Tuesday, December 11, 2012

எனது டைரியிலிருந்து - 6

விற்ற காசு

தோப்பும் துரவும்
வீடும் கிணறும்
விற்று வாங்கிய
தொகையை
எண்ணிக்  கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்
அனைத்திலும்
அப்பாவின் முகம்.

- ந. கண்ணன் (ஆனந்த விகடன்)



===================================================

தோல்வி

கடைசி சவம் விழுந்ததும்
கட்டாயம் அறிவிக்கப்படும்
வெற்றிபெற்ற கடவுள் பெயர்.

- எஸ். ஏ. நாசர் (ஆனந்த விகடன்)


===================================================

நடைபாதை ஓவியன்

கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.

- எம். மாரியப்பன் (ஆனந்த விகடன்)
===================================================

அகத்தகத்தினிலே

காதலர் தினம், அன்னையர் தினம்
என வரிசையாய்
எல்லா தினங்களின் போதும்
நீ கொடுத்த
முத்தங்கள், கடிதங்கள்
வாழ்த்து அட்டைகள், பரிசுகள்
என எல்லாவற்றையும்
அடிக்கடி நினைத்துப் பார்த்து
உயிர்த்திருக்கிறேன் பலமுறை.
வழக்கமானதொரு மாலைப்பொழுதில்
என் தலை கோதி, உச்சி முகர்ந்து
'......ப் போல இருக்கிறாய்'
என்று அனிச்சையாய்
யாரோ ஒரு நடிகனின் பெயரை
நீ சொன்னபோது
செத்துப்போயவிட்டேன்
ஒரேயடியாக.

- ஆதி (ஆனந்த விகடன்)

No comments:

Post a Comment