Monday, May 9, 2011

ஓர் இளம் விஞ்ஞானி

போன வாரத்தில் ஒரு நாள் பாலாஜி என்னும் சிறுவன் சில அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்து, அதற்கு பரிசுகள் பெற்றுள்ளதாகவும், அந்த சிறுவனுக்கு சில உதவிகள் தேவைப் படுவதாகவும், நேரம் இருக்கும்போது நேரில் அவனைச் சந்திக்க வாருங்கள் என்றார்கள் நண்பர் ஒருவர். அன்று மாலையே நானும், கமலக்கண்ணனும் அப்பையனின் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

கோவை அருகிலுள்ள, அன்னூரில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் வாகரயாம்பாளையம் என்னும் சிறு ஊரில் இருக்கிறது பாலாஜியின் வீடு. அப்பாவுக்கு நெசவுத் தொழில். பாலாஜி ஒன்பதாம் வகுப்பும், அவனின் தம்பி ஹரிஹரன் எட்டாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போனதும், அவன் வாங்கிய சான்றிதழ்கள், கேடயங்களைக் கொண்டு வந்து காண்பித்தான் பாலாஜி.

நாங்கள் வருகிறோம் என்று தகவல் சொல்லியிருந்ததால் ஓரத்தில் ஒரு ஸ்டூலின் மீது, ஒரு கருவி மாதிரி வைத்திருந்தான். அதைப் பற்றி பேச ஆரம்பித்தான்.


(தம்பி ஹரிஹரனுடன், பாலாஜி - கருவியைப் பற்றி விளக்குகிறான்)

"இதுக்கு பெயர் கார்பநேட்டர். அதாவது தமிழில் புகைநீக்கி, இதைப் பயன்படுத்தி நாம் காற்றில் கலந்துள்ள மாசுவைக் குறைக்கலாம். புவி வெப்ப மயமாதலைக் குறைக்க முடியும். கார்பநேட்டர் என்பது கார்பன்-டை-ஆக்சிடை(CO2) சோடியம் ஹைற்றாக்சைடின் (NaOH) உதவியுடன் சோடியம்-பை-கார்பனேட் (NaCO3)ஆக மாற்றும் கருவியாகும்.

இதன் அமைப்பு ஆங்கில எழுத்தாகிய T -ஐ தலைகீழாக கவிழ்த்த வடிவமாகும். இதன் மேல் உள்ள புனல் மூலம் NaoH-ஐ ஊற்றும்போது, CO2-வை கரைத்து NaCO3 ஆக மாறுகிறது. இதனை நாம் குளிர்வித்து வெளிக்காற்றின் மூலம் CO2 ஐ தனியாக பிரித்து -72 C ல் குளிர்ரூட்டும் போது நமக்கு உலர் பனிக்கட்டி கிடைக்கிறது. இதனை நாம் கடலுக்கு அடியில் செலுத்த வேண்டும். இது கடல் நீரில் கரையாது.

இதன் மூலம் காற்று மாசுபடுதல் குறைகிறது. புவி வெப்ப மயமாதல் குறைகிறது." என்று கூறி முடித்தான். இந்த மாடலுக்கு, ஒரு கல்லூரியில் நடந்த அறிவியல் விழாவில் "பெஸ்ட் மாடல்" விருது கிடைத்திருப்பதாக கூறினான்.



எங்களுக்கு மிகவும் ஆச்சரியம், இவ்வளவு சிறு வயதில் எப்படியெல்லாம் அறிவியலைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்று. தம்பி ஹரிஹரனும் அவ்வபொழுது அவனுக்கு உதவி செய்கிறான் என்றும் கூறினான். இருவரும் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


பாலாஜியின் அப்பாவும், அம்மாவும் கூறும்பொழுது "எங்களுக்கு இவர்கள் சொல்வது, செய்வது ஒன்றும் புரிவதில்லை. அதைப் புரிந்து கொள்ளுமளவு கல்வியும் எங்களுக்கு இல்லை. நிறைய பரிசும், சான்றிதழ்களும் வாங்கியிருக்கிறான். இந்த நெசவுத் தொழிலை வைத்துக்கொண்டு இவனுக்கு தேவைப்படும் கருவிகளையோ, அல்லது மற்ற புத்தகங்களையோ எங்கு கிடைக்கும் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. சில சமயங்களில், ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் இவனே நெட்டில் தேடி விசயங்களைப் புரிந்து கொள்வான். இப்ப கூடப் பாருங்க, சோலார் கார் மாடல் செய்ய வேண்டும் என்கிறான். அந்தப் பொருட்களை எல்லாம் எங்கு வாங்குவது, அதற்குத் தேவையான பணம் என நிறைய பிரச்சினைகள்" என்றார்கள்.

"என்ன பாலாஜி, சோலார் மாடல் செய்ய போறாயா?" என்றோம்.

"ஆமாங்க சார்" என்றான்.

"சரி. .அதுக்கு என்ன என்ன வேணும்னு தெரியுமா.. ?" என்று கேட்டதும், பாலாஜியின் அம்மா "அதெல்லாம் எழுதி வெச்சிருக்காங்க. பாலாஜி அத எடுத்துட்டு வா" என்றதும்.. ஒரு தாளை எங்கள் முன் நீட்டினான்.



12v சோலார் பேனல்
2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வீல்
12v பாட்டரி
காரின் தளம்
Driller
ஸ்பீடோ மீட்டர்
வோல்டேஜ் மீட்டர்
ஸ்டீரிங் செட்
Headlights, Indicators, Wire, Switches.

