Wednesday, December 8, 2010

காதல் செய்வீர் உலகத்தீரே!

உலகம் என்ன சொல்லும்
என்கிறாய்
உன்னையும் என்னையும் தவிர
உலகத்தில்
யாருமில்லை கண்ணே !

*********************************

நீ
வெட்டி விலகிச்
செல்லும் போதெல்லாம்
வெட்ட வெட்ட
மீண்டும் தழைக்கும் தாவரமென
வளர்கிறது
உன்மேலான என் பிரியம் !

*********************************

தென்றலாய் நடந்தாய்
மணியாய் சிரித்தாய்
தண் நிலவாய்ப் பார்த்தாய்
ஒரு நாள்
கவிதையாய்ப் பேசியபோதுதான்
நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் !

*********************************

Monday, December 6, 2010

பயோடேட்டா : மழை


பெயர்: மழை

சாதனை: உயிர்கள் தோன்ற காரணமாக இருந்தது

இருப்பிடம்: வானம், பூமி, ஆறு, கடல் முதற்கொண்டு உங்கள் வீட்டின் நீர் பிடிக்கும் பாத்திரங்கள் என அனைத்திலும்.

நிறம்: இல்லை

பிடித்த இடம்: என்னை நேசிப்பவர்கள் மற்றும் என்னை எழுதும் கவிஞர்களின் மனம்.

பிடித்தவர்கள்: மரம் வளர்ப்பவர்கள்

பிடிக்காதவர்கள்: மரம் + காடுகளை அழிப்பவர்கள், சுற்றுச்சூழலைக் கெடுப்பவர்கள்.

எரிச்சல்: வெயில் காலங்களில் மழை இல்லை என்று புலம்பிவிட்டு, மழை பெய்யும் காலங்களில் 'எப்பதான் இந்த மழை நிக்குமோ?' எனத் திட்டும் மனிதர்களைக் கண்டால்.

நீண்ட கால சாதனை: இன்னும் பெய்து கொண்டிருப்பது, உயிர்களை வாழ வைப்பது.

சோகம்: முன்காலம் போல் மும்மாரி எல்லாம் பொழிய முடியாமல், குறைவாக பெய்வது. (இதற்கே மக்கள் 'வரலாறு காணாத மழை, வீட்டில் வெள்ளம்' என்று செய்தியில் சொல்லுகிறார்கள்).

பிடித்த குறள் : விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

**********************************

நன்றி: மழைப் படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.