Wednesday, July 17, 2013

குழந்தைகளுக்கு நேரமில்லை

குழந்தைகள், இப்பொழுது குழந்தைகள் இல்லை
பள்ளியில் இடம்  வேண்டி
ஆறு மாத குழந்தைக்கு
விடிய விடிய வரிசையில் நிற்கிறோம்

ஆறு மணிக்கு எழுந்து
காலைக் கடன்களை முடி
ஏழு மணிக்கு குளி 
எட்டு மணிக்கு வீதியில்
பள்ளி வண்டி நிற்கும்
அதற்குள் சாப்பிட்டு முடி

படிப்பது பாலர் வகுப்பு என்றாலும்
அரை மணி நேரம் பயணம் செய்து
பள்ளிக்கூடம் செல்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்
தமிழில் பேசாதிருப்பது முக்கியம்

அவனைவிட அதிக மதிப்பெண் எடு
காலையில் அடைத்து வைத்ததை
மதியம் சாப்பிடு
அவ்வபொழுது இயற்கை உபாதைகளை அடக்கி
நேரத்துக்கு செல்
வாரத்தில் ஒருநாள் மட்டும்
அரை மணி நேரம் பி.டி. நேரத்தில் விளையாடு

மாலை ஓய்ந்து வா
ஏதாவது தின்று தண்ணீர் குடி
மீண்டும் வீட்டுப் பாடங்களை எழுதிப் படி
டியூசன் போ.. அங்கும் படி
சனி, ஞாயிறும் டியூசன் இருக்கும்.
கொஞ்சம் நேரம் கிடைத்தால்
டி.வி பார்
கராத்தே, இசை, நடன வகுப்புகளில் சேர்..

அக்கம் பக்கத்தில் பேச நேரமில்லை
விளையாட்டு.. மூச்.
நேரத்துக்கு சாப்பிடு
நேரத்தில் தூங்கு
காலையில் நேரத்தில் எழ வேண்டும்.

பெரியவர்கள் போலவே
உங்களுக்கும் நேரமில்லை
குழந்தைகளே..


Friday, July 12, 2013

புல் வெளியில் ஒரு கல் - கவிஞர் தேவதேவன்

காட்டுச் செடி



காக்கை திருடி வைத்திருக்கும் வடையோ
அதைப் பறிக்க நினைத்த நரியோ
அல்ல

மர்மமான துக்க இருள் நடுவே
ஒரு காட்டுச் செடி
தூய்மையின் வண்ணத்துடன்
பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர்
ஆக மெல்லிய அதன் மணக் கைகள்
தட்டுகின்றன எல்லோர் கதவையும்

*************************
நீர்ப்பயம்


















நாய் கடிக்காது பார்த்துக்கொள்
அதிலும் வெறிநாய் கடித்தால்
பேராபத்து
அந்த வெறிநாய் போலே
ஊளையிட்டுத் திரிவாய்
தண்ணீர் அருந்த இயலாது
தொண்டை நரம்புகள் தெறிக்கும்
அப்புறம் தண்ணீரைக் கண்டாலே
அலறித் துடிப்பாய்
மரணத்தில்தான் உனக்கு விடுதலை
ஆகவே
நாய்க்கு வரும் நோய்பற்றிக்
கவலை கொள்
நாய் பற்றிக் கவலை கொள்

*************************
புல்வெளியில் ஒரு கல்



















புல்வெளி மீது சிறு குருவி வந்திறங்கித்
தத்திய காட்சி, அழிந்து
புல்வெளிமீது  ஒரு கல் இப்போது.
மனிதச் சிறுவன் ஒருவனால்
அந்தப் பறவை நோக்கி எறியப்பட்ட
கல்லாயிருக்கலாம் அது.

இப்போது புல்வெளி இதயம்
வெகுவாய்த் துடிக்கிறது
கூடுதல் மென்மையால்
கூடுதல் அழகால்.

*************************

கவிஞர் தேவதேவன் அவர்களின் 'புல் வெளியில் ஒரு கல்' கவிதைத் தொகுப்பிலிருந்து.