Sunday, October 31, 2010

சின்னஞ்சிறு துளிகள் (31/10/2010)

விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் ஒருவர் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். தனியார் பள்ளியோ, அரசுப் பள்ளியோ முறையாக எந்தப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் இன்னும் கொடுமை. அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த நரகத்தைப் பற்றி. பசங்கள் கூட பரவாயில்லை, கொஞ்சம் பெரிய பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?. எவ்வளவோ இலவசங்களை அள்ளி வழங்கும் அரசுகள் கொஞ்சம் கவனித்தால் நமது செல்வங்கள், பள்ளியில் ஒரு பிரச்சனையிலிருந்து தப்பி விடுவார்கள்.

********************************

தன்னை பாதித்த சம்பவமாக ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில்;

"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வைத்தியனாதபுரம் என்ற கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஒன்று இயங்குகிறது. வெறும் பத்துக்குப் பத்து அறையில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலும் 25 மாணவர்கள் படிக்கின்றனர். எல்லோரும் ஒரே அறையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு மேசை, நாற்காலி கூடக் கிடையாது. மிக மிகக் குறைந்த சம்பளத்தில் அந்தப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார். 'ஒரே அறையில் ஆறு வகுப்பு மாணவர்களையும் எப்படிச் சமாளிப்பீர்கள்?' என்று அவரிடம் கேட்டேன். 'ஒன்று, இரண்டாம் வகுப்பினருக்கு போர்டில் எழுதிப்போட்டு படிக்கச் சொல்வேன். மூன்று, நான்காம் வகுப்பினரை எதிர் திசையில் திரும்பி அமர்ந்து படிக்கச் சொல்வேன். ஐந்து ஆறாம் வகுப்பு மாணவர்களை மற்ற திசையில் திரும்பி அமரச் சொல்லி நான் பாடம் நடத்துவேன்' என்றார். கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? "

********************************

கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்திக் கொண்டு போய் வாய்க்காலில் தள்ளி விட்டு வந்துள்ளான் ஒருவன். பள்ளிக்கு கூட்டிச் செல்லும் கால் டாக்ஸி மூலம் அவன் அவர்களைக் கடத்திக் கொண்டு போயுள்ளான். பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் இக்கட்டான சூழலில் தப்பிக்க வழி முறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். முன் பின் தெரியாத ஒருவன் வெளியே எங்கேனும் கூப்பிட்டால் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தலாம். பாவம் அந்தக் குழந்தைகள். ஒரு குழந்தையின் உடல் கிடைத்து விட, இன்னொரு குழந்தையின் உடலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

செல் போனால் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அந்தக் குழந்தைகளை கடத்தியவனை காட்டிக் கொடுத்தது செல் போன் தான். அவனைப் பிடிப்பதற்குள் வாய்க்காலில் தள்ளி விட்டான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்ட சிறுவனை வழியில் காட்டிக் கொடுத்ததும் செல் போன் தான்.

********************************

ஒரு நாள் காலையில் தொலைக்காட்சியில் ஜெயலலிதா அம்மா ஒரு பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தார். சிக்கென்ற உடையில் பினனால் சிறகுகள் போன்ற அலங்காரத்துடன் ஆடிக் கொண்டிருந்த அந்த பாடலை வீட்டில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போது 'இப்போ இந்த பாட்டை அம்மா பார்த்துட்டு இருந்தாங்கன்னா என்ன நெனப்பாங்க' என்றேன். அப்போ தங்கமணி 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு நெனப்பாங்க' என்று ஒரே போடா போட்டாங்க பாருங்க, ஒரே சிரிப்பு மழைதான்.

********************************

என்னைப் பாதித்த சின்ன விடயங்கள் பற்றி இனி எழுதலாம் என்று நினைக்கிறேன். இதே தலைப்பை வேறு யாராவது வைத்திருந்தால், எனக்குத் தெரியப்படுத்தவும். நான் மாற்றிக் கொள்கிறேன். நன்றி.

Thursday, October 28, 2010

தலைவர்கள் வருகிறார்கள்..















தேர்தலுக்கும்
இடைத் தேர்தலுக்கும்
வெள்ளம் வந்தாலும்
தீ வைத்துக் கொண்டாலும்
கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும்
உதவிகள் வழங்கவும்
கடைகள் திறப்பிற்கும்
எங்கள் தலைவர்கள்
அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள்
நோயுற்றிருக்கும் நோயாளியை
பார்க்க வருவது போன்றும்
மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !


{ இது ஒரு மீள் பதிந்த பதிவு :) }

நன்றி: புகைப்படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.

--------------------------------------------------