Thursday, April 8, 2010

தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி

.சிங்காரம் அவர்கள் எழுதிய "புயலிலே ஒரு தோணி" நாவலை படித்து முடித்து விட்டு, இப்பொழுது திரும்பவும் வாசிக்க தொடங்கி உள்ளேன். நாவலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு கவிதைக்கு உரிய அழகுடன் உள்ளன. இப்பொழுது நாவல் முழுவதும் நான் சொல்ல போவதில்லை. எனக்கு பிடித்த சில பத்திகளையும், சில வரிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஓர் உரையாடலில்;

" எனது நண்பர் ஒரு கதை சொன்னார். வீரத் தமிழினத்தின் மாட்சிமிகு நிலைமை பற்றி. நீ அதை தெரிந்து கொள்வது அவசியம். சுருக்கமாக சொல்கிறேன். எல்லாரும் அன்றன்று காலையில் வேலை தொடங்கும் முன், மணியகாரனிடம் போய் ஆளுக்கு மூன்று செருப்படி வாங்கி கொள்ள வேண்டுமென்று அரசு ஆணையிட்டது. மறுநாள் கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்கு முன்னே வீரத் தமிழ்க் குடிமக்கள் கூடி நின்று, 'விரசாய் அடிச்சு விடுங்கையா, வேலைக்கு போகணும், நேரமாகுது' என்று முறையிட்டு, முதுகை திருப்பி காட்டி கொண்டிருந்தனர். சுணங்காமல் அலுவலை முடித்துச் செல்வதற்காக, அவரவர் சக்திக்கு ஏற்ப காலும் அரையுமாக இலஞ்சத் தொகையும் எடுத்துச் சென்றிருந்தார்கள். இதுதான் தமிழினத்தின் இன்றைய நிலை, நேற்றைய நிலை."

இந்நாவல் எழுதப்பட்ட வருடம் 1962. இன்றைய நிலைமையை நீங்களே நினைத்து கொள்ளுங்கள் தமிழ்க் குடி மக்களே.

இன்னும் ஒரு வரி:

கையில் துப்பாக்கி இருந்தால் காசு இல்லாமலே தோசை. இல்லாவிடின், காசு இருந்தாலும் சில சமயங்களில் தோசை மறைந்துவிடும்.

இன்னும் நிறைய இருக்கிறது. நேரம் இருக்கும் பொழுது இங்கே எழுதுகின்றேன்.

Thursday, March 25, 2010

அரசு இயந்திரங்கள்

பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் பிற தேவைகளுக்காக நாம் அணுகுவது அரசு அலுவலகங்களை. நமக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் சொல்லுகின்றன. ஒரு வேலை நிமித்தமாக நேற்று ஒரு அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. அங்கே நடந்தவை இங்கு:

- நான் பார்க்க வேண்டிய அலுவலர் இன்னும் வரவில்லை. நேரம் 10:15

- இன்னொரு அலுவலர் வந்தார். இரண்டு ஊது பத்திகளை பற்ற வைத்து அறை முழுவதும் காட்டி விட்டு அவரின் இருக்கையில் அமர்ந்தார்.

- ஒரு ஏழை பெண்மணி எதுவோ அவரிடம் கேட்க, 'எத்தன தடவ சொல்லுறது... இன்னும் ஒரு வாரம் கழித்து வா.. ' என்றார்.

- ஒருவர் ஓரமாய் நின்று கொண்டிருந்தார். சரி, நம்மை போல அவரும் யாரோ ஒருவருக்காக வெயிட் பண்ணுகிறார் என்று நினைத்திருந்தேன். ஒரு பத்து நிமிடம் கழித்து, அரசு ஊழிய பெண்மணி ஒருவர் வந்தார். அந்த அம்மாவை பார்த்ததும் குசலம் விசாரித்து விட்டு, கொண்டு வந்த விண்ணப்பத்தை காண்பித்தார் . இருவரும் உறவினர்களாக அல்லது தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் வேலை முடிந்து கிளம்பி விட்டார்.

- இன்னொரு ஊழியர் வந்தார். வந்ததும் கையோடு கொண்டு வந்திருந்த கவரில் இருந்து இரண்டு முழ கதம்ப பூவை எடுத்து, பாதியாக்கி ஒன்றை படத்துக்கும் இன்னொன்றை தன் முன்னால் உள்ள பைல்களின் மேல் வைத்தார். நல்ல வேளை படத்தில் அல்லா, விநாயகர் மற்றும் ஏசு அருள் புரிந்து கொண்டிருந்தார்கள். மற்ற மதங்கள் எல்லாம் பாவம் !!

ஆகையால் இதனால் தெரிவிப்பது என்னவென்றால், தெரிந்தவர்கள் அரசு அலுவலகத்தில் இருந்தால் உங்கள் வேலை முடியும். அரசு ஊழியர்கள், நேரம் இருப்பின் நமக்கும் பணி செய்வார்கள் !! . நீங்கள் படிக்காத குடிமகனாகவோ அல்லது நன்றாக பேச தெரியாவிட்டால் கோவிந்தா.. கோவிந்தா.. . அவர்கள் சொல்லும் நேரம் அங்கே இருக்க வேண்டும், இல்லை என்றால் காரியம் நடக்காது.

சரி, இவ்ளோ பேசுறியே, நீ போன வேலை முடிஞ்சுதான்னு கேக்குறிங்க தானே ?. என்ன அடுத்த மாசம் திரும்ப வர சொல்லிருக்காங்க :) . நானும் சாதரண குடிமகன் தானுங்கோ!