Friday, September 6, 2013

ஈராறுகால்கொண்டெழும் புரவி

எழுத்தாளர் ஜெயமோகனின் ஐந்து கதைகளும், ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு 'ஈராறு கால் கொண்டெழும் புரவி'.


ஈராறு கால் கொண்டெழும் புரவி(குறுநாவல்):

சாஸ்தான்குட்டிப்பிள்ளை தமிழ் ஆசிரியர். பேறுகாலத்தில் மனைவி இறந்து விட, தனி மரமாகிறார். சித்தர் ஞானம், சித்தர்கள் பாடல் என்று தணியாத ஆர்வம். இரண்டு வேம்பு குசிச்களை மட்டும் வைத்துக்கொண்டு, நிலத்துக்கடியில் ஊற்றை எப்படி கண்டறிகிறார்கள் என்று யோசிக்கிறார். தள்ளாத வயதில், ஒரு மலை மேல் சென்று குடில் அமைத்து 'சாமியார்' என அறியப்படுகிறார். அங்கே அவர் நட்டு வைத்த மாமரம், வளர்ந்து ஒரு காய் கூட பிடிக்காமல் இருக்கிறது. கொஞ்ச வருடங்கள் கழித்து, ஊருக்கு வருகிறார். அங்கே தான் அறிந்த, ஞானமுத்தனின் மருகளிடம் நீர் அருந்தி உயிர் துறக்கிறார். அவரின் சாம்பலை அந்த மாமரத்தின் அடியில் போட்டவுடன், அந்த வருடம் முதல் மாமரம் காய்த்து தொங்குகிறது.


இந்நாவலைப் பற்றி ஜெயமோகன்:
"என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறு கால் கொண்டெழும் புரவி. சித்தர் ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. அர்த்தமற்ற விளையாட்டல்ல. பல்வேறு மூல நூல்களின் வரிகள் அதில் பகடியாக திருப்பப்பட்டுள்ளன. திரிக்கப்பட்டுள்ளன.  அந்த விளையாட்டு வெறும் கேலி அல்ல. என்னைப் பொறுத்தவரை அது ஒருவகை பொருள் கொள்ளலே. எல்லா வாசகர்களுக்கும் நூல்களும் மொழியும் மாறி மாறி கவ்வி ஆடும் அந்த விளையாட்டு பிடி கிடைக்காது போகலாம்."
சில வரிகள் நாவலில் இருந்து;
"ஓடுவது மண்ணிலன்னா என்ன, மண்ணுக்கு அடியிலண்ணா என்ன"

"மொத்தம் ரெண்டு பூலோகம் இருக்குதுன்னு ஒரு மண்புழு நெனச்சுட்டு. ஒண்ணு அது திங்கப்போற மண்ணு. இன்னொண்ணு அது தின்னு வெளிக்கெரங்கின மண்ணு"

"ருசிச்சது உம்ம பசி அய்யா. பசிக்கப்பால் உள்ள ருசியென்ன?"



அலை அறிந்தது:

வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் 'அத்தர் பாய்' பற்றிய கதை. அலை என்பது மேலேயும் போகும், கீழேயும் போகும். மேலே போன அலை கீழே இறங்க  வேண்டும் என்பது விதி. ஒரு காலத்தில், அத்தர் பாயின் தாத்தா மிகுந்த செல்வத்துடன் இருந்திருக்கிறார். ரம்ஜான் அன்று, சக்காத்து பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வீசிய குடும்பமாக இருந்திருக்கிறார்கள். அவ்வளவு செல்வாக்குடன் இருந்து, இப்பொழுது வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் பாய் சொல்கிறார்; 'அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை.. கீழ எறங்குத நேரத்துல நாம வந்து பொறந்தாச்சு ... சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தல மொற கஷ்டப்படணுமோ'.

