விடுமுறை தினங்களில் முகச்சவரமோ அல்லது முடி பின்னலோ தேவையில்லை சூடான சமையலை உள்ளே திணிக்கும் அவசரம் இல்லை பறக்கும் சாலைகளில் கசங்கிச் செல்ல வேண்டியதில்லை சுடு டப்பா உணவு மதியத்துக்கு தேவையில்லை...
எல்லாவற்றையும் விட அலுவலகத்தில் உள்ளே குமைந்து கொண்டு வெளியே செயற்கையாக புன்னகைக்க வேண்டியதில்லை...
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் சுற்றுச் சூழல் அழிந்து கொண்டே வருகிறது. எந்தப் பொருள் வாங்கினாலும் கூடவே ஒரு பாலிதீன் பையைக் கொடுத்து விடுகிறார்கள் கடைக்காரர்கள். அப்படி அவர்கள் கொடுக்கவில்லை என்றாலும் கேட்டு வாங்குபவர்கள் நிறையப் பேர். இதில் திரும்ப பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சமே, பெரும்பாலும் தரமில்லாத பிளாஸ்டிக் பொருட்களே நம்மை வந்தடைகிறது.
முன்னொரு காலத்தில் எல்லாம் வீட்டில் இருந்து பாத்திரங்களைக் கொண்டு போய் இட்லி, சட்னி, சாம்பார் என வாங்கி வருவார்கள். எண்ணெய் வாங்க வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பாட்டில்களை கொண்டு போய் வாங்கி வருவார்கள். இப்பொழுது எல்லாமே கவர்களில். கடைக்கு கையை வீசிக் கொண்டு போய்விட்டு, வரும்போது இரு கை நிறைய பாலிதீன் பைகளை சுமந்து கொண்டு வருகிறோம். சில வருடமாக, டீக் கடைகளில் கொதிக்க கொதிக்க டீயை பாலிதீன் கவர்களில் ஊத்தி தருகிறார்கள்.
ஒவ்வொரு வீதிகளின் குப்பை போடும் இடத்தில் பரந்து கிடக்கும் பாலிதீன் பைகள் எத்தனை. குப்பை வண்டிகள் அள்ளிக் கொண்டு போனாலும் அவர்களும் ஒரு இடத்தில் கொட்டித்தானே வைப்பார்கள். அதுவும் நாம் வாழும் பூமியின் ஒரு இடம்தானே.
அங்கங்கு போடும் பைகள் சாக்கடைகளில் மூழ்கி, மழைக் காலங்களில் தண்ணீர் போக முடியாமல், வழியை அடைத்து விடுகிறது. இன்னும் சில பைகள் மண்ணில் புதைந்து மக்க வழி இன்றி அப்படியே கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் பாலிதீன் பைகள் கிடக்கும் இடங்களில் அங்கே வாழும் சிறு உயிர்களின் வாழ்வாதாரம் கெட்டுப் போகிறது. கண்ணுக்கு தெரியாத எவ்வளவோ உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
நாளை நம் குழந்தைகள் மண்ணில்(!) விளையாடினால் கல்லும் மண்ணும் கிடைக்கிறதோ இல்லியோ, அவர்களுக்கு கொஞ்சம் நம் காலத்து பாலிதீன் கவர்கள் கிடைக்கும்.
இதெல்லாம் தவிர தண்ணீர் பாட்டில்கள் பெரும் பிரச்சினை. கடையில் மட்டும் விற்றுக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், தற்போது கல்யாணம் மற்றும் இதர விசேசங்களில் இலைக்கு ஒரு பாட்டில் வைக்கிறார்கள்.
இதை விட மற்றும் ஒன்று. குப்பைகள், மீந்த சாதம், பொரியல், எலும்பு, கழிவுகள் என அப்படியே ஒரு காகிதத்தில் கட்டி ஒரு துளி காற்று கூட உள்ளே போக முடியாதவாறு கட்டி போடுவது. அந்தக் கழிவுகள் அப்படியே அந்தக் கவருக்குள்ளே கிடந்து, வேதி வினைகள் ஆற்றி நாம் கடக்கும் போது 'குப்' என்று புரட்டி வருகிறதே, அதற்கு நாமும் ஒரு காரணமல்லவா?.
முற்றிலுமாக நம்மால் தவிர்க்க முடியாதுதான். அதை பின்வரும் வழிகளில் கொஞ்சம் குறைக்கலாமே;