Thursday, May 5, 2011

கதையெனும் நதியில் - 2

. மாதவன்
பாச்சி

ஒரு கடைத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவனைப் பற்றியும், அவன் வளர்த்த பாச்சி என்ற நாயைப் பற்றியும் கதை சொல்கிறது. எந்த சொந்தமும் இல்லாத தெருவோரத்தில் வாழ்ந்து வரும் நாணுவுக்கு, பாச்சி வந்த பிறகுதான் ஒரு வேலையும் தங்க இடமும் கிடைக்கிறது. கதையின் முதல் வரியே 'பாச்சி செத்துப் போய்விட்டாள்' என்றுதான் ஆரம்பிக்கிறது.

சக மனிதனை மதிக்கத் தெரியாத உலகத்தில், கதியற்று இருப்பவர்களுக்கு செல்லப் பிராணிகள் தானே ஆறுதலைத் தர முடியும். பொய் சொல்லத் தெரியாத, எதையும் எதிர்பார்க்கத் தெரியாத 'பாச்சி' போன்ற விலங்குகள் தான் உலகில் மொழியும், சொற்களும் இல்லாத அன்பை, வாலாட்டிக் கொண்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

பெருமாள் முருகன்
குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு

ஒரு சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம், ஒரு பொருள் எங்கே இருந்ததோ அங்கேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கொஞ்சம் மாறி இருந்தால் கூட, கோபத்தில் யாரை வேண்டுமென்றாலும் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அது அது அங்கங்கே இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு சில வேளைகளில் நன்றாக இருக்கும். ஆனால், எதற்கு எடுத்தாலும் ஒழுங்கு வேண்டும் என எதிர்பார்த்தால்?.

இந்தக் கதையில் வரும் குமரேசன் ஒரு ஆசிரியன், இவனின் ஒழுங்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், பள்ளிக்கூடத்தில் கழிவறைக்கு ஒருவன் பின் ஒருவராக மாணவரைப் போகச் சொல்கிறான். அதையும் கண்காணிக்கும்போது, ஒரு மாணவன் அவசரம் எனச் சொல்ல, அதெல்லாம் முடியாது, வரிசையில் தான் வர வேண்டும். முன்னால் எல்லாம் விட முடியாது எனக் கூறுகிறான். மற்ற ஆசிரியர்கள், 'பாவம் அவனை விட்டு விடுங்கள்.. முன்னால் போகட்டும்' என்கிறார்கள். 'இவனைப் போலவே எல்லாரும் அவசரம் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?' எனக் கேட்கிறான், அந்த ஆசிரியர்களிடம் பதிலில்லை, ஏன் நம்மிடம் கூடப் பதிலில்லை.

வீடு, மனைவி, வேலை செய்யும் இடம் என எல்லா இடத்திலும் ஒழுங்கை எதிர்பார்க்கும் குமரேசன் எப்படி திருந்தினான்.. கதையைப் படித்துப் பாருங்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்
புத்தனாவது சுலபம்

எல்லா அப்பாக்களுமே மகனைப் பற்றிய பயத்தில்தான் இருக்கிறார்கள். அவன் விரும்பிச் செய்தாலும், அது நல்லாதாகவே இருந்தாலும், அவர்களின் கண்ணோட்டத்தில் 'இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ' என நினைப்பார்கள்.

இந்தக் கதையும் ஒரு தகப்பனின் புலம்பல்தான். ஒருவேளை நமது அப்பா மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுமே இப்படித்தான் இருப்பார்களோ என நினைக்க வைக்கும் கதை.


Monday, May 2, 2011

தண்ணீர் - அசோகமித்திரன்



தண்ணீர். ஓர் அறிவுள்ள உயிரிலிருந்து எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் தண்ணீர் மட்டுமே. 'தண்ணீர்' நாவலின் முன்னுரையில் அசோகமித்திரன் அவர்கள்; 'வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்ற பழமொழி அன்று உண்டு' என்று கூறுகிறார். இலவசமாக இருந்த தண்ணீர், வரி விதிக்கப்பட்ட பொருளாக மாறிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

நட்ட நடு இரவில் தண்ணீர் வரும். எழுந்து பிடித்து வைக்க வேண்டும். ஒரு வாரம் குழாயில் வரவில்லை என்றால், லாரி தண்ணி பிடிக்க வரிசையில் நிற்க வேண்டும். குடிப்பதற்கு சரி, மற்ற வேலைகளுக்கு; அதற்கு உப்புத் தண்ணீர். குடம் ஒரு ரூபாய் என வாங்க வேண்டும். பிடித்த தண்ணீரை சிக்கனமாக புழங்க வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையும் இருந்து, அந்த இடத்தில் வாடகைக்கு குடியிருப்போரின் நிலைமை, அதோ கதிதான். அதிலும் கோடை காலத்தில், தண்ணிக்கு வீதி வீதியாக குடங்களை தூக்கிக் கொண்டு போவததைத் தவிர வேறு வழியே இல்லை.