களம்:

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் அன்று அரங்கேற்ற நாள். தாங்கள் கற்ற கலைகளை அவர்கள் மன்றத்தின் முன்னால்  அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். நகுலன், பீமன் என முடிய.. துரோணர் அர்ச்சுனனை அழைக்கிறார். வில் விஜயனான அவன், பறந்து செல்லும் ஒரு குருவியின் தலையை வெட்டி வீழ்த்துகிறான் தனதம்பால். மகிழ்ந்த துரோணர் 'இவனைப் போல வில்லாளி யாருமே இந்தப் புவியில் இல்லை' எனக் கூற, அரங்கத்தினுள் கர்ணன் வருகிறான். பறந்து செல்லும் ஒரு குருவியின் ஒற்றைச் சிறகை அது அறியாமல் தன்  அம்பால் அறுத்து, கைக்கு கொண்டு வந்து தலைக்கு சூடிக் கொள்கிறான். அர்ச்சுனன் துடிக்கிறான். இருவரும் போர் புரிய முடிவு செய்கிறார்கள். கர்ணனின், குலம் என்ன என்று கேட்க, கோபம் கொண்ட துரியோதனன் 'இவன் என் நண்பன். எனக்குச் சொந்தமான அங்கத நாட்டுக்கு இவனை மன்னன் ஆக்குகிறேன்' என்கிறான்.


 அங்கே வரும் தேரோட்டி, தன் மகன் களத்தில் இருப்பதைப் பார்க்கிறான். கர்ணனிடம் மன்றாடி, போர் வேண்டாம் எனச் சொல்ல அவனும் சம்மதிக்கிறான். சூரியன் மறைந்ததால், சபை மரபுப் படி அரங்கம் கலைகிறது. அர்ச்சுனன், தர்மனிடம் "இவனைக் கண்டு நீங்கள் பயப் பட வேண்டாம். இவனை நாம் வெல்வோம்." எனக் கூற, தர்மனோ " தன் அறத்தால் இந்த சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி. இன்று அந்த சூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது என் மனம் உவகை கொண்டது. நீயும் பீமனும் எல்லாம் உவகை கொண்டோம். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்” என்கிறான்.

பழைய முகம்:

சினிமா உலகம் எப்பொழுதுமே மிகை அலங்காரத்தால் ஆனது. அந்த அலங்காரத்தை நீக்கி விட்டால், அவர்களுக்கும் காதல் உண்டு, பிள்ளைகள் உண்டு, பிரச்சினைகளும் உண்டு. தான் சிறு வயதில் பார்த்து வியந்த ஒரு நடிகையை சந்திக்க நேர்கிறது அதுவும் பாலியல் தொழில் புரிபவளாக. முதலில் அது தான் இல்லை என்று மறுக்கும் அவள்,  பின்னர் ஒத்துக் கொள்கிறாள். கூடப் பிறந்த சகோதரர்கள் தன்னை ஏமாற்றியது, கூட்டி வந்தவன் தன்னை ஏமாற்றிய கதை என எல்லாவற்றையும் சொல்கிறாள். கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி வாங்கிய அடிகள், பத்துக்கு மேற்பட்ட முறை கருக்கலைப்பு, கடைசியில் பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு என போய்க் கொண்டிருக்கிறது அவள் வாழ்க்கை. இரவு முழுவதும் அவள் நடித்த பாடல்களைச் சளைக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறாள் அந்த நடிகை.

மன்மதன்:

சிற்பங்களைப் பார்க்க ஒரு கோவிலுக்குச் செல்கிறான் கிருஷ்ணன். அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் பூக் கட்டிக் கொண்டிருக்க, அவளின் பேரழகை வியந்து நோக்குகிறான். அவளிடம், 'சிற்பங்களைப் பர்ர்க்க வேண்டும்' எனச் சொல்ல ஓடிப் போகும் அவள் ஒரு ஆளைக் கூட்டி வருகிறாள். அந்தப் பெண்ணின் கணவன்தான் அவன். கண் பார்வை அற்ற ராஜூ. ராஜூ சிற்பங்களைப் பற்றி விளக்குகிறான். ஒவ்வொரு சிலையையும் கைகளால் தொட்டே, அதன் அற்புதங்களைப் பற்றிச் சொல்கிறான். கொஞ்ச நேரத்தில், அந்தப் பெண் தான் சந்தைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு போகிறாள். அவளிடம் சரி என்று சொல்லி விட்டு, மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் மன்மதன் சிலையைக் காட்டி, "மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்..அந்தக் கரும்பு வில்லும்.. மலரம்பும் மட்டும்தான்".



