Monday, September 16, 2024

நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்

மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். 


விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோவை. இரண்டு ஆண் குழந்தைகளோடு அவள் கோவையில் வசிக்கிறாள். பழனி அவ்வப்பொழுது விடுமுறையில் கோவைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவான். அவனுக்கு கோவை பிடிப்பதே இல்லை. கோவையின் பேச்சு வழக்கும், கொடுக்கும் மரியாதையையும் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. ராதாவோடு அடிக்கடி சண்டையும், அவனுடைய குறைவான வருமானமும் பிரச்சினை ஆகிறது. அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பதால் பழனியின் சொந்த ஊருக்கு வர மறுக்கிறாள். அவனுக்கோ தனது பிள்ளைகள் கிராமத்தில் வளராமல் இந்த ஊரில் வளர்கிறார்களே என்ற கவலை.


மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என இருக்கும் பழனியின் குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அவனுடைய ஒரு தம்பி குமரன் இறந்துவிட்டான். அவன் இருக்கும்பொழுது நிலமே கதி என்று கிடந்து நல்ல மகசூல் எடுக்கிறான். குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது அவனால்தான். அவனின் இறப்புக்கு பின்னர் விவசாயம் செழிக்காமல் ஏனோ தானோ என்று நடக்கிறது. அண்ணன் பாஸ்கரன் இப்போது நிலத்தை பார்த்துக்கொள்கிறான். எந்த வருமானமும் அந்த நிலத்தில் கிடைக்காததால் அதை விற்றுவிட்டு கோவையில் வீடு கட்ட மனை வாங்கச் சொல்கிறாள் பழனியின் மனைவி ராதா. 

நகரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை போல ராதாவுக்கும் உண்டு. அவள் வேலைக்கும் போவதால் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து வாங்கலாம் என நினைக்கிறாள். நிலத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்க, பழனியிடம் விவசாய பூமியை விற்றுவிட்டு வா என்கிறாள். விற்க கூட வேண்டாம், தென்னை, கரும்பு போல பணப்பயிர்களை போட்டால் வருமானம் வருமே என்கிறாள். அவள் சொல்வது எதுவுமே நடைமுறை சாத்தியம் இல்லை என்கிறான் பழனி. பிறகு வார்த்தைகள் தடித்து கை வைப்பதில் போய் முடிகிறது. நீயா நானா என தடித்த வார்த்தைகள் என்று  எதற்கெடுத்தாலும்  சண்டைகள் நிம்மதியை குலைக்கின்றன. 

குழந்தைகளுக்கு கூட அவனின் சொந்த ஊர் பிடிப்பதில்லை. மாமனார், மாமியார் மேல் வைத்திருக்கும் பாசத்தில் கொஞ்சம் கூட தன் தாயுடன் இல்லையே என வருத்தப்படுகிறான். கால்நடைகளுக்கான வைத்தியம்  பழனிக்கு கொஞ்சம் தெரியும். கோவைக்கு வரும்பொழுது பக்கத்தில் இருக்கும் ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு அவன் ஆலோசனை சொல்லி வைத்தியம் பார்க்கிறான். 

பையன்களை நொய்யல் ஆற்றுக்கு கூட்டிச் சென்று குளிக்க வைக்கிறான்.ஆறு குளம் போன்றவற்றிலும், இயற்கையுடனும் கலந்து பிள்ளைகள் வளர வேண்டும் என்ற ஆசை பழனிக்கு. ஆற்றில் குளித்து சளி பிடித்தால் ராதா அதற்கு அவனைத் திட்டுகிறாள். பையன்களை கெடுக்கிறாய் என்கிறாள். மொத்தத்தில் அவனுக்கு கோவையை விட்டு ஓடி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. 



