Friday, May 17, 2024

பருவம் - எஸ்.எல். பைரப்பா

எஸ்.எல். பைரப்பா கன்னடத்தில் எழுதிய நாவலை பாவண்ணன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாவலின் ஆசிரியர் பைரப்பா அவர்கள், குரு தேசம், விராடம், இமயம் மற்றும் பாரதப் போர் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தே இந்நாவலை எழுதியுள்ளார் அவர். வியாசரின் மகாபாரதம், பல அறிஞர்களின் நூல்கள் என ஆய்வு செய்து பல்லாண்டுகள் உழைத்தே பருவம் நாவலாக வெளிவந்துள்ளது என முன்னுரையில் குறிப்பிடுகிறார் பைரப்பா.



ஒவ்வொருவரின் நினைவுகள் வழியாகவே நாவலைக் கொண்டு செல்கிறார் பைரப்பா. போர் தொடங்கும்போது ஆரம்பிக்கும் இந்நாவல், அந்த நினைவுகள் மூலம் பழைய கதைகள் கூறப்படுகிறது. தெரிந்த பாரதம், கதை மாந்தர்கள் என ஏற்கனவே நாம் அறிந்த கதைதான். ஆனால் அதை இந்நாவலில் சொன்ன முறை மிகவும் வித்தியாசமானது. 


மகாபாரதத்தில் பீஷ்மர், பீமன், அர்ஜுனன், கர்ணன் போன்ற பெரிய வீரர்கள் எதையும் செய்து முடிப்பவர்களாக, கிருஷ்ணன் தெய்வத்துக்கு நிகராக வைத்து போற்றப்படுவார்கள். ஆனால் பருவத்தில் அவர்களும் மனிதர்களாகவே காட்டப்படுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சினைகள் உண்டோ அத்தனையும் அவர்களுக்கும் உண்டு. பலராமன் தீராத பல் வலியாலும், சல்லியன் வயோதிகத்தாலும் கஷ்டப்படுகிறார்கள். 


சிற்சில மாற்றங்கள் அங்கங்கே தெரிந்தாலும் மூலக்கதையை விட்டு நாவல் பிரிவதில்லை. நியோகம் மூலம் குந்தியுடன் சேர்பவர்கள் சூரியன், இந்திரன், தருமன் போன்ற தெய்வங்கள் என்று மூலத்தில் வரும். ஆனால் பருவத்தில் அவர்கள் இமயமலையில் வாழும் குலத்தைச் சேர்ந்தவர்களாக காட்டப்படுகிறார்கள். தெய்வங்களுக்கு என்னென்ன குறியீடுகள் உண்டோ அவைகள் அந்த மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


போர்க்களத்தில் அத்தனை படைகளும் இருக்கும்போது உணவு, தண்ணீர், உறக்கம் என நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறது. கழிவுகளின் வாசம், அகற்றப்படாத உடல்கள் என விவரிக்கிறது நாவல். 
தன் ஐந்து புதல்வர்களை இழந்த திரௌபதி தன் கணவர்களை பார்க்கிறாள். அபிமன்யு இறந்தபோது அர்ஜுனன் அழுத அழுகையையும், கடோத்கஜன் இறக்கும்போது பீமன் அழுத  அழுகையையும்  பார்த்த அவளுக்கு இன்று அந்தளவுக்கு கண்ணீர் வராததைக் கண்டு அவளுக்கு ஏதோ புரிந்ததுபோல இருக்கிறது. 

பாரதக்கதையில் நாம் வியந்து பார்த்த மனிதர்கள் தான் இந்நாவலில் வருகிறார்கள். ஆனால் தெய்வங்களாக அல்ல. பொறாமை, ஆசை, வீரம், நோய் என நமக்கு உள்ள அத்தனை குணங்களுடன் அவர்கள் இந்நாவலில் உலா வருகிறார்கள். அதுவே இந்நாவலுடன் நம்மை நெருக்கமாக பிணைக்கிறது. 
 
கன்னட மூலம்: எஸ்.எல். பைரப்பா
தமிழில்: பாவண்ணன் 
வெளியீடு: சாகித்திய அகாதெமி 

No comments:

Post a Comment