அதர்வம்:

தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வழி தெரியாமல் தவிக்கிறான் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன். அதர்வ வேதம் அறிந்த யாஜரை அணுகுகிறார்கள். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அழிக்கும் வல்லமையோடு ஒரு மகள் வேண்டும் என்கிறான் மன்னன். முதலில் மறுக்கும் அவர்கள், அவனிடம் "குரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும்" என்று சொல்லிப் பார்க்கிறார்கள். மன்னன் மனம் மாறுவதில்லை. இதுதான் நடக்கும் என்பதை அறிந்த அவர்கள், யாகத்துக்குச் சம்மதிக்கிறார்கள். யாகம் முடியும் தருவாயில், தேவதையின் அனுக்கிரகம்  இருப்பதாகவும், அவளே குழந்தையாக பிறப்பாள் எனச் சொல்கிறார் யாசர். நீரில் அவள் முகத்தை காட்டுகிறார். பேரழகும், கருணையும், விவேகமும் உடையவளாக அந்த பெண் குழந்தை தோன்றுகிறது. துருபதன் 'இவள் பெயர் திரௌபதி, இனி இவள்தான் பாஞ்சாலி…' என்று நடுங்கிக் கொண்டே நீரைத் தொட, பிம்பம் கலைகிறது. யாக குண்டத்தில் இருந்து அக்னி மேலெழுந்து கொண்டிருக்கிறது.


படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி.

Friday, August 30, 2013

சினிமா: தி பாய் இன் தி ஸ்ட்ரிப் பைஜாமா(The Boy in the Striped Pyjamas)

யூத மக்களுக்கு, ஹிட்லர் அரசு செய்த கொடுமைகளை வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List), லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)   போன்ற படங்கள் அவற்றில் சில. இந்த இரண்டு படங்களையும் போலவே, 'தி பாய் இன் தி ஸ்ட்ரிப் பைஜாமா' படமும் யூத மக்களின் துயரங்களையும், அவர்கள் சந்தித்த இன்னல்களையும் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.

எட்டு வயதுச் சிறுவன் புருனோ. அவனை விட நான்கு வயது மூத்த அக்கா அவனுக்கு உண்டு. அவன் தந்தை ஹிட்லரின் படையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவன் தந்தை, பதவி உயர்வினால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். புருனோவுக்கு இந்த ஊரையும், அவன் நண்பர்களையும் விட்டுப் பிரிய மனமில்லை. அவனது அம்மா எல்சா, அவனை சமாதானம் செய்கிறாள்.


நீண்ட தூரம் பயணித்து, புதிய இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். ஒரு காடு போல இருக்கும் பாதையில் அவர்களின் புதிய வீடு அமைந்து இருக்கிறது. பழைய ஊரில், தன் நண்பர்களோடு சுற்றித் திரிந்த புருனோவுக்கு தன்னந் தனியாக அமைந்து இருக்கும் இந்த வீடு பிடிப்பதில்லை. இவனுக்கோ வெளியே சுற்ற வேண்டும் என்பது ஆசை. அவனின் அக்காவோ, தனது பொம்மைகளுடன் நேரத்தை போக்குகிறாள். அவளுடன், புருனோ விளையாட விரும்புவதில்லை.