நொய்யல் ஆற்றின் கரையில் ஒருநாள் அவன் அமர்ந்திருக்கும் பொழுது கொஞ்சம் மனநலம் சரியில்லாத ஒரு சிறுபெண் அவனை அண்ணா என அழைத்து அவனிடம் பேசுகிறாள். இன்னொரு நாள் குட்டிகளை ஈன முடியாமல் தவிக்கும் ஆட்டுக்கு வைத்தியம் பார்க்கிறான். அந்த ஆட்டுக்கு சொந்தக்காரி எங்கேயோ இருந்து வந்து கணவன் குடியினால் இறக்க ஆடு வளர்ப்பு, தோட்ட வேலை என தன் குடும்பத்தை நிலைநிறுத்த பிள்ளைகளோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அவர்களின் வறுமையைப் பார்த்த பழனி காசு வேண்டாம் என்கிறான். ஆட்டை பிழைக்க வைத்த அவனுக்கு ஏதாவது தர வேண்டும் என எண்ணி மறுநாள் காலையில் ஒரு வாழைத் தாரோடு அவன் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பழனிக்கு இங்கேயும் நமக்கு சுற்றமும், சொந்தமும் உண்டு என எண்ணி மகிழ்கிறான். 

நாவலில் ஒரு வரி வருகிறது "எல்லா ஊர்களிலும் அபூர்வமான சிலர் வேருக்கு நீரூற்றி விடுகிறார்கள்" . அவனுக்கு இப்பொழுது இதுவும் சொந்த ஊரே, இங்கேயும் அவனுக்கு சுற்றம் உண்டு.

சொந்த ஊர் என்பது உண்மையில் யாருக்குமே கிடையாது. நாவலில் வரும் பழனிக்கு கூட. அவனுடைய தாத்தா காலத்தில் அந்த கிராமத்தில் வந்து தங்கியவர்கள். நாம் எங்கே பிறக்கிறோமோ, எங்கே பால்ய காலங்களை கழிக்கிறோமோ அதுவே சொந்த ஊர் என நினைக்கிறோம். மற்றபடி சொந்த ஊர் என்பது நிரந்தரம் கிடையாது. அதனை பழனி உணர்ந்து கொள்கிறான்.  இனிமேல் ராதாவோடு அவன் இணங்கியே போவான். 

"நிலம் எனும் நல்லாள்" எங்கேயும் நம்மை ஆதரிக்க, அரவணைக்க  காத்திருக்கிறாள். 


Monday, September 9, 2024

கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மிநந்தன் போரா

அஸ்ஸாமிய நாவலான கங்கைப் பருந்தின் சிறகுகள், நவீனத்தால் ஏற்படும் மாற்றங்களையும், ஒரு காதல் - முக்கியமாக காதலித்தவள் படும் துயரங்களையும் சொல்லும் நாவல். 

போக்ராம் ஒரு சந்தை வியாபாரி. சணல் அறுவடை நடக்கும் காலங்களில் அதை வாங்கி விற்பான். மற்ற மாதங்களில் துணிகளை வாங்கி விற்பான். பக்கத்து ஊர் சந்தைகளில் அவன் வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானமே அவன் குடும்பம் நடத்த உதவுகிறது. வாரத்தின் எல்லா நாளுமே அவன் சந்தைக்குப் போய்விடுகிறான். போக்ராமுக்கு மனைவி, பிள்ளைகள், தங்கை வாசந்தி, வயதான தாய் என பெரிய குடும்பம். வறுமை இல்லை என்றாலும் குடும்ப சக்கரம் போக்ராமுடைய வருமானம் கொண்டே ஓடுகிறது. 



நாவல் முழுவதும் சோனாய் ஆறு கூடவே வருகிறது. அவர்கள் இருக்கும் கிராமம் சோனாய் பரியா என்ற ஊர். அந்த ஊரில் தனஞ்ஜெயன்  என்னும் இளைஞன் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கிறான். தன்னால் முடிந்த உதவிகளை அவன் அந்த ஊர் மக்களுக்குச் செய்கிறான். போக்ராமும் அவனும் நண்பர்களாக இணைகிறார்கள். வாசந்திக்கு தனஞ்ஜெயனை பிடித்து போவதால் அவனை காதலிக்கிறாள். இருவரும் வீட்டாருக்குத் தெரியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். வாசந்தியின் அண்ணி தருலதாவுக்கு அது தெரிந்து போக, உன் அண்ணனிடம் சொல்லி அவனையே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், அது வரைக்கும் நீ பொறுமையாக இரு என்கிறாள். 

