Wednesday, July 3, 2013

இறங்கள் !!

போன வாரம் திருப்பூர் சென்றிருந்தோம். சிக்னலுக்கு காத்திருந்த பொழுது, டிவைடர் கற்களில் டி.எம்.எஸ். அவர்களுக்கு ஒரு கட்சியின் சார்பாக இரங்கல் சுவரொட்டி ஒட்டி இருந்தார்கள். அதில் கடைசியில் இப்படி ஒரு வாக்கியம் இருந்தது;

டி.எம்.எஸ். அவர்களுக்கு​ ---------
-------------------------------------------
------  (கட்சியின்) சார்பாக
இறங்கள்


இதில் உள்ள எழுத்து பிழை ஒரு பக்கம் என்றாலும், நம்மையும் இறக்கச் சொன்ன இந்தச் சுவரொட்டியைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. அழுத்தம் திருத்தமாகத் தமிழை உச்சரித்துப் , பாடிய டி.எம்.எஸ். அவர்களின் ஆவி நிச்சயம் மன்னிக்காது.

இரங்கல் - இறங்கள் !! (இரண்டு வார்த்தைகளும் ஒன்று என நம்பி சுவரொட்டி தயாரித்தவர் வாழ்க)

நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது, எங்கள் தமிழ் அய்யா அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்வார்;

"மாவட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" - மேற்கண்ட வாக்கியத்தில், தெரியாமல் ஒரு கால் சேர்த்தால்;

"மாவாட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" !!

தெரியாமல் எங்காவது இது மாதிரி சேர்த்தால், அர்த்தமே மாறிவிடும், எனவே விழிப்போடு எழுதுங்கள் என்பார்.


அதிலும் இந்த, 'ல, ள, ழ' ,  'ந, ண, ன' மற்றும் 'ர , ற' என எழுதும்  பொழுது நிச்சயம் குழப்பம் ஏற்படும். செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல, படிக்க படிக்கவே இவைகள் எங்கு வரும் என்பது புலப்படும்.

பலம் - பழம் - பள்ளம் 
அவன் - தண்ணீர் - செந்நீர்
சுறா - சுரை

தமிழில் பிழை இல்லாமல் எழுத என்ன வழி (வலி!) என்றால், அதை நாம்தான் நம் பழக்கத்தின் மூலம் கொண்டு வர வேண்டும். 

Thursday, June 27, 2013

விழுதுகள்

விழுதுகள்(http://vizhudugal.org/) அமைப்பை, நண்பர்கள் இணைந்து 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். கடந்த வருடங்களில் எங்களுக்கு ஊக்கமும், உறுதியும் அளித்து வரும் எங்கள் நண்பர்களுக்கு அன்பு நன்றிகள்.

எங்கள் விழுதுகள் அமைப்பை பற்றி எனது பதிவுகள்;
 விழுதுகள் - நனவாகியதொரு கனவு
ஒரு விருது

இந்த வருடத்தில் நாங்கள் கீழ்க்கண்ட கிராமங்களில் எங்கள் மாலை நேர வகுப்பை எடுத்து வருகிறோம்.

1. மாரம்பாளையம்
2. மாதம்பாளையம்
3. கள்ளிபாளையம்
4. ஜெ. ஜெ. நகர்
5. நேரு நகர்
6. எம். கவுண்டம்பாளையம்
7. பெரிய கொமாரபாளையம்

இந்த ஏழு மையங்களும், பு. புளியம்பட்டியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகள். இன்னும் இரண்டு மூன்று ஊர்களில் மையங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். இறையருளும், நண்பர்களின் ஆதரவும் எங்களை வழி நடத்திச் செல்லும்.

சில புகைப்படங்கள்:


   (புத்தக விழாவில்.. )

   (மாரம்பாளையம் மாணவர்களுடன்...)

    (நீலிபாளையம் மாணவர்களுடன்.. )

   (ஒருநாள் சுற்றுலாவில்.. பவானிசாகர் அணை)

   (சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆளுநருடன்...)