Friday, March 15, 2013

பிளாஸ்டிக் பூதம்

இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக, அனைத்துக் டீக்கடைகளிலும்  பாலிதீன் பைகளில் டீயை ஊற்றித் தருகிறார்கள். மக்களும் அதைக் குடித்து மகிழுகிறார்கள். பாத்திரம் வேண்டியதில்லை, அதைக் கழுவ வேண்டியதில்லை. ஒரு பார்சல் வாங்கி வந்து(கூடவே இரண்டு பிளாஸ்டிக் தம்ளர்களையும், கடைக்காரரே கொடுப்பார்).. அப்படியே ஊற்றிக் குடித்து விட்டு, வீசி விடலாம். அது மக்கினால் என்ன, மக்காவிட்டால் தான் என்ன?.

சரி, சுற்றுப்புறம் பற்றிதான் கவலையில்லை. பாலிதீன் பைகளில் ஊற்றப்பட்ட டீயைக் குடிப்பதால், அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளைப் பற்றியும் கவலை இல்லை. கொதிக்க கொதிக்க சாம்பாரையும், டீயையும் பாலிதீன் பைகளிலும், பிளாஸ்டிக் பொருட்களிலும் அடைக்கும் பொழுது கண்டிப்பாக அது இளகும். இளகிய கொஞ்சம் பகுதிகள், நாம் உட்கொள்ளும் அந்த உணவுப் பொருட்களில் கலந்து நம் உடலுக்குள் செல்லும். அதைப் பற்றியும் நமக்கு விழிப்புணர்வு இல்லை.

டாக்டர் விகடன்(16-03-13) இதழில், 'உணவே விஷம் ஆகலாமா?' என்ற கட்டுரையில்;

'தற்போது கடினமான பிளாஸ்டிக் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பாலிதீன், பாலிப்ரொபைலீன் போன்றவை கொண்டு பிளாஸ்டிக் உருவாகிறது. இவை புற்று நோயை உண்டாக்கக் கூடிய ஆற்றல் பெற்றவை என ஆய்வு குறிப்பிடுகிறது.

பிளாஸ்டிக்கில் 'பிஸ்பெனால் -ஏ'(BISPHENOL-A) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. ரெடிமேட் உணவுகளைச் சுற்றும் தாள்களில் இந்த நச்சு ஊடுருவி இருக்கும். இந்த நச்சுப் பொருட்கள் நமது உடலின் செல் அமைப்பையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை. ஹார்மோன்களின் சம நிலையையும் இவை  பாதிக்கக் கூடும்.

இதேபோல உணவகங்களில் இருந்து காபி, சாம்பார், ரசம் போன்றவற்றையும் பிளாஸ்டிக் உரைகளில் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். உள்ளே இருக்கும் பண்டங்களின் சூட்டினால் பாலிதீன் உரைகளில் இருக்கும் வேதிப் பொருட்கள் கரைந்து, அவற்றைச் சாப்பிடும்போது நமது உடலுக்குள் நேரடியாகக் கலக்கின்றன.

இந்த கெமிகல் கலந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளும் போது நம் உடலில் இருக்கும் செல்கள், ஹார்மோன்கள் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களது மூளையின் செயல்பாடு மந்தமாகும். பெண்களுக்கு மலட்டுத் தன்மை, பிறக்கும் குழந்தைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கும். மேலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு
.'  என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

நீக்கமற நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பது நம் கையில் தான் இருக்கிறது. முடிந்த வரை, பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்போம். நம் உடல் நலனைக் காப்போம்.

பிளாஸ்டிக் எனும் பூதத்தின் வாயில் அகப்பட்டு விட்ட நாம், கொஞ்சம் முயன்றால் வெளியே வந்து விடலாம். இல்லையெனில் அது நம்மை விழுங்கும் நாள் தூரத்தில் இல்லை.

எனது பழைய பதிவுகள்;
பாலிதீன் பைகளில் டீ !
பாலிதீன் என்னும் பிசாசு..

நன்றி: டாக்டர் விகடன்

Tuesday, March 12, 2013

குடி என்பது..

