டு விட்டு அந்த திருடன் போவதைப் பார்த்து அவன் பினனால் ஓடுகிறார்கள் இருவரும். அவன் இருக்கும் இடத்தில் பலர் கூடி 'இவன் நல்லவன், நேர்மையானவன்' எனச் சொல்லி, அந்தோனியோவை அடிக்க வருகிறார்கள். ப்ருனோ போலீசைக் கூட்டி வர, போலிசும் வேறு வழியின்றி அந்தத் திருடனை பிடிக்க சரியான காரணங்கள் கிடைக்காமல் அந்தோனியோவை திரும்ப போகச் சொல்கிறான்.



ஏமாற்றமாக திரும்பி வரும் இருவரும் மக்கள் நிறைந்த ஒரு சாலையில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஏதோ சிந்தனையில் இருக்கும் அந்தோனியோ பக்கத்துக்கு தெருவில், யாருமில்லாமல் தனியாக நின்று கொண்டிருக்கும் சைக்கிளை உற்று நோக்குகிறான். ஒரு முடிவுக்கு வந்தவனாக ப்ருனோவிடம் காசைக் கொடுத்து பஸ்ஸில் ஏறி ஒரு இடத்திற்கு போ, நான் அங்கு வருகிறேன் எனக் கூறி விட்டு அந்த சைக்கிளை நோக்கிச் செல்கிறான். பஸ்ஸில் ஏறப் போகும் ப்ருனோ கூட்டம் காரணமாக ஏற முடியாமல் அங்கேயே நிற்கிறான்.

சைக்கிள் நிற்கும் இடத்துக்கு போன அந்தோனியோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக மிதிக்கிறான். ஆனால் கூட்டம் நிறைந்த சாலையில் அவனைப் பல பேர் துரத்த பிடிபட்டு விடுகிறான் அந்தோனியோ. கூட்டத்தினர் அவனைப் போலீசில் ஒப்படைத்து விடலாம் எனக் கூறுகிறார்கள். அப்பொழுது பஸ்ஸில் ஏறாத ப்ருனோ அங்கே வர, சின்ன பையனைப் பார்த்த சைக்கிள் உரிமையாளன் 'வேண்டாம். அவனை விட்டுவிடுங்கள்' எனக் கூறுகிறான். கூட்டம் கலைய, அழுகின்ற கண்களுடன் இருவரும் எதுவும் பேசாமல் தங்கள் கைகளைப் பிணைத்துக்கொண்டு சாலையில் நடக்க ஆரம்பிக்கிறார்கள். படம் முடிவுக்கு வருகிறது.



அந்தோனியோ அடுத்து எந்த வேலைக்குப் போயிருப்பான் ?. அவர்கள் நினைத்த படி வாழ்க்கையை வாழ முடிந்ததா ?. ப்ருனோ என்ன செய்திருப்பான் ?. புதிய சைக்கிள் வாங்கி இருப்பார்களா?. நிறையக் கேள்விகள். பதில்தான் இல்லை. பதில் தெரியாத கேள்விகளில் தானே வாழ்கையின் ரகசியம் உள்ளது.