Monday, August 9, 2010

காம்பஸ் ஊசியும்.. தோஷ நிவர்த்தியும்...

குழந்தையை கிழக்கு முகமாக உட்கார வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி, பின்வரும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, பூசைக்கு வைத்த பொருட்கள் அனைத்தையும் கிணற்றில் போட வேண்டும். 'ஓம் ஐயும் கிலியும் சவ்வும், சகல தோஷம் நிவர்த்தி...'

இது, சகல தோஷ நிவர்த்தி என்ற புத்தகத்தில் காணப்படும் வரிகள். எங்கள் கிராமத்தில் இதை ஏட்டுப் புத்தகம் என்பார்கள். அந்தப் புத்தகத்தின் விலை இரண்டு ரூபாயாக இருந்தது. மீறிப் போனால் ஒரு இருபது பக்கமிருக்கும். குழந்தை பிறந்த 1-நாள் 1-மாதம் 1-வருடம், 2-நாள் 2-மாதம் 2-வருடம் என பன்னிரண்டு வருடங்களுக்கு, அந்த வருடங்களுக்குரிய தேவதைகளுடன், சக்கரங்களும் மூல மந்திரங்களும் இருக்கும்.

எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் தலையணைக்கு அடியில் வைத்து விடுவார்கள். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் கட்டி விடுவார்கள். இந்த மந்திரங்களை ஒரு பனையோலையில் எழுதி, நூல் போட்டு இறுக்கி கட்டி, மஞ்சள் பூசி கையிலும் கட்டிருவாங்க. ஊரில் ரெண்டு, மூன்று பேர் இந்த ஏடுகளை எழுதிக் கொடுப்பார்கள் மற்றவர்களுக்கு. அதற்கு காணிக்கையும் வாங்கிக் கொள்வார்கள்.

எங்கப்பாவும் ஏடு எழுதிக் கொடுப்பார். ஆனால் காசு வாங்க மாட்டார். எனக்கு நன்றாக எழுத வந்தபொழுது, நான் வீட்டிலிருந்தால் என்னை எழுதச் சொல்லுவார். அப்பா கோனூசியில் எழுதுவார். எனக்கு அதில் எழுதினால், எழுத்தே வராது. முனை மழுங்கிப்போய் அதைப் பார்த்தாலே எரிச்சலாக வரும். அப்பா "உன்னோட காம்பஸ் ஊசியில் எழுது" என்பார். கணக்கு பரிட்சையில் மார்க் வருதோ, இல்லியோ இந்த காமப்ஸ் ஊசி ஏடு எழுதவும் பயன்பட்டது. கோனூசியை விட இதில் என்னால் நன்றாக எழுத முடிந்தது.

சிலர் வரும்போதே எங்காவது பனை மரத்தில் இருந்து குருத்தை வெட்டிக் கொண்டுவருவார்கள். ஒரு ஓலை போதும் ஏடு எழுத, ஆனால் ஒரு சிலர் ஊருக்கே ஏடு எழுதுமளவுக்கு வெட்டிக் கொண்டுவருவார்கள். இன்னும் ஒரு சிலரோ, சும்மாவே வந்து "ஏடு எழுதிக் குடுங்க" என்பார்கள். எங்கள் வீட்டின் பினால் ஒரு சின்ன பனைமரம் இருந்தது. சுற்றிலும் வெட்டபடாத பழைய ஓலைகள் காய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். ஏடு எழுதவதற்கு எப்பவுமே, குருத்தோலை தான் தேவை. முற்றியவை என்றால் எழுதும்போது உடைந்து விடும். எட்டிப் பிடித்து குருத்தோலை அறுக்க வேண்டும், கொஞ்சம் தவறினால் காய்ந்த ஓலைகளின் கருக்குகள் பதம் பார்த்து விடும்.

ஓலையை சரியாக கத்தரித்து, நடு நரம்பை நீக்கி விட்டு புத்தகத்தை பார்த்து எழுத ஆரம்பிப்பேன். "எழுதறப்போ மனசுக்குள்ளயே சொல்லிட்டு எழுதுடா" என்பார் அப்பா. ஒரு சிலர் மத்தியானமே வந்து ஏடு எழுதிக் குடுங்க என்பார்கள். சாயந்திரமா வந்து வாங்கிக்குங்க என்று அனுப்பிவிடுவார் அப்பா. சாயந்திரம் திரும்ப வருபவர்கள் "ஏடு கேட்டு மத்தியானம் வந்ததுக்கபுறம் புள்ளைக்கு கொஞ்சம் காய்ச்சல் கொறைஞ்ச மாதிரி தெரியுது" என்பார்கள். இது ஏட்டுக் குணம் என்பார்கள் எங்கள் ஊரில். என்ன நம்பிக்கையோ என நினைத்துக் கொள்வேன்.