சரியான சாலை வசதிகள் இல்லாத அவர்களின் ஊருக்கு, நவீன சாலைகள் போடப்படுகிறது. நவீனம் என்பது வளர்ச்சிக்கான அறிகுறி என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சிலர் அதில் பாதிப்படைகிறார்கள். போக்ராம் இதுவரை கிராமத்தில் பொருளை வாங்கி பெரிய வியாபாரிகளுக்கு விற்று வந்தான். இப்பொழுது நவீன சாலைகள் மூலம் மோட்டார் வண்டிகள் வருவதால் பெரிய ஆட்களே நேரடியாக வந்து கொள்முதல் செய்து விடுகிறார்கள். சில சந்தைகளில் துணி விற்று வந்த போக்ராம் அதுவும் செய்ய முடிவதில்லை. போக்குவரத்து வசதி வந்துவிட்டதால் பெரிய கடைகளைத் திறந்து நிறைய துணிகளை கொண்டு வந்து மக்களை ஈர்க்கிறார்கள். இவனிடம் துணி வாங்க ஒருவரும் வருவதில்லை. அவனுக்கு அந்த நவீன சாலை, கொல்ல வந்த கருப்பு பிசாசு போல தோன்றுகிறது. வங்கி லோன் வாங்கி தொழில் செய்யலாம் என்றால்  அது நடைபெறாமல் போய்விடுகிறது. 



குடும்பத்தை நடத்த பணமில்லாமல் கஷ்டப்பட்ட போக்ராமுக்கு ஒரு அரசியல்வாதியின் நட்பு கிடைக்கிறது. அந்த நேரத்தில் தேர்தல் வர, அவருக்கு பிரச்சாரம் செய்கிறான் போக்ராம். எதிர் கட்சி வேட்பாளரை தனஞ்செயன் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறான். நண்பர்களாக இருந்த இருவரும் இப்போது எதிரிகள் ஆகிவிட, வாசந்தியின் காதல் கைகூடாமல் போகிறது. போக்ராம் ஆதரவு தெரிவித்தவரே தேர்தலில் வெல்வதால் அவனுக்கு வருமானம் வருகிறது. கூடிய விரைவிலேயே அவன் ஊரில் பெரிய பணக்காரனாகி விடுகிறான். 

வாசந்தியின் அண்ணி தனது கணவனிடம் வாசந்தியின் காதலைப் பற்றிச் சொல்கிறாள். அவனோ இப்போது எதிரியாகி விட்ட தனஞ்செயனுக்கு என் தங்கையை குடுக்க மாட்டேன், வேறு இடத்தில் அவளை கட்டி வைப்பேன் எனச் சொல்கிறான். சொன்னது போலவே மதுரா என்னும் வரனை அவனுக்கு கொண்டு வருகிறான். முதலில் மறுக்கும் வாசந்தி பின்னர் தனது அண்ணியின் கட்டாயத்தின் பேரில் திருமண நிச்சயம் செய்ய சம்மதிக்கிறாள். தனது அப்பா மறைந்த பின் குடும்பத்தை தன் தோளில் சுமந்து, யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்காமல் இருந்த தன் அண்ணன் மேல் உள்ள பாசத்தால் அவள் சம்மதித்து மோதிரம் மாற்றிக் கொள்கிறாள். 

