சிறைச்சாலைகளில்
ஒவ்வொரு நாளும் கைதிகளின் பரேடு நடப்பது வழக்கம். வழக்கம் போல ஒருநாள்,
அந்த சிறையின் ஒரு வார்டில் கைதிகளின் பரேடு நடக்கிறது. எல்லா அறைகளிலும்
இருந்து, கைதிகள் வெளியே வந்து நிற்க.. ஓர் அறை மற்றும் திறக்கவே இல்லை.
காவலர்கள் கத்திக் கூப்பிடுகிறார்கள். அப்பொழுதும் எந்த பதிலுமில்லை.
காவலர்கள், அந்த அறைக்குச் சென்று பார்க்கிறார்கள். அங்கே கைதியைக்
காணவில்லை. இரவு அந்த அறைக்குச் சென்ற கைதி, எப்படித் தப்பியிருப்பான்
என்பது புரியாமல் திகைக்கிறார்கள். பக்கத்து அறை நண்பனைக் கேட்கிறார்கள்.
அவனுக்கும் தெரியாமல், திகைத்து நிற்கிறான்.
******
ஆண்டி ஒரு வங்கி அதிகாரி. அவனின் மனைவி கொலை வழக்கில்,
எதிர்பாராவிதமாக ஆயுள் தண்டனை பெறுகிறான் ஆண்டி. சிறைக்கு வரும் அவன், ரெட்
என்ற நண்பனின் உதவியால், ஒரு சுத்தியையும், ஒரு நடிகையின் பெரிய
புகைப்படத்தையும் வாங்கி தன்னுடன், அறையில் வைத்துக் கொள்கிறான்.
அவ்வப்பொழுது அந்த சுத்தியைக் கொண்டு, கற்களில் சின்ன சின்னப் பொருட்களைச்
செய்கிறான்.
அந்த சிறையின் வார்டன் பைபிள் மேல் ஆழ்ந்த பற்று கொண்டவர்.
ஆண்டியைச் சந்திக்கும் வார்டன், அவனுக்கு ஒரு பைபிளைத் தருகிறார். ஆண்டி,
சிறையின் சுவற்றில் ஒட்டி இருக்கும் நடிகையின் புகைப்படத்தை பார்க்கிறார்
வார்டன்.
ஒருமுறை, சிறையில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, வரி மற்றும்
வங்கி பற்றிய சந்தேங்களை தீர்க்கிறான் ஆண்டி. இதனால் அங்கே அவனுக்கு ஒரு
நல்ல மதிப்பு ஏற்படுகிறது. சிறையில், சில முன்னேற்றங்களைச் செய்கிறான்
ஆண்டி. வெளியே இருந்து சில வேலைகளை நாம் செய்தால், நல்ல லாபம் உண்டு என்று
வார்டனிடம் கூற, வார்டனும் ஒத்துக்கொள்கிறார். நூலகம் மற்றும் சிலருக்கு
விட்டுப்போன கல்வியைக் கற்றுத் தருகிறான் ஆண்டி.
வார்டனோ, சிறைக் கைதிகள் செய்யும் வேலைக்கு கிடைக்கும்
பணத்தை, ஆண்டியின் அறிவுரைப்படி இன்னொரு பினாமி பெயரில் போட்டு வருகிறார்.
அந்தக் கணக்குகள் அனைத்தையும் ஆண்டியே கையாள்கிறான். தினமும் இரவு
வார்டனின் மேற்பார்வையில், கணக்கு வழக்குகளை முடித்து ஒரு அலமாரியில்
வைத்து பூட்டி வைக்க வேண்டியது ஆண்டியின் வேலை.
இப்படியே வருடங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சிறைக்கு டாம்
என்ற கைதி வருகிறான். ஆண்டி மற்றும் ரெட்டிடம் அவன் நன்றாகப் பழகுகிறான்.
எதேச்சையாக ஒரு நாள், ஆண்டியின் மனைவி கொலை வழக்கு பற்றிச் சொல்கிறான்.
அதைச் செய்தது இன்னொருவன் என்றும், ஆனால் சிறையில் இருப்பதோ இன்னொருவன்
என்றும் சொல்கிறான்.
இதைக் கேட்ட ஆண்டி, வார்டனிடம் போய், தன்னை சிறையில் இருந்து வெளியேற
உதவி செய்யக் கோருகிறான். வார்டன் மறுக்கிறார். 'உங்களைப் பற்றி, நீங்கள்
செய்யும் தில்லு முல்லுகளைப் பற்றி எல்லோரிடமும் நான் சொல்வேன்' என்று
கத்துகிறான் ஆண்டி. கோபம் கொண்ட வார்டன், ஆண்டியை தனிமைச் சிறையில் அடைக்க
உத்தரவிடுகிறார். அதே இரவு, ஒரே சாட்சியான டாம் கொல்லப்படுகிறான். தப்பிச்
செல்லும்பொழுது, சுட நேர்ந்ததாக அவன் கதையை முடிக்கிறார்கள்.
தனிமைச் சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டி, தன் நண்பன்
ரெட்டிடம், நான் இன்று வெளியே செல்லப் போகிறேன், நீ வெளியே வந்தால், (ஒரு
முகவரியை சொல்லி).. அங்கே உனக்காக ஒன்று காத்திருக்கும்.. என்று
சொல்கிறான். ரெட் திருதிருவென முழிக்கிறார். வழக்கம் போல, வார்டனின் கணக்கு
வழக்குகளை முடித்து விட்டு, அறைக்கு வந்த ஆண்டி.. அடுத்த நாள் காலை அந்த
அறையில் இல்லை.
செய்தி கேட்டு, அந்த அறைக்கு வரும் வார்டன், கோபத்துடன்
கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து, போஸ்டரில் சிரிதுக் கொண்டிருக்கும்
நடிகையின் மீது வீச, கல் திரும்பி வராமல் போஸ்டரைக் கிழித்துக்கொண்டு உள்ளே
செல்கிறது.அந்த போஸ்டரைக் கிழித்து வீசினால், அங்கே ஒரு சுரங்கப்பாதை
இருக்கிறது. இத்தனை நாட்களாக, அந்த சிறு சுத்தியைக் கொண்டுதான் அந்த
சுரங்கத்தை அவன் தோண்டி, இப்பொழுது தப்பியும் விட்டான்.
வெளியே வந்த ஆண்டி, பினாமி பெயரில் போட்டிருந்த எல்லாப்
பணத்தையும் எடுத்துக்கொண்டு, மறக்காமல் தன்னிடமிருந்த வார்டன் பற்றிய
அனைத்துக் குறிப்புகளையும் ஒரு நாளிதழுக்கு அனுப்பி விடுகிறான். அங்கே
சிறையில், அலமாரியைத் திறந்து பார்க்கும் வார்டன் அங்கே பைபிளும், அதற்குள்
கச்சிதமாக வெட்டப்பட்ட இடத்தில் அந்த சுத்தியும் இருக்கிறது. விஷயம்
வெளியே கசிந்ததும் வார்டன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறக்கிறார்.
ஆண்டியின் நண்பன் ரெட், சிறையிலிருந்து வெளியே வந்ததும்..
ஆண்டி சொன்ன இடத்துக்கு சென்று பார்க்கிறார். அங்கே ஒரு மரத்தினடியில்,
ஆண்டியின் முகவரியும், கொஞ்சம் பணமும் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு
புறப்படுகிறார் ரெட். ஒரு கடற்கரை ஓரத்தில், ஆண்டியை ரெட் சந்திப்பதுடன்
படம் முடிகிறது.
வல்லவனுக்கு ஒரு சிறு சுத்தி கூட ஆயுதம் தான்.
******
ஒரு
நாள் யாருக்கும் தெரியாமல் ஒரு பாடலை, ஒலிபெருக்கியில் அனைவரும்
கேட்குமாறு மெய்மறந்து ஓட விட்டுக் கேட்கிறான் ஆண்டி. அந்த இசை சிறை
முழுவதும் வலம் வருகிறது. காவலர்கள் அந்த அறையை உடைத்து வந்த பின்னரே அந்த இசையை நிறுத்த முடிகிறது. அதற்காக தண்டனையும் பெறுகிறான் ஆண்டி.
வாழ்நாள்
முழுவதும் சிறையில் கழித்தவர்கள், வெளியே வந்ததும் தடுமாறிப் போகிறார்கள்.
சிறையிலாவது சிலர் இருந்தார்கள். அதுவும் வயதின் தனிமையில் அவர்கள்
அடையும் துன்பம் சொல்லில் அடக்கி விட முடியாதது. சிறை வாழ்வை
முடித்துவிட்டு, வெளியே வேலை செய்யும் இடத்தில, 'நான் சிறுநீர் கழிக்கப்
போகலாமா?' எனக் கேட்க, அவர்களோ ஒரு புன்னகையுடன் 'நீங்கள் எப்பொழுது
வேண்டுமானாலும் செல்லலாம்' எனச் சொல்கின்றனர். சிறுநீர் கழிப்பதற்கு கூட,
அனுமதியை வேண்டி காத்திருக்கச் சொல்கிறது அவரின் சிறை வாழ்க்கை.
சிறையில் இருந்து வெளியே வந்ததும், முன்பொரு நாள் ஒரு பெரியவர்
தூக்கிட்டு இறந்த அதே அறையில் ரெட் தங்க நேர்கிறது. அந்தப் பெரியவரின்
முடிவையே எடுக்க நினைக்கும் ரெட், அதை மறந்து தன் நண்பன் ஆண்டியைத் தேடிச்
செல்கிறார்.
பார்க்க வேண்டிய படம்.
படங்கள்: இணையத்தில் இருந்து...
******