Friday, July 1, 2011

ராமன், லட்சுமணன் மற்றும் அனுமார்

நண்பர்கள் நாங்கள் நால்வர் ஒருநாள் வெளியே சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். முந்தின இரவில் மழை பெய்து குளிராக இருந்தது சாலை. போகும் வழியில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சின்ன டிபன் கடை முன் வண்டியை நிறுத்தி, சாப்பிட உள்ளே சென்றோம்.

கடையின் முன் தோசை மாஸ்டர், உள்ளே ஒருவர், கல்லா அருகில் லுங்கி கட்டி முன்டாப் பனியன் அணிந்த ஒருவர் என சிறு கடை. சாப்பிட்டு முடித்து நாங்கள் வெளியே வரவும், ராம லட்சுமண அனுமார் வேஷம் போட்ட மூன்று பேர் கல்லாக் காரனிடம் ஒரு நோட்டை நீட்டிக் கொண்டிருந்தார்கள்.

ராமருக்கும், லட்சுமணனுக்கும் தலையில் கிரீடம். அனுமாருக்கு பிளாஸ்டிக் வாயும், வாலும். அண்ணன் தம்பிகள் இருவருக்கும் நீலக் கலர் முகம், கை என அப்பி இருந்தனர். அனுமாருக்கு கலர் இல்லை, சரி அவர் மனித இனம்தான் என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம். மூவருக்கும் காலில் சலங்கைகள். மடி மடியாக வைத்து தைக்கப்பட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் துணிகள். துவைத்து நெடு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ராமர் கையில் மட்டும் ஜிகினா துணி சுற்றிய வில்.

"மொதலாளி இல்ல.. கெளம்புங்க.." என்றார் கல்லாக்காரர்.

"இல்லீங்க.. ஒவ்வொரு தடவ வரும்போதும் ஏதாவது கொடுப்பாங்க"

"கடைக்கு வர்றவங்களுக்கு சில்லற தர்ரதுக்கே சில்லற இல்ல.. இதுல நீங்க வேற"

"இருக்கறத குடுங்க" ராமர் விடவில்லை.

"மொதாலாளி தான் இல்லன்னு சொல்லுரமுள்ள.. இன்னொரு நா வாங்க" - தோசை மாஸ்டரும் சேர்ந்து கொண்டார்.

"அஞ்சு, பத்தாவது குடுங்க" லட்சுமணன் தன் பங்குக்கு பேசினார்.

"காலம் கார்த்தால வந்து வாதிக்கரிங்களே.." முனகிக்கொண்டே கல்லாப் பெட்டியில் ரூபாய் நோட்டுக்களைத் தேடிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர்.

ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, அவர்கள் நீட்டிய புத்தகத்தில் கடைப் பெயரையும், ஊரையும் எழுதி பத்து ரூபாய் என்று எழுதிக் கொடுத்தார் கல்லாக்காரர்.

வெளியே வந்த ராமரைப் பார்த்து, இதுவரைக்கும் வாயே திறக்காத அனுமார் "இங்கயே சாப்பிட்டு போயிரலாண்டா.. பசிக்குதுடா" என்றார். "காலாலே இருந்து இன்னும் முப்பது ரூபா கூட தேரல.. அப்புறம் பார்க்கலாம் வா" என்று முன்னாடி போய்க்கொண்டிருந்தார் லட்சுமணன்.

அவ்வளவு பெரிய மலையைத் தூக்கிய அனுமார், கடல் தாண்டி சென்ற அனுமார், அவர்கள் இருவரின் பின்னால் பசியுடன் போய்க் கொண்டிருந்தார்.

Saturday, June 25, 2011

சிறு துளிகள் (25/06/2011)

சேனல் 4

இலங்கையில் தமிழர்கள் வதம் செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல் நான்கு ஒளிபரப்பி இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதைப் பற்றிய விவவரங்களை வெளியிடவில்லை இந்தியாவில். பத்தோடு சேர்ந்து இதுவும் ஒரு செய்தியாக சில சேனல்களில் படித்தார்கள்.

இந்த வார விகடனில் வெளியான கட்டுரையில் 'அந்தக் காட்சிகளை இங்கு இருக்கும் ஊடகங்கள் திரும்ப திரும்ப காட்ட, அது என்ன சாமியாரின் படுக்கை அறையா?' என்று இறுதியாக கேட்டிருந்தார் கட்டுரை ஆசிரியர்.

இதைப் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறி வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

பெட்ரோலியப் பொருட்கள்

செய்தி ஒன்று: கச்சா எண்ணெய் விலை குறைவால், மும்பை பங்குச் சந்தை ஐநூறு புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம்.
செய்தி இரண்டு: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தத்தளித்த (!!) எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட நள்ளிரவு முதல் டீசல் மூன்று ரூபாயும், சிலிண்டர் ஐம்பது ரூபாயும் உயர்ந்தது.

இதில் எது உண்மை.. ??
எது நடக்கிறதோ இல்லையோ இன்னும் விலைவாசி ஏறத்தான் போகிறது.


ஈரோடு மாவட்ட ஆட்சியர்

நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முட்டி மோதி, இரவு முழுவதும் காத்திருந்து அப்ளிகேசன் வாங்கி, எல்.கே.ஜி படிப்புக்கு முப்பது நாப்பது ஆயிரம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில்.. ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் குழந்தையை, அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அரசுப் பணிகளில் பணியாற்றும் பலரும் பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொண்டிருக்க, தன் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த ஈரோடு கலெக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அரசுப் பள்ளிகளின் தரமும் நாம் அறிந்ததே. கலெக்டரின் குழந்தை தங்கள் பள்ளியில் படிக்கிறது என்று அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் இனி தரமாகப் பாடம் நடத்துவார்கள். கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள் என எளிதாக கிடைக்கும். சத்துணவு தரமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற பள்ளிகள் வழக்கம் போலதான் இயங்கும். என்ன செய்வது, நமக்கு என்ன ஒவ்வொரு ஊருக்கும் இந்த மாதிரி ஒரு கலெக்டரா இருக்கிறார்?.