Friday, December 5, 2025

வாராணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்

எப்பொழுதும் சிதை எரிந்து கொண்டிருக்கும் நகரம் வாராணசி. ஆனால் அதன் முகம் அது மட்டும் அல்ல. அமைதியையும், காமத்தையும் இன்னொரு முகமாக கொண்டிருக்கும் நகரம் வாரணாசி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன் என்பவரின் அழைப்பை ஏற்று வாரணாசி நகருக்கு செல்கிறான் சுதாகரன். சுதாகரன் அங்கே செல்லும் அந்த குறிப்பிட்ட தேதியின் முன்னரே பேராசிரியர் இறந்துவிடுகிறார். அங்கே சில நாட்கள் தங்கி இருக்கும்போது அவனுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான்.


பெண்களுடன் சுதாகரனுக்கு எளிதில் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த உறவுகளைத் தொடர இவன் விரும்புவதில்லை. எதற்கோ பயந்து தப்பித்துப் போகிறான். அதனை ஒருவாறு அந்தப் பெண்களும் அறிந்திருப்பார்கள் போல. இவன் விட்டுவிட்டு போன பின்னர் அவர்கள் அவனைத் தேடுவதில்லை. தங்களது பயணத்தில் ஒரு சிறு இளைப்பாறல் போல அமைகின்றன அவனுடனான உறவுகள். வயதான காலத்தில், முன்னர் சிலநாட்கள் ஈருடல் ஓருடலாக பழகிய சுமிதாவை கங்கை கரையில் சந்திக்கிறான். அவளோ அவனை யாரோ ஒரு வழிப்போக்கன் என நினைத்து போகிறாள். உண்மையாகவே அவளுக்கு அவனை நினைவில் இல்லை. 




உறவுக்கார பெண் சௌதாமிணி, பத்திரிகை அடித்து கல்யாணம் வரை சென்ற காதலி கீதா, தன்னை விட மூத்தவரான திருமதி மூர்த்தி, வெளிநாட்டிலிருந்து ஆய்வுக்கு வந்த சுமிதா என அவன் பழகிவிட்டு தப்பித்து ஓடும் விலங்காகவே இருக்கிறான். எதையும் எதிர்கொள்ள அவனுக்கு தயக்கம். பிரான்ஸ் சென்று அங்கே ஒரு வெளிநாட்டு பெண்ணை மணக்கும் அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது . ஆனால் அவளோ அவனை விட்டுவிட்டு குழந்தையுடன் அமெரிக்கா சென்றுவிடுகிறாள். உண்மையில் இவ்வளவு உறவுகளை அவன் இழந்து விடுவதிலேயே நாட்கள் சென்று விடுகிறது. பாரிஸில் பிறந்த தன் மகன் தன்னுடன் இருப்பான் என நினைத்திருக்க, மனைவியோ அவனை விட்டுப் பிரிந்து போகிறாள். 


இதற்கு நேர் எதிராக மனைவியை இழந்த பின்னர் தனது பெண்ணுக்கு செவிலித் தாயாக வந்த ஒரு பெண்ணை நேசித்து தனது வாழ்வில் முக்கிய இடம் கொடுத்த மனிதராக பேராசிரியர் இருக்கிறார். தன்னுடைய இறப்புக்கு பின்பும் அவள் எந்த இன்னலும் இல்லாமல், தனது பிள்ளைகளால் எந்த கஷ்டமும் அனுபவிக்க விடாமல், உயில் எழுதி வைத்து அவளின் வாழ்க்கையை நடத்த அனைத்தையும் செய்துவிடுகிறார். அந்தப்பெண் அதை எதிர்பார்க்காமல் இருந்தாலும், தன்னால் முடிந்ததை ஒரு பரஸ்பர அன்பு போல செய்கிறார். சுதாகரனுடைய தப்பிப்போதல் இவரிடம் இல்லை. 


பேராசிரியரால் முடிந்ததை சுதாகாரனால் செய்ய முடிவதில்லை அல்லது அதற்கான மனத்திடம் இல்லை. போலவே இவன் குணத்தை அறிந்தே அவன் பழகிய பெண்கள் எல்லோரும் அவனிடமிருந்து தப்பித்து போகிறார்கள் என்பது உண்மையா?.


பேராசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு கங்கை கரையில் சுதாகரன் பிண்டம் அளிக்கிறான். அப்பொழுது புரோகிதர் தனக்கு தானே கூட பிண்டம் வைத்துக் கொள்ளலாம், அது ஆத்ம பிண்டம் எனச் சொல்கிறார். சுதாகரன் அதைச் செய்கிறான். 


வாரணாசி என்பது இறப்பை கொண்டாடும் நகரம். அது அங்கே ஒரு தொழிலும் கூட. சுதாகரனின் நண்பன் ஒருவன் சிதையை நிர்வகிக்கும் தொழிலில் இருக்கிறான். சிதைகளுக்கு விறகுகள் போடும் தொழிலை அவனுடைய குடும்பம் செய்து வருகிறது. இன்னொருவர் தனது இறுதி காலத்தில் அங்கே வந்து தங்கியிருக்கும் வயதானவர்களை பராமரிக்கும் ஆசிரமம் நடத்தி வருகிறார். 