நான் பள்ளியிலிருந்து வருவதற்கு நேரமானால், நான் வரும்வரை காத்திருப்பார்கள் ஏடு எழுத வந்தவர்கள். அப்பாவும், 'அவன் வரட்டும்' என்று சொல்லிவிடுவார். நான் எழுதிக் கொடுத்த பிறகு அவர் நூலில் கட்டிக் கொடுத்துவிடுவார். நான் ஒரு தடவை, ஏட்டைக் கட்ட முயன்று கடைசியில் நூலை இறுக்கினால், நூல் தனியாகவும், ஏடு தனியாகவும் கையில் வந்து விட்டது. ஓலையை நன்றாக இறுக்கிக் கட்ட வேண்டும், கடைசிவரை எனக்கு வரவே இல்லை.

முதன்முறையாக ஏடு எழுத வருபவர்கள், எப்படிக் கட்டுவது எனக் கேட்பார்கள். "கொழந்தையை கிழக்கு முகமா உக்கார வச்சு, இந்த ஏட்டை மஞ்சத் தூளில் பூசி, சாம்பிராணி காட்டி.. "

"சாம்பிராணி இல்லிங்களே.. "

"சாம்பிராணி இல்லைன்னா, ரெண்டு ஊது வத்தி காட்டி, கழுத்திலோ கையிலோ கட்டிரு"

"சரிங்க.. காணிக்கை"

"அதெல்லாம் இங்க வாங்கிறதில்ல"

"காணிக்க வாங்கினத்தான் பலிக்கும்னு சொன்னாங்க"

"இங்க வாங்குறது இல்ல. எங்க வாங்குறாங்களோ அங்க போய் வாங்கிக்குங்க" என்பார் அப்பா.

"சரிங்க. நான் போயிட்டு வர்றேன்"

"ஏடு வாங்கிட்டு போகும்போது சொல்லிட்டு போக கூடாது. திரும்பி பார்க்காம போயிட்டே இருக்கணும்"

தலையாட்டி விட்டுத் திரும்பி பார்க்காமல் போய் விடுவார்கள். அடுத்த நாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வந்து, இன்னும் உடம்பு சரியாகவில்லை என்றால் 'டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க' என்று சொல்லிடுவார் அப்பா. ஏடு எழுதிக் குடுத்ததுக்கு பிரதிபலனாய், தங்கள் காடு தோட்டங்களில் ஏதேனும் விளைந்தால் கொண்டு வந்து குடுத்து விட்டுப் போவார்கள்.

தற்போது எல்லாம் தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. ராசிக்கல் மோதிரம், தாயத்து, வாஸ்து பிள்ளையார், வாஸ்து மீன் தொட்டி, எண் சோதிடம், காந்த படுக்கை.. எனப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மை ஏமாற்றும் இந்த போலிகளிடம் இருந்து எப்பொழுது தப்பிக்கப் போகிறோம்.

முக்கிய குறிப்பு:

* ஆகவே, இதனால் தெரிவிப்பது யாதெனில், நானும் காம்பஸ் ஊசியைக் கொண்டு புதிய தாயத்து முறையைக் கண்டு பிடிக்க போகின்றேன். (முதலில் காப்பி ரைட்ஸ் வாங்க வேண்டும் !!!!).

* முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. (முதல் ஆடு எதுன்னு தெரில !!!)

* பனை ஓலையில் எழுத பட மாட்டாது. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களில் மட்டும் எழுதப்படும். (அப்பதான் பெரிய ஆளுக எல்லாம் வருவாங்க !!!)

* முதலில் பதிவு செய்பவர்களுக்கு, திரைக்கு வந்து ஓடாமல் திரும்பிய, வெற்றிப் படத்தின்(!!!) திருட்டு DVD கொடுக்கப்படும்.

