Tuesday, August 20, 2013

குறும்படம்: ஆந்தை பாலத்தில்.. (An Occurrence at Owl Creek Bridge)

(மெல்லிய இதயம் கொண்டவர்கள் இந்தப் படத்தை பார்ப்பதைத் தவிர்க்கவும்.)

இந்தக் குறும்படம் பற்றி, இரண்டு மூன்று வருடங்கள் முன்பு எங்கேயோ படித்து, பார்த்திருக்கிறேன். குறும்படம் பற்றித் தேடிக் கொண்டிருக்கும்பொழுது, இந்தப்  படம் நினைவுக்கு வந்தது. மனதை மிகவும் பாதிக்கும் படம்.

ஒரு ஆற்றின் மீது ஆந்தைப் பாலம் அமைந்து இருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தூக்கில் போடுவதற்காக, ஆந்தைப் பாலத்தின் மீது அவனைக் கொண்டு செல்கிறார்கள். எல்லோரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். தூக்கு கயிறு இறுக்கப்படுகிறது. அப்பொழுது, தூக்கு கயிறு அறுந்து, குற்றவாளி ஆற்றில் விழுந்து விடுகிறான்.

கயிற்றில் இருந்து தப்பிய அவன், ஆற்றில் நீந்த ஆரம்பிக்கிறான். உடனே, சுற்றி இருக்கும் காவலர்கள் துப்பாக்கியால் அவனைச் சுடுகிறார்கள். கரையில் இருந்து அவனைச் சுட்டுக் கொண்டே துரத்துகிறார்கள். அவன் நீந்திக் கொண்டே இருக்கிறான்.

ஒரு சமவெளியை அடைந்து, காடு தோட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறான்.

இறுதியில், ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். அவனின் மனைவியாகவோ அல்லது காதலியாகவோ இருக்கலாம். தூரத்தில் அவன் ஓடி வருவதைப் பார்த்து, அவளும் அவனை நோக்கி வருகிறாள். அவன், தனது இரு கைகளையும் அவளை நோக்கி அணைக்க ஓடி வருகிறான். பக்கத்தில் வந்ததும், அவளின் முகத்தை தன் இருகைகளால் ஏந்துகிறான்.

அதே சமயம், அவனை அந்தத் தூக்கு கயிறு இறுக்குகிறது. ஆம், அவன் தூக்கில் இருந்து தப்பிக்கவும் இல்லை. ஓடிப் போகவும் இல்லை.

ஒரு கண நேரத்தில் அவன் கண்ட கனவாக இருக்கலாம் அல்லது அவன் தப்பிக்க நேர்ந்து இருந்தால் இப்படிக் கூட நடந்து இருக்கலாம்.

கனவுக்கும், நிகழ்வுக்கும் இடையில் தானே நாம் வாழ்ந்து வருகிறோம். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று.


An Occurrence at Owl Creek Bridge


An Occurrence at Owl Creek Bridge from Jaime Puente on Vimeo


 

Wednesday, August 14, 2013

வீட்டுத் தோட்டத்தில்: அவரைக்காய்

ஊரில் இருந்து அப்பா தான் இந்த அவரை விதைகளைக் கொண்டு வந்தார். வழக்கமாக கடைகளில் கிடைக்கும் பட்டை அவரை போல பச்சை நிறத்தில் இல்லாமல் கொஞ்சம் வேறு நிறத்தில் இருக்கும். இந்த அவரையை ஊரில் "ஊர் அவரை" என்று சொல்வார்கள். அந்த அவரையைக் காட்டிலும், சுவையிலும் இதன் சுவை நன்றாக இருக்கும்.

சீசன் நேரங்களில் நன்றாக காய்க்கும். நான்கு ஐந்து மாதங்களுக்கு முந்திய செடியில் நிறைய காய்கள் பிடித்தது. மூன்று  வாரத்திற்கு, இரண்டு கிலோ பக்கம் கிடைத்தது.



இப்போது இருக்கும் இந்தச் செடி, பின்னர் விதை போட்டு வளர்த்தோம். பக்கத்தில் இருக்கும் மருதாணிச் செடி மீது படர்ந்து விட்டது. ஒரு கயிற்றில் அவரைக் கொடியை, மொட்டை மாடியில் இழுத்து விட்டார் அப்பா. மாடியில் நன்றாகப் பரவியது. கிடு கிடுவென வளர்ந்து, கடந்த ஒரு மாதமாக காய்கள் பிடிக்கின்றன. வாரத்துக்கு ஒரு கிலோ அவரை கிடைக்கிறது.





எந்த மருந்தும் அடிக்காமல், நன்றாகவே காய்க்கிறது. எல்லா நாளும் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காத காய் கறிகளை உண்ண முடியாமல் போனாலும், நம் வீடுகளில் கிடைக்கும் காய்களின்  மூலம் சில நாட்களாவது சுத்தமான காய்களை நாம் பெறலாம்.