நிச்சயம் செய்த பின்னர் வாசந்தி தடுமாறுகிறாள். அண்ணனை மீறி எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள். கல்யாணத்துக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. தனஜெயனிடம் இருந்து அவளுக்கு கடிதம் வருகிறது. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம், நீ ஆற்றுத் துறைக்கு இரவில் வந்துவிடு, நாம் இந்த ஊரை விட்டுப்போய் நிம்மதியாக வாழலாம் என்று கடிதத்தில் கூறியிருக்கிறான். வாசந்திக்கு அண்ணன் காட்டிய வரனை திருமணம் செய்வதா அல்லது காதலனுடன் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். அன்றிரவு  தன் காதலன் வரச் சொன்னவாறு ஆற்றுக்கும் போய்விடுகிறாள். தூரத்தில் அவளுக்காக படகில் தனஜெயன் காத்திருக்கிறான். அப்பொழுது வாசந்தி தன் விரலில் போட்டிருக்கும் மோதிரத்தை பார்க்கிறாள், குடும்பத்துக்கு இழிவை தேடி தர துணிந்த பெண்ணாக நான் மாறி விட்டேன் என நினைத்தவாறு திரும்ப வீட்டுக்கே ஓடிப் போய் விடுகிறாள். 

வாசந்தி அன்று எடுத்த அந்த முடிவு அவளுக்கு வாழ்க்கையில் வேறு பாதையை காட்டுகிறது. அந்த பாதை கல்லும் முள்ளும் கலந்த கடினமான பாதையாக அவளுக்கு மாறிவிட்டது. கட்டிய கணவனின் சந்தேகம், அவள் கர்ப்பமாக இருக்கும்போது அவன் இறப்பு, பின்னர் குழந்தையின் இறப்பு என பல இன்னல்கள்.  அவள் எடுத்த முடிவால் வாசந்தி பல இன்னல்களுக்கு உள்ளாகிறாள். 

எல்லாவற்றுக்கும் மேலாக தான் ஒரு விதவையாக இருந்து தமது சமூகத்தின் மதிப்பையும், தனது இறப்புக்கு பின் சொர்க்கம் பெற வேண்டும் என அவள் நினைப்பதில்லை. தனஜெயனிடம் ஒரு கடிதத்தில், "இந்த உலக வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்களை எனக்கு வைத்த கடவுள், நான் இறந்த பின்னர் என்னை சொர்க்கத்தில் சுகமாக வைத்திருப்பார் என்பதை நான் எப்படி நம்ப முடியும்" எனச் சொல்கிறாள். அவள் சமூகம் போட்ட தடைகளை உடைத்து தனது மனத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவளின் பழைய காதலன், சாதாரண மனிதன் போல அவளைத் துறந்து அந்த ஊரை விட்டே போய்விடுகிறான், 

அவளின் மாமனார் வைத்திருந்த புத்தகங்களை தனது அறைக்கு மாற்றி படிக்கிறாள். ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து ஊரை விட்டுப் போக உதவுகிறாள் வாசந்தி. அந்த காதல் ஜோடியிடம் சொல்கிறாள்; "வாய்ப்பு என்பது ஒரு முறைதான் வரும். அதனை நீங்கள் தவற விட்டால் திரும்ப பெற முடியாது".  இழந்தவர்களுக்கு தானே அதன் வலி தெரியும். 

கங்கைப் பருந்தின் சிறகுகள் 

லக்ஷ்மிநந்தன் போரா 

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 

தமிழாக்கம் - துளசி ஜெயராமன் 



Monday, September 2, 2024

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா

அம்புலி மிகச் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர். எத்தனையோ மாடுகளைப் பிடித்த அவர் காரி என்ற காளையால் காயம்பட்டு இறக்க நேர்கிறது. அந்தக் காளையை அவரின் மகனான பிச்சி அடக்குவது தான் வாடிவாசல் என்னும் குறுங்கதை. மிகவும் மெதுவாக கதையைச் சொல்லாமல், பேச்சின் மூலமாகவே பழைய கதை வேகமாகச் சொல்லப்படுகிறது. காளைகள், ஜல்லிக்கட்டு, வாடிவாசல் பற்றியே கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிச்சி சல்லிக்கட்டுக்கு அந்த ஊருக்கு போகும்பொழுது ஆரம்பிக்கும் கதை அங்கேயே முடிவது போல வாடிவாசல் கதையை சி.சு. செல்லப்பா அவர்கள் எழுதியுள்ளார். 