* இதைக் கட்டி விட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். (இந்த நல்ல காதல், கள்ளக் காதல் எல்லாம் என்னாகும்னு கேட்க கூடாது !!!)

* ஒரு தடவை என்ட்ரி போட்டுவிட்டு, இந்த தாயத்தைக் கட்டி விட்டால், மாதம் ஒரு முறை கண்டிப்பாக வர வேண்டும் (அப்பதான் மாச மாசம் வரும்படி வரணும் !!!)

* தொழில் முறை கற்றுக் கொடுக்கப் பட மாட்டாது (நமக்கே ஒன்னும் தெரியாது !!!)

* கண்டிப்பாக, 'முன் அனுமதி தேவை' போர்டு மாட்டப் படும் (அதாங்க அப்பாயன்ட்மென்ட் !!!)

Sunday, August 1, 2010

சினிமா - விர்டியானா (Viridiana)


நானும் என் நண்பனும் சென்னையில் இருந்த நாட்களில், ரயில் நிலையப் படிகளில், தி.நகர். கடை வீதிகளில், பேருந்து நிறுத்தங்களில் என எங்கெங்கு பார்த்தாலும் கையேந்தி நிற்கும் பிச்சைக் காரர்களைப் பற்றி விவாதித்தது உண்டு. நண்பன் சமூகவியலில் டிப்ளமோ பண்ணிக் கொண்டிருந்தான். எவ்வளவோ பெரிய ஆட்கள், பெரிய முதலாளிகள் சென்னையில் இருக்கிறார்கள், கொஞ்சம் உதவி செய்தால் இவர்களும் நிம்மதியாக வாழலாமே என்று அவனிடம் கூறினேன். அதற்கு அவன் பின்வருமாறு பதில் அளித்தான்; 'நிறைய தொண்டு நிறுவனங்கள் இருக்குது. ஆனால், பிச்சை எடுத்து வாழ்பவர்கள் சொகுசு வாழ்க்கை போல வாழ்ந்து பழகி விட்டார்கள். கையில் கொஞ்சம் ரூபாய் இருந்தால், கஞ்சா, பீடி, தண்ணி என அடிக்க கிளம்பி விடுகிறார்கள்(பெண்களும்). இவர்களைக் கொண்டு போய் தொண்டு இல்லங்களில் சேர்த்து விட்டால், மீறிப் போனால் ஒரு வாரம், ரெண்டு வாரம் இருப்பார்கள். அதற்க்கு அப்புறம் கெளம்பிடுவாங்க. ஏன்னா, அங்கே உணவு கிடைத்தாலும் காசு கிடைக்காது, சிறு வேலைகளும் செய்ய வேண்டும். இதில் கொடுமை என்னவெனில், பிள்ளைகளை ஊனமாக்கி பிச்சை எடுப்பது. அவர்களாக திருந்தினால்தான் உண்டு' என்றான்.

அவன் சொல்லுவதை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன். ஏனெனில், நாங்கள் பேசிக் கொண்டிருந்த அந்த மாதத்தின் முதல் நாளில், வீதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை ஒரு தொண்டு நிறுவனத்தில் கொண்டு போய் சேர்த்திருக்கிறான். ஒரு வாரம் கழித்து யாரிடமும் சொல்லாமல் அந்த மூதாட்டி அங்கே இருந்து போய்விட்டது. அங்கே காசு கிடைக்காததே காரணம்.

விர்டியானா படம் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கயோ படித்திருந்தேன். இன்று காலை படத்தைப் பார்த்தும் விட்டேன். படத்தின் கதை சாதரணமானதாக இருந்தாலும், படத்தின் தாக்கம் மிகப் பெரியது.

ஒரு பள்ளியில் சிஸ்டர் ஆகப் பணிபுரியும் சிஸ்டர்.விர்டியானாவுக்கு அவள் மாமாவிடமிருந்து கடிதம் வருகின்றது, அவளை வரச் சொல்லி. இத்தனை நாட்களாக அவள் மாமாவைச் சந்தித்ததே இல்லை. எனவே போக மறுக்கிறாள். தலைமை சிஸ்டர், 'நீ கண்டிப்பாக போக வேண்டும். நீ இங்கே தங்கி இருக்கும் அனைத்துச் செலவுகளையும் அவர்தான் பார்த்துக் கொள்ளுகிறார்' எனச் சொல்ல, விர்டியானா மாமாவைப் பார்க்க கிளம்புகின்றாள்.



