Friday, May 4, 2012

சினிமா: தி பர்சுட் ஆப் ஹேப்பிநெஸ் (The Pursuit of Happyness)

யாருக்குமே மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. வேலை முதற்கொண்டு முட்டி மோதி தான் மேலே வர வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் நாம் தேடியதை விட, வேண்டுவதை விட அதிகமாக கிடைத்து விடலாம். அது அதிர்ஷ்டம் தான். பெரும்பாலும் நாம் தேடுவது கிடைப்பதில்லை. ஆனால் அதை அடையும் வரை நாம் விடுவதில்லை. தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி என்று சொல்வார்கள். மேலே முளைத்து வரத் துடிக்கும் விதைகளைப் போலவே தானே மனிதர்களும்.

இந்தப் படத்தில்தான் வில் ஸ்மித் என்னும் மாபெரும் கலைஞனின் நடிப்பைப் பார்த்தேன். அழும் இடத்தில் நம்மையும் அழ வைக்கும் நடிகன். தனது தோல்விகளை முகத்தில் தேக்கி வைத்துக்கொண்டு, வெற்றிக்காக தவமிருக்கும் மனிதர்களை திரையில் கொண்டுவந்திருப்பார் ஸ்மித். ஸ்மித்தின் மகன் 'ஜேடன் ஸ்மித்' தான் படத்திலும் வில் ஸ்மித்தின் மகன். இதே பையன்தான் 'The Karate kid' படத்திலும் கலக்கியிருப்பான்

மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் ஏன் கிடைப்பதில்லை?.  'Happiness'  என்பதுதான் சரியான ஸ்பெல்லிங். ஆனால், 'Happyness' என்று ஒரு சுவற்றில் எழுதியிருக்க கதையின் நாயகன் கிரிஷ் (வில் ஸ்மித்), 'Y' இல்லை  'i' என்று சொல்லும்போது படம் ஆரம்பிக்கிறது. நாயகன் கிரிஷ், நாயகி லிண்டா, அவர்களின் குழந்தை கிறிஸ்டோபர்.

கிரிஷ், டாக்டர்களுக்கு பயன்படும் ஒரு சின்ன ஸ்கேன் மெசினை விற்றுக்கொண்டிருக்கிறான். கொஞ்ச நாட்களாக எந்த மெசினும் விற்பதில்லை. அவன் அலைந்து கொண்டே இருக்கிறான். ஆனால் எதுவும் விற்பதில்லை. லிண்டா தான் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறாள். அவள் இரண்டு  ஷிப்ட் வேலை செய்தும், பணம் போதுமானதாக இல்லை. இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வருகிறது. லிண்டா நியூ யார்க் செல்வதாகவும், பையனை அங்கே கூட்டிச் செல்வதாகவும் கூறுகிறாள். கிரிஷ் பையனை பிரிய மறுக்கிறான். அப்பாவுக்கும், பையனுக்கும் இருக்கும் பாசத்தை லிண்டா புரிந்து கொண்டு, அவள் மட்டும் பிரிந்து சென்று விடுகிறாள்.


கிரிஷ் ஒரு ஸ்டாக் புரோக்கர் கம்பெனியில் இண்டர்ன்சிப் வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறான். சம்பளம் இல்லாமல் இரண்டு மாதங்கள் பணி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, தேர்வில் தேறினால் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். இதற்கிடையில் கம்பெனி வேலைக்கும் சென்று விட்டு, மீதி நேரம் ஸ்கேன் மெசினை விற்கவும் செல்கிறான்.

வாடகை கொடுக்காததால் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்குகிறார்கள். விடுதிப் பணமும் கட்டாததால் அங்கிருந்தும் வெளியேற்றப் படுகிறார்கள். கையில் பையனை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கிறான் கிரிஷ். ஒருநாள் ரயில் நிலைய கழிப்பறையில் தங்குகிறார்கள். அதற்குப் பின்னர் வீடில்லாதவர்களுக்கு என இயங்கும் ஓரிடத்தில் போய்த் தங்குகிறார்கள். தினமும் தெருவாசிகள், பிச்சைக்காரகள் என அங்கே இடம் பிடிக்க நெருக்கியடிக்கிறது கூட்டம். முன்னால் வருவபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உள்ளே விட்டுவிடுவார்கள். இடம் இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வதென்ற பதை பதைப்புடன் வரிசையில் நின்று கொண்டிருப்பான் கிரிஷ் குழந்தையோடு.



இண்டர்ன்சிப் முடியும் நாள் வருகிறது. தேர்வை எழுதுகிறான். அடுத்த நாள் கண்களில் ஒரு தாகத்துடன் இருக்கிறான் கிரிஷ். அவனுடைய முறை வரும்போது, உயர் அதிகாரிகள் இருக்கும் அறைக்கு அவனை கூப்பிடுகிறார்கள். அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று சொல்கிறார்கள். அப்பொழுது ஸ்மித்தின் கண்களில் இருந்து வரும் கண்ணீர், இத்தனை நாட்களாக அவன் பட்ட துன்பங்களை கழுவிக் கொண்டு ஓடுகிறது. வெளியே வரும் அவன், கூட்டமாக போய்க் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியாக நடக்கிறான்.

யார் கண்டது, அந்தக் கூட்டத்தில் இன்னும் கிரிஷ் போன்ற எத்தனை மனிதர்கள் இருப்பார்களோ?.


                                                            **********************

ஒரு வருடமாக, இந்தப் படத்தைப் பார்த்த நாள் முதற்கொண்டு எழுதலாம் என்றுதான் நினைப்பேன். ஆனால் முடியவில்லை. இவ்வளவு உணர்வுள்ள படமாக ஸ்மித் நடித்ததை சின்ன வரிகளில் எப்படி அடக்குவது என்று தெரியவில்லை. எப்படியோ இன்று எழுதிவிட்டேன். நான் இங்கே சொன்னதை விட, சொல்லாமல் விட்டது அதிகம். ஒவ்வொரு காட்சிகளும் அப்படி இருக்கும். வாழ்க்கையே போராட்டம் என்று சொன்னாலும், நமக்கான வெற்றி கண்டிப்பாக கிடைக்காமல் போகாது.

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.







6 comments:

  1. good news i like it keep it up http://www.kollywoodthendral.in/

    ReplyDelete
  2. If we do not understand the simple rules of Nature, then we will be only suffering. One has to satisfy with All, what he is having.

    ReplyDelete
  3. @Suriya The Best Actor
    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. @MURUGANANDAM
    உணமையான கருத்து நண்பரே.. நன்றிங்க.

    ReplyDelete
  5. சந்தோஷம் என்பது உள்ளிருப்பது.. வெளியே தேடிப் பலனில்லை.. இது போன்ற படங்கள், இதயத்தைத் தொடுவதுடன், வாழ்க்கையின் உண்மைகளையும் புரிய வைக்கின்றன.

    ReplyDelete
  6. @சாமக்கோடங்கி
    ஆமாங்க, இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை என்றால் ஒருமுறை பாருங்கள்..

    ReplyDelete