Sunday, July 4, 2010

மாட்டி வைத்து என்ன பயன்?


உண்டு, உடை, உறை என் மனிதனுக்கு மூன்று தேவைகள். இதில் முதல் இரண்டுக்கும் உறுதுணையாக இருப்பது விவசாயமும், நெசவும். எங்கள் கிராமத்தில் நெசவும் உழவும் இரண்டும் இருந்தன ஒருகாலத்தில். இன்று இரண்டுமே அழிவின் விளிம்பில்.

ஊர் முழுவதும் முப்பது கைத் தறிகள் நெய்த காலம் போய், இன்று இரண்டு தறிகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. இன்னும் நெய்து கொண்டிருப்பவர்களில் எங்கள் அப்பாவும் ஒருவர். கைத் தறி என்றால், சர்வோதயா சங்க வேட்டி(இப்பொழுது கிடைக்கிறதா எனத் தெரியவில்லை). வேட்டியில் கூலி குறைவாக இருந்ததால், பத்து வருடங்களுக்கும் மேலாகவே அப்பா கைத்தறி கொசுவலை நெய்து கொண்டிருக்கிறார்.

அடுத்த தலைமுறையில் யாருமே நெசவைக் கற்றுக்கொள்ளவில்லை. கற்றுக்கொள்ள பிரியபடவும் இல்லை. அப்படியே இந்த தொழில்களை செய்தாலும் குடும்ப வருமானம் தினமும் இருநூறு ரூபாயைத் தாண்டாது. அந்த காலத்தை விட இப்பொழுது கூலி அதிகம் என்கிறார்கள். இதற்கு குடும்பத்தில் மூன்று பேர் உழைக்க வேண்டும். அதே மூன்று பேர் வேறு வேலைக்கு சென்றால், பக்கத்தில் இருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு சென்றால் அறுநூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பார்கள்.

முறை வைத்து 'பாவை'க் காயவைத்து தறி நெயதவர்கள் இன்று இல்லை. பாவு ஓடிய அந்த தூண்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அன்று அந்த கற்களுக்கு மரியாதை இருந்தது, பாவடி கல் என்று. இன்று அந்த வழியாக செல்லும் பழையவர்கள் நினைத்துப் பார்க்க கூடும்.

தறிகளின் சத்தத்தில் பிறந்து, வளர்ந்து இன்று அதை எங்கே கேட்பதென தெரியவில்லை. இன்னும் சில வருடங்கள் கழித்து, எங்கள் வாரிசுகளுக்கு அறிமுகபடுத்த கூட முடியாது போல இருக்கிறது.

ஒரு ஜவுளி கடையில், ஒரு பாஷன் புடவைக்கு இருக்கும் மரியாதை சாதாரண நூல் புடவைக்கு கிடைப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது 'பிராண்ட்' காக இருக்குமே ஒழிய, அதை நெய்தவனுக்கு அதன் பலன் போய்ச் சேர்வதில்லை.

இந்த தேசத்தில் ஒரு மகாத்மா ஒரு ராட்டையை கொண்டு தனது வலிமையை உலகுக்கு உணர்த்தினார். ராட்டையில் நூல் நூற்று கொண்டு, அவர் அமர்ந்திருக்கும் அந்த படத்தை மட்டும் நம் நாட்டு அலுவலகங்களில் மாட்டிக் கொண்டார்கள். மாட்டி வைத்து என்ன பயன்?

Monday, June 28, 2010

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில்.

வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான்.

பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.

நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?.

நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது;

நகுகம் வாராய் பாண ! பகுவாய்
அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்று தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யான்தான்
முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஓரிஇ
யாரையோவென் றிகந்து நின் றதுவே !

பாடியவர்: மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
திணை : மருதம்
துறை : புதல்வனோடு புக்க தலைமகன் பாணர்க்கு உரைத்தது

வேறொரு பெண்ணிடம் மையல் கொண்டிருந்த தலைவன், தன் வீடு வழியாக செல்லும்பொழுது தன் மகனைப் பார்த்து விட்டு, மனைவியிடம் பேசியதை பாணனிடம் கூறியது இப்பாடல்.

பாடலின் பொருள்: பாணனே, சிறுவாய் பிளந்த, மணிகளோடு கூடிய கிண்கிணி ஒலிக்க என் புதல்வன் தெருவில் தேர்நடை நடந்து கொண்டிருந்தான். மணம் கூடிய ஆம்பல் மலரை போன்ற வாய் கொண்டவனும், குழைத்து பூசிய சந்தனம் கொண்டவனுமான என் மகனை அள்ளி எடுத்துக் கொண்டு என் மனைவியை நெருங்க வீட்டினுள் சென்றேன். அழகிய நெற்றியும், கூந்தலையும் உடைய அவள், அஞ்சி விலகும் மான் பிணையை போல என்னைப் பார்த்து 'இங்கே வரும் தாங்கள் யாரோ?' எனக் கேட்டாள். இதை நினைத்து நாம் எண்ணி நகையாடலாம் வா !

காலங்கள் பல நூறு கடந்தும் காதலும், கூடலும் அப்படியேதான் இருக்கிறது.