Posts

இத்தனைகிடையிலும் ...

போரினால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட மனிதர்கள் வன்முறைகள் அரசியல்வாதியின் மாறாத தந்திர பேச்சுக்கள் போலிகளாக மாறிப்போன காவிக் கறைகள் ஊர்ப் பணத்தை கொள்ளையடிக்கும் பெரிய தலைகள் வியாபாரமான கல்விக் கூடங்கள் இத்தனை நிகழ்வுகளுக்கிடையிலும் நேற்றிரவு மழை பெய்தது பக்கத்து வீட்டில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது !

அடுப்பு கரி

உஸ்.. உஸ் என ஊதாங்குழலில் அடுப்பு விறகை ஊதிய சுப்பக்காளுக்கு அவசரம் எட்டு மணிக்கு பக்கத்து ஊட்டு டிவி பொட்டியில் நாடகம் பார்க்க பவுடர் பூசிய பொம்பளைகள் அழுததை பாத்து இவளும் அழுது மூக்கை சிந்தி முந்தானியில் தொடைகரப்பதான் பார்த்தாள் மூஞ்சியில் அப்பியிருந்த அடுப்பு கரியை !

குருவி கூடு

எங்கிருந்தோ நாரெடுத்து கிணற்றுக்குள் தொங்கிய கிளையின் அந்தரத்தில் அழகாய் கூடு கட்டியது குருவி எப்படி வீடு கட்டுவெதன படிக்கிறான் மனிதன்

அரச மரத்தடி நடசத்திரங்கள்

கிளைவிட்டுப் பரவிய அரச மரத்தை சுற்றிலும் வெள்ளை நட்சத்திரங்களாய் பறவைகளின் எச்சங்கள் பூத்து கிடந்ததொரு நாளில் ஊர்ப் பஞ்சாயத்து கூடி வெட்டுவதென முடிவு செய்தனர் மரத்தின் வேர் சுற்றியுள்ள வீடுகளில் ஊடுருவுகின்றதாம் மீண்டும் தழைத்து விடுமென அடிமரத்தை தோண்டிய குழியில் உச்சியில் கட்டப்பட்டிருந்த ஏதோவொரு பறவையின் கூடும் முட்டைகளோடு புதைபட்டது இடம் மாறிய பறவைகள் இன்னொரு மரத்தடியில் எச்சமிட்டு கொண்டிருக்க கூடும் !

என் கடவுள்

சிறப்பு வழியா, பொது வழியா என தடுமாறி நீண்ட வரிசையில் காத்திருந்து ஒதுக்கப்பட்ட சில கணத்தில் பார்த்தது அய்யரின் முதுகா ? இல்லை கடவுள் சிலையா ? கடைசி வரை விளங்கவில்லை பள்ளத்தில் கூமாச்சி கல்லெடுத்து நட்ட வெச்சுருக்கலாம் பூவும் படையலும் நானே படைச்சு முடிந்தால் என் சாமிக்கு முத்தம் கூட கொடுத்திருக்கலாம் !

பூவை போல்

செத்த பிணத்துக்கும் கடவுளுக்கும் பூவை போல் ஒரே மாதிரி சிரிக்க தெரியாத பாவப் பட்ட மனிதர்கள் !

மொழி

உன் எழுத்தை நானும் என் எழுத்தை நீயும் திட்டியது போதும் எப்போது நிமிர்த்தலாம் நம் சண்டையில் தலை குனிந்த மொழியை !