மாமாவின் மனைவி இறந்து விட்டாள். வயது சுமார் ஐம்பது இருக்கலாம். அவரின் மகனிடம் தொடர்பு இல்லை. பணிப்பெண் ரோமனா, அவள் மகள் ரீட்டா, பணியாளர்கள் இருவர் எனத் தனிமையில் வாழ்ந்து வருகிறார். மிகப் பெரிய பண்ணை வீடும், நிலங்களும் இருக்கின்றன. மாமாவைப் பார்க்க வந்த விர்டியானா இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவேன் என்கிறாள். ஆனால் மாமாவுக்கோ தனிமையில் இருப்பது பிடிக்காமல் விர்டியானாவைக் கல்யாணம் செய்ய நினைக்கிறார். ஆனால் சிஸ்டர் ஆகப் பணிபுரியும் அவள் மறுக்கிறாள்.

ஓரிரவு, அதாவது விர்டியானா ஊருக்கு கிளம்பும் நாளுக்கு முன்தினம் காப்பியில் தூக்க மாத்திரை கலந்து பணிப்பெண் கொடுக்கிறாள். மயங்கி கிடக்கும் அவளை அறைக்கு எடுத்துசெல்லும் அவர், குற்ற உணர்ச்சியில் எதுவும் செய்யாமல் திரும்பி விடுகிறார். ஆனால், காலையில் தூக்கம் கலைந்து எழும் அவளிடம் 'நான் உன்னை அடைந்து விட்டேன். இனிமேல் நீ காண்வென்ட்கு திரும்ப முடியாது' என்கிறார். அவள் எதையும் கேட்காமல், கிளம்புகிறாள். கிளம்பும்பொழுது, 'நீ என்னை மன்னிப்பாயா' எனக் கேட்கிறார். அவள் அழுதுகொண்டே சென்று விடுகிறாள்.




அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் அவள் பேருந்து ஏறப் போகும்பொழுது, 'ஒரு தவறு நிகழ்ந்து விட்டது' எனக் கூறி அழைத்துச் செல்கிறார்கள். அங்கே சென்றால், அவள் மாமா தூக்கில் தொங்குகிறார். கொஞ்ச நாட்கள் கழித்து, தலைமை சிஸ்டர் வந்து 'திரும்பவும் நீ அங்கே வர வேண்டும்' எனச் சொல்ல, அவள் மறுத்து விடுகிறாள். இறந்து போன மாமாவின் மகனும் தன் காதலியுடன் அங்கேயே வந்து தங்கி கொள்கிறான். கொஞ்ச நாளில் அவன் காதலி பிரிந்து சென்று விடுகிறாள். அதற்க்கு அவள் சொன்ன காரணம் 'நீ விர்டியானாவை காதலிக்கிறாய்' என்பது.

விர்டியானாவோ தன் சேவை நோக்கத்தில் குறியாக இருக்கிறாள். ஊரில் உள்ளே பிச்சைக் காரர்களைத் அழைத்து வந்து, ஒரு இல்லம் மாதிரி ஆரம்பிக்கிறாள் மாமாவின் வீட்டை ஒட்டி இருந்த ஓர் அறை ஒன்றில். ஒன்றாக இருக்கும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் நடக்கிறது. கையில் ஒரு தொற்று நோய் போல வந்த ஒருவனை அடித்து விரட்டுகிறார்கள். சிறு சிறு வேலைகளைச் செய்ய விர்டியானா அவர்களைப் பழக்கப் படுத்துகிறாள். இவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல், அங்கே பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்களும் விலகி விடுகிறார்கள். ரோமனா மட்டும் தன் மகளுடன் அங்கேயே வசிக்கிறாள்.

ஒருநாள், வழக்கறிஞரைக் காண மாமாவின் மகன் ஜார்ஜ், விர்டியானா, ரோமனா மற்றும் ரீட்டா அனைவரும் வீட்டை பூட்டி விட்டு கிளம்பி விடுகின்றனர். அடுத்த நாள் காலையில் தான் வருவோம் எனக் கூறி விட்டு செல்கின்றனர். சந்தோசபட்ட பிச்சைக் காரர்கள், வீட்டுக்குள் சென்று எல்லாவற்றையும் எடுத்துப் பார்க்கின்றனர். இரவு விருந்தும் அங்கேயே நடக்கிறது. டேபிள் முழுவதும் உணவுகளும், மது வகைகளும் நிரம்பி இருக்க எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றனர். சிறு சிறு சண்டைகளும் நடக்கின்றன. இதில் கண் தெரியாத ஒருவனின் மனைவியை, இன்னொருத்தன் தள்ளிக் கொண்டு போக, இதை அவனிடம் இன்னொருவன் சொல்லிவிட, அவன் கோபத்தில் டேபிளில் இருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறான்.



