Tuesday, December 10, 2013

அரவிந்த் கெஜ்ரிவால்

"சிறு ரத்தம் குடிக்கும் கொசுவை கொன்று விட முடிகிறது, பெரு ரத்தம் குடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை." - என்று ஒருமுறை ட்விட்டரில் எழுதினேன். ஊழல் அற்ற ஆட்சியும், நேர்மையும் கிலோ என்ன விலை என்று கேட்ட கட்சிகளையே பார்த்திருந்த நமக்கு, இப்படி இரத்தத்தை உறிஞ்சி, உறிஞ்சி கொல்கிறார்களே என்ற கோபம்  இருந்தது.

இவ்வளவு ஆண்டுகளாய் அரசியலில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற கட்சிகளுடன் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது 'ஆம் ஆத்மி' கட்சி.

சரி, இவ்வளவு வெற்றி பெற்ற இவர்கள், வருங்காலத்தில் நல்ல ஆட்சியைக் கொடுப்பார்களா என்று நாம் நினைக்கலாம். அதைப் பின்னர் பார்க்கலாம்.

ஆனால், இந்தத் தேர்தல், இந்திய திருநாட்டில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது, மகுடிகளுக்கு மக்கள் எப்பொழுதும் மயங்க மாட்டார்கள் என இன்னுமொரு முறை உரக்க பறை சாற்றியிருக்கிறது.

அரசியல்வாதிகளே, அரசியல் சாக்கடையைத் தூர்வார நீங்கள் தயாராக இருந்தால், எங்கள் வாக்குகள் என்றும் உங்களுக்கே.

Wednesday, December 4, 2013

வீட்டுத் தோட்டத்தில்: தேன் வாழை (கற்பூரவள்ளி)

ஊரிலிருந்து தேன்வாழை மற்றும் செவ்வாழை என இரண்டு வகையான வாழைக் கன்றுகளைக் கொண்டு வந்தார் அப்பா. வைத்த கொஞ்ச நாட்களிலேயே தேன் வாழை துளிர் விட, செவ்வாழை மிகவும் தாமதமாக துளிர் விட்டது. தார் விடுவதிலும் தேன் வாழையே முந்திக் கொண்டது. இந்த வாழையை கற்பூர வள்ளி என்றும் சொல்கிறார்கள்.


தார் விட்டதும், கம்புகளை வைத்து முட்டுக் கொடுக்க எந்தச் சிரமும் இல்லாமல் வளர்ந்தது. தார் சாய்ந்து போன சாயலைப் பார்த்தால், சின்ன காற்றுக்கே விழுந்துவிடுமோ என பயந்து கொண்டிருந்தோம். அப்படி எல்லாம் நடக்காமல் கம்பு தாங்கிக் கொண்டது. சீப்புக்குச்  சராசரியாக 14 காய்கள் என, பத்து சீப்பு பிடித்திருந்தது.



அவ்வப்பொழுது பக்க கன்றுகளை அறுத்து விட்டோம். இரண்டு தடவை வேப்பம் புண்ணாக்கு போட்டு,  மாதம் ஒருமுறை மீன் தொட்டி கழுவிய தண்ணீரை ஊற்றி விட்டோம்.



ஒரு சீப்பில். காய் சிறிதாக மஞ்சள் நிறத்துக்கு மாறியது. இரண்டொரு நாள் கழித்து, நன்றாகப் பழுத்த பின்னர் தாரை வெட்டிக் கொள்ளலாம் என இருந்தோம். அடுத்த நாள் காலை, அந்தச் சீப்பில் ஒரு பழம் மட்டும் யாரோ சாப்பிட்டது போல, வெறும் தோல் மட்டும் இருந்தது. அணில் சாப்பிட்டு போயிருக்கும் என நினைத்துச் சுற்றிலும் பார்த்தால், மேலே வாழை இலையில் ஒரு வௌவால் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது. எங்கே இருந்துதான் வாசம் பிடித்ததோ, இரவில் முழுப் பழத்தையும் தின்றுவிட்டு ஓய்வு எடுப்பது போல தொங்கிக் கொண்டிருந்தது.



தாரை வெட்டிய பின்னரும் வௌவால் நகரவில்லை. சரி பகலில் ஏன் அதை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து, மாலையில் இரவான பின்னர் ஒரு கம்பை வைத்துத் தட்ட பறந்து விட்டது வௌவால். அடுத்த நாள் வாழை மரத்தை வெட்டி தண்டுகளைச்  சமைக்க எடுத்துக் கொண்டோம்.

வௌவால் கடித்த சீப்பு சீக்கிரம் பழுக்க, அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொரு சீப்பாக பழுத்து விட்டது. சொந்தம், அக்கம் பக்கம் என ஒரே தேன் வாழை வாசம்தான். ரசாயன் உரங்கள் இல்லாமல், வீட்டுத்  தோட்டத்தில் விளைந்த பொருளின் சுவை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இரண்டு, பக்கக் கன்றுகள் நன்றாக வளர ஆரம்பித்து விட்டன. இன்னும் சில மாதங்களில் அவைகளும் குலை தள்ளத் தொடங்கும்.

குலை தள்ளியுள்ள செவ்வாழை: