Thursday, March 22, 2012

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ. முத்துலிங்கம்

வாழ்க்கை எங்கே ஆரம்பித்து எப்படி முடியும் என்பதை யார் அறிவார். ஆனாலும், ஒவ்வொரு கணத்தையும் நேசித்து வாழ துறவிகளால் மட்டுமே முடிகிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கூட அப்படிதான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனிதர் என்னமாய் வாழ்ந்து பார்த்து, அதை நினைவில் வைத்துக்கொண்டு எவ்வளவு அற்புதமாய் எழுதியிருக்கிறார்.


அவர் இந்த நாவலைப் புனைவு என்று சொன்னாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இது புனைவு இல்லை, நடந்தது என்றே நினைக்க வைக்கிறது அவரின் எழுத்து.

எத்தனை நாடுகள், எத்தனை வகைப்பட்ட மனிதர்கள், அவர்களின் பழக்கங்கள் என உலகத்தை சுற்றிக்காட்டுகிறது புத்தகம். அவரே சொல்வது போல, நாவலை எங்கே இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அவர் சென்ற ஊருக்கெல்லாம் நம்மையும் கூடவே கூட்டிக்கொண்டு போகிறார்.

அவரது தளத்தில் இருக்கிற இந்தப் பேட்டி முழுவதும் இந்த நாவலைப் பற்றியே இருக்கிறது.

அ. முத்துலிங்கம் - நேர்காணல்

அந்த நேர்காணலில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "பல சம்பவங்கள் என் மன அடுக்கின் அடியில் போய் கிடக்கும். அந்தச் சம்பவம் நடந்தபோது அது பெரிதாகத் தோன்றியிராது. வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சியின் போது அந்த ஞாபகம் திடீரென ஒரு மின்னல்போல கிளம்பி வெளியே வரும். மணலிலே புதைத்து வைத்த ஆமை முட்டை  சூரியனின் வெப்பம் கிடைக்கும் சரியான ஒரு தருணத்திற்கு காத்திருப்பதுபோல ஏதோ ஒரு கணத்தில் இலக்கிய சிருட்டி நடக்கும். ஒரு சிறு தூண்டலில் இது நிகழும். "

அனைத்துப் பக்கங்களிலுமே முத்திரை வரிகள் போல சில வரிகள் இருக்கின்றன. படித்துப் பாருங்களேன். முக்கியமாக சில இடங்களில், நமக்கு இதே போல நடந்திருக்கிறதே என்று நினைக்க வைக்கிறார்.  விமான நிலையங்களில் சப்பாத்துக்களைத் தூக்கிக் கொண்டு பயணிப்பதைப் பற்றிக் கூறுகிறார், அப்போது தான் எனக்கும் நினைவு வந்தது நாம் கூட, பெல்ட், பேனா, பர்ஸ் என்று அனைத்தையும் தூக்கி கூடையில் வைத்து நானும் நடந்திருக்கிறேன் என்பதை. யாருக்காக, எதற்காக இடுப்பில் ஒரு பெல்ட்டை கூட போட முடியாமல், ஏதோ ஒரு நாட்டில், இப்படி கையை மேலே தூக்கி கொண்டு போக நான் என்ன தப்பு செய்தேன்?.

சில வேளைகளில் இலக்கியம் எனபது, நமது வாழ்க்கையையும் சேர்த்தே விவரித்து விடுகிறது.

Saturday, March 17, 2012

சினிமா: காந்தி(Gandhi)

என் சிறுவயதில், வெள்ளிக்கிழமை காலை வேளைகளில் ரேடியோவில் 'சத்திய சோதனை செய்தவரே, ஒரு சரித்திர சாதனை புரிந்தவரே' என்ற பாடலுடன், நம் தேசத் தந்தை மகாத்மாவின் சத்திய சோதனையைப் படிப்பார்கள். அதற்குப் பின்னர், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக 'சத்திய சோதனை' புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்தார்கள். மகாத்மாவின் சிறுவயதிலிருந்து, அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போரில் பங்கேற்றது வரை அதில் எழுதியிருப்பார். இப்படி அங்குமிங்குமாக, மகாத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன்.



அது மட்டுமில்லாமல், எங்கள் அப்பா ஒரு கைத்தறி நெசவாளர் என்பதால் காந்தியின் மீது சிறுவயதில் இருந்தே ஒரு பற்று இருந்தது. அன்று எங்கள் ஊருக்கு யாராவது  வந்தால், கையால் தயாரித்த நூல் மாலையைத்தான் போடுவார்கள். அத்தனை பேர் வீட்டிலும் கைத்தறி சத்தம் கேட்ட ஊரில், இன்று ஓரிருவரைத் தவிர வேறு யாரும் நெய்வதில்லை. அது கிடக்கட்டும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில், கோபிநாத் 'எத்தனை பேர் காந்தி படத்தைப் பார்த்திருக்கிறீர்கள்?' எனக் கேட்க, ஒரே ஒரு மாணவன் மட்டும் கை தூக்கினான். அப்பொழுதுதான் நினைத்து பார்த்தேன், நானும் காந்தி படத்தைப் பார்க்கவில்லை என்பதை. கண்டிப்பாக காந்தி படம் பார்த்தாக வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, பார்த்தும் விட்டேன்.


தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து அவரைக் கீழே தள்ளிவிடும் இடத்திலிருந்து படம் ஆரம்பித்து அவரின் இறுதி ஊர்வலத்தில் முடிகிறது. எந்த தேச விடுதலைக்காகப் பாடுபட்டாரோ, அதே தேசம் பிரிவினை கலவரத்தில் வன்முறையை கைவிட, கல்கத்தாவில் வன்முறை ஓயும் வரை உண்ணா விரதம் இருந்த காட்சிகளையும் விவரிக்கிறது படம். தேசத்தின் விடுதலைக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், அன்றும் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருக்கிறார். அவரின் தேவைகள் எப்பவுமே குறைவு. ஆடைகள் உட்பட. தனக்கான வேலையைத் தானே செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் மகாத்மா.



இதுவரைக்கும் நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்காவிட்டால், நிச்சயம் ஒருமுறை பாருங்கள்.