Friday, September 24, 2010

பாஸ்வேர்டாகிய பழைய காதலி !















குடும்பப் பெயர்களை
எண்களோடும் சிறப்பு எழுத்துக்களோடும்
சேர்த்து வளைத்து எழுதியதில்
ஒவ்வொரு முறையும்
கடவுச் சொல் பஞ்சம் அடைந்தது.

கடவுச் சொல்லை
மாற்றச் சொன்ன
இணையத் தளத்தில்
புதியதொரு சொல்லை இட்டேன்.

அது என்
பழைய காதலியின் பெயரென
சொல்லிவிட்டுப் போகிறான்
நண்பனொருவன்.

அது வெறும்
கடவுச் சொல் என
எப்படி அவனுக்குப் புரியவைப்பது ?.

படம் : இணையத்திலிருந்து.

Wednesday, September 22, 2010

பாதி உடல் தங்கமாக அலையும் நரி.. !

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை நாம் ஏற்கனவே கேட்ட கதைதான். அந்தக் கதை இதோ மீண்டும்.

கொடும் பஞ்சம் சூழ்ந்த முன்னொரு காலத்தில், ஒருவன் தன் மனைவி மகன் மருமகளோடு ஒரு ஊரில் வசித்து வந்தான். பஞ்சத்தால் எதுவும் கிடைக்காத ஒரு நாளன்று வெளியே சென்ற அவன் கொஞ்சம் சோள தானியத்தோடு தன் வீட்டுக்கு வருகிறான். அவன் மனைவி அதை அரைத்து மாவாக்கி கஞ்சி சமைக்கிறாள். சமைத்த பின்னர் அதை அருந்தும்பொழுது ஒரு துறவி பசியால் அவன் வீட்டுக்கு வருகிறார். துறவியின் பசியை அறிந்த அவன் தனக்கான உணவின் பங்கை அவருக்கு கொடுக்க, அதைத் துறவி அருந்துகிறார். மீண்டும் அவர் பசியடங்காமல் இருக்க, மனைவி மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தங்கள் பங்கை அந்த துறவிக்கு அளிக்க பசியடங்கிய அவர் அந்த இடத்தை விட்டுப் போகிறார்.

இவர்களின் செயலால் மனம் மகிழ்ந்த தேவதை ஒன்று இனி அவர்கள் எப்போதும் செல்வத்தில் திளைப்பார்கள் என வரம் தந்து விட்டுச் செல்கிறது. அப்பொழுது அங்கே வந்த நரி ஒன்று, சோளம் அரைத்த இடத்தில் படுத்துப் புரள அதன் உடல் பாதி தங்கமாக மாறிவிடுகிறது. எந்தப் பிரதிபலனும் இல்லாமல் தானம் தரும் யாக சாலைக்குச் சென்றால் தன் மீதிப் பாதி உடல் தங்கமாகும் என்ற நம்பிக்கையில், இன்னும் அந்த நரியானது பாதித் தங்கமான தன் உடலுடன் அலைந்து கொண்டிருக்கிறது.

'அலைந்து கொண்டே இருக்கிறது நரி' என கதையை முடித்திருப்பார் எஸ்.ராமகிருஷ்ணன்.

கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அந்த நரி எங்காவது நம்மைச் சுற்றிக் கொண்டு கூட இருக்கலாம் !!. பெரிய தான தர்மங்கள் வேண்டாம். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டாம். நாம் போகும் வழியில் சின்ன சின்ன உதவிகள் செய்யக் கூட மறந்து போனது எதனால்?.

சாலையைக் கடக்க ஒரு மூதாட்டி நின்று கொண்டிருக்கும்பொழுது இன்னும் சேர்த்து ஆக்சிலாட்டரை முறுக்க விளைவது எதனால் ?. படிக்கத் தெரியாதவர்கள் பேருந்து வழித்தடம் கேட்டால் கோபம் வருவது எதனால்?. பேருந்தில் குழந்தையோடு ஒருவன்/ஒருத்தி நின்று கொண்டிருக்கும் போது முகத்தை வேறெங்கோ செலுத்துவது எதனால்?. ஒரு கல்லோ முள்ளோ கிடந்தால் அதைக் கடந்து போவது எதனால்?. அலுவலகத்தில் யாரேனும் சந்தேகம் கேட்டால் தெரிந்திருந்தாலும் நேரமில்லை எனச் சொல்வது எதனால்?.

இந்த சின்ன உதவிகள் அவர்களுக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிதாக இருக்கும். இதனால் என்ன பயன்? .

போன வாரம் பேருந்தில் வரும்பொழுது, பேருந்து கிளம்பி இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஒரு முதியவர் ஏற அவருக்கு நான் இடத்தைக் கொடுத்தேன். இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தாண்டி குழந்தையோடு ஒருவர் ஏற அந்தக் குழந்தையை முதியவர் வாங்கி வைத்துக் கொண்டார். என்னைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தினார்.

நீங்கள் ஒரு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக இன்னொருவருக்கு அது திரும்பச் செய்யப்படும். அது ஒரு சங்கிலி மாதிரி. ஏன் பினனால் நீங்கள் கூட அந்த சங்கிலியால் பயன் அடைபவராக இருக்கலாம்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது !.