Monday, May 6, 2013

மானசரோவர் - அசோகமித்திரன் (நாவல்)

சினிமா உலகம் என்பது அலங்காரங்களால் ஆனது. நாம் நினைப்பது போல் வெளிப் பார்வைக்கு அது சந்தோசமான உலகம் போல தோன்றினாலும், அது அப்படியில்லை. அசோகமித்திரன் அவர்களின் இந்த நாவல் ஒரு நடிகனுக்கும், சினிமாத் துறையில் இருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய நாவல்.

வட நாட்டு நடிகன் சத்யன்குமார். சத்யனுக்கு அவன் குடும்பத்தினர் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சில படங்களுக்கு நடிக்க வரும்பொழுது, இங்கே வேலை செய்யும் கோபாலுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது நட்பாகத் தொடர்கிறது. சத்யன் குமார் சென்னை வந்தால், கண்டிப்பாக அங்கே கோபால் இருக்க வேண்டும். கோபாலுக்கு இலக்கியத்தில் விருப்பம் உண்டு என்பதால், அது சத்யனுக்கு பிடித்துப் போகிறது. இருவரும் சந்திக்க நேர்ந்தால் பேசிக் கொண்டே இருப்பார்கள். சத்யனுக்கு, கோபாலைப் பிடிக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் கோபால் என்ன சொன்னாலும் கேட்பார்கள்.



கோபாலுக்கு மனைவி, பையன் என குடும்பம் உண்டு. ஒரு பெண் பிள்ளையை கல்யாணம் செய்து, அனுப்பி விட்டார். மனைவி ஜம்பகம். அவளுக்கு கோபால் சினிமாத் துறையில் வேலை செய்வது பிடிப்பதில்லை. நேரம் கெட்ட நேரம் வெளியே போவது, வருவது  என்று இருப்பது பிடிப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பெண்ணுடன் சுத்திக் கொண்டு வருவதாக சண்டை போடுவாள். சில சமயங்களில் பைத்தியம் பிடித்தது போல, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசுவாள்.


அன்றொரு நாள் சத்யன் சென்னை வந்தபோது, ஜம்பகம் உடம்பு சரியில்லாமல் படுத்து இருக்கிறாள். பையனுக்கும் உடம்பு சரியில்லை. அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று வருகிறான் கோபால். காய்ச்சல் குறைந்த பாடில்லை. அன்றிரவே, பையன் இறந்து விடுகிறான். ஜம்பகம் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறாள். அவளை மயக்க மருந்து குடுத்து படுக்க வைக்கிறார்கள். சென்னையில் இருக்கும் சத்யன், விசயத்தைக் கேள்விப்பட்டு கோபால் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருகிறான். அவனிடம் மட்டும் கோபால், பையன் காய்ச்சலால் சாகவில்லை என்றும், நான் பார்க்கும்போது முகத்தின் மீது ஒரு தலையணை கிடந்தது என்றும் சொல்கிறான்.

அதற்குப் பின்னர் ஜம்பகத்தை, அவளின் அம்மா ஊருக்கு கூட்டிக் கொண்டு போகிறாள். தனியாக இருக்கும் கோபால், சென்னை வீட்டை காலி செய்து விட்டு, ஒரு சாமியாரைத் தேடி கும்பகோணம் அருகில் உள்ள ஊருக்குச் செல்கிறான். பின்னர் சென்னை வரும் சத்யன், கோபாலைப் பற்றி எல்லோரிடமும் விசாரிக்கிறான். யாருக்கும் அவன் எங்கே சென்றான் எனத் தெரிந்திருக்கவில்லை. எப்படியோ தெரிந்து கொண்டு, கும்பகோணம் பயணிக்கிறான். அவனுக்கு இப்பொழுது உடல்நிலை வேறு நன்றாக இல்லை.


கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் அந்த ஊரில் கோபாலைச் சந்திக்கிறான் சத்யன். அப்பொழுது சாமியார் அங்கே வருகிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது;

"நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்" என்கிறான் சத்யன்.

"எதை பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு நாள் கோபாலின் மனைவியை நீ கையை பிடித்து இழுத்தாய். அல்லது அவள் உன்னை இழுத்தாள். அதனை கோபாலின் பெண்ணும், பிள்ளையும் பார்த்து விட்டார்கள்"

"சுவாமிஜி.."

"இங்கே யாரும் சாமியில்லை... எல்லோரும் பூதம் தான்.. பே.. பே "  எனச் சிரித்து விட்டு சாமியார் செல்கிறார்.

கோபாலிடம், "அவனை இந்த ஆற்றில் குளித்து விட்டுப் போகச் சொல். அவனுக்கு இதுதான் மானசரோவர்".

சத்யன் அது என்னவென்று கேட்க;
"வடக்கே, இமையமலையில் மானசரோவர் என்ற ஏரி இருக்கிறது. சுத்தமான தண்ணீர். அதில் குளித்தால் உடம்பு சுத்தமாகும். பின்னர் மனதில் உள்ள அழுக்குகள் எல்லாம் போகும். உனக்கு இந்த ஆறுதான் மானசரோவர் என்கிறார் சாமி"

சத்யன் ஆற்றில் இறங்கி குளிக்கப் போகிறான்.

************************
நாவலில் இருந்து;
"மண்ணுக்குள் புதைத்த பின்னர் நாம் எல்லோரும் எட்டு ஆண்டுகளில் மண்ணோடு மண் தான். ஆனால், தோல் தொழிற்சாலையில் வேலை செய்பவனுக்கு மட்டும் கூடுதலாக ஒரு ஆண்டு ஆகும்"
"ஏன்?"
"அவன் தோல் ஏற்கனவே கொஞ்சம் பதப் படுத்தப் பட்டிருக்கும்"

---------------

"டாக்டர், கற்பனையில் நான் கொன்றவர்களை விட, நிஜத்தில் நீங்கள் கொன்றவர்கள் அதிகம்"
-------------

"சுவாமிஜி"
"இங்கே யாரும் சாமி இல்லை.. எல்லோரும் பூதம் தான்"
************************

புத்தகம் வாங்க: உடுமலை.காம்


5 comments:

  1. அசோகமித்திரன், ஞானபீடம் பெறவேண்டிய நாவலாசிரியர். ‘மானசரோவர்’ நாவலை நான் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் படித்திருக்கிறேன். துல்லியமான பாத்திரப்படைப்பும், புதிர் இழையோடும் (mystic) கதைப்போக்கும் நம்மை ஆழ்ந்து படிக்கத் தூண்டுவதாகும். உங்களைப்போன்ற வலைப்பூவினர் இம்மாதிரி தரமான நூல்களை இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதைத் தம் தலையாய கடமையாகக் கொள்ளவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

    ReplyDelete
  2. @Chellappa Yagyaswamy

    என்னால் முடிந்த வரையில், நான் படித்த புத்தகங்கள் பற்றி இந்த தளத்தில் எழுதி உள்ளேன். நீங்கள் சொல்லியது போல், இன்னும் நல்ல புத்தகங்கள் பற்றி எழுத முயற்சிக்கிறேன்...

    தங்களுக்கு எனதன்பு நன்றிகள்..

    ReplyDelete
  3. ’மானசரோவர்’ஒரு அருமையான வாசிப்பு அனுபவம். அவ்வளவு பெரிய நாவலை அதன் புனிதம் கெடாமல் இப்படியெல்லாம் சுருக்கிச் சொல்லமுடிகிறதா? உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைவே . உங்களது பார்வை படிக்க தூண்டுகிறது .

    கோவியில் தான் இருக்குறீங்களா ...?

    ReplyDelete
  5. நன்றிங்க ஜீவன்சுப்பு..
    ஆமாங்க, கோவை தான்..

    ReplyDelete