எந்நேரமும் காவல் உண்டு. பக்கத்தில் வீடுகள் இல்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. தன் அறையில் இருந்த, ஜன்னல் மூலம், தூரத்தில் இருக்கும் சில  வீடுகள் போன்ற கட்டிடங்களைப் பார்க்கிறான். 'அங்கே பண்ணை வீடுகளில், விவசாயிகள் இருப்பார்கள்.. அங்கே எனக்கு நண்பர்களும் கிடைப்பார்கள்' என்று வீட்டில் உள்ளோரிடம் விசாரிக்கிறான். அதற்கு  அடுத்த நாளே அந்த ஜன்னல் அடைக்கப் படுகிறது.

வீட்டில் வயதான ஒரு யூத கைதி(பாவெல்) வேலை செய்கிறார். யாரும் இல்லாத பொழுது, புருனோ கீழே விழுந்து அடி பட, அவன் காயத்துக்கு அவர் மருந்து போடுகிறார். 'பயப்பட வேண்டாம்.. நாளைக்கு சரியாப் போகும்' என்கிறார் அவர். 'அது எப்படி உங்களுக்குத் தெரியும்?.. நீங்கள் டாக்டரா?' எனக் கேட்கிறான். 'ஆம், நான் டாக்டர்தான்' என்கிறார் அவர். 'நான் நம்ப மாட்டேன்.. பிறகு ஏன், நீங்கள் உருளை கிழங்கின் தோல்களை உரித்துக் கொண்டிருக்க வேண்டும்' என்று கேட்க, ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்க்கும் அவர்.. பேச்சை வேறு திசைக்கு மாற்றி விடுகிறார்.


புருனோவுக்கு, இன்னும் நேரம் போவதில்லை. வீட்டுக்கே வந்து சொல்லித் தரும் வாத்தியாரும், இன வரலாறு, யூத மக்களின் மீதான வெறுப்பு என்றே சொல்லித் தருகிறார். ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து அவனைப் படிக்கச் சொல்கிறார். ஆனால், வெளியே சுற்ற வேண்டும், நிறையப் பேருடன் பழக வேண்டும் என்றே ஆவலுடன் இருக்கிறான்.

ஒருநாள் வீட்டில் யாரும் கவனிக்காத நேரம், வீட்டின் பின்னால் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறையின் ஜன்னல் வழியாக அந்தப் பக்கம் போகிறான். சிறு ஓடைகள், செடிகள் என்று அவன் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறான். அந்த இடத்தில், ஒரு முள் வேலியிட்ட சில கட்டிடங்கள் தெரிகிறது. முன்னர் அவன் ஜன்னல் வழியாக பார்த்த இடங்கள் தான். பக்கத்தில் செல்லும் போதுதான் கவனிக்கிறான், முள் வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு சிறுவன் அமர்ந்து இருக்கிறான். புருனோ ஹலோ என்கிறான். அவனும் பதில் சொல்கிறான்.
'என் பெயர் புருனோ'
'நான் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை..என் பெயர் சாமுவேல்'
'இதற்கு முன்னர், நானும் சாமுவேல் என்கிற பேரைக் கேள்விப்பட்டதில்லை.. '
'சாப்பிட எதாவது வைத்து இருக்கிறாயா?'  என்கிறான் சாமுவேல்.
' இல்லை.. உனக்கு மிகவும் பசிக்கிறதா?.. சரி.. நீ யாருடன் விளையாடுவாய்?' எனக் கேட்கிறான் புருனோ
'விளையாட்டா ? நாங்கள் இங்கே புதிய குடிலைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்' எனச் சொல்லும் சாமுவேல், வேலை செய்து கொண்டிருக்கும் எல்லாப் பெரியவர்களும் கிளம்புவதால், இவனும் தன் மண் வண்டியைத் தள்ளிக் கொண்டு ஓடுகிறான்.



அடுத்த தடவை புருனோ போகும் பொழுது, சாக்லேட் மற்றும் சில தின்பண்டங்களையும் கொண்டு செல்கிறான்.
'ஏன், நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரியான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்.. எங்கள் வீட்டிலும் பாவெல் இந்த மாதிரிதான் உடை அணிகிறார்'
'நாங்கள் யூத இனம்' என்கிறான் சாமுவேல். அப்படி என்றால், என்னவெனத் தெரியாமல் அவனைப் பார்க்கிறான் புருனோ.

