Saturday, March 17, 2012

சினிமா: காந்தி(Gandhi)

என் சிறுவயதில், வெள்ளிக்கிழமை காலை வேளைகளில் ரேடியோவில் 'சத்திய சோதனை செய்தவரே, ஒரு சரித்திர சாதனை புரிந்தவரே' என்ற பாடலுடன், நம் தேசத் தந்தை மகாத்மாவின் சத்திய சோதனையைப் படிப்பார்கள். அதற்குப் பின்னர், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக 'சத்திய சோதனை' புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்தார்கள். மகாத்மாவின் சிறுவயதிலிருந்து, அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போரில் பங்கேற்றது வரை அதில் எழுதியிருப்பார். இப்படி அங்குமிங்குமாக, மகாத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன்.



அது மட்டுமில்லாமல், எங்கள் அப்பா ஒரு கைத்தறி நெசவாளர் என்பதால் காந்தியின் மீது சிறுவயதில் இருந்தே ஒரு பற்று இருந்தது. அன்று எங்கள் ஊருக்கு யாராவது  வந்தால், கையால் தயாரித்த நூல் மாலையைத்தான் போடுவார்கள். அத்தனை பேர் வீட்டிலும் கைத்தறி சத்தம் கேட்ட ஊரில், இன்று ஓரிருவரைத் தவிர வேறு யாரும் நெய்வதில்லை. அது கிடக்கட்டும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில், கோபிநாத் 'எத்தனை பேர் காந்தி படத்தைப் பார்த்திருக்கிறீர்கள்?' எனக் கேட்க, ஒரே ஒரு மாணவன் மட்டும் கை தூக்கினான். அப்பொழுதுதான் நினைத்து பார்த்தேன், நானும் காந்தி படத்தைப் பார்க்கவில்லை என்பதை. கண்டிப்பாக காந்தி படம் பார்த்தாக வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, பார்த்தும் விட்டேன்.


தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து அவரைக் கீழே தள்ளிவிடும் இடத்திலிருந்து படம் ஆரம்பித்து அவரின் இறுதி ஊர்வலத்தில் முடிகிறது. எந்த தேச விடுதலைக்காகப் பாடுபட்டாரோ, அதே தேசம் பிரிவினை கலவரத்தில் வன்முறையை கைவிட, கல்கத்தாவில் வன்முறை ஓயும் வரை உண்ணா விரதம் இருந்த காட்சிகளையும் விவரிக்கிறது படம். தேசத்தின் விடுதலைக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், அன்றும் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருக்கிறார். அவரின் தேவைகள் எப்பவுமே குறைவு. ஆடைகள் உட்பட. தனக்கான வேலையைத் தானே செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் மகாத்மா.



இதுவரைக்கும் நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்காவிட்டால், நிச்சயம் ஒருமுறை பாருங்கள்.











2 comments:

  1. ரொம்பவும் நல்ல பதிவு இளங்கோ ... வாழ்த்துக்கள் ..இப்போலாம் அடிக்கடி எழுதுறீங்க போல ?

    ReplyDelete
  2. @ஷஹி
    நன்றிங்க.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் :)

    ReplyDelete