தண்ணீருக்கு அலைந்த கதைகளைச் சொன்னால் அதற்கு முடிவேயில்லை. அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில், எப்பொழுது தண்ணீர் வருமெனத் தெரியாத குழாய்; குடம் ஒரு ரூபாய் என விற்கும் வீட்டுக்காரர்கள்; காலிக் குடங்களை வாங்கிக் கொண்டு போய் காசுக்கு பொதுக் குழாயில் நிரப்பிக் கொண்டு வரும் வண்டிக்காரர்கள்; சாக்கடையும், குழாய் மேடையும் ஒன்றாகவே இருக்கும் பொதுக் குழாய்கள்; ஒரு குடம் தண்ணிக்கு அரை மணி நேரம் வரிசையில் நிற்பது; அங்கே வரும் நீ முந்தி, நான் முந்தி சண்டைகள்; கெட்ட வார்த்தைகள்; வரிசையில் நிற்கும் வயதானவர்களின் இயலாமை என, இந்த தண்ணீரைச் சுற்றிதான் எவ்வளவு பிரச்சினைகள். கிராமம், நகரம் என்று இல்லை. எல்லா ஊரிலும் தண்ணீர் பிரச்சினை சொல்லி மாளாது.

ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால், கடைகளில் ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர், நாப்பது லிட்டர் என பாட்டில்களில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எங்கிருந்துதான் கிடைக்குமோ?.

நாவலைப் பற்றிச் சொல்ல வந்து, தண்ணீர் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாவலில் முழுவதும் வருவதும், தண்ணீர் மற்றும் அதற்கு அலைவது தான். அதாவது நாவலின் கதைப் போக்கு வேறு என்றாலும், 'நீரின்றி அமையாது இந்த உலகு' போல தண்ணீரும் கூடவே வருகிறது.

ஜமுனாவும், சாயாவும் சகோதரிகள். ஜமுனா மூத்தவள், பாஸ்கர் என்பவனுடன், அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் என்பது தெரியாமல் பழகி, தெரிந்த பின்னரும் அவனை ஒதுக்க முடியாமல், அவன் வரும்போதெல்லாம் வெளியே அவனுடன் செல்கிறாள். அவன் சினிமாவில் அவளுக்கு கதாநாயகி வேடம் வாங்கித் தருவதாகவே இத்தனை நாட்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

சாயா படித்தவள். அவளுக்கும் கல்யாணம் ஆகி, கணவன் மிலிடரியில் இருக்கிறான். அவன் இந்த வருடம் வருகிறேன் என்று சொல்லியிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் சாயா. அவளுக்கு ஒரு பையனும் உண்டு. சாயா வேலைக்குச் செல்வதால், பையனை அவளின் அம்மா வீட்டில் விட்டிருக்கிறாள். அம்மாவுக்கும் புத்தி சுவாதீனம் இல்லாமலிருப்பதால், பாட்டியும், மாமாவும் பார்த்துக் கொள்வதால், சாயாவும், ஜமுனாவும் தனியே வசித்து வருகிறார்கள்.

பாஸ்கர் அடிக்கடி ஜமுனாவைப் பார்க்க வருவது, சாயாவுக்குப் பிடிக்காமல் அவள் விடுதிக்குப் போகிறாள். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஜமுனாவை, பக்கத்துக்கு வீட்டு டீச்சரம்மா தேற்றுகிறாள்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சினையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இறுதியில், ஜமுனா என்ன ஆனாள் ?
சாயா அவளிடம் திரும்ப வந்து விட்டாளா ?
சாயாவின் கணவன் மிலிடரியில் இருந்து திரும்ப வந்தானா?
சாயாவின் பையன் என்ன ஆனான்?
பாஸ்கர் என்ன ஆனான்?

நாவலைப் படித்துப் பாருங்கள்.

நாவலில் ஓரிடத்தில்; "இப்போ பகவானே வந்தாக் கூட கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கோ, குழாயிலே தண்ணி வரதை நன்னா பார்த்துட்டு வரோம்ன்னுதான் சொல்லுவோம்".

இன்னொரு இடத்தில், ஜமுனாவைத் தேற்றும் டீச்சர், வீதியில் இரண்டு குழந்தைகள் தனது தேவைக்கும், சக்திக்கும் அதிகமான தண்ணீரை கொண்டு செல்வதைப் பற்றி பேசும் காட்சி, தன்னம்பிக்கை வர வைக்கக் கூடிய இடம்.

நடு இரவில் கொட்டும் மழையில், மழைத் தண்ணீர் பிடிக்க எழுப்பும் மனைவி, வீட்டுக்கார அம்மாள், டீச்சரின் மாமியார், கணவன், ஜமுனாவின் அம்மா, பாட்டி என ஒவ்வொரு பாத்திரமும் அதன் கதை சொல்லலும் அருமை.

தண்ணீர் போகும் போக்கிலே தான் நமது வாழ்க்கையும் செல்வது போலத் தோன்றுகிறது.

தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் நூறு.