புருனோவின் அம்மா எல்சா, ஒரு நாள் கடைக்குப் போய்விட்டு வந்து, வீட்டின் முன் காரை விட்டு இறங்குகிறாள். காரை ஓட்டி வந்த காவலரிடம், தூரத்தில் சிம்னி வழியாகப் போகும் புகையைக் குறிப்பிட்டு 'தாங்க முடியவில்லை.. இது என்ன எப்படி நாறுகிறது' என்கிறாள். அதற்கு அவன் 'அவர்களை எரிக்கும் போது அப்படிதான் நாறும்' என்கிறான். அதைக் கேட்டதும் பிரமை பிடித்தவளாக, கணவனுடன் சென்று சண்டை போடுகிறாள். அவனோ, இது அரசாங்க கட்டளை, அதை நிறைவேற்றுவது என் கடமை எனச் சொல்கிறான்.



சில நாட்கள் கழித்து, சாமுவேல் ப்ருநோவின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பப் படுகிறான். நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில், அவனுக்கு சாப்பிடத் தருகிறான் புருனோ. இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அங்கே வரும் காவலன் 'யார் இதைக் கொடுத்தது.. திருடித் தின்கிறாயா?' என்று திட்ட, 'இவன் என் நண்பன், இவன்தான் கொடுத்தான்' என்கிறான் சாமுவேல். 'என்ன.. இவன் உன் நண்பனா?' என்ற காவலன், புருநோவிடம் 'இவனை உங்களுக்கு முன்னரே தெரியுமா?' எனக் கேட்கிறான். 'இல்லை.. இதற்கு முன்னர் நான் இவனைப் பார்த்ததில்லை' என்கிறான் புருனோ. 'திருடுவது தவறு.. அதற்கு உரிய தண்டனையை அடைய வேண்டும்.. நீங்கள் வாருங்கள், போகலாம்' என்றவாறு, புருனோவை அவன் அழைத்துச் செல்கிறான். தன் அறைக்குச் சென்று அழும் புருனோ, திரும்ப சாமுவேலைப் பார்க்க ஓடி வர,அங்கே அவன் இல்லை.

இரண்டு மூன்று முறை அந்த கம்பி வேலி அருகில் போய்ப் பார்க்கிறான் புருனோ. இரண்டு நாட்கள் கழித்து சாமுவேல், அங்கே கண்ணில் காயத்தோடு அமர்ந்து இருக்கிறான். அவனிடம் மன்னிப்பு கேட்கும் புருனோ, நாம் மீண்டும் நண்பர்களாக இருப்போம் என்கிறான். சாமுவேலும் சரி என்கிறான்.



இதற்கு இடையில் புருனோவின் அம்மா எல்சா, எப்பொழுதும் கணவனை எரித்து விடுவது போலப் பார்க்கிறாள். இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் நிம்மதியாய் இருப்பதில்லை. ஒரு நாள், ஒரு டாகுமெண்டரி படம் பார்க்க சில உயர் அதிகாரிகள் வருகிறார்கள். ஒரு பெரிய அறைக்குள் சென்று, அவர்கள் அமர்ந்தவுடன் கதவுகள் மூடப் படுகிறது. படம் திரையிடப் படுகிறது. முகாம்களில் எல்லா வசதிகளும் செய்யப் பட்டுள்ளது எனவும், எந்தக் குறையும் இல்லை போலவும் படத்தில் காட்டுகிறார்கள். குழந்தைகள் விளையாடுகிறார்கள். செடி வளர்க்கிறார்கள். விரும்பியதை உண்கிறார்கள். மொத்தத்தில் சந்தோசமாக இருக்கிறார்கள், என விளக்குகிறது படம். ஒரு சேரின் மேலே ஏறி இந்தப் படத்தை பார்த்து விடுகிறான் புருனோ. சாமுவேல் இருக்கும் இடத்திலும் இந்த மாதிரிதான் இருக்கும் என அவன் மனது நினைக்கத் தொடங்குகிறது.