காலை மணி எட்டு. பெட்ரோல் பங்கில், வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஒரு திருப்பத்தில் திரும்பினேன். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர், லிப்ட் கேட்பதற்காக கை காட்டினார்.

'EB ஆபீஸ் வரைக்கும் போகணும்'  என்றார்.
'சரி, ஏறுங்க..' என்றேன்.
'நீங்க அங்கேயே போறீங்க?' என்றார்
நான் கடுப்பில், 'வர்றீங்களா... இல்லையா.. ' என்றேன்.
'அய்யா சாமி.. வர்ரேனுங்க' என்று பின்னால் ஏறிக் கொண்டார்.
அப்பொழுதுதான் நான் கவனித்தேன், அவர் குடித்திருப்பதை.

EB ஆபீஸ் வரும்வரைக்கும் நான் எதுவும் பேசவில்லை. அவரும் வாயைத் திறக்கவில்லை.

இடம் வந்ததும், 'இங்க எறங்கிக்குரீங்களா' என்றேன். 
இறங்கியவர், கிளம்ப எத்தனித்த என்னிடம், என்ன நினைத்தாரோ 'மன்னிச்சுக்குங்க.. வீட்ல பிரச்சினை.. அதான் இப்படி' என்று கையெடுத்துக் கும்பிட்டார். 'பரவாயில்லை.. விடுங்க' என்று கூறியவாறு வண்டியை முறுக்கினேன் நான்.

வண்டியின் கண்ணாடியில் பார்த்தேன். தூரத்தில் அவர், கும்பிட்ட கையை கீழே போட்டுவிட்டு சாலையை தாண்டிக் கொண்டிருந்தார்.

குடிப்பது என்பது எப்படி எல்லாம் மனிதனை நடக்க வைக்கிறது. காலை எட்டு மணிக்கு ஒரு குடும்ப மனிதன் குடிக்கிறான் என்றால் அதற்கு யார் காரணம்?.

குடியால் நடக்கும் விபத்துகளும், இறப்புகளும் பெருகிக் கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் இப்பொழுது குடிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். வீதிக்கு வீதி கடைகள் இருக்கும்போது, எல்லோரும் வாங்கிக் குடித்து போதை ஏற்றுகின்றனர்.

இதில் விழா சமயங்களில் 'டார்கெட்' வேறு. நாட்டு மக்களை குடிக்க வைத்து, அதற்கு 'டார்கெட்' வைக்கும் நாடு இங்குதான் இருக்கும்.

அரிசி, பருப்பு மளிகைக் கடையில் வாங்குவது போல டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகிறது. ஒரு பொருள் எளிதாகக் கிடைத்தால் அதை எல்லா மக்களும் வாங்கவே செய்வார்கள்.

கொஞ்சம் விழிப்புணர்வு இருப்பவன், அளவாகக் குடிப்பவன், பணம் இருப்பவன் குடித்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நாள் கூலிக்கு சென்று, கஷ்டப்பட்டு அதையும் டாஸ்மாக்கில் தொலைக்கும் சாதாரண மக்களை நாம் என்ன செய்யப் போகிறோம்?.

குடிப்பது, குடிக்காமல் இருப்பது தனி மனித சுதந்திரம் என்றால்.. அவனுக்கு குடும்பம் இல்லை, அவனுக்கு குழந்தைகள் இல்லை, எந்தப் பொறுப்புகளும் இல்லை. அப்படி என்றால் அது அவன் சுதந்திரம். ஆனால், ஒரு தகப்பன், ஒரு கணவன் தன கடமையைச் செய்யாமல் டாஸ்மாக் மதுவுக்கு அடிமை என்றால் அதற்கு பெயர் சுதந்திரம் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, கடை திறக்கும் நேரத்தை குறைக்கலாம். இப்பொழுது இருக்கும் கடைகளில் பாதியைக் குறைக்கலாம். படிப்படியாக குறைக்கலாம். சாலை ஓரங்களில் இருக்கும் கடைகளை மூட வேண்டும். இதை எல்லாம் செய்வார்களா, நம் அரசியல் வியாதிகள்?. அல்லது நம் மக்கள் சாவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா?.