Posts

குப்பையும் நானும்

கவிதை எழுதலாம் என்றேன் என்ன கவிதை எனக் கேட்டாய் உன் பெயர் என்றேன் என் பெயர் குப்பை எனச் சொன்னாய் 'உன் பெயர் குப்பைதான் என்னைக் கசக்கி எறிந்து உன்னுடனே என்னையும் குப்பையாக்கி விட்டாயல்லவா' என்றேன் சிரித்துக்கொண்டே தூரம் விட்டு தூரம் நகர்ந்து காற்றோடு கலந்து போனாய் அன்று பெய்த மழை நாளில் !

ஒரு சுகம்

எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று இக்கவிதை. ஒரு கட்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் பிளாஸ்டிக் நிறைய ஐஸ் ஒரு புட்டி பிராந்தி வத்திப்பெட்டி அல்லது சிகரெட் சாம்பல் தட்டு பேசுவதற்க்கு நீ நண்பா இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு. -கவிஞர் நகுலன்

பூ

நீ தலையில் சூடியிருக்கும் பூவை பார்த்த வண்டுகள் எது பூவென தெரியாமல் தடுமாறுகின்றன !

ஓரிடம்

எங்கோ ஓரிடத்தில் சந்திக்க நேரும் போதெல்லாம் கேட்கத்தான் தோன்றுகிறது அகதியாய் வந்த நாம் எப்பொழுது திரும்புவோம் என நேற்று வந்திறங்கிய கர்ப்பிணி பெண்ணை பார்த்த பின் தொண்டைக்குள்ளேயே தங்கி விட்டது

வரிசை

அத்தனையும் நகர்ந்து கொண்டிருந்தன ஒரே வரிசையில் காலுக்கு அடியில் சிலது மிதிபட்டன கையில் நசுக்கி சிலது கொல்லப்பட்டன உயிருள்ள எவற்றுக்கும் திரும்பி பார்க்க நேரமில்லை அத்தனையும் நகர்ந்து கொண்டிருந்தன ஒரே வரிசையில் !

இத்தனைகிடையிலும் ...

போரினால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட மனிதர்கள் வன்முறைகள் அரசியல்வாதியின் மாறாத தந்திர பேச்சுக்கள் போலிகளாக மாறிப்போன காவிக் கறைகள் ஊர்ப் பணத்தை கொள்ளையடிக்கும் பெரிய தலைகள் வியாபாரமான கல்விக் கூடங்கள் இத்தனை நிகழ்வுகளுக்கிடையிலும் நேற்றிரவு மழை பெய்தது பக்கத்து வீட்டில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது !

அடுப்பு கரி

உஸ்.. உஸ் என ஊதாங்குழலில் அடுப்பு விறகை ஊதிய சுப்பக்காளுக்கு அவசரம் எட்டு மணிக்கு பக்கத்து ஊட்டு டிவி பொட்டியில் நாடகம் பார்க்க பவுடர் பூசிய பொம்பளைகள் அழுததை பாத்து இவளும் அழுது மூக்கை சிந்தி முந்தானியில் தொடைகரப்பதான் பார்த்தாள் மூஞ்சியில் அப்பியிருந்த அடுப்பு கரியை !