புருனோவின் பாட்டி இறந்து விட, இறுதிச் சடங்குக்குச் சென்று வருகிறார்கள். புருனோ, சாமுவேலிடம் 'நீ ஏதாவது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கிறாயா?'.. ' இல்லை, இங்கே வந்ததும் என் தாத்தாவும் பாட்டியும் இறந்து விட்டார்கள்.. பின்னர், அவர்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்கிறான் சாமுவேல்.

 
வீட்டிலோ, எல்சா கணவனுடன் சண்டை போடுகிறாள். என்னால் இங்கே இருக்க முடியாது, நாங்கள் கிளம்புகிறோம் என்கிறாள். அடுத்த நாள் காலை, சிறுவர்கள் இருவரையு  அழைத்துப் பேசும் புருனோவின் அப்பா, 'அம்மா இங்கே இருக்க மறுக்கிறாள். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்துவிட்டு வருகிறேன். நீங்கள் அத்தை வீட்டில் சென்று கொஞ்ச காலம் இருங்கள்' என்கிறார். புருநோவுக்கு, திரும்பவும் ஒரு நண்பனை இழக்க வேண்டுமே எனக் கவலை ஏற்படுகிறது.

சாமுவேலிடம், நான் ஊரை விட்டுப் போகப் போகிறேன் எனச் சொல்கிறான். அவனோ, என் அப்பாவை காணவில்லை, எங்கே தேடுவது எனத் தெரியவில்லை என்கிறான். 'சரி நான் உனக்கு உதவுகிறேன்.. உன்னைப் போல எனக்கு ஒரு பைஜாமா கொண்டு வந்து கொடு.. இருவரும் சேர்ந்து உன் அப்பாவைத் தேடுவோம்' என்கிறான் புருனோ.


 அடுத்த நாள், கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வருகிறேன்.. என எல்சாவிட்ம் சொல்லி விட்டு அந்த முள் வேலிக்கு போகிறான். அங்கே, ஒரு பைஜாமா மேல் இன்னொரு பைஜாமா போட்டுக் கொண்டு, அவனுக்காக காத்திருக்கிறான் சாமுவேல். அவனைப் பார்த்ததும் ஒரு பைஜாமாவைக் கழட்டி, புருனோவுக்குத் தருகிறான். அவனும் அதை அணிந்து கொண்டு, கம்பிக்கு கீழே மண்ணைத் தோண்டி அந்தப் பக்கம் போகிறான் புருனோ. உள்ளே சென்றதும், சாமுவேலின் அப்பாவைத் தேடத் தொடங்கி ஒரு அறைக்குள் செல்கிறார்கள். உடனே, அங்கே வரும் ஒரு காவலர் எல்லாரையும் இன்னொரு அறைக்கு கூட்டிச் செல்கிறார். அந்தக் கூட்டத்துக்குள் மாட்டிக் கொள்ளும் இருவரும், கும்பல் செல்லும் வழியிலே நகர்கிறார்கள். இன்னொரு அறைக்கு வந்ததும், உடையை கழட்டச் சொல்லவும், எல்லோரும் அந்த பைஜாமாவைக் கழட்டி விட்டு.. இரும்புக் கதவு போடப் பட்ட ஒரு இடத்துக்குப் போகச் சொல்கிறார்கள். அங்கே அனைவரும் சென்றதும், அந்தக் கதவு தாழிடப் படுகிறது. மேலிருந்து, விஷ வாயு செலுத்தப்படுகிறது.

புருனோவைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கும், அவன் அப்பா அந்த அறையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். முள் வேலிக்கு அந்தப் பக்கம், அவன் போட்டுவிட்டுச் சென்ற துணிகளைப் பார்த்து  அழுது கொண்டிருக்கிறார்கள் அம்மாவும், அக்காவும்.