கொஞ்ச நேரத்தில், அடுத்த நாள் வருவோம் என்று சொன்னவர்கள் அந்த இரவே அங்கே வந்துவிடுகிறார்கள் அப்பொழுது. ஜார்ஜைக் கண்டதும் ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர், மது குடித்த மயக்கத்தில். இன்னொரு அறைக்கு செல்லும் ஜார்ஜை மறைந்து இருந்த இரண்டு பிச்சைகாரர்கள் தலையில் அடிக்க, அவனும் மயங்கி விழ, அங்கே வருகிறாள் விர்டியானா. விர்டியானாவைக் கண்டதும் அவர்கள் இருவரும், அவளை அடைய முயல்கிறார்கள். அவள் மயங்கி கட்டிலில் விழுகிறாள். மயக்கம் தெளிந்த ஜார்ஜ், இன்னொரு பிச்சைகாரனிடம், விர்டியானா மேல் கிடக்கும் அவனை கொன்றால் உனக்கு பணம் தருவேன் எனக் கூற, அவனும் இன்னொருவனை அடித்துக் கொல்கிறான்.

போலீசைக் கூட்டி வரச் சென்ற ரோமனாவும், ரீட்டாவும் திரும்பி வர அடுத்த காட்சிக்கு படம் நகர்கிறது. ஜார்ஜை விட்டு, விலகி விலகிப் போகும் விர்டியானா, தன் மீது தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளைத் துறந்து விட்டு ஜார்ஜுடன் நெருங்கிப் பழகுவதுடன் படம் முடிவுக்கு வருகிறது.



சிறுமியான ரீட்டா, எப்பொழுதும் ஒரு மரத்தினடியில் கயிறு தாண்டிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பாள். அந்தக் கயிற்றில்தான் மாமா தூக்கு போட்டு இறந்திருப்பார். அதே கயிற்றில் திரும்பவும் விளையாடுவாள் ரீட்டா. அதே கயிற்றை, விர்டியானா கூட்டி வரும் பிச்சைக்காரன் ஒருவன் இடுப்பில் கட்டிக்கொள்வான். விர்டியானாவை அந்தப் பிச்சைக்காரன் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் பொழுது அந்தக் கயிறு விர்டியானவின் கையில் இருக்கும்.

அந்தப் பிச்சைகாரர்கள் உணவருந்தும் அந்தக் காட்சியை, இயேசுவின் இரவு விருந்தை நினைவுக்கு கொண்டுவருவது போல இருக்கும். அவரையும் சிலுவை சுமக்க வைத்தார்கள். அதற்க்கு பதிலாக, இத்தனை நாட்களாக கட்டுப்பாடுடன் இருந்த விர்டியானவை, அவள் சோறு போட்டு தங்க வைத்திருந்த ஒருவனே அடைய முயல்வான்.

படத்தின் இறுதியில், ரீட்டா பழைய பொருட்கள் எரிந்து கொண்டிருக்கும் தீயில், விர்டியானா வைத்து வணங்கிக் கொண்டிருந்த இயேசுவின் முள் கிரீடத்தை வைத்து விளையாடும்போது, அதில் இருந்த முள் குத்திவிட, தீயில் வீசி விடுவாள். இனி, ரீட்டா போன்ற சிறுமிகள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள், விர்டியானாவைப் போல.



ரோமனா, ஜார்ஜ் மற்றும் விர்டியானா மூவரும் சீட்டு விளையாடுவதுதான் இறுதிக் காட்சி. நமது வாழ்க்கையும் சீட்டாட்டம் போலத்தான், நாம் எடுக்கும் வரை சீட்டில் இருப்பது என்ன என நமக்குத் தெரியாவிட்டாலும் சீட்டுகள் நம்  கையில்தான் இருக்கின்றன.