இந்நாவல் மாறிமாறி வரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது. சுதாகரனின் நினைவுச் சிடுக்குகளுக்குள் அலைந்து சென்றாலும், இறுதியில் அது நிலைக்கு வருகிறது. இந்நாவலை தமிழில் வாசிக்க மொழிபெயர்த்த சிற்பி அவர்களுக்கு நன்றிகள். 

வாராணசி 

எம்.டி.வாசுதேவன் நாயர் 

தமிழில்: சிற்பி 

Thursday, December 4, 2025

கொற்கை - ஜோ டி குருஸ்

2013 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்றது கொற்கை நாவல். கடலையும், கடல் சார்ந்து இருப்போரின் வாழ்க்கையையும் பின்னிக்கொண்டு நெய்தது கொற்கை நாவல். 1900 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கும் நாவல் 2010 ஆம் ஆண்டில் முடிகிறது. மற்ற நாவல்கள் போல, கொற்கையில் குறிப்பிட்டுச் சொல்ல முக்கியமான கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் நிறைய மாந்தர்கள் உண்டு. 

"காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திர போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குருஸ்"  என்று புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் அரவிந்தன். 



மேலும் " கிறிஸ்தவ சமயத்தின் வரவு, உள்ளூர்ச் சாதிகள் கிறிஸ்தவத்தை எதிர்கொண்ட விதம், சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், நவீன வாழ்வும் அரசியலும் உள்ளூர்ச் சமூகங்களைப் பாதிக்கும் விதம் என்று நாவலின் எல்லையைக் குறுக்கும் நெடுக்குமாக விஸ்தரித்துக் கொண்டு போகிறார் ஜோ டி குருஸ். பரதவர்கள், நாடார்கள் போன்ற சில பிரிவினரின் வாழ்வு, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, அரசியல், மொழி ஆகியவற்றைப் பதிவு செய்யும் இந்நாவல் சமூக, மொழியியல் ஆய்வுக்கும் பயன்படக்கூடிய ஆவணமாகவும் விளங்குகிறது.  குறிப்பாக பேச்சு மொழியைப் பதிவு செய்திருக்கும் துல்லியமும், பேச்சினூடே வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகளின் அடையாளங்களும் மிக முக்கியமானவை." எனச் சொல்கிறார் அரவிந்தன். 

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை கூட்டிச் செல்லும் இந்நாவல், முக்கியமான கதாபாத்திரம் என்று ஒருவரும் இல்லை. தண்டல் பிலிப்பும் அவரின் வாழ்க்கையும் மட்டுமே நாவலில் அங்கங்கே தொடர்ந்து வருகிறது. பல தலைமுறைகளின் வாழ்க்கை சொல்லப்படுவதால் நாவல் தாவித் தாவி செல்வது போல தோற்றம் கொள்கிறது. ஏதோ ஒரு அத்தியாயத்தை தனியாக படித்தாலும் ஒரு சிறுகதை போலவே அது தனியாகவே இருக்கும். அத்தனை வருடங்களையும், மக்களையும், நிகழ்வுகளையும் கோர்த்துக் கொடுத்த ஒரு பெரிய மாலை இது. 

சில இடங்களில் வலுக்கட்டாயமாக அந்த வருடங்களில் நடந்த முக்கிய நிகழ்வை சொல்ல ஒருவர் சொல்வது போலவே அல்லது நினைப்பது போலவோ வந்து போகிறது. சில நிகழ்வுகள் நாவலின் போக்கிலேயே சொல்லப்படுகிறது. இலங்கைக்கு செல்லும் தோணிகள், இங்கே இருந்து அங்கே சென்று தொழில் நடத்தும் மக்கள், தோட்ட வேலைக்கு செல்லும் மக்கள், அங்கே நடக்கும் சண்டைகள் என நிறைய தகவல்கள். 



கடலில் பயணம் செய்யும் தோணி தான் கொற்கை நாவலின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம். புயல் அடிக்கும் சமயம் தண்ணீர் உள்ளே வந்து பண்டல்கள் நனைந்து போவது, பாய்களை மாற்றிக்காட்டுவது, சில விபத்துகளில் உயிரிழப்பு, தொழில் பழக சிறு வயதிலேயே தோணிக்கு வேலைக்கு வரும் சிறுவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் தண்டல்கள் என எதையும் விடாமல் சொல்லிச் செல்கிறார் ஜோ டி குருஸ். போலவே கிறிஸ்தவ மதத்தில் இப்போது இருந்தாலும், சந்தன மாரியம்மனையும், திருச்செந்தூர் முருகனையும் வழிபடும் மக்களையும் குறிப்பிட அவர் தவறுவதில்லை. 

புத்தகத்தின் இறுதியில் நாவலில் சொல்லப்பட்ட மக்களின் தலை முறைகளின் வரைபடம், தோணிகள் பற்றிய வார்த்தைகள் என கொடுக்கப்பட்டுள்ளது.