Wednesday, March 10, 2010

சாமியாரும்.. விடியோவும்...

மற்றவர்களுக்கு தெரியாமல் தப்பு செய்து, அது வெளியே தெரிய வந்தால் அவன் குற்றவாளி. அப்படி அந்த வீடியோ வெளியிடபடாமல் இருந்திருந்தால்... வழக்கம் போல நித்தி ஆசி அளித்து கொண்டும், நோய்களை தீர்த்து கொண்டும் இருந்திருப்பான்... கும்ப மேளாவில் எல்லாரும் அவன் காலடியில் குப்புற விழுந்து கிடப்பார்கள்... பணம் கொட்டி கொண்டு இருந்திருக்கும்... எல்லாம் மாறி விட்டது ஒரு இரவில்.

அன்று வீட்டுக்கு போனதும் சொன்னார்கள். நித்தியானந்தம் மாட்டி கொண்டார், மற்ற சாமியார்கள் எப்பொழுது என தெரியவில்லை என்றார்கள். முதல் நாள் அளவாக காட்டியவர்கள், அடுத்த நாள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.. முழுவதும் ஒளி ஒலியுடன் பரப்பினார்கள்.. அதுவும் முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை...

பெண்கள் குழந்தைகளுடன் இந்த காட்சிகளை பார்த்தவர்கள் பாவம். சரி இப்படியாவது பாலியல் கல்வி வளரட்டும் என நினைத்தார்களா?. பாலியல் கல்வி தமிழ் பண்பாட்டுக்கு இழுக்கு எனக் கூறும் வேதாந்திகள், இந்த காட்சிகளும் தமிழ் பண்பாட்டுக்கு இழுக்கு என்பதை உணரவில்லையா?. இந்த ஒளிபரப்புக்கு எதிர்ப்பாக ஒருவரும் பேசவில்லை. பதிவர்கள்தான் பொரிந்து தள்ளி கொண்டு இருந்தார்கள்.

சரி இப்படியாவது உண்மை என்னவென்று மக்களுக்கு எடுத்துரைப்பதில் உள்ள ஆர்வம் வரவேற்க தக்கது. உண்மை நிலவரம் என்னவெனில், எப்படி ரேட்டிங் உயர்த்தலாம், எப்படி புத்தகங்கள் விற்கலாம் என்பதில் தான் ஆர்வம் அதிகம். கடை போட்டாச்சு, கூவி கூவி வித்துதானே ஆகவேண்டும் !!

இப்படியே போய் நமது பெரிய தலைகளின் ஆட்டங்களை வெளிச்சமிட்டால் நன்றாக இருக்கும் பத்திரிக்கை நண்பர்களே...

* நாட்டில் எத்தனை குழந்தைகள், உணவுக்கும் வருந்தி, மற்றவரின் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை பற்றி சொல்வீர்களா ?

* லஞ்சம் மற்றும் ஊழல் பெருச்சாளிகளின் சொத்து விவரங்களை வீடியோ எடுத்து பரப்புவீர்களா ?

* தொற்று வியாதிகளும், அசுத்தங்களும் நிரம்பிய நம் தெருக்களை பற்றி எழுதுவீர்களா ?

* காடுகளையும், காட்டு விலங்குகளையும் அழித்து கொண்டிருக்கும் கும்பலை வீடியோ எடுத்து ஒளி பரப்ப முடியுமா ?

* மருத்துவம் என்கின்ற பெயரில் நடக்கும் வியாபாரத்தை வெளிக் கொணர முடியுமா ?

* கல்வி கல்வி என்று கூறிக்கொண்டு காசை நோக்கும் பெரும் புள்ளிகளுக்கு வலை விரிப்பீர்களா ?

இன்னும் எவ்வளவோ இருக்கின்றன தோழர்களே.. அதை கேட்கவோ பார்க்கவோ நாம் விருப்பபட போவதில்லை.. ஆனால் ஒரு சாமியாரை பற்றி போட்டால், ரேட்டிங் அதிகமாகிறது.. என்ன காரணம்.. ? ஏதோ ஒன்றுக்கு நாம் அடிமையாக இருக்கிறோம் என்று அர்த்தமா... ?

இன்னும் சில நாட்களில் இதுவும் கடந்து போகும்... இன்னும் வரும்... பிறகு அவர்கள் எப்படி பிழைப்பது...

Wednesday, February 10, 2010

ஓர் பிரார்த்தனை..

"ஆண்டவா ! என்னால் எதையெல்லாம் மாற்ற முடியுமோ, அவற்றை மாற்ற கூடிய வல்லமையை எனக்கு கொடு. என்னால் எவற்றை எல்லாம் மாற்ற முடியாதோ அவற்றை அறிந்து கொள்கிற சக்தியை எனக்கு கொடு. என்னால் மாற்ற முடிந்தவை, மாற்ற முடியாதவை - இவை இரண்டுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்கிற பக்குவத்தை எனக்கு கொடு. "

- மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகத்திலிருந்து...