இவற்றில் எதுவும் புதிதாக கூட வேண்டாம். ஏற்கனவே உபயோகப் படுத்தியது, Second Hand என்றாலும் எனக்கு அது போதுமென்கிறான் பாலாஜி. மேற்கண்ட உபகரணங்கள் கிடைத்தால் பள்ளி விடுமுறையில் செய்து முடித்துவிடுவேன் என்றும் சொன்னான்.

"சரிப்பா.. நாங்கள், எங்களின் நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறோம்.. விரைவில் திரும்ப வருகிறோம்" என்று விடைகூறிப் புறப்பட்டோம். கிளம்பும்போது.. "பசங்க என்ன என்னமோ செய்யுறாங்க.. எல்லோரும் பாராட்டுறாங்க.. ஆனா, அவங்க வேணும்னு சொல்லுறத வாங்கிக் கொடுக்க கூட எங்களால முடியறதில்ல" என்று வருத்தப்பட்டார்கள் பாலாஜியின் அம்மாவும், அப்பாவும். "கவலைப்படாமல் இருங்கள்.." என்று சொல்லிவிட்டு நாங்கள் விடை பெற்றோம்.

சினிமா, விளையாட்டு, டிவி என பொழுதுபோக்கும் மாணவர்களுக்கு மத்தியில், அறிவியல் மீது ஆர்வம் கொண்ட சில மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போட, சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.

அன்பு நண்பர்களே,
உங்களால் இந்த மாணவனுக்கு உதவ முடிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்,
மேற்கண்ட உபகரணங்கள் உங்களிடம் உபயோகப் படுத்தாமல் இருந்தால் உதவுங்கள்,
அறிவியல் துறையில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், உங்களின் எண்ணங்களை இம்மாணவனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.

விழுதுகள்
29 , மறைமலை அடிகள் வீதி,
புன்செய் புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம்.

கமலக் கண்ணன் - 75021 97899
இளங்கோ - 98431 70925


Thursday, May 5, 2011

கதையெனும் நதியில் - 2

. மாதவன்
பாச்சி

ஒரு கடைத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவனைப் பற்றியும், அவன் வளர்த்த பாச்சி என்ற நாயைப் பற்றியும் கதை சொல்கிறது. எந்த சொந்தமும் இல்லாத தெருவோரத்தில் வாழ்ந்து வரும் நாணுவுக்கு, பாச்சி வந்த பிறகுதான் ஒரு வேலையும் தங்க இடமும் கிடைக்கிறது. கதையின் முதல் வரியே 'பாச்சி செத்துப் போய்விட்டாள்' என்றுதான் ஆரம்பிக்கிறது.

சக மனிதனை மதிக்கத் தெரியாத உலகத்தில், கதியற்று இருப்பவர்களுக்கு செல்லப் பிராணிகள் தானே ஆறுதலைத் தர முடியும். பொய் சொல்லத் தெரியாத, எதையும் எதிர்பார்க்கத் தெரியாத 'பாச்சி' போன்ற விலங்குகள் தான் உலகில் மொழியும், சொற்களும் இல்லாத அன்பை, வாலாட்டிக் கொண்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

பெருமாள் முருகன்
குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு

ஒரு சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு பொருள் எங்கே இருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் மாறி இருந்தால் கூட, கோபத்தில் யாரை வேண்டுமென்றாலும் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அது அது அங்கங்கே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சில வேளைகளில் நன்றாக இருக்கும். ஆனால், எதற்கு எடுத்தாலும் ஒழுங்கு வேண்டும் என எதிர்பார்த்தால்?.

இந்தக் கதையில் வரும் குமரேசன் ஒரு ஆசிரியன், இவனின் ஒழுங்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு ஒருவன் பின் ஒருவராக மாணவரைப் போகச் சொல்கிறான். அதையும் கண்காணிக்கும்போது, ஒரு மாணவன் அவசரம் எனச் சொல்ல, அதெல்லாம் முடியாது, வரிசையில் தான் வர வேண்டும். முன்னால் எல்லாம் விட முடியாது எனக் கூறுகிறான். மற்ற ஆசிரியர்கள், 'பாவம் அவனை விட்டு விடுங்கள்.. முன்னால் போகட்டும்' என்கிறார்கள். 'இவனைப் போலவே எல்லாரும் அவசரம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?' எனக் கேட்கிறான், அந்த ஆசிரியர்களிடம் பதிலில்லை, ஏன் நம்மிடம் கூடப் பதிலில்லை.

வீடு, மனைவி, வேலை செய்யும் இடம் என எல்லா இடத்திலும் ஒழுங்கை எதிர்பார்க்கும் குமரேசன் எப்படி திருந்தினான்.. கதையைப் படித்துப் பாருங்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்
புத்தனாவது சுலபம்

எல்லா அப்பாக்களுமே மகனைப் பற்றிய பயத்தில்தான் இருக்கிறார்கள். அவன் விரும்பிச் செய்தாலும், அது நல்லாதாகவே இருந்தாலும், அவர்களின் கண்ணோட்டத்தில் 'இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ' என நினைப்பார்கள்.

இந்தக் கதையும் ஒரு தகப்பனின் புலம்பல்தான். ஒருவேளை நமது அப்பா மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுமே இப்படித்தான் இருப்பார்களோ என நினைக்க வைக்கும் கதை.