மூன்று வருடங்களுக்கு முன் தன் அப்பாவை கொம்பில் தூக்கிய காரி காளையை பக்கத்து ஊர் ஜமீன்தார் நிறைய பணம் கொடுத்து வாங்கிவிட்டார். பக்கத்து ஊர் ஜல்லிக்கட்டுக்கு அந்தக் காளை  வருவதை அறிந்த பிச்சி அங்கே செல்கிறான். அவனுடன் பிச்சியின் மச்சினன் மருதனும் உடன் செல்கிறான். 


அங்கே சென்ற பிச்சிக்கு ஒரு கிழவருடன் நட்பு உருவாகிறது. அந்தக் கிழவருக்கு பிச்சியின் தந்தை பற்றியும், அவரைக் காயப்படுத்திய காரி காளை பற்றியும் தெரிந்திருக்கிறது. ஜமீன்தார் அந்த காளையை இங்கே கொண்டுவந்த பின்னர், யாருமே அந்தக் காளையை அடக்க முடியவில்லை என்று அவர் சொல்கிறார். ஜமீன் காளையை அடக்கி விட்டு பின்னர் ஊரில் இருக்க முடியுமா என்றுதான் யாரும் அந்த மாட்டை தொடுவதில்லை எனச் சொல்கிறான் பிச்சி. அந்தக் காளை வாடிவாசலுக்கு வரும்போது நீயே பார், ஆமாம் நீ அதை பிடிக்கப் போகிறாயா என கிழவர் கேட்கிறார்.

நான் காரியை பிடிக்கப் போகிறேன் என்று அவன் சொன்னதும், கிழவர் உயிரை பணயம் வைக்காதே, அது வீரமுள்ள காளை, உன்னை ஒரே குத்தில் குத்தி தூக்கி போட்டு விடும் தம்பி.. விலகி ஊருக்குப் போய்விடு என்கிறார். அந்தக் காளையை பிடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை, எனவே நான் அதைப் பார்க்கிறேன் என்கிறான். சல்லிக்கட்டுக்கு வந்துவிட்டால் ஜமீன் மாடாய் இருந்தால் என்ன, இங்கே போட்டி தான் இருக்கும் என்கிறான் பிச்சி.  கிழவரும் ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை பற்றி தனக்குத் தெரிந்தவற்றை பிச்சி, மருதன் ஆகிய இருவருக்கும் சொல்கிறார். 



ஜல்லிக்கட்டில் ஜமீன் காளையான காரி உள்ளே வருவதற்கு முன்னரே பிச்சி அந்த மாட்டை பிடிக்க வந்திருக்கிறான் என்ற செய்தி பரவ எல்லோரும் ஆர்வமாய் அவனையே பார்க்கின்றனர். ஜமீன்தார், முடிந்தால் அந்த மாட்டை அவன் பிடித்துக்கொள்ளட்டும் என அவனை உற்றுப் பார்க்கிறார். கதையில் பிச்சியும், ஜமீனும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வதை அழகாக கொண்டு போயிருப்பார் செல்லப்பா. 

இந்தக் கதையின் இறுதியில் காரிக்கு நடப்பது போல இப்போது செய்ய முடியாது. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பிச்சிக்கு தொடையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்கிறான். 

மனிதனுக்கு ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு எனத் தெரியும். ஆனால் மாட்டுக்கு அது தெரியாது. தன்னைச் சீண்ட வரும் எதிரி என்றே அதற்கு புரியும். இந்தக் கதையில் வருவது போல, வாலை பிடிப்பது, மாட்டை கீழே தள்ளுவது போன்ற செயல்கள் இப்போது தடை செய்யப்பட்டு விட்டன. திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும், அதுவும் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அணைய வேண்டும் எனப் பல விதிகள் இப்போது உள்ளன. 

வாடிவாசல் குறுங்கதை, எழுத்தின் மூலம் உண்மையாக நடக்கும் ஜல்லிக்கட்டை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும். வேறு எங்கேயும் நம்மை அகல விடாத கதையும் கூட. பாத்திரங்கள் அறிமுகம் என்று பின்னோக்கி செல்லாத நாவல் வாடிவாசல்.