Monday, May 11, 2020

இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம் - க்ஷிதி மோகன் சென்

க்ஷிதி மோகன் சென் சமஸ்கிருத வல்லுநர். தாகூரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். தாகூரின் அழைப்பை ஏற்று சாந்தி நிகேதனில் சேர்ந்து பணியாற்றி பங்களிப்புச் செய்தவர் சென். ஒரு ஆய்வாளராக அவர் எண்ணற்ற நூல்களை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் இந்து மதம், அதன் ஞானத் தொடர்ச்சி பற்றி நூல்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் புராணக்கதைகளை விவரிப்பதாக உள்ளது. எனவே, இந்து ஞானம் பற்றிய அறிமுகமாக சிறு நூலை வங்காள மொழியில் எழுதுகிறார். அதை ஆங்கிலத்தில் அவரின் பேரன் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

மிகச் சிறிய நூலாக இருந்தாலும், அதற்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லிச் செல்கிறார் சென். சில இடங்களில் விரிவாக சொல்லிக்கொண்டு அடுத்த பகுதிக்கு செல்கிறார். ஒரு சிறந்த அறிமுகப் புத்தகம் இந்நூல்.

மூன்று பகுதிகளாக இந்நூல் உள்ளது.  இந்து மத தோற்றம், வேதங்கள், பழக்க வழக்கம், உபநிடதங்கள், ஆறு தரிசனங்கள், வங்காள பால்கள்(baul) மற்றும் சைவ சித்தாந்தம் போன்ற மற்றைய போக்குகள், தற்கால அறிஞர்கள் பங்களிப்பு என்று விளக்குகிறார் சென். இந்நூலின் மூன்றாம் பகுதியில் முக்கியமான உபநிடத வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளது.




உபநிடதங்கள் எழுதப்பட்ட காலத்துக்குப் பின்னரே பவுத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றி, உபநிடத ஞானத்தைப் பகிர்ந்து கொண்டன என்று சொல்கிறார் சென். இந்தியாவில் தோன்றிய புத்த மதம், இங்கே மறைந்து விட்டது என்பதில் உண்மையில்லை. புத்த மதத்தின் கொல்லாமை போன்ற சில தரிசனங்கள் இந்து மதத்தில் தொடர்ந்து இயங்கி வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். 

வங்காளத்து பால் மரபு மற்றி சொல்லும் சென், அவர்களின் பாடல்களில் உள்ள கருத்துக்களை பகிர்கிறார். ஒரு நாடோடி மரபு போல் பால்கள் செயல்பட்டாலும் இந்து ஞானத்தின் ஒரு மரபாக ஏற்றுக்கொள்கிறார். 'தோட்டத்துக்குள் புகுந்த ஒரு பொற்கொல்லன், அங்கே இருக்கும் தாமரையை தன் உரைகல்லில் உரசியே மதிப்பிடுவான்' எனும் கருத்தாழம் மிக்க பால்களின் பாடல்களை குறிப்பிடுகிறார். கபீர், சூஃபி போன்ற மரபுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஆறு தரிசனங்கள் அத்தியாயத்தில் ஒவ்வொன்றைப் பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். ஒன்று பொருளே முதலில் இருந்தது என்கிறது. மற்றொன்று எல்லாமே அணுக்களால் ஆனது என்று சொல்ல, இன்னொரு தரிசனமோ யோகம் செய்து அவனை அறிய வேண்டும் என்கிறது. நியாய தரிசனமோ தர்க்க வாதம் கொண்டு கடவுளை அறிய முற்படுகிறது. வேதங்களின் பாடல்கள் மூலம் இறையை அறிய முயன்றனர். அதிலிருந்து கிளைத்த உபநிடதம், கீதை போன்றவை அதை மறுத்து பிரம்மத்தை முன்வைக்கிறது. அத்வைதம், துவைதம், தனி வழிபாடு என்ற போக்குகள். இப்படி இத்தனை போக்குகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் முரண்பட்டாலும், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இந்த நாட்டில் அவைகள் இயங்கி வந்தன. 'இது உண்மையில் இந்த சமூகத்தின் சகிப்புத்தன்மைக்கு சான்று. ஒன்றையொன்று சகித்துக்கொள்வதே நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் ஞானத்தின் தாழ்களை திறக்கக்கூடும்' - என்கிறார் சென். 

இந்த நூலின் முக்கியத்துவம் உணர்ந்த ஜெயமோகன் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென சுனில் கிருஷ்ணனிடம்  சொல்லியிருக்கிறார். ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்க்க, சமஸ்கிருத பரிச்சயம் உள்ள  ஜடாயு - வேதங்கள், உபநிடத வரிகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 




No comments:

Post a Comment